எழுத்தும் வாழ்க்கையும் ( இரண்டாம் பாகம் ) அங்கம் 57 மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமித்த 2006 எழுத்தாளர் விழா ! பதிப்புலகத்திலும் சோலியான் குடுமிகளை கண்டோம் ! முருகபூபதி


உயிர்ப்பு தொகுப்பின் வெளியீட்டு அரங்கு 2006  ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் திகதி சனிக்கிழமை பிரஸ்டன் நகர மண்டபத்தில் , மரபு கலை, இலக்கிய இதழை வெளியிட்ட அதன் ஆசிரியர் திரு.  விமல். அரவிந்தன் தலைமையில் நடந்தது என்று கடந்த 56 ஆவது அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

அன்று நடந்த விழா இங்கு வதியும் மூத்த – இளம் தலைமுறையினர் சங்கமிக்கும் அரங்காகவே சிறப்புற்றிருந்தது.  குறிப்பிட்ட ஆறாவது எழுத்தாளர் விழா பற்றி ஊடகங்களில்  வெளியான பதிவை இங்கே மீண்டும் நினைவூட்டுகின்றேன்.

புலம் பெயர்ந்து வந்த  தமிழர்கள் தம்முடன் தமது இயல்புகளையும்


அழைத்து வந்திருந்த போதிலும் இவர்கள் மத்தியில் கலை , இலக்கிய உணர்வுள்ளவர்கள் , அந்த இயல்புகளுக்கும் அப்பால் அடுத்த தலைமுறையின் தேவை கருதி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழின அடையாளம் பேணப்படவேண்டும் என்ற கருத்தியலுக்கு வலுச்சேர்க்கும் பணிகள் ஒருபுறம் மேற்கொள்ளப்படும் அதே சமயம் – புகலிட இலக்கியத்தை ஆரோக்கியமான திசையில் வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பிரயத்தனமும் நீட்சி பெற்றுள்ளது.


2006  ஜனவரி 7 ஆம் 8 ஆம் திகதிகளில் அவுஸ்திரேலியா மெல்பனில் நடந்த ஆறாவது எழுத்தாளர் விழாவின் நிகழ்ச்சிகள், விழா அமைப்பாளர்களின் நோக்கத்தை படிப்படியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் அறிகுறியை காண்பிக்கிறது.

“அறிந்ததைப் பகிர்தல் , அறியாததை அறிந்து கொள்ள முயல்தல்” என்ற சிந்தனையை முன்னிறுத்தி 2001 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த எழுத்தாளர் விழா , பின்பு ஆண்டுதோறும் மாநிலங்களில் நடைபெற்றது.

இம்முறை ஆறாவது எழுத்தாளர் விழா மெல்பன்  பிரஸ்டன் (Preston Town Hall , Melbourne) நகர மண்டபத்திலும் , பண்டூரா (Bundoora Park) பூங்காவிலும் இரண்டு நாட்கள் நடைபெற்றன.

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் (2001 முதல் 2005 வரையில் ) எழுத்தாளர் லெ. முருகபூபதி இவ்விழாக்களின் பிரதம அமைப்பாளராக செயல்பட்டார்.

இம்முறை (ATLAS) என்று அழைக்கப்படும் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கம் (Australian Tamil Literary & Arts Society) என்ற அமைப்பு இவ்விழாவை ஒழுங்கு செய்திருந்தது.

அவுஸ்திரேலியாவில் வதியும் எழுத்தாளர்கள் , கவிஞர்கள் , பத்திரிகையாளர்கள் , ஊடகவியலாளர்கள் வருடாந்தம் ஒன்றுகூடும் இவ்விழாவில் இம்முறை கருத்தரங்கு ,நூல் விமர்சன அரங்கு , நூல் வெளியீடு , குறும் திரைப்பட அரங்கு , கவியரங்கு என ஐந்து நிகழ்வுகள் இடம் பெற்றன.

சமூகம் . கல்வி , இலக்கியம் முதலான தலைப்புகளில் கருத்தரங்கு அமர்வுகள் முதல்நாள் விழாவில் காலைமுதல் மாலை வரை நடைபெற்றன.

விழாவை ஒழுங்கு செய்த அமைப்பின் கீதத்தை மெல்பன் கவின்கலை இசைக்கல்லூரி மாணவர்கள் பாடியதைத் தொடர்ந்து , திருமதி.உஷாகெளரி சந்திரனின் வரவேற்புரையுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.

‘ நல்லைக்குமரன்’ கந்தையா குமாரசாமி தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

“சமூகம்” என்ற தலைப்பில் திருமதி. உஷா சிவநாதன் தலைமையில் நடந்த கருத்தரங்கில் , கலாநிதி சந்திரலேகா வாமதேவா , “ அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்துள்ள தமிழ்ச் சமூகத்தில் இனக் கலப்பு அதிகரிக்குமா ?” என்ற தலைப்பில் உரையாற்றுகையில் , “ இனங்களுக்கிடையே கலப்புத் திருமணங்கள் நடப்பதொன்றும் இலங்கைத் தமிழராகிய நமக்குப் புதுமையான விஷயமல்ல. புற இனங்களுடனான கலப்பு என்பது புலம் பெயர்ந்த நாடுகளில் நடப்பதைப்போல சொந்த நாடுகளில் இடம்பெற வாய்ப்புகள் மிகமிக குறைவாயினும் உள்நாட்டிலே வாழ்கின்ற இனங்கள் கலப்பது என்பது பொதுவாக நடைபெறுகிறது. அரசியல் பிரச்சினைகளாலும் அதனால் ஏற்பட்ட போராலும் எமது நாட்டில் வாழும் தமிழ் சிங்கள இனங்களிடையே கசப்புணர்வு இருந்த போதும்,  முன்னரைப் போலல்லாவிடினும் ஆங்காங்கே கலப்புத் திருமணங்கள் நடைபெற்றே வருகின்றன” என்றார்.

“தமிழ்ச் சமூகத்தில் பெண்கள்” என்ற தலைப்பில் உரையாற்றிய திருமதி. பாமதி பிரதீப் , “ புலம் பெயர்ந்து வாழும் எமது சகோதரர்கள் எதிர்பார்க்கும் முக்கிய தகைமை , பெண் அழகாக இருக்க வேண்டும். இவர்கள் சொல்லும் அழகு வெள்ளைத் தோலுடன் மெலிந்த தோற்றத்துடன் ஏறத்தாழ சிம்ரன் , ஜோதிக்கா, ரம்பா , சினேகா போன்ற தோற்றமுடைய பெண்களை மனதில் வைத்து தேடுகிறார்கள். அழகான பெண்ணை வாழ்க்கைத்துணையாகப் பெறுவது தமது கனவு – இலட்சியம் என்று நினைக்கின்றார்கள்” என்றார்.

இலங்கையிலிருந்து வருகை தந்து உரையாற்றிய திருமதி. ஞானம் ஞானசேகரன் , “ இலங்கையில் பெண்ணியம்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தமது உரையில் , “ இலங்கையில் பெண்ணியம் தொடர்பான முயற்சிகள் , பெண்கள் குறித்த ஆரம்ப நிலைப்பாடுகளிலிருந்து பெரிதும் வேறுபட்டு பெண் விடுதலை குறித்த சிந்தனை விழிப்புணர்வும் பெண்களின் முன்னேற்றம் குறித்த வழிமுறைகளை உள்ளடக்கியும் காணப்படுகிறது” என்றார்.

மெல்பன் பாரதி பள்ளியின் அதிபரும் எழுத்தாளருமான திருமதி.புவனா இராஜரட்ணத்தின் தலைமையில் நடந்த                         ‘ கல்வி’ என்ற தலைப்பு கருத்தரங்கில் சிட்னியிலிருந்து வருகை தந்த திரு. தி. திருநந்தகுமார் , “தொடர்பாடல் அணுகுமுறையில் தமிழ்மொழி கற்பித்தல் – சில சிந்தனைகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

அவர் தமது உரையில் , “ இரண்டாம் மொழி கற்பித்தலில் பல்வேறு கற்பித்தல் முறைகளும் உத்திகளும் காலத்திற்குக் காலம் அறிமுகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. இலங்கையில் ஆங்கில மொழி கற்பித்தலில் இலக்கணத்தை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறை , மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்ட கற்பித்தல் முறை என்பதைத் தொடர்ந்து தற்போது தொடர்பாடல் அணுகுமுறையிலான கற்பித்தல் முறை தொடர்கிறது. இங்கும் ( அவுஸ்திரேலியாவில் ) அத்தகைய கல்வி முறையே கடைப்பிடிக்கப்படுகின்றது” என்றார்.

பல்லின கலாச்சார நாடாக விளங்கும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழக பிரவேசப் பரீட்சையில் தமிழ்மொழியும் ஒரு பாடமாக இருப்பதனால் இந்நாட்டில் பல தமிழ்ப் பாடசாலைகள் இயங்குகின்றன. பல தமிழ் மாணவர்கள் தமிழைப் பயின்று தோற்றுகின்றனர்.

குறிப்பிட்ட இளம் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களும் இம்முறை எழுத்தாளர் விழா கருத்தரங்கில் பங்கேற்றனர்.            “ விக்ரோரியாவில் தமிழ்க் கல்வி – எனது அநுபவங்கள்” என்ற தலைப்பில் உரையாற்றிய செல்வன் பிரசன்னா குமாரதாசன் தமதுரையில் , “ சிறு வயதில் நான் பெற்ற தமிழறிவை மழுங்கவிடாது வளர்த்தெடுக்க வேண்டும் என்ற முனைப்பபைக் கொண்டிருந்த எனது பெற்றோர் , வார இறுதி தமிழ்ப் பாடசாலையொன்றில் என்னை இணைத்தனர். அத்தோடு நின்றுவிடாது வீட்டில் முழுமையாகத் தமிழிலேயே உரையாடவேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தினர். வாரம் ஒருநாள் தமிழ்க் கல்வி போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தில் தமிழ் நூல்களையும் சஞ்சிகைகளையும் எனக்கு வாசிக்க வாய்ப்பளித்தனர்” என்றார்.

செல்வி அபிராமி ஜெயக்குமார் அவுஸ்திரேலியா நாட்டுக்கு புலம்பெயர்ந்து வந்த பொழுது மூன்று மாதக் குழந்தை. இங்கு வந்து தமிழ்ச் சூழலில் வளர்ந்து தமிழைப் பயின்று பரீட்சையில் தமிழையும் ஒரு பாடமாகத் தேர்ந்தெடுத்துத் தோற்றினார். இன்று யுவதியாக வளர்ந்துள்ள இவர் இக்கருத்தரங்கில் சமர்ப்பித்திருந்த  கட்டுரையில் ,

“ இந்தப் பெரிய கண்டத்தில் தமிழர்களும் குடியேறிய பின்பு தமிழ் இசை , பரதம் , வாய்ப்பாட்டு அரங்கேற்றங்கள் மட்டுமல்லாமல் தமிழ் அமைப்புகள் , தமிழ்ப் பாடசாலைகள் , தமிழ் வானொலிகள் , தமிழ் தொலைக்காட்சிகள் , தமிழ்ப் பத்திரிகைகள் , தமிழ்ச் சஞ்சிகைகள் , தமிழ்நூல் வெளியீடுகள் , தமிழ் விழாக்கள் உட்பட பல தமிழ் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்படியெல்லாம் மாற்றங்கள் , முன்னேற்றங்கள் நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே எவரும் குடியேறியிருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகின்றேன்” எனத் தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா போன்ற தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாட்டில் எதிர்காலத் தலைமுறையிடம் தமிழ் இருக்குமா..?  என்ற சந்தேகம் காலம் காலமாகக் கேட்கப்படுகின்றது.

இந்தக் கருத்தரங்கிற்கு கட்டுரை சமர்ப்பித்த திரு. குலம் சண்முகம் தமது ஆக்கத்தில் இச்சந்தேகத்தையும் துல்லியமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அவரின் கருத்து பின்வருமாறு:

“ தாயகத்திற்கு வெளியே வாழ்கின்ற தமிழர்கட்கு தமிழ் ஒரு மரபு மொழி. அவர்களது பண்பாட்டின் – பாரம்பரியத்தின் பிரிக்கமுடியாத ஒரு கூறு. இது இரண்டாம் மொழியோ அல்லது அன்னிய மொழியோ அல்ல. இதனால் இவற்றைக் கற்பிக்கின்ற முறைகளைப் பிரயோகித்து தமிழர்கட்கு தமிழைக் கற்பிக்க முனைவது பொருத்தமற்றதாக அமையலாம். அந்த முறைகளை அப்படியே பிரதிபண்ண முயல்கின்றபோது விரும்பத்தக்க பலனை மாணவர்கள் அடைய முடியாது. இதனால்தான் தற்போது தமிழ் கற்பிக்கப்படும் முறைகளிலே பலரும் பல குறைபாடுகளைக் காண்கின்றனர். இது சரிப்பட்டு வராது வீண் முயற்சி என்று பலரும் தமிழ்க்கல்வியை கைகழுவிவிட நினைக்கின்றனர்.”

இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த ஞானம் இதழின் ஆசிரியர் டொக்டர் தி. ஞானசேகரனின் தலைமையில் நடந்த ‘இலக்கியம்’ என்ற தலைப்பிலான மூன்றாவது அமர்வு கருத்தரங்கில் ,

“ கர்நாடக சங்கீதமா ? தமிழ் இசையா ?” என்ற தலைப்பில் சட்டத்தரணி  செந்தமிழ்ச் செல்வர் சு.ஸ்ரீகந்தராசா உரையாற்றுகையில் , “ தமிழிசை பற்றிக் கூறுகின்ற நூல்களில் , இன்று கிடைக்கப் பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். அந்நூல் ஐயாயிரம் வருடங்களுக்கு முன்னால் தொல்காப்பியரால் எழுதப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும் , இன்பமாகப் பொழுதுபோக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடும் தொல்காப்பியர் முல்லை , குறிஞ்சி , மருதம் , நெய்தல் , பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும் , இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார்” எனத் தெரிவித்தார்.

“ புகலிட இலக்கியத்தின் எதிர்காலம்” என்ற தலைப்பில் உரையாற்றிய லெ. முருகபூபதி , தெரிவித்ததாவது:

1980 ஆண்டின் பின்பு இலங்கையிலிருந்து தமிழர்கள் பரவலாக ஐரோப்பிய நாடுகளுக்கும் , அமெரிக்கா , கனடா , அவுஸ்திரேலியா முதலான நாடுகளுக்கும் புலம்பெயர்ந்த பின்பு,  இவர்கள் மத்தியிலிருந்த உள்ளார்ந்த கலை இலக்கிய ஆற்றல் மிக்கவர்களின் படைப்பு முயற்சிகள் இதழ்கள் , பத்திரிகைகள் , வெகுசன ஊடக சாதனங்கள் , இணையத்தளங்கள் முதலானவற்றில் பதிவானதையடுத்து ‘புலம்பெயர்ந்தோர் இலக்கியம்’ பேசுபொருளாகியது. புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தை ‘புலம்பல் இலக்கியம்’ என்று கேலி பேசிய சிந்தனையாளர்களையும் நன்கு அறிவோம். இடப் பெயர்வம் , புலப் பெயர்வும் தமிழருக்கு மாத்திரம் நேர்ந்ததல்ல. பல நாடுகளிலும் யுத்தம் காரணமாக சிதறுண்டு போன குடும்பங்கள் கோடிக்கணக்கானவை.”

நூல் விமர்சன அரங்கு

விழாவின் மாலை நிகழ்ச்சியில் , நாவல் ,சிறுகதை , கவிதை , சிறுவர் இலக்கியம் , மொழிபெயர்ப்பு , நேர்காணல் , இதழியல் முதலான தலைப்புகளில் நூல் சஞ்சிகை விமர்சன அரங்கு எழுத்தாளரும் மெல்பன் ஈழத் தமிழ்ச் சங்கத் தலைவருமான திரு.தெ.நித்தியகீர்த்தி தலைமையில் நடந்தது.

