விமல் சொக்கநாதனின் கம்பீரக்குரல் ஓய்ந்தது!

 August 3, 2023 6:00 am

இலங்கை வானொலி ஊடாக தமிழ் ​பேசும் மக்களை வசீகரித்த மாபெரும் கலைஞனின் மறைவினால் அபிமானிகள் பெருந்துயர்!

உலகப் புகழ்பெற்ற லண்டன் பி.பி.சி வானொலியின் ஒலிபரப்பாளரும், தமிழ்ப்பத்திரிகைகளில் தொடர்ச்சியாக கட்டுரைகளை எழுதிவந்தவரும், சட்டத்தரணியுமான விமல் சொக்கநாதன் லண்டன் மாநகரில் அகால மரணத்தைத் தழுவினார் என்ற செய்தி ஏராளமான மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இலங்கையில் எண்பதுகளில் போர் உக்கிரமடைந்த காலத்தில் பி.பி.சி தமிழோசை பிரபல்யம் மிக்கதாக விளங்கியது. போரின் நெருக்கடிகளிலும், மின்சாரமின்மை, மின்கலங்களுக்கு (பற்றரி) தடை என்பனவற்றுக்கு மத்தியிலும் சைக்கிள் டைனமோக்கள் மூலம் வானொலியை இயக்கி பி.பி.சி வானொலியை தமிழ் மக்கள் கேட்டுவந்தனர்.

தமிழோசையின் அப்போதைய பொறுப்பாளர் ‘சங்கர் அண்ணா’ என அன்பாக அழைக்கப்படும் சங்கரமூர்த்தி, ‘ஆனந்தி அக்கா’ என அன்பாக அழைக்கப்படும் மூத்த ஒலிபரப்பாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் மற்றும் விமல் சொக்கநாதன் ஆகியோர் அக்காலத்தில் மக்களின் பேரபிமானம் பெற்ற ஒலிபரப்பாளர்களாக இருந்தார்கள். இவர்களது குரலைக் கேட்க இரவு 9 மணிக்கு வானொலியை சிற்றலை வரிசைக்கு திருப்புவது இலங்கைத் தமிழர்களது வழக்கமாகவிருந்தது.

1941ஆம் ஆண்டு மே 3 ஆம் திகதி பி.பி.சி தமிழோசை ஆரம்பிக்கப்பட்டது. தொடக்கத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் பதினைந்து நிமிடம் ஒலிபரப்பாகிவந்த தமிழோசை, பின்னர் வாரத்தில் ஐந்து நாட்கள் நாளொன்றுக்கு அரைமணி நேரம் ஒலிபரப்பானது. இந்தியா, இலங்கை மற்றும் கனடா போன்ற புலம்பெயர்நாடுகளில் தமிழ் மக்கள் மத்தியில் இவ்வானொலி பிரபலமாக இருந்தது.

கலைக்குடும்பமொன்றின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர் விமல் சொக்கநாதன். சிறுவர் மலர் நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். சிறந்த வானொலிக் கலைஞரான அவர், இலங்கை வானொலியில் நீண்ட காலம் அறிவிப்பாளராகப் பணியாற்றியவர்.

இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்த பின்னர் பி.பி.சி தமிழோசையில் அறிவிப்பாளராக இருக்கும் இவரது குரல் பன்னாட்டு வானொலிகளிலும் ஒலித்தது. அறிவிப்பாளரும், லண்டனில் ‘இசைக்குயில்’ போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான யோகா தில்லைநாதன் இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.

இலங்கை வானொலியில் விமல் சொக்கநாதன் படைத்த இசையும் கதையும், வாலிப வட்டம் போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய ‘களம் பல காண்போம்’ என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி ‘வானொலிக் கலை’ என்ற நூலையும் எழுதியுள்ளார். அத்துடன் விமல் சொக்கநாதன் வரணியூரான் இயக்கிய ‘பாசச்சுமை’ எனும் மேடை நாடகத்திலும் நடித்துள்ளார். அத்துடன் ‘நான் உங்கள் தோழன்’ என்ற 1978 ஆம் ஆண்டு வெளிவந்த ஈழத்து தமிழ்த் திரைப்படத்திலும் விமல் சொக்கநாதன் நடித்துள்ளார்.

இதுவரை விமல் சொக்கநாதன் மூன்று நூல்களை எழுதியுள்ளார். வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி ‘வானொலிக் கலை’ என்ற நூலை சென்னையில் காந்தளகம் பதிப்பகம், மே 2007 இல் வெளியிட்டது.

இதன் பின்னர் மிக அண்மைக் காலத்தில் ‘லண்டனில் இருந்து விமல்’ -தொடர்கட்டுரைகளின் தொகுப்பு நூலும், ‘விமலின் பக்கங்கள்’ – என்ற கட்டுரைகளின் தொகுப்பு நூலையும் விமல் படைத்துள்ளார்.

இவ்விரு நூல்களும் லண்டன், பாரிஸ், சென்னை, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களில் வெளியிடப்பட்டு நண்பர்களாலும் வாசகர்களாலும் பெரிதும் பாராட்டப்பட்டன. அறிவிப்பின் சிகரமாக, லண்டனில் இருந்து தமிழ் முழங்கிய மூத்த ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் தனது 75 வயதில் நேற்றுமுன்தினம் லண்டனில் விபத்தொன்றில் அகால மரணமானார். தமிழ் ஒலி அலை ஓய்ந்து, வண்ணக் குரல் இனி முழங்காதோ என மனம் ஏங்குகிறது.

ஐங்கரன் விக்கினேஸ்வரா…?   நன்றி தினகரன் 

No comments: