( மதுரை உலகத் தமிழ்ச்சங்கமும் அவுஸ்திரேலியத் தமிழ் வளர்ச்சி மன்றமும் இணைந்து நடத்திய காணொளி ஆய்வரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரை )
அவுஸ்திரேலியாவில் மொழிபெயர்ப்பு முயற்சிகள்

வெள்ளை இனத்தவர்களிடம் ஆட்சி அதிகாரம் இருந்தபோதிலும் இத்தேசத்தின் பூர்வீக உரிமைக்குரியவர்கள். அபோர்ஜனிஸ் இனத்தவர்கள் என்று முன்னரே குறிப்பிட்டிருந்தோம்.
இவர்களில் பல குழுமங்கள் இருக்கின்றன. அவர்களிடத்திலும் வரிவடிவமற்ற பேச்சுமொழிகள் புழக்கத்திலிருக்கின்றன.

அத்துடன் சிட்னியில் வதியும் கீதா மதிவாணனும் , ஹென்றி லோசன் எழுதிய சில கதைகளை ஆஸ்திரேலியப் புதர்க்காடுறை மனிதர்களின் வாழ்க்கைக்கதைகள் என்ற மகுடத்தில் என்றாவது ஒரு நாள் என்னும் தொகுப்பினை இலக்கிய உலகிற்கு வரவாக்கியுள்ளார்.
நாம் குடியேறி வாழும் இந்தத்தேசத்தின் மைந்தர்களின் வாழ்க்கையை தமிழில் வழங்கியிருப்பவர்களின் வரிசையில் வரும் மற்றும் ஒருவர்தான் ஆழியாள் மதுபாஷினி.
கன்பராவில் வதியும் ஆழியாள் மதுபாஷினி உரத்துப்பேச, துவிதம், கருநாவு ஆகிய கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருப்பவர். இவரும் ஆங்கில மொழிவாயிலாக சில ஆதிவாசிகளின் கதைகள், கவிதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துள்ளார். ஆர்ச்சி வெல்லர், சாலிமோர்கன், மெர்லிண்டா போபிஸ், ஜாக் டேவிஸ், எலிசபெத் ஹொஜ்சன், பான்சி ரோஸ் நபல்ஜாரி ஆகியோரின் படைப்புகள் சிலவற்றை (சிறுகதை, கவிதை) தமிழுக்குத்தந்துள்ளார். தொடர்ந்தும் மொழிபெயர்ப்பு பணிகளில் ஆழியாள் மதுபாஷினி ஈடுபட்டுவருகிறார்.
ஆழியாள் மொழிபெயர்ப்பில் வெளியான பூவுலகை கற்றலும் கேட்டலும் என்ற கவிதைத் தொகுதி முக்கியமானது. அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வாழ்வுக்கோலங்களை இத்தொகுப்பு சித்திரிக்கின்றது. அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கியக்கலைச்சங்கத்தின் வாசிப்பு அனுபவப்பகிர்வில் இந்த நூல் பற்றி எனது நயப்புரையை பகிர்ந்துள்ளேன்.

சிட்னியில் வதியும் மாத்தளை சோமு, அவுஸ்திரேலிய ஆதிவாசிகளின் கதைகள் சிலவற்றை ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்குத்தந்துள்ளார். அவை கணையாழி அவுஸ்திரேலிய சிறப்பிதழில் (2000) வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவிலும் தமிழகத்திலும் வாழ்ந்து சிட்னியில் 2014 இல் மறைந்த எஸ்.பொன்னுத்துரை (எஸ்.பொ) சில ஆபிரிக்க இலக்கியங்களை தமிழுக்குத் தந்துள்ளார். சீநு ஆச்சுபேயின் மக்களின் மனிதன், செம்பென் ஒஸ்மானின் ஹால, நகீப் மஹ்பூஸின் மிராமார், ஜொன்னி விராவின் வண்ணத்துப்பூச்சி எரிகிறது, மையகென்ரோவின் நித்திரையில் நடக்கும் நாடு ஆகிய ஆபிரிக்க இலக்கியங்களை அவர் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
எஸ்.பொ. தமிழகத்திலிருந்தே இவற்றை மொழிபெயர்த்து தமது மித்ர பதிப்பகம் ஊடாக வெளியிட்டிருந்தார். அவரிடமிருந்த ஆங்கிலப்புலமை, ஆப்பிரிக்க இலக்கியங்களை தமிழ் வாசகர்களுக்கு வழங்கவேண்டும் என்ற வேணாவாவை பூர்த்திசெய்துள்ளது.
மெல்பனில் வதியும் நல்லைக்குமரன் குமாரசாமி தொடர்ச்சியாக மூன்று நூல்களை மொழிபெயர்த்தவர். தொழில் ரீதியாக மொழிபெயர்ப்பாளராக இங்கு பணியாற்றிய இவர் , ஆங்கிலத்திலும் கவிதைகள் எழுதுபவர். நல்லைக்குமரனின் ஆங்கிலக் கவிதைகள் அமெரிக்காவில் வெளியான சர்வதேசக் கவிஞர்களின் தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது.
இங்கு உதயம் ( தமிழ்-ஆங்கிலம் இருமொழி மாத இதழ்) வெளியிட்ட நடேசனின் வேண்டுகோளை ஏற்ற நல்லைக்குமரன் குமாரசாமி, பிரசித்தி பெற்ற ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய Animal Farm என்ற நாவலை விலங்குப்பண்ணை என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இந்நாவல் உதயம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலுருப்பெற்றது. இதுவரையில் இரண்டு பதிப்புகளை இந்நூல் கண்டுள்ளமை குறிப்பிடத்தகுந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எம்மவர்கள் ஆங்கில மூலத்திலிருந்து தமிழுக்குப் பெயர்த்த படைப்புகள் பற்றிய தகவல் குறிப்புகளை பதிவுசெய்யும் அதேவேளை இந்த மொழிபெயர்ப்பாளர்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு முயற்சிகளையும் சொல்ல விரும்புகின்றேன்.
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து முன்னர் பாப்புவாநியுகினியிலும் பின்னர் அவுஸ்திரேலியா சிட்னியிலும் வாழ்ந்துகொண்டிருக்கும் கவிஞர் அம்பி, பல நூல்களின் ஆசிரியர். தாம் முன்பு எழுதிய கிறீனின் அடிச்சுவட்டில் என்ற நூலை தாமே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, Scientific Tamil Pioneer என்ற நூலை வெளியிட்டார். அம்பி, Lingering Memories, String of Pearls ஆகிய ஆங்கில சிறுவர் (இலக்கிய) கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.
விலங்குப்பண்ணை மொழிபெயர்ப்பையடுத்து நல்லைக்குமரன்
குமாரசாமி, இலங்கையிலும் தமிழ் இலக்கிய உலகிலும் நன்கு அறியப்பட்ட மல்லிகை ஆசிரியர் டொமினிக் ஜீவாவின் வரையப்படாத சித்திரத்துக்கு எழுதப்படாத கவிதை (சுயசரிதை) நூலை Undrawn Portrait For Unwritten Poetry என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.
இங்கு வதியும் விலங்கு மருத்துவர் நடேசனின் வண்ணாத்திக்குளம் நாவலையும் நல்லைக்குமரன் Butterfly Lake என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இலங்கையில் பிரசித்திபெற்ற பதிப்பகம் விஜித்த யாப்பா பப்ளிகேஷன் இந்நூலை வெளியிட்டமை குறிப்பிடத்தகுந்தது.
வண்ணாத்திக்குளம் நாவலின் முதற்பதிப்பு சென்னை மித்ர பதிப்பகத்திலிருந்து வெளியானதையடுத்து, அதனைப்படித்த திரைப்பட இயக்குநர் “முள்ளும் மலரும் “ மகேந்திரன் அதனை திரப்படமாக்குவதற்கு முயற்சித்து திரைக் கதை வசனமும் எழுதினார் என்பது பழையசெய்தி. ஏற்கனவே சில நாவல்களை அவர் திரைப்படமாக்கியவர் என்பது கலை, இலக்கிய உலகம் அறிந்த செய்தி. தமிழில் எழுதப்பட்ட வண்ணாத்திக்குளம் நாவல் இரண்டு பதிப்புகளைக்கண்டுள்ளது. அதனை மடுளுகிரியே விஜேரட்ன என்பவர் இலங்கையில் சிங்கள மொழியில் பெயர்த்தார்.
இவர் தமிழில் சரளமாகப்பேசவல்லவர். 2017 ஆம் ஆண்டு மெல்பனில் நடந்த 17 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவிலும் இலங்கையிலிருந்து வருகை தந்துகலந்துகொண்டவர்.
நடேசனின் மலேசியன் ஏர்லைன் 370 என்ற கதைத்தொகுதியில் இடம்பெற்ற 17 சிறுகதைகளையும் சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
சிட்னியில் வதியும் பேராசிரியர் ஆ.சி. கந்தராஜாவின் தேர்ந்தெடுத்த பத்துக் கதைகளின் தொகுப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச்சேர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியர் பார்வதி வாசுதேவ் மொழிபெயர்த்தார். நூலின் பெயர்:- Horizon.
