ஏன் பெண்ணென்று... குறுநாவல் (5/6) கே.எஸ்.சுதாகர்

அதிகாரம் 5

“விவாகரத்து முடிஞ்சு அடுத்த கிழமையே கலியாணம் கட்டிட்டான்.


எங்கையெண்டு அலைஞ்சு கொண்டிருந்திருக்கிறான்  றாஸ்கல்சாய்வனைக் கட்டிலில் இருந்தபடியே தொணதொணத்தார் நேசம்.

“உவனென்ன வாத்தி. அதுவும் தோட்டக்காட்டுப் பள்ளிக்கூடத்திலை... மலைநாட்டிலை எத்தினை பெம்பிளப்பிளையள் மலையிலை இருந்து விழுந்து குதிச்சு செத்துதுகளோ? பொறு உவனுக்குச் செய்யிறன் வேலைமனதுக்குள் கறுவிக் கொண்டார்.

பத்மினியின் அக்கா விமலா எட்டு வருடங்கள் கழித்து மீண்டும் நைஜீரியாவில் இருந்து இலங்கை வந்தார். இந்தத்தடவை வரும்போது நான்கு பேராக வந்தார்கள். இரண்டு பெண்பிள்ளைகள் பிறந்திருந்தார்கள்.

அவர்கள் வந்திருந்த காலத்தில் நாட்டுப்பிரச்சினைகள் உக்கிரமடைந்து இருந்தன. இந்திய அமைதிப்படை வருவதற்கு சற்று முந்திய மாதங்கள். அவர்களால் வடபகுதிக்கு செல்ல முடியாமல் இருந்தது. கொழும்பிலே சிறிது காலம் இருந்தார்கள். விமலாவின் சித்தப்பா ஒருவர் கொழும்பில் இருந்தார். அவர்களின் குடும்பத்துடன் பொழுது கழிந்தது.

ஒருமுறை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒரு மனிதருடன் சித்தப்பா வந்தார். வந்தவர் தன்னை டேவிட் என அறிமுகம் செய்து கொண்டார். கிறிஸ்தவரான அவர் பழகுவதற்கு மிகவும் நல்லவராக இருந்தார். இந்திய வம்சாவளியைச் சார்ந்த அவர், தனக்கு பெற்றார் உற்றார் என்று ஒருவரும் இல்லை என்று சொல்லிக் கொண்டார். நண்பர்களுடன் கொட்டஹேனாவில் வசித்து வருவதாகச் சொன்னார்.

 அவரின் வருகையுடன் மீண்டும் பத்மினியின் கலியாணப் பேச்சு தொடக்கி வைக்கப்பட்டது.

விமலா யாழ்ப்பாணம் வந்தபோது டேவிட்டின் படத்துடன் வந்தாள். சிறுகச் சிறுக பத்மினியின் மனத்தில் டேவிட்டின் படத்தை விரித்தாள். சதா டேவிட்டைப் பற்றியே பேசினாள். “என்ன குணமான மனிசனப்பா... அப்படியொரு ஆளை நான் இதுவரை சந்திக்கவேயில்லைபத்மினியின் காதிற்குள் கிசுகிசுத்தாள்.

பத்மினிக்கு இப்போது ஆண்கள் என்றாலே பயம். சந்திரமோகனை நினைத்தால் குமட்டிக்கொண்டு வரும்; மூச்சுக்காற்று சூடேறும். மறுமணம் செய்வது பற்றி அவள் நினைத்ததே இல்லை. எங்கே இரண்டாவது கலியாணத்தின் பொழுது டேவிட்டும் அந்தக்கேள்வியைக் கேட்பானோ என்ற அச்சம் பத்மினியை வாட்டியது.

ஒருநாள் சாப்பாட்டு மேசையில் குடும்பமாக, மகிழ்ச்சியாக இருந்த தருணமொன்றில் மெதுவாகக் கதையை அவிழ்த்தாள் விமலா.

“என்ன செபமாலை எண்ணுகிறவனையா இஞ்சை கூட்டிக் கொண்டு வரப் போறாய்?சாப்பாட்டுக் கோப்பையைத் தட்டிவிட்டு எழுந்து கொண்டார் கணபதிப்பிள்ளை. அன்றுதான் அவரது கோபம் உச்சிக்குச் சென்றதை எல்லாரும் கண்டுகொண்டார்கள். விமலாவின் கணவன் எதையும் கண்டுகொள்வதில்லை. உதட்டுக்குள் சிரித்தார்.

உண்மையில் அப்பொழுதுதான் அவர் கட்டி முடித்த கந்தசுவாமி கோவில் முதன்முறையாகக் கொடி ஏறியிருந்தது.

இரண்டு நாட்களாக நேசம் ஒருவருடனும் கதைக்கவில்லை. அவர் மனதில் ஆயிரம் எண்ணங்கள் சுற்றின. “என்ன செய்யிறது.... இனி அவளுக்கு ஆரைச் பிடிச்சிருக்கோ அவரையே கட்டிக் கொள்ளட்டும்என்றார் முடிவாக.

கோவில் திருவிழா முடியும் மட்டும் ‘அந்தக் கலியாணத்தைப்பற்றி எவருடனும் கதைப்பதை தவிர்த்து வந்தார் கணபதிப்பிள்ளை. திருவிழா முடிந்த மறுநாள் காலை:

“மினிக்குஞ்சு.... உனக்கு அவரைப் பிடித்திருக்கிறதா?”  என்றார்.

“அவளும் எவ்வளவு காலம் எண்டு இருக்கிறது! செய்யட்டும்நேசம் சொல்லிக் கொண்டார்.

“வேறு என்னதான் அவள் செய்யிறது?என்றாள் அழாக்குறையாக விமலா.

பத்மினி மெளனமாக இருந்தாள்.

மூன்றுநாள் கழித்து ஒரு றவலிங் பையுடன் இவர்களின் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் டேவிட். டேவிட்டின் தோற்றத்தைக் கண்டதும் எல்லோரும் திகைத்துப் போய்விட்டனர். அவன் நாலடியும் சில அங்குலங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தான். விமலா எல்லாருக்கும் படம் காட்டினாளே தவிர டேவிட்டின் தோற்றம் பற்றி வர்ணித்தது கிடையாது.

டேவிட், விமலாவின் சித்தப்பாவின் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். அங்கு தங்கியிருந்த காலங்களில் அடிக்கடி பத்மினியின் வீட்டிற்கு வந்து போனார். பத்மினியின் மனதில் சிறிது சிறிதாக மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் நேசத்திற்கு டேவிட்டை அறவே பிடிக்கவில்லை. அவனுடன் ஒருநாளும் முகம் கொடுத்துக் கதைத்ததும் கிடையாது.

“என்னம்மா.... அவர் கட்டை எண்டபடியாலைதானே உனக்கு அவரைப் பிடிக்குதில்லை பத்மினி தாயாரிடம் கேட்டாள்.

“எடி போடி நீஎன்று தாய்க்காரி பத்மினியைக் கலைத்தாள்.

“அவர் கட்டை எண்டாலும் தங்கமான குணம் அம்மா...என்றாள் பத்மினி.

இருப்பினும் சந்திரமோகன் கேட்ட கேள்வியை டேவிட்டும் கேட்கக்கூடும் என்ற அச்சம் அடிக்கடி பத்மினிக்குத் தலை காட்டியது.

அதன் பின்னர் டேவிட் அடிக்கடி நேசத்திற்கு அருகிலே கதிரையைப் போட்டுவிட்டு அவருடன் உரையாடுவான். வேலையிடத்துப் புதினங்கள் சொல்லி மாமியாரைக் குளிர்விப்பான். ஆங்கிலத்திலும் சொற்களை உருவிவிட்டு, தனக்கு ஆங்கிலத்திலும் திறமை இருக்கின்றது என வேடிக்கை காட்டுவான்.

ஒருநாள் நேசமும் டேவிட்டும் உரையாடிக்கொண்டிருக்கையில், கணபதிப்பிள்ளை கோயில் கணக்குக் கொப்பிகளுடன் வந்து சேர்ந்தார். ஒரு தகர டப்பாவிற்குள் காசும் `செக்’கும் இருந்தன. அவற்றைச் சரி பார்த்துத் தரும்படி நேசத்திடம் கேட்டார். தக்க தருணத்திற்காகக் காத்திருந்த நேசம், மருமகனிடம் ஒரு என்வலப்பை நீட்டி,

“எட தம்பி இந்த என்வலப்பின்ரை பின்பக்கத்திலை ‘செக் 500 ரூபாஎண்டு இங்கிலீசிலை எழுதித்தாரும்என்றார். டேவிட் cheque என்று எழுதவற்குப் பதிலாக check என்று எழுதிவிட்டான். நேசத்திடம் நேசம் நாடிவந்த டேவிட்டை குறுகுறு பார்வையில் பார்த்தார் அவர்.

“எட இவன் ஒருத்தன்....சினந்து கொண்டார்.

என்வலப்பை டேவிட்டிடம் நீட்டினார். “என்ன இது?” என்றார் நேசம். டேவிட்டுக்கு அடியும் புரியவில்லை, நுனியும் விளங்கவில்லை. போர்டிக்கோவிற்குள் பத்மினி தன் நாலைந்து நண்பிகளுடன் கதைத்து, கெக்கட்டம் போட்டுச் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் கூட்டத்தில் நின்ற பத்மினிக்கு `செக்’ போட்டுக் கொண்டிருந்தான் டேவிட். இனி டேவிட்டுக்கு செவிட்டுமிஷின் தான் பூட்டவேணும் என நினைத்து, அத்துடன் `செக்’ எழுதும் வேலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் நேசம்.

ஒரு சனிக்கிழமை பத்மினியின் கலியாண எழுத்து மிக எளிமையாக நடந்தது. அதன் பின்னர் பத்மினியின் புதிய அத்தியாயம் தொடங்கியது. மறுவாரமே டேவிட்டுடன் கொழும்புக்கு ரயிலேறிவிட்டாள் பத்மினி. பிரிவின் துயர் தாங்காது கணபதிப்பிள்ளையும் நேசமும் ஒரு பாட்டம் அழுது தீர்த்தனர்.

மருதானை புகையிர ஸ்ரேசனில் இவர்களுக்காக ஒரு கார் சோடனைகளுடன் காத்து நின்றது. வீடு வரும் வரைக்கும் காருக்கு வெளியே கண்களை எறிந்து விடுப்புப் பார்த்துக் கொண்டு வந்தாள் பத்மினி. மருதானையில் இருந்து கொட்டாஞ்சேனை வரைக்குமான ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை விபரணமாக்கினான் டேவிட். கொட்டஹேன வீட்டில் இவர்களை வரவேற்பதற்காக சிலர் காத்திருந்தனர். ஒரு சிறு குச்சுவீடு. வீட்டு வாசலை கார் அடைந்ததும், கார்க்கண்ணாடியைப் பதித்து முழுவியளமாக நின்ற  பெண் ஒருத்தியிடம் டேவிட் கதைத்தான்.

“உவள் தான் எங்கள் வீட்டு வேலைக்காரி” பெருமிதமாகச் சொன்னான் டேவிட்.

வீட்டிற்குள் நெருக்கியடித்தபடி சில கதிரைகளில் நண்பர்கள் வீற்றிருந்தார்கள். வரவேற்பு தடல்புடலாக, ஹோலிற்குள் புதுமணத்தம்பதிகள் கலகலத்து உரையாடிக் கொண்டிருந்தனர். அதற்கு முத்தாய்ப்பு வைத்தது போல் அறைக்குள் ஒரு பெண்ணின் இருமல் சத்தம் கேட்டது. தொடர்ந்து,

“ஆராவது கொஞ்சம் தேத்தண்ணி போட்டுத் தரமாட்டியளா? என்றொரு குரல் கேட்டது. பத்மினி திரும்பி டேவிட்டைப் பார்த்தாள்.

“அது என்னுடைய அம்மா. உள்ளே படுக்கையில் இருக்கின்றார். போய்ப் பார்த்துவிட்டு வாருங்கள்அருகேயிருந்த அறையைச் சுற்றிக் காட்டினான் டேவிட். தயங்கியபடியே அந்த அறைக்குள் நுழைந்தாள் பத்மினி. அறைக்குள் பெருங்குடலைப் பிறாண்டும் நாற்றம் பரவியிருந்தது.

“ஆ... நீயா என் மருமகள்? என்ரை பீய்த்துணியை துவைத்துப் போடுவியா? எனக்குச் சாப்பாடு, மருந்து எல்லாம் வேளாவேளைக்குத் தருவியா?வயது முதிர்ந்த டேவிட்டின் தாயார், பத்மினியைப் பார்த்து கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

பத்மினிக்கு அழுகை அழுகையாய் வந்தது. பேதையான பத்மினிக்கு, இனி தான் தான் அந்தவீட்டு வேலைக்காரி என உறைத்தது. தான் டேவிட்டை அல்ல, டேவிட்டின் அம்மாவை மணந்து கொண்டிருக்கின்றேன் என்ற உண்மை உறைத்தது.

…தொடரும் 

No comments: