October 12, 2024 7:56 am
அன்று நண்பர்களாகவிருந்த இருநாடுகளும், இன்று எதிரிகளாக மோதிக் கொள்ளும் விசித்திரம்!
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், மத்திய கிழக்குப் போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது. இருந்த போதிலும், இந்த இரண்டு நாடுகளும் நிரந்தர எதிரிகளாக வரலாற்றில் இருந்ததில்லை. இன்னும் சொல்லப்போனால், பொது எதிரிக்காக இரு நாடுகளும் கைகோர்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது.

மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பாரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் இராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வியும் எழுகிறது.
இருநாட்டு இராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரபூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் தகவல்களைப் பயன்படுத்தி இராணுவ வலிமை மதிப்பிடப்படுகிறது.
அன்று நண்பன் இன்று பகைவன்:
இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல், போரை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியுள்ளது என்றாலும், இந்த இரண்டு நாடுகளும் நிரந்தர எதிரிகளாக இருந்ததில்லை.
இன்னும் சொல்லப்போனால், பொதுஎதிரிக்காக இருவரும் கைகோர்த்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. 1960களில், இஸ்ரேலும், ஈரானும் ஈராக்கிற்கு எதிராக இணைந்து செயல்பட்டன.
விரோதப் போக்கு கொண்ட அரபு ஆட்சிகளுக்கு எதிராக இஸ்ரேல் ஒரு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கையில், ஈரான் அதன் கடைசி மன்னரான ஷா என அழைக்கப்படும் முகமது ரெசா பஹ்லவியின் ஆட்சியில் இருந்தது. ஈராக் பொதுஎதிரியாகவே, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் மற்றும் ஈரானின் உளவு அமைப்பான சாவக் ஆகியவை மத்திய ஈராக்கிய ஆட்சிக்கு எதிராக குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு ஊக்கமளிப்பதில் முக்கிய பங்காற்றின.
மேலும், இஸ்ரேல், ஈரான், துருக்கி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய முத்தரப்பு உளவு கூட்டணியை உருவாக்கின. ஷாவின் ஆட்சியின் இறுதிக்காலம் வரை இந்த உறவு அழுத்தமாக நீடித்தது.
இஸ்ரேல்- ஈரான் ஓர் ஒப்பீடு:
ஈரான் இஸ்ரேலை விடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை சுமார் ஒன்பது கோடி. இது இஸ்ரேலின் மக்கள் தொகையான ஒரு கோடியைவிட பல மடங்கு அதிகமாகும்.
கடந்த 2023 ஆம் ஆண்டில் ஈரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்தது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது ஈரானைவிட இரட்டிப்பாகும்.
சமீபத்திய புள்ளி விபரங்களின்படி இஸ்ரேல் – ஈரான் இராணுவ பலம் ஒப்பீடுகளின்படி ஈரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான இராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. ஈரானிடம் 6 இலட்சம் இராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1 இலட்சம் வீரர்கள் உள்ளனர்.
அத்துடன் இஸ்ரேலிடம் 3,501 தாங்கிகள், 64 கடற்படைப் போர்க் கப்பல்கள், 3,106 ஏவுகணைகள், 460 போர் விமானங்கள்- ஹெலிகொப்டர்கள், 48 நில வான் ஏவுகணைகள் உள்ளன.
ஆயினும் ஈரானிடம் போரிடும் 1,613 தாங்கிகள், 261 கடற்படைப்
போர்க் கப்பல்கள், 1,491 ஏவுகணைகள் மட்டுமே உள்ளன. அத்துடன் ஈரான் 336 போர் விமானங்கள்-ஹெலிகொப்டர்களையும், 279 நில வான் ஏவுகணைகளையும் வைத்துள்ளது.
அணு ஆயுத பலம்:
இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாக ஒருபோதும் கூறுவதில்லை.
ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அந்நாடு அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்போதும் மறுக்கிறது.
இஸ்ரேல் சார்பான அமெரிக்காவின் நிலைப்பாடு ஒருபோதும் மாறுவதில்லை.
ஹிஸ்புல்லா நஸ்ரல்லா கொல்லப்பட்ட பிறகு அறிக்கை வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய மக்களையும், வெளிநாட்டவரையும் கொன்று குவித்ததற்குக் காரணமானவரை கொன்று கணக்கைத் தீர்த்து விட்டோம்” என்றார்.
இதற்கு அமெரிக்காவும் வக்காலத்து வாங்கியது.
லெபனானில் 1983 இல் ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் வெடிகுண்டுத் தாக்குதலில் சாதாரண பிரஜைகள் 63 பேர், அமெரிக்கக் கடற்படையினர் 241 பேர், பிரெஞ்சு படையினர் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னர் ஈரானை எதிர்க்க, இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கஉறுதியாக வழங்கி வருகிறது.
