மேலும் சில பக்கங்கள்

156 ஆவது ஜனனதினமும் காந்தியின் இலங்கை விஜயத்தின் நூற்றாண்டை நெருங்கும் நினைவுகளும் !

 

02 Oct, 2025 | 11:10 AM


தொகுப்பு - வீ. பிரியதர்சன்

இந்திய தேசத்தின் பிதாமகர் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்து, 2027 ஆம் ஆண்டுடன் நூற்றாண்டை நெருங்குகிறது. பிரித்தானிய ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவும் இலங்கையும் தமது கைகளை உயர்த்திக் கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில், தேசத்தின் விடுதலைக்கும் மக்கள் ஒற்றுமைக்கும் ஊக்கமளிக்கும் ஒரு வரலாற்றுப் பயணமாக அது அமைந்தது.

வரலாற்றுப் பயணம் 

மகாத்மா காந்தியின் வருகை பற்றிய செய்திகள் அவர் வருவதற்கு முன்பே இலங்கையின் பத்திரிகைகளில் வெளியாகி, நாடு முழுவதும் பரவியிருந்தன. 1927 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12 ஆம் திகதி (சனிக்கிழமை), மோகந்தாஸ் கரம்சந்த் காந்தி எனப்படும் மகாத்மா காந்தி, தனது மனைவி கஸ்தூரிபாயுடனும் தனது செயலாளர்களுடனும் கொழும்பை வந்தடைந்தார்.




இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களான சார்லஸ் எட்கர் கொரியா மற்றும் அவரது சகோதரர் விக்டர் கொரியா ஆகியோரின் அழைப்பின் பேரிலேயே காந்தி இந்த வரலாற்றுச் சுற்றுப்பயணத்தை இலங்கைக்கு மேற்கொண்டார். இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்கள் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களுடன் ஆழமான தொடர்புகளைப் பேணியிருந்தனர். காந்தியுடன், பிற்காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகப் பதவி வகித்தவரும், தமிழில் பல நூல்களை எழுதியவருமான ராஜாஜி எனப்படும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி மற்றும் காந்தியின் செயலாளர்களான மஹாதேவ் தேசாய் மற்றும் ப்யாரேலால் ஆகியோரும் வந்திருந்தனர்.

மூன்று வாரங்களில் தரிசனம்

இலங்கையில் மூன்று வாரங்கள் மட்டுமே தங்கியிருந்த மகாத்மா காந்தி, நாட்டின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்தார். காந்தி இலங்கைக்கு வருகை தந்து, முதலில் சென்ற இடம், அவருக்கு அழைப்பு விடுத்த சார்லஸ் எட்கர் கொரியாவின் சிலாபம் பகுதியிலுள்ள இல்லமாகும்.



மகாத்மா காந்தியும் அவரது மனைவி கஸ்தூரி பாயும் படஉதவி : indiatoday.in

கொரியாவின் அழகிய வீட்டுக்கு “சிகிரியா” என்று பெயரிடப்பட்டிருந்தது. காந்தி சிலாபத்தில் இந்த வீட்டில் தான் தங்கினார். அங்கிருந்து “நைனாமடம்” என்ற கிராமத்திற்கும் அவர் பயணித்தார். அவரது வருகையின் காரணமாக அந்தக் கிராமம் அப்போது “ஸ்வராஜ்ய புரம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

டொரீனின் நினைவலைகள்

"சிகிரியா" வீட்டில் ஒன்பது வயதான டொரீன் என்ற சிறுமி வசித்து வந்தாள். மகாத்மா காந்திக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை அவள் இப்படி விபரித்தாள்:

“மகாத்மா உள்ளே வந்தபோது, நீல நிறத் தாவணி அணிந்திருந்த என்னுடைய தங்கை நேன், அவருடைய கழுத்தில் மாலை இட்டாள். அந்தக் குட்டிப் பெண்ணின் வரவேற்பில் மகிழ்ந்த காந்தி, நேனை “காந்தியின் இனிமையான குட்டி இதயம்” (Gandhi’s Sweet Little Heart) என்று ஆங்கிலத்தில் விளித்தார்.

