நீதி - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச சுந்தரதாஸ்

 1972ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஏழு படங்களில்


நடித்திருந்தார்.இவற்றுள் இரண்டு படங்களில் குடிகாரனாகவும்,பெண் மோகம் கொண்டவராகவும் அவர் பாத்திரம் ஏற்றிருந்தார்.ஒரு படத்தில் ஏழை குடிகாரனாகவும்,இன்னொரு படத்தில் பணக்கார குடிகாரனாகவும் அவர் நடித்தார்.இதில் ஏழை குடிகாரனாக அவர் நடித்த படம் தான் நீதி.

ஹிந்தியில் ராஜேஸ்கண்ணா,மும்தாஜ் நடித்த துஷ்மன் என்ற படம்

71ம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்றது.அதனை சூட்டோடு சூடாக தமிழில் படமாக்கினார் பாலாஜி.எவ்வளவு வேகம் என்றால் வருடத்திற்கு ஒரு படத்தை மட்டும் சிவாஜியின் நடிப்பில் தயாரிக்கும் பாலாஜி 72ன் ஆண்டு நீதி,ராஜா என்று இரண்டு படங்களை சிவாஜி நடிப்பில் தயாரித்து அசத்தினார்.வருட ஆரம்பத்தில் ராஜாவும்,இறுதியில் நீதியும் வெளிவந்து வெற்றி படங்களாகின.

ராஜாவின் வித விதமான ஆடை அணிந்து ஸ்டைல் காட்டிய சிவாஜி நீதியில் ஒரே விதமான நீலநிற ஆடை அணிந்து படம் முழுதும் தோன்றினார்.ஆடை தான் ஒரே மாதிரியே தவிர நடிப்பில் பலவித குணாம்சங்களை காட்ட அவர் தவறவில்லை.மது அருந்தி விட்டு லாரி ஒட்டுவதாகட்டும்,சகுந்தலாவுடன் கூத்தாடுவதாகட்டும்,தன்னால் பாதிக்க்கப் பட்ட குடும்பத்துக்கு உதவப் போய் ஒவ்வொரு தடவையும் அவமானப்படுவதாகட்டும்,குழந்தையிடம் அன்பு காட்டுவதாகட்டும் சிவாஜியின் நடிப்பு பல உணர்ச்சிகளை காட்டியது.

அவரோடு மோதும் வேடம் சௌகார் ஜானகிக்கு.படம் முழுவதும் வெறுப்பை உமிழ்ந்து தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார் அவர்.அது என்னவோ தெரியவில்லை சௌகார் ஜானகி,ஜெயலலிதா சேர்ந்து நடிக்கும் படம் என்றால் நடிப்பில் சௌகார் ஸ்கோர் பண்ணிவிடுகிறார்.இந்தப் படத்திலும் அதேதான்.ஆனாலும் சீரியஸான கதையில் ஒரே ஆறுதல் ஜெயலலிதாதான்! நீதிபதியாக வரும் சுந்தரராஜன்,தந்தையாக வரும் எஸ் வி சுப்பையா,தாயாக வரும் காந்திமதி,பெண் மோகம்,மண் மோகம் இரண்டோடும் வளம் வரும் ஆர் எஸ் மனோகர் எல்லோரும் ஓகே என்றால் மனோகரின் கையாளாக வரும் எம் ஆர் ஆர் வாசு டு மச்!அவர் பேசும் பேசும் இரட்டை அர்த்த வசனங்களும் விரசம்.சிவாஜிக்கே தொழில் கொடுப்பவராக வரும் மனோரமாவின் ஒரு தலை காதலும்,அவர் விடும் ஏக்கப் பெருமூச்சும் கிரேட் ! சில காட்சிகளில் தோன்றி பழைய உற்சாகம் இல்லாமல் காட்சியளித்தார் ஜே பி சந்திரபாபு!இவர்களுடன் ஜெய கௌசல்யா,டீ கே பாலச்சந்திரன்,பாலாஜி,நாகையா ஆகியோரும் நடித்தனர்.


பாலாஜியின் எல்லாப் படங்களுக்கும் தொடர்ந்து வசனம் எழுதும் ஏ எல் நாராயணன் இந்தப் படத்துக்கும் கருத்தான வசனங்களை வடித்திருந்தார்.பல இடங்களில் அவை இயல்பாக அமைந்தன .

கண்ணதாசனின் நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமாடி தங்கம்

பாடல் அதில் சிவாஜி காட்டும் நடிப்பு எல்லாம் சரி.ஆனால் ஏழைகள் வாழ்வில் விளையாடும் இறைவா நீ கூட குடிகாரன் என்பது வேதனையின் உச்சம்.டீ எம் சௌந்தரராஜன் இந்த பாடலை அனுபவித்து பாடியிருக்கிறார்.மாப்பிளையை பார்த்துக்கடி மைனா குட்டி பாடலை ஜாலியாக பாடியிருக்கிறார்.இசை எம் எஸ் வி தான்!


படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிப்புறத்தில் கிராமத்தில் படமானது.எம் மஸ்தானின் ஒளிப்பதிவு அருமை.பி கந்தசாமி படத்தொகுப்பை பார்த்துக் கொண்டார்.ஹிந்தி படத்தை அப்படியே தமிழாக்கி வெற்றி படமாக இயக்கியிருந்தார் சி வி ராஜேந்திரன்.

No comments: