மலையக மக்கள் குறித்து அதிக கவனம் அவசியம்

 Wednesday, May 31, 2023 - 7:14am

UK தூதுவரிடம் திலகர் வலியுறுத்து

இலங்கையில் மலையக மக்களின் 200 ஆண்டு கால வரலாற்றில் 150 ஆண்டு காலம், அந்த மக்கள் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் அனுபவித்தனர்.

எனவே மலையகம் 200 தொடர்பில் பிரித்தானிய அரசும் கவனம் கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஷாரா ஹல்டனிடம், நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார்.

நேற்று முன்தினம் மாலை நுவரெலியாவில், பிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்தபோது மலையக மக்களின் கரிசனைகள் குறித்து அவர், கருத்துக்களை பகிர்ந்துக்கொண்டார்.

1823 ஆண்டு காலப்பகுதியில் தென்னிந்தியாவில் இருந்து அழைத்து வந்த காலத்தில் இருந்து 1972 ஆண்டு இலங்கைக் குடியரசாகும் வரை மலையகப் பெருந்தோட்டச் சமூகத்தினரின் தொழில் மற்றும் சமூக நிர்வாகத்தினை பிரித்தானியரே மேற்கொண்டனர்.

எனவே இன்று 200 வருட மலையக வரலாற்றில் பெரும்பங்கு பிரித்தானியாவுக்கு உரியது. இந்தநிலையில் பல்வேறு உரிமை மறுக்கப்பட்டவர்களாக இலங்கையில் வாழும் இந்த மக்கள் குறித்த கரிசனையை பிரித்தானியா வெளிப்படுத்த வேண்டும்.

இந்த மக்களின் குறைநிறைகளைக் கேட்டறிய இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் ஓர் குறைகேள் அதிகாரியை அல்லது குழுவை நியமிக்க வேண்டும். அதன் ஊடாகத் தொகுக்கப்படும் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுமிடத்து, பல்வேறு உரிமை மறுக்கப்பட்ட இந்த மக்களின் பிரச்சினைகளை சர்வதேசத்தின் முன்னிலைக்கு கொண்டு செல்லவும் தீர்வு பெறவும் வழியேற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   நன்றி தினகரன் 

No comments: