.



திருமதி தேவகி
கருணாகரனின் புத்தக வெளியீட்டு விழா 27/4/2014 அன்று Carrington Church ஹாலில் மாலை
5.15 மணிக்கு நடை பெற்றது. அவர்களின் அழைப்பிதழை ஏற்று நானும் சென்றிருந்தேன். எமது
தழிழரின் மரபுக்கு ஏற்ற முறையில் மண்டபத்தின் வாசலில் குத்துவிழக்கு, நிறைகுடம், சந்தனம்,
வீபூதி, வாழைப்பழம், சாம்பிராணி குச்சி என்பன ஏற்றப்பட்டு மிகவும் எழிமையான முறையில்
மண்டப வாசல் அலங்கரிக்கப் பட்டு இருந்தது. திரு, திருமதி கருணாகரன் தம்பதிகள் மண்டப
வாசலில் நின்று அவர்களது அழைப்பை ஏற்று வந்தோரை
வரவேற்றுக் கொண்டிருந்தார்கள்.
நிகழ்ச்சி அழைப்பிதழில்
அறிவித்தது போல, சரியாக 5.15 மணிக்கு ஆரம்பமானது.
வைத்திய கலாநிதி பொன்மயிலநாதன் கேதீஸ்வரன்
அவர்கள் எலோரையும் திருமதி தேவகி கருணாகரனின் குடும்பம் சார்பில் வரவேற்றார். மங்கள
விழக்கு ஏற்றி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைப்பதற்காக திருமதி ஈஸ்வரம் பொன்னுத்துரை, திருமதி
லோகா சிவசுப்ரமணியம், கலாநிதி ஆசி கந்தராஜா ஆகியோரை வரவேற்றார். தொடர்ந்து
சிறப்பு விருந்தினர் எஸ் போ அவர்களையும், விழா நாயகி திருமதி தேவகி கருணாகரன், திரு
தனபாலசிங்கம், சௌந்தரி கணேசன் ஆகியோரை மேடைக்கு வரவேற்றார்.
திருமதி தேவகி
கருணாகரனின் பேரப்பிள்ளைகள், பெறா மக்கள் அனைவரும்
சேர்ந்து ஆஸ்திரேலிய தேசிய கீதத்தை இசைத்தார்கள். அதனைத் தொடர்ந்து தமிழ் தாய் வாழ்த்தை
திருமதி திலகா பிரபாகரன் அவர்கள் தனது கணீர் என்ற குரலில் மிகவும் இனிமையாக பாடினார்.
அதனைத் தொடர்ந்து ஈழப் போரில் உயிர் நீதோருக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் உரையில்
வைத்திய கலாநிதி பொன்மையிலநாதன் கேதீஸ்வரன் 2006 இல் திருமதி தேவகி கருணாகரன் தனக்கு
அறிமுகமானார் என்றும், அவர் எழுதிய முதல் சிறு கதை கலைப்பை சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
அவரின் முதல் சிறுகதை என்பதனால் என்னவோ, அந்த சிறுகதை சற்று நீண்டதாக இருந்த காரணத்தால்
அதனை இரண்டு சஞ்சிகையில் பிரசுரித்ததாகவும் கூறினார். திருமதி தேவகி கருணாகரன் அவர்கள் தனது எழுத்தாற்றலை மேலும் மெருகூட்ட கலைப்பை சஞ்சிகையினால் ஒருங்கமைத்த பயிற்சி பட்டறைகள் உறுதுணையாக இருந்தன எனக் குறிப்பிட்டிருந்தார்
எனக் கூறினார். சபையில் இருந்த இழயோரை கருத்தில் கொண்டு தனது வரவேற்பு உரையை ஆங்கிலத்தில்
வழங்கினார்.
தனது மனதில் பட்டதை
நறுக் என்று கூறுவதில் வல்லவரும், மிகவும் திறமையான எழுத்தாற்றல் கொண்ட பிரதம விருந்தினரான
திரு எஸ் போ ஐயா அவர்களை பிரதம விருந்தினர் உரையை வழங்குவதற்காக அழைத்தார் தலைவர்.
கூடியிருந்த தமிழ் ஆவலர்களையும், திருமதி தேவகி கருணாகரனின் நண்பர்கள், உறவினர்கள்
அனைவரையும் வரவேற்று, தனது உரையில் எஸ் போ
அவர்கள் தமிழர்களின் வரலாறு அழிந்து வரும் இந்நிலையில் மூத்த எழுத்தாளர்களின் பொறுப்பு
இப்படிப்பட்ட நிகழ்சிகளுக்கு வரும் வளரும் சமுதாயத்தினரை கருத்தில் கொண்டு தமிழர்களின்
வரலாற்றை எடுத்துரைப்பதன் அவசியத்தை கூறியிருந்தார். மேலும் ஈழத்தமிழர் வரலாறு அழியாமல்
இருப்பதற்கு புது புது எழுத்தாளர்கள் உலகெங்கும் தோன்றிக்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது
என்றும் கூறினார்.
ஒரு ஈழப் பெண்ணின்
தன்னலமற்ற தன் மண்ணின் நேசிப்பையும் தமிழ் மொழியையும் நேசித்து எழுதிய திருமதி தேவகி
கருணாகரனின் "அன்பின் ஆழம்" என்னும் நூலை வெள்ளியிடுவதில் தான் தன் இலக்கிய
வாழ்வில் பெற்ற ஒரு இனிய நிகழ்வு எனக் கூறி அதன் முதல் பிரதியை திரு சிவா பசுபதியிடம்
ஒப்படைத்தார்.
நிகழ்வின் மூலம்
பெறப்பட்ட நிதி அனைத்தும் கைதடியில் இருக்கும் செவி, கண் புலனற்றோர் நிலையத்திற்கு
அவர்களது கல்வி சம்பத்தமான தேவைகளுக்கு கொடுப்பதாக தலைவரால் அறிவிக்கப் பட்டது. அந்த
நிலையத்தை பற்றி திருமதி தேவகி கருணாகரனின்
பேரன் அஷான் கருணாகரன் சுருக்கமாக எடுத்துக் கூறினார். அவர் தனது பேச்சில் தனது அப்பம்மா
இந்த நிலையத்தை உதவி புரிவதற்கு தேர்ந்தெடுத்த காரனத்தை கூறினார். தேவகியின் பெற்றோர்
இந்த நிலையத்திற்கு உதவி புரிந்தார்கள் என்றும் மற்றும் மாற்று திறநாளிகளுக்கு
எமது சமுதாயத்தில் சம உரிமை கொடுக்கப் பட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டுமே இந்த
நிறுவனத்தை தேர்ந்தெடுத்தார் எனவும் கூறினார்.
அடுத்ததாக நூலை
ஆய்வுரை செய்வதற்காக இலக்கிய ஆவளரும் மற்றும் மேடைப் பேச்சாளருமான திரு தனபாலசிங்கம்
அவர்களை தலைவர் அழைத்தார். அவர் தனது பேச்சில் தேவகிக்கு ஓர் மிடுக்கு இருக்கின்றது
என்பதை தான் அவவுடன் பழகியதில் இருந்து அறிவதாகவும், அவரின் அந்த மிடுக்கான தாக்கம்
அவவின் எழுத்திலும் காணக் கூடியதாக இருக்கிறது என்றும் கூறினார். நெஞ்சம் மறப்பதில்லை
என்னும் கதையில் மனித அவலங்களை மிகவும் ஆணித்தரமாக எழுத்தில் வடித்திருகின்றார் எனவும்
கூறினார். மேலும் அன்பின் ஆழம் என்று வைத்திருக்கும் இந்த சிறு கதைத் தொகுப்பின் மூலம்
யாரும் இதுவரை புகாத ஒன்றில் புகுந்து, எந்த வித பாகு பாடும் இல்லாமல் கதைகளை எழுதி
இருக்கின்றார் எனவும் கூறினார். " குடி செய்து வாழ்வானைச் சுற்றமாய்ச் சுற்றும்
உலகு எனும்" சிறு கதையில் அவரின் எழுத்தின் ஆழமும் வர்ணனை திறனும் மிக அழகாக வெளிக்காட்டப்
பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் வர்ணனைத் தாக்கம், மற்றும் இளங்கோவடிகளின்வார்தை ஜாலங்களும் அங்கே காணப் படுகின்றது. இச் சிறுகதையில் ஓஹோ என்று வாழ்ந்த ஒருவர் அவரின்
அகம்பாவத்தினால் எப்படி அவரின் வாழ்க்கை நிலை குலைகின்றது என்பனவற்றை சித்தரித்திருந்தார்
தேவகி என்று கூறினார். புலம் பெயர்ந்து வாழும் நாம் நம் வாழ்வில் எதிர் கொள்ளும் பிரச்சனைகளை
கருவாகக் கொண்டு மிகவும் துணிச்சலுடனும், மிடுக்குடனும் இந்த சிறு கதைகளை எழுதி இருக்கின்றார்
என்று கூறி, மேன் மேலும் பல நூல்களை எழுத வேண்டும் என்று வாழ்த்தி தனது ஆய்வுரையை நிறைவு
செய்தார்.
அடுத்ததாக நூலை
ஆய்வுரை செய்வதற்கு சௌந்தரி கணேசன் அவர்களை தலைவர் அழைத்திருந்தார். இவர் ஆஸ்திரேலியா
ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி தொகுப்பாளரும்,
கவிதைகள் எழுதுவதில் மிகவும் கை தேர்ந்தவர் எனவும் கூறினார். சௌந்தரி அவர்கள் தனது
பேச்சை ஆரம்பிக்குமுன் தான் இந்த நிகழ்வில் வேறு எந்த ஓர் இலக்கிய கூட்டங்களிலும் காணாத
பல புது முகங்களை காணக் கூடியதாக இருப்பதை
கண்டு மகிழ்ச்சி அடைவதாகவும், இலக்கியக் கூட்டங்களின் நிகழ்ச்சி நிரல்களை மாற்றி அமைத்து
இப்படியான பலரை வரவழைக்க வேண்டும் என்பதை இந்த மேடையில் பதிவு செய்வதாகவும் கூறி தனது
பேச்சை ஆரம்பித்தார்.
திருமதி தேவகி
கருணாகரனின் ஒரு கதையை தனது வானொலி நிகழ்ச்சி ஒன்றில் இசையும் கதையுமாக ஒளிபரப்பியதில்
இருந்து தனது அறிமுகம் தேவகியுடன் ஆரம்பமானது என கூறினார். நூலாசிரியர் இன்றைய எமது
உலகின் நடப்பை கருவாகக் கொண்டு அவரின் சிறு கதைகளை புனர்ந்துளார் என்று கூறனார். பல
பெண் பாத்திரங்களைக் கொண்ட இந்த சிறுகதை தொகுப்பில் தன்னை மிகவும் கவர்ந்த பெண் பாத்திரம் அதிசயம் என்னும் சிறுகதையில் வரும்
பெண் பாத்திரமே என்று கூறினார். அன்பு என்ற ஒன்றே பல வேறு கோணங்களில் இன் நூலில் கையாளப்
பட்டிருக்கின்றது என்பதை தான் உணர்வதாகக் கூறியிருந்தார். சொந்தம் விட்டுப் போகுமா
என்னும் சிறு கதையில் எமது பெண்களின் அவல நிலையை கூறி இருக்கின்றார். ஆனால் கதையில்
கூறியுள்ள படி யதார்த்தத்தில் அந்த பெண்கள் போராடி திரும்பவும் அந்த புதிய சாயத்தை
பெற்று அப்படி வாழ முடியுமா என்பது ஓர் கேள்விக் குறியே என்று கூறினார். நிஜ வாழ்க்கையில்
நாம் கண்டும் அதை வெளிப்படுத்த முடியாத சில விசயங்களையும் மிகவும் ஆழமாகக் கூறியுள்ளார்,
மற்றும் நிஜ வாழ்க்கையில் நாம் காண முடியாத மனிதர்களையும் இந்நூல் காட்டியுள்ளது என்றும்
கூறினார். இந்நூல் நிச்சயமாக எல்லோரையும் ஈர்க்கும் ஓர் நூலாகத் திகழும் எனவும் கூறி,
மேலும் எல்லோரையும் கவரும் வகையில் பல நூல்களை
எழுத வேண்டும் என வாழ்த்தி தனது ஆய்வுரையை முடித்தார்.
அடுத்து விசேட
பிரதி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது. Strathfield நகர முதல்வர் திரு Daniel Bott அவர்களும்
இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தார். Strathfiled நூலகத்திற்காக நன்கொடையாக ஒரு நூலை
கையளித்தார் திருமதி தேவகி கருணாகரன். நகர முதல்வர் திருமதி தேவகி கருணாகரை வாழ்த்தி
மற்றும் வந்திருந்த அவையினரையும் வாழ்த்திச் சென்றார். தமிழ் கல்வி நிலையங்களுக்கும்
அன்பளிப்பாக நூல்களை வழங்கினார் தேவகி.

தேவகி தனது ஏற்புரையில்
அழைப்பை ஏற்று வந்த அவையினருக்கு நன்றி கூறி தனது உரையை வழங்கினார். ஈழத்து எழுத்தாளர்களில்
தனக்கும் ஓர் இடம் உண்டு என்று கூறிய எஸ் போ அவர்களுக்கும், ஆய்வுரை செய்த தனபாலசிங்கம்,
சௌந்தரி இருவருக்கும் தனது நன்றியை தெரிவித்தார். தனது எழுத்து ஆற்றலை மேம்படச் செய்து
இப்படி ஒரு சிறு கதை தொகுப்பை வெளியிடுவதற்கு மிகவும் ஊக்கமும் ஆதரவும் கொடுத்த தனது
கணவருக்கும் தனது நன்றியை இந்த மேடையில் கூறினார். மற்றும் தனது குடும்ப அங்கத்தவர்கள்,
நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து விடை பெற்றார்.
இருபது நேர இடைவேளையின்
பின் கட்டுடை நாடகக் குழுவினரின் காதலா culture ஆ எனும் நகைச்சுவை நாடகம் இடம் பெற்றது.
இன் நாடகத்தை எழுதியவர் திருமதி தேவகி கருணாகரன் என்பது இங்கே குறிப் பிடத்தக்கது.
இந்த நாடகத்தின் கரு, பத்து வருடங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் குடிபுகுந்து வந்த
எம்மவர் சிலர் எப்படி தமது வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்பதே ஆகும்.
இதில் நடித்த நடிகர்கள் அனைவரும் கட்டுடை என்னும் ஊரைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள்
தமது சிறு பிராயத்தில் பல நகைச் சுவை நாடகங்களை தமது வீட்டிலேயே ஒன்று கூடி நடித்து
மகிழ்வார்களாம். இதில் நடித்தவர்களில் எனது மனத்தைக் கவர்ந்த பாத்திரம் விசாலாட்சியாக
நடித்த சுரேன் விஸ்வலிங்கம். இவர் ஏற்று நடித்த பெண் வேடத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.
இவரை பெண் வேடத்தில் ஒப்பனை செய்த திருமதி ராதா உருத்திரமூர்த்தியின் திறமையையும் இங்கே பாராட்டாமல் இருக்க முடியாது.
சிவப்பிரகாசம் வேடத்தில் திரு ஸ்ரீநிவாசன் ரங்கநாதன் நடித்திருந்தார். இவரும் மிகவும்
திறமையாக நடித்திருந்தார். சுரேன் மற்றும் ஸ்ரீநிவாசன் இருவரின் நடிப்பும் மிகவும்
திறமையாகவும் எதேர்ச்சையாகவும் இருந்தது. குஞ்சிதபாதமாக திரு நந்தபாலன் துரைசிங்கம்
அவர்கள் நடித்திருந்தார்கள். இவர் அண்மையில் இலங்கையில் இருந்து வந்தவர் போன்றே அவரின்
பாத்திரத்திற்கு ஏற்ப நடித்திருந்தார். இவரின் முக பாவனை மிகவும் சுவாரசிகமாக இருந்தது.
பிச்சாண்டியாக நவி விஸ்வலிங்கமும் ரோசியாக சுரேன் சந்டியாகோவும் நடித்திருந்தார்கள்.
இவர்கள் இருவரும் தமது பாத்திரங்களை நன்றாக நடித்திருந்தார்கள். இவர்களின் ஒப்பனைகள்
யாவையும் திருமதி ராதா உருதிரமூர்தியே செய்திருந்தார்.
அவரவர் பாத்திரங்களுக்கு ஏற்ற விதத்தில் மிகவும் திறம்பட அவர்களை உரு மாற்றி இருந்தார்
ராதா. மொத்தத்தில் கட்டுடை நாடகக் குழுவினரின் காதலா Culture ஆ எனும் நாடகம் எல்லோரும்
வயிறு குலுங்கி சிரிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதனை எழுதிய திருமதி தேவகி கருணாகரனின்
அந்த நகைச்சுவை உணர்வைக் கண்டு நான் வியந்து போனேன்.
அன்பின் ஆழம் என்னும்
நூலின் அட்டைப் படம் நூலுக்கு பொருத்தமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதனை அச்சிட்டவர்கள்
மித்ர ஆர்ட்ஸ் & கிரியேஷன்ஸ் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் உரிமையாளர்
இன் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த எஸ் போ அவர்கள் என்பதும் இங்கு
குறிப் பிடத்தக்கது. மிகவும் நேர்த்தியாகவும் சிறப்பாகவும் நடந்தேறிய ஒரு நூல் வெளியீட்டு
விழாவை கண்டு களித்த சந்தோசத்தில் நான் வீடு திரும்பினேன்.
மதுரா மகாதேவ்
2 comments:
ஒருவரின் பெயரைக் குறிப்பிடும் போது சரியாக எழுதுதல் வேண்டும். அதுவே அவருக்கு கொடுக்கும் மரியாதை!
ஆசி கந்தராஜா, ஆர் சி காந்தராஜா அல்ல, அவர் வைத்தியருமல்ல.
தவறைச் சுட்டிக் காட்டிய அன்பருக்கு எனது நன்றிகள். தவறு திருத்தப் பட்டுள்ளது. இத் தவறினால் யார் மனமும் புண் பட்டிருந்தால் என் மன்னிப்பை ஏற்றுக் கொள்ளவும்.
நன்றி
மதுரா
Post a Comment