அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com
வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும் அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது ! பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது
யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால் பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை ! சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும் சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை ! அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது உரங்கொண்ட கருத்தெல்லாம் உயிரோட்டம் பெறுகிறது வரமாகவந்து நிற்கும் வள்ளுவரின் குறளெமக்கு அரணாக நிற்பதனால் அகமகிழ்ந்து நிற்போமே ! காலத்தால் அழியாத கருத்தனைத்தும் கொண்டதனால் ஞாலத்தில் குறளெமக்கு நற்றுணையாய் இருக்கிறது சீலத்தைப் புகட்டுவதாய் திருக்குறளே இருப்பதனால்' காலத்தைப் புலப்படுத்தும் கண்ணெனவே திகழ்கிறது ! மொழிபெயர்புப் பலகண்ட முழுமைபெற்ற நூலாக தெளிவான கருக்கொண்ட திருக்குறளே திகழ்கிறது ஒளிவிளக்காய் என்றும்குறள் உலகினுக்கே இருப்பதனால் உயர்பெருமை தமிழுக்கே உரித்தாகி நிற்கிறது ! குறள்படித்தால் குறையகலும் குறள்படிப்போம் வாருங்கள் குறள்படித்தால் குணம்சிறக்கும் குறள்வீட்டில் வைத்திருங்கள் அறங்கொண்ட வாழ்வுவர அனைவருமே குறள்கற்போம் திறம்கொண்ட குறளொன்றே தீர்வான மருந்தாகும் ! வள்ளுவத்தை படித்தறியார் வாழ்வதிலே ஏதுபயன் தெள்ளுதமிழ் பொக்கிஷமாய் திருக்குறளே இருக்குதன்றோ உள்ளமெலாம் திருக்குறளை உட்செலுத்தி வைத்துவிடின் வையகத்தில் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்