லெபனான் பொதுவாக ஷியா முஸ்லிம் நாடாக அறியப்பட்டாலும், அங்கு ஷியா, சுனி முஸ்லிம்கள் ஏறக்குறைய சம அளவில்தான் உள்ளனர்.
அதிகாரபூர்வ கணக்கெடுப்பு அங்கு நடைபெறாவிட்டாலும், கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி சுனி முஸ்லிம்கள் 31.2 சதவீதம், ஷியா முஸ்லிம்கள் 32 சதவீதம் உள்ளனர் எனத் தெரியவருகிறது.
இது தவிர கிறிஸ்தவர்கள் 32.4 சதவீதம் உள்ளனர். இந்துக்கள், பௌத்தர்கள், யூதர்கள் சிறுபான்மையினராவர்.
நஸ்ரல்லா கொலையான பிறகு, சுனி முஸ்லிம்கள் தலைமையிலான பெரும்பாலான அரபு நாடுகள் அமைதி காத்தன. இஸ்ரேலுடனான உறவை சீர்படுத்துவதா அல்லது ஹஸ்புல்லாவை ஆதரிக்கும் ஈரானை எதிர்ப்பதா என்ற குழப்பம்தான் இதற்குக் காரணம்.
ஹிஸ்புல்லாவை 32 ஆண்டுகளாக வழி நடத்திய நஸ்ரல்லாவின் எதிரி நாடுகள் பட்டியலில் இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகள் பல இருந்தன. இதனால்தான் மேற்கத்தேய நாடுகள், வளைகுடா அரபு நாடுகள், அரபு லீக் ஆகியவை ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பு என அறிவித்திருந்தன.
சுனி முஸ்லிம் நாடான சவுதி அரேபியா, லெபனானில் நடக்கும் சம்பவங்கள் குறித்து கவலை தெரிவித்தாலும், நஸ்ரல்லா பற்றி எதுவுமே கூறவில்லை. இதேபோல்தான் சுனி முஸ்லிம் நாடுகளான கத்தார், பஹ்ரைன், ஐக்கிய அரபு எமிரேட் நாடுகளும் நஸ்ரல்லா கொலையானது குறித்து எதுவும் கூறவில்லை. ஏன் சில இடங்களில் கொண்டாடப்பட்டதாகவும் ஊடகங்களில் படங்களுடன் தகவல்கள் வெளியாகியிருந்தன.
2011 ஆம் ஆண்டில் ஷியா முஸ்லிம் இயக்கத்தை பஹ்ரைன் ஒடுக்கியது. இதற்குக் காரணம், பஹ்ரைன் ஷியா முஸ்லிம் நாடாக இருந்தாலும், ஆட்சியாளர்கள் சுனி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால்தான். ஆனால், சிரியாவில் மக்கள் சுனி முஸ்லிம்களாகவும், ஆட்சியாளர்கள் ஷியாக்களாகவும் உள்ளனர்.
லெபனானில் இஸ்ரேலிய படையெடுப்பு:
1982 இல் லெபனான் மீதான இஸ்ரேலின் முதல் படையெடுப்பு நிகழ்ந்தது. இதைத் தொடர்ந்து 2006 இல் நடந்த லெபனான் போரில் ஹிஸ்புல்லா படையினர் எல்லை தாண்டி ஊடுருவி கெரில்லா தாக்குதலை நடத்தி 2 இஸ்ரேலிய வீரர்களை பிணையாகப் பிடித்தனர்; மேலும் 3 வீரர்களை கொன்றனர். 34 நாள் போரில் 121 ஹிஷ்புல்லா வீரர்கள் இறந்தனர்.
தரைப்படையெடுப்பில் பல சவால்கள் இருந்தாலும், இதனைப் போக்கும் வகையில் ஹிஸ்புல்லாவின் பதுங்குகுழிகள் அழிப்பு, நஸ்ரல்லா உள்ளிட்ட அந்த அமைப்பின் முக்கிய தளபதிகள் கொலை, ஆயுதக் கிடங்குகள் அழிப்பு என அடுத்தடுத்த முன்னேற்பாடுகளை செய்துள்ளது இஸ்ரேல்.
முந்திய படையெடுப்புகளில் நிகழ்ந்த கடும் அழிவின் பாடத்தில் இருந்து இந்த உத்திகளை இஸ்ரேல் தற்போது கையாள்வதாகக் கூறப்படுகிறது.
-ஐங்கரன் விக்கினேஸ்வரா… நன்றி தினகரன்
No comments:
Post a Comment