Prisioner #1056 “போர் தின்ற மனிதன் சாதித்த கதை” 📚 நூல் நயப்பு - கானா பிரபா

                                                                                                                                                                                                                                        


 “அழக்கூட முடியாமல் களைத்துப் போயிருந்தோம்"    நாளுக்கு நாள்
அனுபவிக்கும் சித்திரவதையை விட மேலானது இறப்பு என்பதுதான் தங்களுக்குக் கிடைக்கக் கூடிய அதிகபட்ச கருணை என்ற நிலையில் தான்அங்குள்ள அத்தனை பேரின் ஒருமித்த மனநிலை.    அம்மாவின் கைக்குள் இருந்த அந்தப் பதினேழு வயதுப் பையன் இதோ இப்போதுகைதி இலக்கம் #1056 என்ற அடையாளச் சின்னதோடு ஶ்ரீலங்கா அரசின் வதைமுகாமில்.    அவனோடு கூடவே சிறைப்பிடிக்கப்பட்ட 2700 அப்பாவித் தமிழ் இளைஞர்களின்குரலாக அது ஒலிக்கிறது.    அந்தப் 17 வயது பையன், 36 வருடங்களுக்கு முன்னர் தனக்கு நேர்ந்த அவலவாழ்வினைக் காட்சிப்படுத்தும் சூழலில் இருந்து ஆரம்பிக்கிறது Prisioner #1056

 அந்தப் பையன் தான் இன்று கனேடிய மண்ணின் ஆகப்பெரிய
சுயாதீன சொத்துநிர்வாக நிறுவனம் CI Financial இன் நிறைவேற்றுத் துணைத்தலைவராக வளர்ந்துநிற்கும் ரோய் ரட்ணவேல்.    

 ஈழத்தின் வடமராட்சி மண்ணின் கடல் வளம் கொண்ட பருத்தித்துறை மண்ணின்அழகியல் விபரணத்தோடு தொடங்குகிறது ரோய் ரட்ணவேலின் வாக்குமூலம்.      

மிராஜ் 2000 விமானத்தாக்குதலோடு தொடரும் பக்கங்களில் தன் கண் முன்னேகண்ட போரின் கோர வடுக்களோடு மெல்ல மெல்ல,   

1987 இல் வடமராட்சி மண் மீது ஶ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை வழியாக அந்தக்கொடிய போரின் சாட்சியங்களில் ஒருவராகக் கைதாகி, வதை முகாமில் அடுத்தஅனுபவங்களுக்கு முகம் கொடுக்கிறார். தமிழ்த் தீவிரவாதி என்று பலவந்தமாகஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதற்காக அந்தக் கொலைக்களத்தின் பலியாடுகளில்ஒருவராகிறார்.    

1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரம் நிகழ்ந்து 40 ஆண்டுகள் தொட்டிருக்கும்நிலையில்




































அந்தக் கொடிய போரியல் வரலாற்றோடு  சுபேந்திரன் (ரோய் ரட்ணவேல்) என்ற அந்த இளைஞனின் சோதனையும், சாதனையுமாகப் பயணிக்கிறது தொடர்ந்த பக்கங்கள்.   

 “தோற்றுப் போன கண்களோடு”   தந்தையைக் கண்ட விபரணம் முதற்கொண்டு பக்கத்துக்குப் பக்கம் படித்துக்கொண்டே போகும் போது   அந்த வலிகள் மனதில் ஏறிக் கண்களைக் குளமாக்கிக் கொண்டே போகிறது. முதல்நான்கு அத்தியாயங்களைப் படிக்கும் போது இடையில் நிறுத்தி அழுதுவிட்டுத்தொடர்வதுமாக இருந்தது இந்த வாசிப்பனுபவம். அவ்வளவு பெரிய வேதனையைக்கொட்டிக் கொடுத்திருக்கும் அந்த அப்பாவி இளைஞனின் துயர் மிகு வரலாறு.    

Priosoner #1056 ஒலிப்புத்தகமாகவும் Audible இல் Roy Ratnavel  அவர்களின்குரலிலேயே பதிவு செய்யப்பட்டும் கிடைக்கிறது. அவரின் குரலிலேயே கேட்கும்அனுபவம் கிடைக்கும் போது எழுத்தின் வீரியம் இன்னும் இருமடங்காகத்தொனிக்கிறது. 10 மணித்தியாலங்கள் கொண்ட ஒலிப்புத்தகம் அது.     

அந்த வதை முகாமில் இருந்து தப்பிய வாழ்க்கையில் எதிர்கொண்ட அனுபவங்கள்எல்லாம் அப்படியே ஒரு டயரியின் ஒவ்வொரு கிழிக்கப்படாத பக்கங்களைப்படிக்கும் அனுபவம். காட்சிகளையும், வரலாற்றையும் விபரிக்கும் தோரணையில்ஒரு முழு நீள வாழ்வியல் திரைப்படத்தைக் கண்ட உணர்வும் எழுகிறது.      

இந்தப் புத்தகம் ஒரு சாதாரண மனிதன் சாதித்த கதையையும் சொல்கிறது, கூடவேஇலங்கை இனப்பிரச்சனையின் மூலாதாரங்களையும் தொட்டுக் கொண்டு போகும்முழுமையான வரலாற்றுப் பார்வையாகவும் பயணிக்கிறது. மிக முக்கியமாக 1983 இலிருந்து 2009 ஆம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மாபெரும் இனக் கருவறுப்பும், அதனையொட்டி நிகழ்த்தப்பட்ட இன அழிப்புக்கு எதிரான முன்னெடுப்புகளும்ஆதாரபூர்வமாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது.  

புலம்பெயர் தேசத்து நம்மவரை எள்ளி நகையாடும் தாயகத்தவருக்கு இந்த நூல்நல்லதொரு படிப்பினையைக் கொடுக்கும்.      

ஈழ விடுதலைப் போராட்டம் மீது மாற்றுச் சிந்தனை கொண்டிருந்த தன் தந்தைதான் நேசித்த தேசத்திலேயே அகதியாக்கப்பட்டு, இந்திய அமைதிப்படையால்கொல்லப்பட்ட வலியை நம்முள் கடத்துகிறார்.    

“இந்த உலகத்தில் இரண்டு பிரச்சனைகள் உண்டு   ஒன்று உன்னுடையது, இன்னொன்று மற்றவருடையது   உன்னுடையதை நீ தான் தீர்க்க முடியும்”    

அந்தச் சிறுவனுக்கு கோல்பேஸில் ஐஸ்கிரீமும், கொத்து ரொட்டியும் வாங்கிக்கொடுத்துச் சொன்ன அந்தத் தந்தையின் அசரீரி வார்த்தைகளோடு தன்னுடையசுய வரலாற்றில் 17 வயது வரை ஆக்கிரமித்த தன் தந்தையின் சிந்தனையின்வெளிப்பாடுகளாகத் தான் அடைந்த முன்னேற்றங்களோடு பதிவு செய்கிறார்.    

இதைப் படிக்கும் போது தந்தையின் அருமை, நாம் அதே ஸ்தானத்தை எட்டும்போது இன்னும் பரிபூரணமாக விளங்கும் ஞானமும் எட்டிப் பார்க்கிறது.    

  “மயக்கமா கலக்கமா”  
    மனதிலே குழப்பமா”    

கண்ணதாசன் வரிகளுக்கு அடிமைப்பட்ட தந்தையின் குணாதிசியம்ஒவ்வொன்றையும் படமெடுத்துப் புத்தகம் முழுக்கச் சொல்லிக் கொண்டேபோகிறார்.      

குண்டு மாரி பொழிந்த காலத்தில் இருட்டு பங்கருக்குள் பொக்கற் றேடியோவில்இளையராஜா பாடலைக் கேட்டு அந்த நேரம் கொஞ்சமே ஆசுவாசப்பட்ட அந்தப்பையன் பின்னாளில் கனடாவில் சில அடிகள் முன்னே இசை நிகழ்ச்சி படைக்கவந்த இளையராஜாவைப் பார்த்த கணம், அப்படியே பழைய நினைவைத்தொடர்புபடுத்திப் பார்க்கிறார்.      

கண்ணீரும் குருதியும் கலந்த தேசத்தின் பிரதிநிதியாக தான் சுமந்ததையும், தன்தேசம் சுமந்தயும் பதிந்து கொண்டே போகிறார்.    

ஒன்று என்பது உன் குடும்பமும், நட்பும்  பூச்சியம் என்பது எல்லாமுமே என்று சொல்லிச் சென்ற  தன் வழித்துணையாக வந்த அப்பாவின் கதைகளோடு அம்மாவின் மீன் கறியின்சுவை, ஆன்மிகக் களஞ்சியமாக இருந்த ஈழத்துக்கே உரித்தான பழமையின்சின்னம் தன் அப்பப்பா குறித்த பார்வை, அயலவர்கள் என்று ஒரு ஈழத்து அழகியவாழ்வியலின் கூறுகளைப் பதிவாக்குறார்.      

கனடா தேசத்தின் உள் நுழைவு நேர்முகத்தில் தன்னைச் சந்திக்கும் கனேடியவெள்ளையின அதிகாரி போரால் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் கேட்க, மேனியைத் திறந்து காட்டி அந்தக் கோர வடுக்களை ஆதாரமாகச் சமர்ப்பிக்கிறார்.    

அமைதிப்படையால் சுடப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் தந்தைக்குப்பக்கத்தில் 4 மணி நேரம் உறைந்து போயிருந்த தன் தாயின் நிலையை,   புலம் பெயர் தேசத்தில் அந்தத் தாய், உளவியல் சிக்கலும், நோயும் கொண்டுமுற்றிப் போய் மரணம் சம்பவித்த இடத்தில் அங்கே தனியனாக சில மணித்தியாலம்தனக்கும் அதைக் கொடுத்து அதே சூழலை இணைத்துப் பார்க்கிறார்.   

 இந்திய இராணுவம் 32 மாதங்கள்  ஈழமண்ணில் நிகழ்த்தியகோரத்தாண்டவத்தையும் கோடிட்டுக் காட்டுகிறார்.    அப்பா கொடுத்த 100 கனேடிய டாலர்களில் 50 டாலர் பாதி வழியிலேயேதீர்ந்துவிட,   ஏப்ரல் 18, 1988 இல் கனடாவுக்கு நுழைந்த அந்தக் கணத்தில் அப்பாவின் நண்பர்கொடுத்த புகையிலைச் சுருளால் குடிவரவு அதிகாரிகளிடம் மாட்டுப்பட்டதைநகைச்சுவையோடு விபரிக்கிறார்.    தான் கனடாவுக்கு வந்து மூன்று தினங்களில் ஏப்ரல் 21 அன்று தனது 53 வயதுத்தந்தை இந்திய இராணுவத்தின் கொடூரத்தால் கொல்லப்பட்டதை விபரிக்கும்போது நம்முள்ளும் அந்த வெறுமை, ஆற்றாமை மேலெழுகிறது.    