அத்துடன், பார்வதிவாசுதேவ், நடேசனின் உனையே மயல்கொண்டு நாவலை Lost In You என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.
எழுத்தாளர் பாடும்மீன் சு. சிறீகந்தராசா, எழுதிய நூல் சங்க காலமும் சங்க இலக்கியங்களும். இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகத்தின் செழிப்பை, தமிழ் இனத்தின் வனப்பை பண்பாட்டுச்சிறப்பை இந்நூலில் விரிவாக எழுதியிருக்கும் பாடும்மீன் சு. ஶ்ரீகந்தராசா, இந்த வரலாற்றை ஆங்கில வாசகர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக, Sankam Period and Sankam Literature என்ற பெயரில் மொழிபெயர்த்து வரவாக்கியுள்ளார்.
தமிழ்நாடு இராணி மேரி கல்லூரியில் ஆங்கில இலக்கிய விரிவுரையாளராகப் பணியாற்றிய கவிஞி சுமதி தமிழச்சி தங்கபாண்டியன் சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் ஆய்வுப்பணிக்காக வந்தவர். இவர் கடந்த தேர்தலில் தி.மு.க.வின் சார்பில் போட்டியிட்டு இந்திய நாடளுமன்றத்தின் உறுப்பினராகியிருக்கிறார். இவரது ஆய்வேடு, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை – அவுஸ்திரேலிய நாடகக் கலைஞர் ஏர்னெஸ்ட் தளையசிங்கம் மக்கின்ராயரின் நாடகங்களைப்பற்றியதாகும்.
இந்நூலை தமிழச்சி தங்கபாண்டியன், புவிக்கோளத்தின் மூலை முடுக்கெல்லாம் புலம்பெயர்ந்திருக்கின்ற ஈழத்தமிழர்களுக்கும் மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கும் சமர்ப்பணம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தகுந்தது.
எழுத்தாளர் தமிழச்சி தங்கபாண்டியன், இங்கு ஆய்வுப்பணிக்கு வருவதற்கு முன்னர் - தமது கல்லூரியில் புகலிடத் தமிழர்களின் ஆங்கில இலக்கிய முயற்சிகள் பற்றி உரையாற்றும்போது, அவுஸ்திரேலியா மெல்பனில் வாழ்ந்த அருண்.விஜயராணியின் ( இவர் கடந்த 2015 டிசம்பரில் மெல்பனில் மறைந்துவிட்டார் ) தொத்து வியாதிகள் (கணையாழி அவுஸ்திரேலிய சிறப்பிதழில் வெளியானது) என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Contagious Diseases என்ற பெயரில் சமர்ப்பித்தார்.
இலங்கையில் பேராசிரியை சித்திரலேகா மௌனகுரு பல வருடங்களுக்கு முன்னர் தொகுத்து வெளியிட்ட இலக்கிய உலகில் கவனிப்புக்குள்ளான ‘சொல்லாத சேதிகள்’ கவிதை நூலில் இடம்பெற்றுள்ள ரேணுகா தனஸ்கந்தாவும் அவுஸ்திரேலியா மெல்பனில் வசிக்கிறார். இவர் இலங்கையில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர்.
முருகபூபதியின் புதர்க்காடுகள் என்னும் சிறுகதையை ரேணுகா Bush Walk என்ற பெயரில் மொழிபெயர்த்தார். இச்சிறுகதை இலங்கையில் The Island பத்திரிகையில் வெளியானது.
கனடாவில் வதியும் சியாமளா நவரத்தினம் அங்கு தொழில் ரீதியாக மொழிபெயர்ப்பாளராக பணியாற்றுபவர். மும்மொழிகளிலும் பரிச்சயம் மிக்க இவர் (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) சில வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு வருகைதந்தார்.
சியாமளா, அருண்.விஜயராணியின் ‘கன்னிகா தானங்கள் ' கதைத்தொகுப்பிலிருந்த அனைத்துக்கதைகளையும், ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். எனினும் இந்த மொழிபெயர்ப்பு இன்னமும் நூலுருவில் அச்சாகவில்லை.
சியாமளா அவுஸ்திரேலியா வாழ் படைப்பாளிகள் சிலரதும் இங்கு சிறிதுகாலம் வசித்தவர்களினதும் சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.
இவர் மொழிபெயர்த்த, எஸ்.கிருஷ்ணமூர்த்தி, செ. ரவீந்திரன் , கல்லோடைக்கரன், நித்தியகீர்த்தி, அ.சந்திரகாசன், புவனா ராஜரட்ணம், நடேசன், ஆவூரான் சந்திரன் , ரதி, ஆசி. கந்தராஜா, அருண்.விஜயராணி, முருகபூபதி, தி.ஞானசேகரன், த.கலாமணி ஆகியோரின் கதைகளுடன் நவீனன் ராஜதுரை மொழிபெயர்த்த ஆழியாள் மதுபாஷினியின் ஒரு கதையுடன் மொத்தம் 15 கதைகளின் தொகுப்பு Being Alive கடந்த 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் கொழும்பில் நடந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டில் பேராசிரியர் எம்.ஏ. நுஃமான் தலைமையில் இடம்பெற்ற மொழிபெயர்ப்பு அரங்கில் வெளியிடப்பட்டது. இதனை அறிமுகப்படுத்தி உரையாற்றிய திறனாய்வாளர் கே.எஸ். சிவகுமாரன், பின்னர் அவுஸ்திரேலியா வந்தபொழுதும் அதனை அறிமுகப்படுத்தி உரையாற்றியதுடன், Observer பத்திரிகையிலும் எழுதியிருந்தார்.
இது இவ்விதமிருக்க அவுஸ்திரேலியாவில் வதியும் சகுந்தலா கணநாதன் என்னும் இலக்கிய ஆர்வலர் ஆங்கிலத்தில் White Flowers of Yesterday என்ற வரலாற்றுப்புதினம் எழுதியுள்ளார். பிரான்ஸ் நாட்டின் 1711 - 1724 காலகட்டத்தை சித்திரிக்கும் புதினம் அது.
முருகபூபதியின் சில சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட மொழிபெயர்ப்பு நூலின் பெயர் மதக்கசெவனெலி. இதன் ஆங்கிலப்பதம் Shadows Of Memories இதனை இலங்கையில் மொழிபெயர்த்தவர் ஏ.சி. எம். கராமத்.
கவியரசு கண்ணதாசனின் புகழ்பெற்ற, வாழ்க்கைச் சரிதமான வனவாசம் நூலை மெல்பனில் வதியும் நூர் மஃரூப் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, தற்போது செம்மைப்படுத்தலுக்கும் தயாராகியுள்ளது என்பதும் புதிய செய்தியாகும்.
நாங்கள் இங்கே பல்லின கலாசார சூழலில் வாழ்கின்றமையால், எம்மவர்களின் தமிழ் இலக்கியப்படைப்புகளை ஆங்கில மொழிக்கும் அதேசமயம் ஆங்கில மற்றும் அவுஸ்திரேலிய ஆதிவாசிகள் தொடர்பான இலக்கியங்களை தமிழ் மொழிக்கும் பெயர்க்கும் முயற்சிகளும் தொடருகின்றன.
அவுஸ்திரேலியாவில் ஆங்கில மொழியை பிரதானமாகப் பயிலும் எம்மவரின் பிள்ளைகள், எதிர்காலத்தில் தமிழ் இலக்கியங்களை தமிழில் படிக்காதுபோனாலும் ஆங்கிலத்தின் ஊடாக படிப்பதற்கான வாய்ப்பிருக்கிறது.
அவுஸ்திரேலியாவிலும் தமிழர் புலம்பெயர்ந்துவாழும் ஏனைய நாடுகளிலும் ஆங்கிலம் மூலம் கல்வி பயிலும் இளம்தலைமுறையினர் மத்தியில் வாசிக்கும் ஆர்வமுள்ளவர்களிடம் இந்த மொழிபெயர்ப்புகள் சென்றடையவேண்டும்.
அவர்களிடம் இம்மொழிபெயர்ப்பு குறித்த சிந்தனை எவ்வாறு பதியப்படுகிறது என்பதை படைப்பாளிகள் தெரிந்துகொள்ள வேண்டும்.
மூத்ததலைமுறையினர் மாத்திரம் பரஸ்பரம் இலக்கியம் பேசாமல், இளம் தலைமுறையினரையும் தாம் நடத்தும் இலக்கிய விழாக்கள், வாசகர் சந்திப்பு அமர்வுகளுக்கு அழைத்து அவர்களிடம் இந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் அறியவேண்டும்.
இலக்கிய உலகில் மொழிபெயர்ப்பாளர்களுக்குரிய இடம் இப்பொழுதும் முறையாக கவனிக்கப்படுவதில்லை. இந்நிலை மாறவேண்டும்.
( தொடரும் )
No comments:
Post a Comment