மகுடம் – தோற்கருவி
அமைப்பு

தமிழ்நாட்டின் பறையை ஒத்த அமைப்புடையது மகுடம். பூவரசு, வேம்பு, மஞ்சணத்தி மரங்களில் ஏதேனும் ஒரு மரத்தின் கட்டையால் வளைவு செய்து, பெண் எருமையின் ஈரப்பதம் நிறைந்த தோலை அந்த சட்டத்தில் வைத்து புளியங்கொட்டை பிசினால் ஒட்டவேண்டும். பின்னர் இழுத்துக்கட்டி சூரிய ஒளியில் ஒருநாள் முழுதும் வைத்திருக்க வேண்டும். இதுவே பாரம்பரிய மகுடம் செய்முறை.
நாதம் பொங்கும் இந்த இசைக்கருவி, ஓசையின் அடிப்படையில் உச்சம், மந்தம் என இரு பெயர்களில் அழைக்கப்படும். உச்சத்தை ‘தொப்பி அல்லது இடந்தலை என்கிறார்கள். இது தொம் தொம் என்கிற ஒசையை தரவல்லது. சற்று பெரிய அளவு உள்ளது. கடினமான எருமைத் தோலால் செய்யப்படும். மென்மையான மந்த இசைக்குப் பெயர் வலந்தலை. அளவில் சிறியது. இதற்கு மென்மையான எருமைத்தோல் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பு


தென்மாவட்டங்களில் அழிவின் விளிம்பில் உள்ள கணியான்கூத்து நிகழ்ச்சியில் வாசிக்கப்படும் முக்கிய இசைக்கருவி மகுடம். இதை கைகளால் மட்டுமே இசைக்க வேண்டும். இக்கருவி பார்க்க எளிமையாக இருந்தாலும் செய்வதும் இசைப்பதும் மிகவும் சிரமம். ‘‘அந்தக் காலத்தில் பலர் மகுடம் செய்வதையே தொழிலாகக் கொண்டு வாழ்ந்தார்கள். இப்போது இக்கருவியை முறையாகச் செய்துதரக்கூட ஆளில்லை. இலக்கணம் அறிந்து வாசிக்கும் ஆட்களும் குறைந்து விட்டார்கள்’’ என்கிறார் வடக்கன்குளம் கிராமத்தை சேர்ந்த கணியான் கலைஞர் திரு கனேசமூர்த்தி அவர்கள். இவரே முறையாக தரமான மகுடங்களை செய்தும் வருகிறார். ஆசாரிகள் மகுடத்தை செய்யும் தொழிலை பெரும்பாலும் விட்டு விட்டார்கள் என்கிறார் இவர். இவர் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆசாரி மட்டுமே தொழிலை தொடர்ந்து செய்து வருவதாக கூறுகிறார் A.கணேசமூர்த்தி அவர்கள். மேலும் கணேசமூர்த்தியிடம் (தொடர்புக்கு +919488861200) மந்த மகுடம் 2000 இந்திய ரூபாய்க்கும் உச்ச மகுடம் 2500 இந்திய ரூபாய்க்கும் தரமான முறையில் கிடைக்கும் என்ற தகவலையும் கூறுகிறார். சட்டங்களை தனித்தனியாக செய்து கோர்த்து, பிறகு விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள இசைக்கருவிகள் அங்காடியில் கிடைக்கும் தரமான எருமை தோல்களையும்(readymade) புளியங்கொட்டை பசையையும் பயன்படுத்தியே இவர் மகுடம் செய்து வருவதாக தெரிவிக்கிறார்.



கணியான் கூத்தின் தோற்றம் சிவபெருமான் பிரம்மனின் தலையை கொய்தலில் ஆரம்பிக்கிறது. வடதமிழகத்தில் பெரியாண்டவர் அங்காளம்மன் போன்ற தெய்வங்களுடன் தொடர்புடையதாகவும், நிறுவன சமயங்களான சைவ சமய கோயில்களிலும் வைணவ திவ்ய தேசங்கள் இரண்டிலும் இந்த நிகழ்வை ஒட்டிய தலபுராணங்கள் வழக்கிலுள்ளது. இந்த நிகழ்வின் தொடர்ச்சியாக தான் சுடலைமாடன் கதையும் இருக்கின்றது. சிவபெருமானை பிடித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியதும் அதை சார்ந்ததும் ஆக வரும் நிகழ்வுகளை தென்தமிழகத்தில் வழங்கப்பட்டு வரும் சுடலைமாடன், முண்டன், மாயாண்டி மற்றும் பிரம்மகுல பேச்சியம்மன் ஆகிய நாட்டார் தெய்வங்களின் கதைகளாகும். இக்கதைகளில் வரும் முண்டன் உடன் தோன்றியவரே முத்துபுதியவன் எனப்படும் தெய்வக்கணியான் ஆவார். தற்காலத்தில் வாழும் கணியான் சாதியினர் தங்களை இத்தெய்வக்கணியானின் வாரிசுகளாக கருதிக் கொள்கிறார்கள். மகுடமும் கணியான் கூத்தும் இத்தெய்வ வழிபாட்டில் இருந்து பிரிக்க முடியாத அங்கங்களாக விளங்குகின்றது.

சுடலை மாடன் கோவில்களில் வியாழக்கிழமை இரவு குடி அழைப்புடன் கொடை தொடங்கும். சனிக்கிழமை அதிகாலை முடியும். வியாழன் இரவு, வெள்ளிக்கிழமை பகல், வெள்ளிக்கிழமை இரவு என தொடர்ந்து கணியான் கூத்து நடக்கும். இயற்கைக் கடன்களை முடிக்கவும் சாப்பிடவும் மட்டுமே அவர்கள் செல்வார்கள். கச்சேரிகளில் அதிகபட்சமாக 2 மணி நேரம் நடக்கும் கச்சேரிகளை மட்டுமே கேட்டு வரும் நமக்கு, எப்படித்தான் இந்த கணியான் கூத்து அண்ணாவி விடிய விடிய பாடுகிறாரோ, மகுடம் வாசிப்பவர் கைக் கடுக்காமல் வாசிக்கிறாரோ என்று தோன்றும்.
கணியான் கூத்து தொடங்கும் போது கணியான் பாடுவதற்கும் ஆடுவதற்கும் இடம் விட்டு சுற்றி ஊர்க்காரர்கள் அமர்ந்து கொள்வார்கள். சிறுவர்கள் சுற்றி வட்டமாக இருப்பார்கள். பனை ஒலையைக் கொளுத்தி , அது “சடக் சடக்” என வெடிப்புடன் எரியும் போது, அதில் உச்சத்தையும் மந்தத்தையும் சூடாக்கி சுதி சேர்ப்பார்கள். “கணங் கணங்” “பிளாங் பிளாங்” என்று சத்தம் கேட்டதுமே உள்ளத்தில் ஒரு துள்ளல் பிறக்கும். இடுப்பில் மேளத்தை சுற்றிக் கட்டி விட்டு, ஒரு கையை மேல் பக்கமாக வைத்தும் இன்னொரு கையை நேரடியாக வைத்தும் வாசிப்பார்கள். உச்சம் வாசிப்பவருக்கும் மந்தம் வாசிப்பவருக்கும் மன அளவில் ஒரு ஒத்திசைவு இருக்கும்.
ஒன்பது மணி அளவில் கணியான் பாட ஆரம்பிப்பார். அதற்கு முன்னதாக மகுடம் வாசிப்பவர்கள் இருவரும் சேர்ந்து வாசித்து ஒரு முத்தாய்ப்பு வைப்பார்கள். அண்ணாவி கணபதி காப்பை ஹம்சத்வனியில் பாடுவார். சாஸ்தா உள்ளிட்ட எல்லா தெய்வங்களையும் வணங்கி விட்டு, சுடலைமாடன் கதைக்கு வருவார்கள். நேரம் ஆக ஆக, பாட்டும், வாசிப்பும் ஆட்டமும் களை கட்டும். உரத்த குரலில்,
மாயாண்டி சுடலை அய்யா
சத்திராதி முண்டசாமி
தாயான பேச்சியோடு
கச்சை வருஞ்சி பூட்டி,
கருத்த கச்சை சுண்டலிட்டு
ஒட்டு கச்சை சல்லடமாம்...
என்று பாடுவார்கள். கணியான்கள் சுழன்று ஆடும் போது கோவிலின் முன்னால் கொடைக்காக விரிக்கப்பட்டிருக்கும் ஆற்று மணல் அல்லது கடல் மணல் முன் வரிசையில் இருப்பவர்கள் மீது வாரி இறைக்கப்படும். துரித காலத்தில் பாடும் போது சுற்றி வந்து ஆடி விட்டு, பின்னர் பாட்டுக்காரரின் அருகில் வந்து, நின்ற இடத்திலேயே ஆடிக் கொண்டிருப்பார்கள். இரவு 12 மணிக்கு பூசை தொடங்கும். சுடலை மாடன் கைலாய மலையை விட்டு இறங்கி, காசி கடந்து மற்றுள்ள ஊர்களையெல்லாம் சுற்றி கொடை நடக்கும் ஊர் இடுகாட்டை நோக்கி வருவதை அண்ணாவி பாடிக் கொண்டிருப்பார்.
“வாரானே சுடைலைக் கண்ணு, கைலாசம் தான் கடந்து, தான் கடந்து”
“பக்கத்திலே முண்டனுமாம் முண்டனுமாம்”
“மாயாண்டி சுடலை ஐயா….கொள்ளையிட வருகிறாரே. ஏ ஏ ஏ..
சந்தன கட்டையிலே சவம் கிடந்து எரியுதய்யா.. ஆ ஆ ஆ
பூவரசம் கட்டையிலே பிணம் கடந்து வேகுதய்யா. ஆ ஆ ஆ.”
பிறகு பூசை தொடரும். பறை (தனியாக இதற்கென வருவார்கள்) முழங்க, கருங்கொம்பு ஊதப்படும். பலி, சாமியாட்டம்,அருள்வாக்கு என்று தொடரும் கொடை மீண்டும் கணியான் கூத்துடன் விடிய விடிய நீளும். ஆகம மயமாதல் மற்றும் பிற காரணிகளால் சுடலை மாடன் கோவில்களில் இருந்து கணியான் கூத்து மெல்ல வழக்கொழிந்து வருகிறது. ரெக்கார்ட் டான்ஸ், ஆர்கெஸ்ட்ரா, ஆட்டம் பாட்டம், பட்டிமன்றம் போன்று வேறு கேளிக்கைகளும் கொடை விழாக்களில் இடம்பெறுவதால் கணியான் கூத்து மிகவும் பின்னுக்கு தள்ளப்படுகின்றது. இக்கலைகள் என்றும் வாழ அந்த சுடலை மாடன் தான் அருள் செய்ய வேண்டும்.
ஆடு மேய்த்தலை தலையாய தொழிலாக கொண்டவரகள் தமிழக/கருநாடக/ஆந்திர மாநிலங்களில் வாழும் குரும்பர் பழங்குடியினர். மகுடத்தை போன்றும் அதைவிட சற்று பெரியதுமான இசைக்கருவியை இம்மக்கள் இசைக்கிறார்கள். தப்பட்டை என்று சொல்கிறார்கள். இவை ஆட்டு மற்றும் மாட்டுத் தோல்களில் வேங்கை மரத்தில் செய்யப்படுவதாக கூறுகிறார் குரும்பர் இனத்த சார்ந்த திரு சி.மீனாட்சிசுந்தரம் அவர்கள். குரும்ப சேவையாட்டம் என்னும் அவர்களின் தொன்மையான நடனத்தில் மகுடத்தை இசைக்கிறார்கள். வீரபத்திரர், சாமுண்டி, மாரியம்மன், மகாலட்சுமி(கெப்பியம்மன்) ஆகியோர் இவர்கள் வழிபடும் முக்கிய தெய்வங்கள். இத்தெய்வங்களின் விழாக்களில் மகுடத்தை இசைத்து அடவுகளுடன் சேர்ந்த நடனத்தை ஆடுகிறார்கள். பலகையாட்டம் என்னும் ஆட்டமும் உண்டு. இது ஒரு பலகையில் தெய்வத்தை வைத்து தலையில் சுமந்து ஆடும் ஆட்ட வகையாகும். கோட்டை கொம்பு என்னும் கொம்பு வகை கருவியும் இவர்களின் முக்கிய இசைக்கருவி. குரும்ப சேவையாட்த்தில் 12 வகையான ஆட்ட வகைகள் உண்டாம். மகுடத்தை இசைத்து ஆடுவோர் நீண்ட பாவாடை அணிந்தும் ஆடுகளின் முடியை தொங்கவிட்ட படியும் ஆடுகிறார்கள். சேவையாட்டம் தவிர இவர்களின் அனைத்து வழிப்பாட்டு சடங்குகளிலும் மகுடம் முக்கிய அங்கமாக விளங்குகிறது.
தமிழகம் மற்றும் கருநாடகத்தில் வாழும் இருளர் பழங்குடி மக்களும் மகுடம் போன்ற கைகளால் தட்டி இசைக்கப்படும் கருவியை பயன்படுத்துகிறார்கள். இவையும் கன்னியம்மன் போன்ற தெய்வ வழிபாட்டிலேயே இசைக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் மகுடம் போன்று கைகளால் இசைக்கப்படும் இசைக்கருவியை தப்பு மேளம் என்று அழைக்கிறார்கள். தரையில் உட்கார்ந்து இசைக்கப்படுகிறது. அம்மன் கோவில்களில் தவறாமல் இடம்பெறுகிறது. படையனி என்பது தாய் தெய்வத்தை முன்னிறுத்தி ஆடப்படும் கேரளக் கலை வடிவம் ஆகும். இதில் தப்பு மேளம் தான் முக்கிய இசைக்கருவி. தாளமும் உண்டு.
மகுடமும் கணியான் கூத்தும் இந்த மண்ணில் என்றும் வாழ வேண்டும்.அதற்கு நமது ஆதரவும் ஊக்கமும் தேவை.
புழக்கத்தில் உள்ள இடங்கள்
தமிழக தென் மாவட்டங்கள் – திருநெல்வேலி, துத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி - சுடலைமாடன், சிவணைந்த பெருமாள், முனியசாமி, முண்டசாமி, முத்துப்பட்டன், பட்டவராயன், தளமாய் மாடன், கரடி மாடன், பன்றி மாடன், வண்ணாரமாடன், சங்கிலிபூதத்தார், கருப்பசாமி, இருளப்பசாமி, பலவேசசாமி, சப்பாணிமாடசாமி, இசக்கியம்மன், பேச்சியம்மன், காளியம்மன், பத்திரகாளியம்மன், உச்சினிமாகாளி, தங்கம்மன், முத்தாரம்மன், முப்பிடாதியம்மன், மாடத்தியம்மன், சந்தனமாரியம்மன் மற்றும் தன் உயிரை நீத்து தெய்வமாக இருக்கும் கிராம தெய்வங்களுக்கான விழாக்களில் கணியான் கூத்து இருக்கும்.
குரும்பர் பழங்குடியின மக்களிடம்
இருளர் பழங்குடியின மக்களிடம்
காணொளி:
கணியான் கூத்து:
குரும்பர்:
-சரவண பிரபு ராமமூர்த்தி
1. வெ. நீலகண்டன், வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள்
2. மகுட புகைப்படங்கள் மற்றும் மேலதிக தகவல்கள் உதவி – திரு கணேசமூர்த்தி அவர்கள், வடக்கன்குளம்.
3. திரு சி மீனாட்சிசுந்தரம் அவர்கள், ஈரோடு , குரும்பர் தகவல்கள்
4. கணியான் கூத்து – திருசெல்வம், சொல்வனம்
கணியான் மக்கள் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள்( ST)
ReplyDeleteசார் வணக்கம் எனக்கு மகுடம் தேவை படுகிறது
ReplyDelete