“உனக்கு ஏற்படும் வலியானது இரண்டு விதமான அதிர்வுகளைக் கொடுக்கும். ஒன்று, அதில் இருந்து மீளாது அதில் உழன்று கஷ்டப்படுவது.
இன்னொன்று அந்த வலி உனக்கு வாழ்க்கையின் திறவுகோலாய் வழிகாட்டுவது”
தன் தந்தை கொடுத்த அந்த உபதேசம் தான் அந்தத் தனித்து விடப்பட்ட சிறுவன்கனேடிய மண்ணில் தொடர்ந்து போராடிச் சாதிக்க அசரீரி வார்த்தைகளாய்எழுகின்றது.
இந்தப் புத்தகத்தில் ஈழத்து மண் வளத்தில் இருந்து கனேடியப் பனிக்காலம்எல்லாம் வெகு அற்புதமான வர்ணனைகளால் காட்டப்பட்டிருக்கின்றது.
கனடாவில் பனிக்காலம் தொடங்கியதை அறியாதவர் அன்றொரு நாள்தொழிற்சாலையில் வேலை முடித்து வெளிக்கதவைத் திறந்தால் “Crystal white gown” போர்த்தப்பட்டது போல இருந்தது என்று அந்தப் பனிச்சூழலை உவமானப்படுத்தும் அழகியல் ஆகா.
“என்னுடைய வாழ்க்கையில் நான் கண்ட அவலச் சாவுகளே போதும் என் இன்றைய வாழ்வு எவ்வளவு கொடுப்பினையானது” என்று சொல்கிறார்.
சுய பச்சாதாபம் (self-pity) எப்போதும் உங்களை வளர்க்காது என்ற அவரின் கூற்றில் ஆகப் பெரிய உளவியல் இருக்கிறது.
தன் 44 வயதிலேயே விதவை “ஆக்கப்பட்ட” தாயைக் கனேடிய மண்ணுக்குக் கொண்டு வர எடுக்கும் முயற்சிகளும், தன் தாயின் உளவியலுக்கும், சாதிக்கத் துடிக்கும் மகனுக்குமான மனப் போராட்டத்தையும் பதிவாக்குகிறார்.
தன் உயிரை மீட்ட Fernando அங்கிளில் தொடங்கி Bill என்று தன் வாழ்வின்வழிகாட்டிகளின் ஆளுமைத் திறன் தன்னை எப்படிப் புடம் போட்டது என்றும் சொல்கிறார்.
கட்டுநாயக்கா விமானத் தாக்குதல் நடந்த வரலாற்றைப் பதிவாக்கும் போது அந்தத்தாக்குதலை முன்னெடுத்து அங்கே வீரச்சாவைத் தழுவிக் கொண்ட தன்பால்ய காலத்து ஹாட்லிக் கல்லூரி நண்பன் ரவிஷங்கரின் வாழ்க்கை வேறு மாதிரிஅமைந்திருந்தால் ஒரு பெரும் விஞ்ஞானியாகக் கூடிய மூளை இருந்தது என்றுவருந்துகிறார்.
தன் மனம் கவர்ந்த அந்தப் பெண்ணைச் சந்தித்த அனுபவம், காதலைச் சொன்ன கதை, இளம் குடும்பத்தில் எழும் கருத்து மாறுபாடுகள் அதன் வழியே தன்னைச் சுயவிசாரணைக்கு உட்படுத்தும் பண்பு என்று மிக ஆழமானதொரு வாழ்வியல் மாற்றத்தை அப்படியே பதிவாக்குகிறார்.
நிறவெறித் தாக்குதலுக்கு உள்ளான தன் மகனுக்குக் கொடுத்த உபதேசம், அவனை ஒரு பொறுப்பான தந்தையாக வழி நடத்திய சம்பவங்கள் நமக்கும் பாடம்எடுக்கின்றன.
மீண்டும் இலங்கைக்குப் போய் தம் தந்தை இறந்த அந்த அறைக்குப் போய்ப்பார்த்து பிரியாவிடை கொடுத்து விட்டு, பெர்னாண்டோ ஆன்ரியையும், தன்தந்தையின் காதலியையும் சந்தித்தது ஒரு குறும் படமாக ஓடுகிறது.
புலம்பெயர்ந்த தேசத்தில் படிப்பும், வேலையும் என்று இரு குதிரைச் சவாரியில் ஒவ்வொரு இளைஞனும் சந்திக்கும் அனுபவ வெளிப்பாடுகளை இவர் கதையோடு ஒப்பிட்டுப் பார்க்க முடிகிறது.
இந்த நூலைப் படித்துக் கொண்டு போகும் போது ஒரு சாதாரண இளைஞன் சாதித்த கதை திரைப்படமாக ஓடுகிறது. அதை ஒப்புவிக்குமாற் போலத் தன்கதையைப் படமாக்கினால் ஹாலிவூட் நாயகன் Matt Damon கச்சிதமான தேர்வாகஇருப்பார் என்றும் சொல்லிப் போகிறார் ரோய்.
உன்னுடைய வாழ்க்கையின் மகிழ்வான தருணங்களை மீண்டும் நினைத்துப் பார் இன்னும்சாதிக்கலாம்”
“மற்றவர்களின் கருத்துகளில் உன்னுடைய ஆளுமையைச் செலுத்த முடியாது, ஆனால் அதன் விளைவாக உன்னுள் எழும் உணர்வை கட்டுப்படுத்தக் கூடியஆளுமை உன்னிடம் உள்ளது”
ஆங்காங்கே தொனிக்கும் தன் வழிகாட்டிகளின் வழியாகத் தான் பெற்ற அனுபவங்கள், கற்றுக் கொண்ட பாடங்கள் என்று ஒரு முழு மனிதனை உருவாக்கும் முகாமைத்துவப் பாடமாகவும் இந்த நூல் திகழ்கின்றது.
முன் அனுபவமற்ற சாதாரண அலுவலக வேலையாளாகச் சேர்ந்து தன்தனித்துவத்தை அடையாளப்படுத்துவது எப்படி, வேலையில் எழும் முகாமைத்துவச் சிக்கல்கள், அதை எப்படிக் கையாளவது என்று ஆரம்ப வகுப்பில் இருந்தே பாடமெடுக்கிறார்.
மூன்று மாத வதை முகாமில் 36 ஆண்டுகளுக்கு முன்னால் தனக்கு நிகழ்ந்த உடல், உள ரீதியான காயங்கள் இன்னமும் ஆறாமல் வடுக்களைச் சுமந்து வாழும் கொடுமையும் அதனால் வாழ்க்கையில் எழக்கூடிய முக்கியமான முடிவுகளைக் கூடஎடுக்க முடியாமல் தவிக்கும் ஆற்றாமையும் காட்சியாகக் கொண்டு வரும் வலி நிறைந்த எழுத்து நூல் நெடுகக் கிடக்கிறது.
கனடாவின் மைய நீரோட்டத்தில் வாழும் என்ற ரோய் என்ற தனிமனிதனின் சரித்திரம் அவலம் நிறைந்த ஈழத்தவர் வாழ்வின் பரிமாணமாக விரிந்து கிடக்கிறது.
ரோய் சுபேந்திரன் ரட்ணவேல் (Roy Ratnavel) எழுதிய Prisioner #1056
நூல் கனடாவின் முதற் பத்து நூல்களில் முதன்மையானதாகவும் விற்பனையின் முதற் தரவரிசையில் இடம்பிடித்திருக்கிறது.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல்தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவது இல்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால் 
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்”
ரோய் இன் அப்பா தனக்குப் பிடித்த பாடலைப் பாடுவது அசரீரியாக நம் காதிலும்ஒலிக்கிறது.
தன் தந்தையின் கனவுகளுக்கு மகன் கொடுத்த ஆகச் சிறந்த வெகுமதி இந்த நூல்.
கானா பிரபா

28.07.2023






No comments: