பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு விளக்கமறியல்
13 வருடங்களுக்கு முன் கொலை செய்த இலங்கையர் நியூசிலாந்தில் கைது
மிதக்கும் சந்தை இன்று திறப்பு
சம்பந்தன் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்
பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை உதயம்
வடிவேல் சுரேஷிற்கு அழைப்பாணை
ஹட்டனில் பல கடைகள் உடைப்பு
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஸ்கரிப்பு
விபத்தில் பெண் பலி : யாழ். அச்சுவேலியில் பதற்றம்
யாழ்தேவியில் குழப்பம் விளைவித்த படையினர் மூவர் கைது
==================================================================
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் மூவருக்கு விளக்கமறியல்
26/08/2014

கண்டி மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மேடையமைத்து சத்தியா கிரகம் இருந்த ஐந்து மாணவர்களில் மூவரை எதிர்வரும் 4 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.
பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் முகாமைத்துவ பீடம் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து கலஹா சந்தியில் மேடையமைத்து சத்தியாகிரக நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் ஐந்து மாணவர்களை வாக்கு மூலம் பெறுவதற்கென பேராதனைப் பொலிஸார் அழைத்துச் சென்று மூன்று மாணவர்களை நீதிமன்ற பிரதான நீதவான் ஏ.எம்.ஏ.வசந்த குமார முன்னிலையில் ஆஜர் செய்தனர்.
இவர்களுக்கு எதிராக கண்டி மாநகர சபைக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மேடை அமைத்தல் சட்டவிரோதமாக கூடியமை போன்ற குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளனர்.
இதனையடுத்தே நீதவான் இம்மூன்று மாணவர்களையும் எதிர்வரும் செப்டெம்பர் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
13 வருடங்களுக்கு முன் கொலை செய்த இலங்கையர் நியூசிலாந்தில் கைது
26/08/2014 சுவிஸில் தனது காதலியை கொலை செய்து விட்டு போலி ஆவணங்களுடன் நியூசிலாந்து சென்று அங்கு பிரஜாவுரிமை பெற்று வசித்து வந்த இலங்கையரை ஒக்லண்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த 2000 ஆம் ஆண்டு தனது காதலியான 23 வயதுடைய கவிதா என்பரையே குறித்த நபர் கொலை செய்துள்ளார்.
குறித்த சந்தேக நபரை பொலிஸார் 13 வருடங்களாக தேடி வந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி வீரகேசரி மிதக்கும் சந்தை இன்று திறப்பு
25/08/2014 புறக்கோட்டையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சந்தைத் தொகுதி இன்று திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை 5.00 மணியளவில் இந்த மிதக்கும் சந்தை தொகுதி திறந்து வைக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது
நன்றி வீரகேசரி சம்பந்தன் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும்
24/08/2014 சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என்று ஜனாதிபதி தனது தூதுவர் ஒருவர் ஊடாக தெரிவித்துள்ளதாக வார இறுதி ஆங்கில பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவுக்கு சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு குழுவினர் செல்லவுள்ளதை அறிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடும்விசனமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த தனது கடும் அதிருப்தியை பிரதிநிதி ஒருவர் மூலமாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் ஜனாதிபதி,தெரிவித்துள்ளதாகவும் குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது இந்திய விஜயம் குறித்து அரசாங்கத்திற்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படாதது குறித்த தனது கடும் அதிருப்தியை ஜனாதிபதி தனது பிரதிநிதி ஊடாக வெளிப்படுத்தியுள்ளார்.
'தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் இந்திய விஜயம் என்னையும் அரசாங்கத்தையும் நெருக்கடிக்குள் தள்ளுவதை நோக்கமாக கொண்டது. கூட்டமைப்பினர் அரசாங்கத்தை மாற்ற விரும்புகின்றனர். அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான முறுகல் நிலைக்கு இதுவும் ஒரு காரணம். சம்பந்தனும் அவரது கட்சியினரும் எங்கு சென்றாலும் இறுதியில் என்னிடமே வரவேண்டும். என்னிடம் வராவிட்டால் அவர்களால் தீர்வுகள் குறித்து பேச முடியாது' என தன்னுடைய பிரதிநிதி ஊடாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக குறித்த ஆங்கில வார இறுதி பத்திரிகையில் குறி்ப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், ஜனாதிபதியின் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
'நான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாங்கள் அரசியல் தீர்வொன்றிற்காக பாடுபடுகிறோம், இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக நாங்கள் அங்கு செல்கிறோம்' என்று சம்பந்தன் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
பௌத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை உதயம்
27/08/2014 இந்து ,பெளத்த மதங்களை பாதுகாப்பதற்கான பெளத்த, இந்து தர்ம பாதுகாப்பு சபை நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் உதயமானது. பொதுபலசேனாவும் அகில இலங்கை இந்து சம்மேளனமும் இணைந்து இவ்வமைப்பை உருவாக்கியுள்ளன.

