தமிழ்முரசு Tamil Murasu

அவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை16/06/2024 - 22/06/ 2025 தமிழ் 16 முரசு 10 tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com

மேலும் சில பக்கங்கள்

▼

வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து .. ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

.
       வள்ளுவன் தன்னையுலகினுக்கே தந்துவான்புகழ் கொண்டநாடென
       தெள்ளுதமிழ் கொண்டு செப்பிநின்றான் பாரதியும்
       அள்ளவள்ளக் குறையாத அமுதமாம் சுரங்கமென
       வள்ளுவரின் குறளெமக்கு வாய்த்தெல்லோ விருக்கிறது !

       பாவளவில் குறுகிடினும் பாரெல்லாம் பயனுறவே
       நீழ்கருத்தைச் சொல்லியதால் நிமிர்ந்துகுறள் நிற்கிறது


       யார்மனதும் நோகாமல் நல்லதெலாம் சொல்லுவதால்
       பார்முழுக்க உள்ளாரும் பார்க்கின்றார் வள்ளுவத்தை !

       சமயமெலாம் கடந்துநிற்கும் சன்மார்க்க நூலெனவே
       இமயமென இருக்கிறது எங்களது திருக்குறளும்
       சமயமெலாம் கடந்தாலும் தங்களது நூலெனவே
       மனமாரக் கொண்டாடி மதித்திடுவார் திருக்குறளை !

      அறம்பற்றிச் சொன்னாலும் அழகாகச் சொல்கிறது
      உரங்கொண்ட கருத்தெல்லாம் உயிரோட்டம் பெறுகிறது
      வரமாகவந்து நிற்கும் வள்ளுவரின் குறளெமக்கு
      அரணாக நிற்பதனால் அகமகிழ்ந்து நிற்போமே !

      காலத்தால் அழியாத கருத்தனைத்தும் கொண்டதனால்
      ஞாலத்தில் குறளெமக்கு நற்றுணையாய் இருக்கிறது
      சீலத்தைப் புகட்டுவதாய்  திருக்குறளே இருப்பதனால்'
      காலத்தைப் புலப்படுத்தும் கண்ணெனவே திகழ்கிறது !

     மொழிபெயர்புப் பலகண்ட முழுமைபெற்ற நூலாக
     தெளிவான கருக்கொண்ட திருக்குறளே திகழ்கிறது
     ஒளிவிளக்காய் என்றும்குறள் உலகினுக்கே இருப்பதனால்
     உயர்பெருமை தமிழுக்கே உரித்தாகி நிற்கிறது !

      குறள்படித்தால் குறையகலும் குறள்படிப்போம் வாருங்கள்
      குறள்படித்தால் குணம்சிறக்கும் குறள்வீட்டில் வைத்திருங்கள்
      அறங்கொண்ட வாழ்வுவர அனைவருமே குறள்கற்போம்
      திறம்கொண்ட  குறளொன்றே தீர்வான மருந்தாகும் !

      வள்ளுவத்தை படித்தறியார் வாழ்வதிலே ஏதுபயன்
      தெள்ளுதமிழ் பொக்கிஷமாய் திருக்குறளே இருக்குதன்றோ
      உள்ளமெலாம் திருக்குறளை உட்செலுத்தி  வைத்துவிடின்
      வையகத்தில் எல்லோரும் வாழ்வாங்கு வாழ்ந்திடலாம்

         ( உலகத் திருக்குறள் பேரவை - காஞ்சிபுரமாவட்டம் நடத்திய 
                கவிதைப் போட்டியில் பரிசு பெற்ற கவிதை  31/01/2016 )
at 12:22 AM
‹
›
Home
View web version
Powered by Blogger.