இலங்கையில் சாகித்திய விருதினைப் பெற்ற தாமரைச் செல்வியின் ‘ பச்சை வயல் கனவு’ நாவலை திரு.எட்வர்ட் பிலிப் மரியதாசன் விமர்சித்தார். ‘தி.ஞானசேகரன் கதைகள்’ நூலை , திரு.கே.எஸ்.சுதாகரும் , புதுவை இரத்தினதுரையின் ‘ பூவரசம் வேலியும் புலுனிக் குஞ்சுகளும்’ கவிதை நூலை ஆவூரானும் , பத்மா சோமகாந்தன் எழுதிய  Stories from Hindu Mythology  என்ற சிறுவர் இலக்கிய நூலை திருமதி.ரேணுகா தனஸ்கந்தாவும் , ஜோர்ஜ் ஓர்வெல் எழுதிய Animal Farm என்ற ஆங்கில் நாவலின் மொழிபெயர்ப்பான (மொழி பெயர்த்தவர் : ‘நல்லைக்குமரன்’ கந்தையா குமாரசாமி) ‘விலங்குப் பண்ணை’ நூலை திரு.தென்னை கணேசனும் , பேராசிரியர் கா. சிவத்தம்பியின்,  இலக்கியமும் வாழ்க்கையும் நேர்காணல் நூலை திரு.செ.சிவசம்புவும் , ‘ஞானம்’ சஞ்சிகை குறித்து திருமதி.கனகமணி அம்பலவாணர்பிள்ளையும் விமர்சித்தனர்.

உயிர்ப்பு வெளியீடு

அவுஸ்திரேலியாவில் முன்பு வசித்த , தற்போது வசிக்கும் இருபது எழுத்தாளர்களின் சிறுகதைகளைக் கொண்ட ‘உயிர்ப்பு’ தொகுப்பு நூலின் வெளியீட்டு அரங்கு  இரவு நிகழ்ச்சியின்போது திரு.விமல் அரவிந்தன் தலைமையில் நடந்தது.

ஜேர்மனியிலிருந்து வருகை தந்திருந்த எழுத்தாளர் திருமதி. சந்திரவதனா செல்வகுமாரன் , திரு.கந்தையா குமாரதாசன் ஆகியோர் நூலின் ஆய்வுரையையும் , நூலின் தொகுப்பாசிரியர் லெ. முருகபூபதி வெளியீட்டுரையையும் நிகழ்த்தினர். பல கலை , இலக்கிய ஆர்வலர்கள் நூலின் சிறப்புப் பிரதிகளைப் பெற்றுக்கொண்டனர்.

முதல் நாள் விழாவின் இறுதி நிகழ்ச்சியாக , காவலூர் இராசதுரையின் தொகுப்புரையுடன் நான்கு குறும் திரைப்படங்கள் காண்பிக்கப்பட்டன. திருமதி.ரமா சிவராஜாவின் நன்றியுரையுடன் முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவெய்தின.

கவியரங்கு

இரண்டாம் நாள் மெல்பன் பண்டூரா பூங்காவில் ‘இங்கிருந்து எங்கே’ என்ற தலைப்பில் ‘பாடும் மீன்’ சு. ஸ்ரீகந்தராசா தலைமையில் காலை 11.00 மணிமுதல் நடந்த கவியரங்கில் , திருமதிகள் மனோ ஜெகேந்திரன் , செளந்தரி , யசோதா சாந்தினி புவனேந்திரராசா , கனகமணி அம்பலவாணர்பிள்ளை , திருவாளர்கள் தங்கையன் வெள்ளையன் , ஆவூரான் ஆகியோர் பங்குபற்றினர்.

ஒடியல்கூழ் விருந்துடனான கலந்துரையாடலின் பின்பாக எழுத்தாளர் விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சிகள் நிறைவெய்தின.

 

குறிப்பிட்ட  இரண்டாம் நாள்  நிகழ்ச்சி பற்றிய நேரடி வர்ணனையை  சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் S B S வானொலி தமிழ் நிகழ்ச்சியும் ஒலிபரப்பியது.

தற்போது 17 வருடங்கள் கடந்து ஓடிவிட்டன. இக்காலப்பகுதியில்  இந்தப்பதிவில் இடம்பெற்றிருந்த பலரதும் வாழ்வில் மாற்றங்களும் நேர்ந்துவிட்டன.

எனினும் எமது  எழுத்தாளர் விழா நோக்கத்தின் அடிப்படை இன்னமும் மாறவில்லை.  அன்று 17 வருடங்களுக்கு முன்னர் எமது விழாவில் பங்கேற்ற சிலருக்கு  பின்னாளில் திருமணமும் நடந்து பெற்றோராகிவிட்டனர்.  ஒரு சிலர் மறைந்து விட்டனர்.

திரும்பிப்பார்க்கும்போது,  நாம் இவ்வாறெல்லாம் இயங்கியிருக்கின்றோமா..? ! என்ற ஆச்சரியமே எழுகின்றது.

அந்த விழா முடிந்து சில நாட்களில்,  எனது முகவரிக்கு ஒரு சிறிய பொதி இலங்கையிலிருந்து தபாலில் வந்தமை பற்றி கடந்த 56 ஆவது அங்கத்தில் குறிப்பிட்டிருந்தேன் அல்லவா..?

அதனைத்திறந்து பார்த்தேன்.

2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி கொழும்பில் வெளியான தினக்குரல் வார இதழில் பதிவாகியிருந்த நாம் வெளியிட்ட உயிர்ப்பு கதைத் தொகுப்பு நூலின் விமர்சனக்குறிப்பின் நறுக்குகள் 20 பிரதிகள் அந்தப்பொதியில் இருந்தன.

அதனை எழுதியிருந்தவர் அங்கே ஊடகவியலாளராகவிருந்த எஸ். கார்த்திகாயினி.  தினக்குரல் நூலகம் என்ற பகுதியில் இந்த விமர்சனம் இடம்பெற்றிருந்தது.

தினக்குரல் வார இதழில் 20 பிரதிகளை பணம்கொடுத்து வாங்கியிருக்கும் ஒரு அன்பர் குறிப்பிட்ட விமர்சனக்குறிப்புகள் இடம்பெற்றிருந்த பக்கத்தை மாத்திரம் வெட்டி எடுத்து அனுப்பியிருந்தார்.

அந்த அன்பர் யார் தெரியுமா…? சென்னையில் நீண்டகாலமாக மணிமேகலைப் பிரசுரத்தை நடத்திவரும் ரவி தமிழ்வாணன்.

அத்துடன் அவர் ஒரு கடிதமும் எழுதிவைத்திருந்தார்.

அதற்கு முன்னர்  மெல்பனில் வதியும் எழுத்தாளர் காண்டீபனின் வேண்டுகோளை ஏற்று 1999 ஆம் ஆண்டு நான் ஒரு புத்தக கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்தேன்.  காண்டீபன் புகழ்பெற்ற பாடகர் ஜேசுதாஸ் பற்றி  அக்காலப்பகுதியில்  ஒரு புத்தகம் எழுதியிருந்தார். அதனை வெளியிட்டதும் ரவி தமிழ்வாணனின் மணிமேகலை பிரசுரம்தான்.

அக்கண்காட்சிக்கும் ரவி தமிழ்வாணன் வந்திருந்தார்.

அப்போது ஏற்பட்ட தொடர்பினால்,  எனது முகவரி அவருக்கு தெரிந்திருந்தது.

அவர் உயிர்ப்பு நூல் விமர்சனம் வெளியான தினக்குரல் பத்திரிகையின் நறுக்கில் 20 பிரதிகளை தபாலில் அனுப்பியதும் நான் உஷாரடைந்தேன்.

சோலியான் குடுமி சும்மா ஆடாது அல்லவா..? அது எவ்வாறு பின்னர் ஆடியது என்பது பற்றி அடுத்த அங்கத்தில் எழுதுவேன்.

( தொடரும் )

 

 

 

No comments: