-சங்கர சுப்பிரமணியன்.
கற்றதனாலாய பயனென்கொல்
என்றார் வள்ளுவப் பெருந்தகை
அடுத்தவரியை ஏனப்படி சொன்னார்
என்றெண்ணி நான் குழம்பினேன்
என்னய்யா குழப்பமாய் நிற்கிறாய் என்று
ஒரு பெரியவரும் என்னைக்கேட்டார்
குழப்பத்தின் காரணம் சொல்லி முடித்ததும்
எவ்வாறிருப்பின் நன்றென வினவினார்
நன்றதைச் சொல்வதற்கு முன்னரே நான்
ஒன்றைச் சொல்கிறேன் என்றேன்
சொல்லப்பா நீ சொல்ல வருவதை சொல்லி
முடியப்பா என்றார் அவர்
சோறாக்கியதானாலாய பயனென்கொல்
பசித்தோர் பசி தீராஅர் எனின்
இதையே நான் சொல்ல விரும்பினேன்
இதிலேதும் பிழையினை கண்டீரோ
தனியொருவருக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம் என
பாரதி சொன்னது பாதகமில்லை எனில்
நான் சொல்வதும் தவறாகிடுமோ
என்றே நான் கேட்டதும் தம்பி என்றவர்
என்னை ஆரத்தழுவியே கேட்டார்
இப்படியும் எப்படி சிந்திக்கிறாய் என்றவர்
அந்ந நல்லதையும் சொல்லென்றார்
இப்போது சொல்வேன் அதை நீவிரும் ஏற்பீர்
என்பதனை நன்கறிவேன் என்றேன்
சொல்லவருவதை உம்மிடம் சொல்லுகிறேன்
நீவிரும் அதை சரியென்பீர்
கற்றதனாலாய பயனென்கொல் கல்லாதார்
கல்விக்கண் திறவார் எனின்
நான் இப்படி சொன்னதும் அப்பெரியவர்
என்னைக் கையெடுத்து தொழுதார்
தொழுதவர் கரங்களை நான் தடுத்து
காலில் விழுந்து வணங்கினேன்
இதையே அவர் குறளாய் சமைத்திருப்பார்
அதிலுள்ளது இடைச்செருகல் என்றார்
எழுத்தறிந்ததனாலாய பயனென்கொல்
அறிவித்தான் சொல் கேளாஅர் எனின்
என்றிருப்பின் நன்றென்றே சொல்வர்
நவில்ந்து மகிழ்ந்திருப்பர் என்றேன்
வள்ளுவன் இதைச்செய்திருக்க வழியில்லை
வஞ்சகம் நடந்திருக்க வாய்ப்புமுண்டு
என்றவர் சொன்னது தவறாமோ பொருளின்றி பொய்மொழி உரையார் பொய்யாமொழி!
No comments:
Post a Comment