இதற்கான உடன்பாடு பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இந்து சம்மேளனத்தின் தலைவர் அருண் காந்துக்குமிடையே பௌத்த,இந்து ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மத மாற்றத்தை எதிர்த்து தமிழ் இந்துக்கள் எழுச்சி பெற வேண்டிய காலம் வந்து விட்டது.
எனவே, இனியும் பொறுமை காக்காது இந்துக்களும் பெளத்தர்களும் ஒன்றுபட வேண்டும். இன்று அதற்கான பலமான ஆரம்பத்தை எடுத்து வைத்துள்ளோம்.அதனை மேலும் பலப்படுத்தி மதமாற்றத்திலிருந்து அடிப்படைவாத சக்திகளிடமிருந்து எமது மதங்களையும் கலாசாரத்தையும் பாதுகாத்துக் கொள்வோம்.பெளத்தர்களோ இந்துக்களோ தமது மதத்திற்கு முஸ்லிம்களையோ கிறிஸ்தவர்களைவோ மாற்றவில்லை. மாறாக அடிப்படைவாத முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களுமே இந்துக்களையும் பெளத்தர்களையும் மதமாற்றம் செய்கின்றனர்.
வடக்கு கிழக்கில் மட்டுல்ல தெற்கு மேல் மாகாணம் என அனைத்து பிரதேசங்களிலும் எமது மக்கள் மதமாற்றம் செய்யப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இராணுவ முகாம்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை எதிர்த்து தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்தில் குரல் கொடுக்கின்றனர்.ஆனால், யாழ்ப்பாணத்தில் காளான்களைப்போன்று உருவெடுக்கும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் இவர்களின் கண்களுக்கு தெரியவில்லையா.
அது மட்டுமா தமிழ் கிராமங்கள் பூண்டோடு முஸ்லிம் மயமாக்கப்படுகின்றது. நாடு முழுவதும் அடிப்படைவாத கிறிஸ்தவ சபைகள் தலைதூக்கியுள்ளன. மக்களின் வறுமையை போக்கி அடிப்படை வசதிகளை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். அமைப்புக்களால் அதனை செய்ய முடியாது.
கல்முனை அக்கரைப்பற்று தமிழ் மக்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக கண்டறிய வருமாறு எமக்கு அழைப்பு விடுத்துள்ளனர். விரைவில் அங்கு செல்வோம்.
அது மட்டுமல்லாது பெளத்த இந்து மதங்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக வடக்கிற்கும் விஜயம் செய்யவுள்ளோம். யுத்தத்தால் சிதைந்து போன தமிழ் மக்களின் உள்ளங்களை ஆசுவாசப்படுத்தி மீண்டும் எமக்கிடையேயான நட்புறவை பலப்படுத்துவோம் என்றும் ஞானசார தேரர் தெரிவித்தார்.இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் பொதுபலசேனாவின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனிய நந்த தேரர் மற்றும் இந்து சம்மேளனத்தின் செயலாளர் எம். முரளீதரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி வீரகேசரி
வடிவேல் சுரேஷிற்கு அழைப்பாணை

27/08/2014 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பசறைத் தொகுதி அமைப்பாளரும் ஊவா மாகாணசபைத் தேர்தலில் பதுளை மாவட்ட வேட்பாளருமான வடிவேல் சுரேசை எதிர்வரும் 4ம் திகதி பசறை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை மஜிஸ்ரேட் நீதிபதி மகேசி பிரியதர்ஷினி த.சில்வா மேற்படி அழைப்பாணையை விடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
முன்னாள் பசறை பிரதேச சபை உறுப்பினர் சுனில் த சில்வா அவரது மகனான மனோஜ் பண்டார த சில்வா ஆகிய இருவர் தாக்கப்பட்டமை தொடர்பாக ஆளும் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
இது குறித்து பசறை பொலிஸ் நிலையத்திலும் மேற்படி அமைப்பாளருக்கு கெதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட அமைப்பாளர் வேட்பாளராக இருப்பதால் அவருக்கு ஆதரவு வழங்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாகவே முறுகல் நிலை ஏற்பட்டு மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நன்றி வீரகேசரிஹட்டனில் பல கடைகள் உடைப்பு
28/08/2014 ஹட்டன் நகரில் பல கடைகள் உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதி காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன் போது எந்தவிதமான பொருட்களையும் திருடர்கள் கொள்ளையிடாமல் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஹட்டன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்புப் பகிஸ்கரிப்பு
28/08/2014 பேராதனை பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இன்று வகுப்புப் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முகாமைத்துவ பீடத்தை மீள அமைக்குமாறு கோரி மாணவர்கள் சிலர் கலஹா சந்தியில் சத்தியாகிரகத்தில் ஈடுப்பட்டு வந்த நிலையில் கலஹா சந்தியில் அநாவசிய கட்டுமானம் ஒன்றை அமைத்துள்ளதாகத் தெரிவித்து பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் ஐவரை கைது செய்து எதிர்வரும் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கண்டி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமையே மாணவர்களின் வகுப்பு பகிஸ்கரிப்பிற்கு காரணம் என மாணவர் சங்கத் தலைவர் லசந்த அருனசாந்த தெரிவித்தார்.
நன்றி வீரகேசரிவிபத்தில் பெண் பலி : யாழ். அச்சுவேலியில் பதற்றம்
28/08/2014 யாழ். அச்சுவேலி பகுதியில் டிப்பர் வண்டி ஒன்று துவிச்சக்கர வண்டியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த விபத்தினை தொடர்ந்து அந்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதுடன் , பிரதேச மக்கள் டிப்பர் வண்டிக்கு தீ வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் 24 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழ்தேவியில் குழப்பம் விளைவித்த படையினர் மூவர் கைது
29/08/2014 பளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி ரயிலில் குழப்பம் விளைவித்த படையினர் மூவரை இன்று வியாழக்கிழமை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உறங்கல் இருகை பெட்டியை சோதனைக்கு உட்படுத்தும் பரிசோதகர் மீதே இந்த மூவரும் தாக்குதலை மேற்கொண்டுள்ளார். ஒதுக்கப்பட்டிருந்த உறங்கல் இருக்கை பெட்டியில் அமர்ந்திருந்த படையினர் மூவரையும் அங்கிருந்து செல்லுமாறு பரிசோதகர் கேட்டுக்கொண்டபோதே இந்த மூவரும் பரிசோதகர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக பரிசோதகர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பரிசோதகர், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்துடன் தொடர்புடைய இராணுவத்தினர் மூவரும் பனாகொடை இராணுவ முகாமைச்சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. நன்றி தேனீ
No comments:
Post a Comment