“சிகிரியா” வீட்டில் காந்திக்கு அவர் விரும்பி அருந்தும் ஆட்டுப்பாலும் பேரீச்சம்பழங்களும் அளிக்கப்பட்டன. மகாத்மா காந்தி தான் நூல் நூற்கும் கருவியை (சர்க்கா) எனது தந்தை கொரியாவுக்குப் பரிசாக அளித்தார்.” என டொரீனின் நினைவலைகள் சொல்கின்றது. 

மகாத்மா சென்ற கல்லூரிகள் மற்றும் முக்கிய இடங்கள்

சிலாபத்திற்குப் பின்னர், மகாத்மா காந்தி கண்டி, காலி, யாழ்ப்பாணம், நுவரெலியா, மாத்தளை, பதுளை, பண்டாரவளை, ஹட்டன் மற்றும் பருத்தித்துறை உள்ளிட்ட பல இடங்களுக்கும் சென்று மக்களைச் சந்தித்தார்.




மஹாத்மா காந்தி இலங்கையின் யாழ்ப்பாணம் சென்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் : படஉதவி : thehindu.com

அவர் சென்ற கல்வி நிறுவனங்கள்:



முதல் படம்: கொழும்பு ஆனந்த கல்லூரியில் உரையாற்றும் புகைப்படம். 2ம் படம் : கொழும்பு மாளிகாகந்த சமயநிகழ்வில் கலந்துகொண்ட போது எடுத்த படம். பட உதவி: sundaytimes.lk

    * காலி மஹிந்த கல்லூரி (1892 இல் ஸ்தாபிக்கப்பட்டது): இங்கு மாணவர்களிடையே உரையாற்றினார்.

* கண்டி தர்மராஜ கல்லூரி: மாணவர்களிடையே புகை பிடிப்பதன் தீமைகள் குறித்துக் கலந்துரையாடினார்.

    * மாத்தளை பாக்கியம் தேசிய கல்லூரி: மாத்தளைக்குச் சென்ற காந்தியின் கரங்களால், பாக்கியம் தேசிய கல்லூரிக்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது. பின்னாளில் அது சேர் பொன்னம்பலம் இராமநாதனால் திறந்து வைக்கப்பட்டு, இன்று மாத்தளையின் புகழ்பெற்ற பெண்கள் கல்விக்கூடமாகத் திகழ்கிறது.



1970 களில் இலங்கையின் நுவரெலியா படஉதவி : outboundholidays.com

'உலகப் பேரொளி உத்தமர் காந்தி' என்ற நூலை எழுதிய இலங்கையரான இ. சிறிஸ்கந்தராசா என்பவர் தமது நூலிலே மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில் என பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

மகாத்மா காந்தியின் இலங்கை விஜயம் ஒரே பார்வையில்,

13.11.1927 கொழும்பு விவேகானந்த சபை

15.11.1927 கொழும்பு மாநகர சபை

15.11.1927 கொழும்பு ஆனந்தாக் கல்லூரி

15.11.1927 நாலந்தாக் கல்லூரி

18.11.1927 மாத்தளையில் பொதுக் கூட்டம்

18.11.1927 கண்டி தர்மராஜா கல்லூரி

18.11.1927 கண்டி பொதுக் கூட்டம்

19.11.1927 பதுளையில் பொதுக் கூட்டம்

20.11.1927 நுவரெலியா விஜயம்

22.111927 கொழும்பு ஸஹிரா கல்லூரி

22.111927 இலங்கை தேசிய காங்கிரஸ்

23.11.1927 காலியில் பொதுக் கூட்டம்

24.11.1927 காலி மகிந்த கல்லூரி பரிசளிப்பு விழா

24.11.1927 கொழும்பு ரெட்டியார் சங்கம்

25.11.1927 யாழ்ப்பாணத்தில் பொதுக் கூட்டம்

26.11.1927 யாழ். மாணவர் காங்கிரஸ்

26.11.1927 யாழ். புனித பரியோவான் கல்லூரி

29.11.1927 யாழ். மத்திய கல்லூரி

உடுவில் மகளிர் கல்லூரி

சுன்னாகம் இராமநாதன் கல்லூரி

சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி

இந்நூலில்  பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விடுதலைக்கான ஆதரவு மற்றும் நன்கொடை


இலங்கையின் சில பாடசாலைகள் முன்வந்து காந்தி இயக்கத்திற்காக வழங்கிய நன்கொடை விபரம். பட உதவி : dailymirror.lk

மகாத்மா காந்தியின் இலங்கை வருகையின் முக்கிய நோக்கம், அவரது அகிம்சா இயக்கத்திற்கு ஆதரவு திரட்டுவதாகும். இலங்கையின் சார்பில் அவரது இயக்கத்திற்காக, அப்போதைய ரூபா மதிப்பில் மொத்தம் 1,05,000 ரூபாய் பணம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

அந்தவகையில், அப்போதைய தரவுகளின் படி, 1927 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் திகதி கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு 400 ரூபாவும் கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு 400 ரூபாவும் கொழும்பு வித்யோதயா கல்லூரிக்கு 600 ரூபாவும் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

1927 நவம்பர் 18 ஆம் திகதி கண்டி தர்மராஜா கல்லூரிக்கு 111 ரூபாவும் 1927 நவம்பர் 22 ஆம் திகதி கொழும்பு ஸாஹிரா கல்லூரிக்கு 400 ரூபாவும் 1927 நவம்பர் 24 ஆம் திகதி காலி மஹிந்த கல்லூரிக்கு 465 ரூபாவும் 1927 நவம்பர் 29 ஆம் திகதி யாழ்ப்பாணம் புனித பரியோவான் கல்லூரிக்கு 258 ரூபாவும் யாழ். மத்திய கல்லூரிக்கு 276 ரூபாவும் யாழ். இராமநாதன் மகளிர் கல்லூரிக்கு 1111.08 ரூபாவும் யாழ்ப்பாணக் கல்லூரிக்கு 600 ரூபாவும் நன்கொடைகளாக வழங்கப்பட்டுள்ளமை கடந்த கால ஊடகங்களில் வெளியிாகியுள்ள தரவுகளில் இருந்து அறிய முடிகின்றது.

யாழ்ப்பாணத்தில் 1924 இல் ஆரம்பிக்கப்பட்ட யாழ்ப்பாண இளைஞர் காங்கிரஸ் (Jaffna Youth Congress) என்ற அமைப்பின் மாநாட்டிலும் காந்தி கலந்து கொண்டார். பிரித்தானியரிடமிருந்து முழு இலங்கைக்குமான முழுமையான விடுதலையை அமைப்பு ரீதியில் முதன்முறையாக முன்வைத்த பெருமை இந்த அமைப்பையே சாரும்.

"இந்தியா என்னும் ஆரத்தில் பொருந்திய அழகிய பதக்கம்"

இலங்கையின் இயற்கை எழில் கொஞ்சும் அழகைக் கண்டு மெய் மறந்த மகாத்மா காந்தி, இந்தத் தீவை “இந்தியா என்னும் ஆரத்தில் பொருந்திய அழகிய பதக்கம்” என்று வர்ணித்தார்.

படஉதவி : theguardian.com

இந்தியாவின் விடுதலையையும் முன்னேற்றத்தையும் அவர் எவ்வளவு விரும்பினாரோ, அதே அளவு கரிசனம் இலங்கை மீதும் அவரால் காண்பிக்கப்பட்டது. 1927 ஆம் ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொண்ட அந்தப் பயணமே, இலங்கைக்கான அவரது முதலாவதும் இறுதியுமான பயணமாக அமைந்தது.

மகாத்மா காந்தியின் 156 ஆவது பிறந்ததினம் (ஒக்டோபர் 2) நாம் நினைவு கூரும் வேளையில், இலங்கை மண்ணில் அவர் பதித்த வரலாற்றுத் தடயங்களும், அவர் விதைத்த அகிம்சைச் சிந்தனைகளும் இன்றும் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுக்கு ஆழமான அத்திபாரமாகத் திகழ்கின்றன.

நன்றி வீரகேசரி 


No comments:

Post a Comment