அவுஸ்திரேலிய பொதுத் தேர்தல்: புதிய பிரதமராக தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ்

 Sunday, May 22, 2022 - 12:44pm

- அவுஸ்திரேலிய பாராளுமன்றிற்கு முதன்முறை இலங்கையில் பிறந்த பெண்
- ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்துத் தெரிவிப்பு
- ஸ்கொட் மொரிசன் கூட்டணி தோல்வி

அவுஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்ற இடம்பெற்ற பொதுத்தேர்தலில் லிபரல் கட்சி தலைவரும், பிரதமருமான ஸ்காட் மோரிசனுக்கும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பனிஸ் இடையே கடுமையான போட்டி நிலவியது.

அந்நாட்டின் மொத்தமாகவுள்ள 151 தொகுதிகளில் லிபரல் கட்சி கூட்டணி 52 இடங்களையும், தொழிலாளர் கட்சி 72 இடங்களையும் கைப்பற்றியிருந்தது. வெற்றிப் பெற 76 இடங்கள் தேவை என்ற நிலையில், 72 இடங்களை பெற்ற தொழிலாளர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

லிபரல் கட்சி தலைவரும் அந்நாட்டின் பிரதமருமான ஸ்கொட் மொரிசன் தோல்வியைத் தழுவியுள்ள நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் அந்தோனி அல்பானிஸ் புதிய பிரதமராக பொறுப்பேற்பது உறுதியாகியுள்ளது.

தனது தோல்வியை ஸ்கொட் மொரிசன் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி கோட்டாபய வாழ்த்துத் தெரிவிப்பு

 

 

இதேவேளை, புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அந்தோனி அல்பானிஸிற்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தனது ட்விட்டர் கணக்கில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளதோடு, இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இணைந்து பணியாற்றவும் எதிர்பார்ப்பதாக சுட்டிக்காட்யுள்ளார்.

இலங்கையில் பிறந்த முதல் பெண் அவுஸ்திரேலிய பாராளுமன்றிற்கு

இலங்கையில் பிறந்த கசாண்ட்ரா பெனாண்டோ இம்முறை அவுஸ்திரேலிய பொதுத்தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார்.

அந்த வகையில் அவுஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு தெரிவான முதல் இலங்கை வம்சாவளி பெண் இவர்.

அவர் தொழிலாளர் கட்சியிலிருந்து அவுஸ்திரேலியாவின் ஹோல்ட் (Holt) தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.

இதே தொகுதியில் லிபரல் கட்சி சார்பில் கசாண்ட்ரா பெனாண்டோவை எதிர்த்து மற்றொரு இலங்கையரான ரஞ்ச் பெரேரா போட்டியிட்டார்.

கசாண்ட்ரா பெனாண்டோ 57.5% வாக்குகளைப் பெற்றுள்ளதோடு, ரஞ்ச் பெரேரா 42.5% வாக்குகளைப் பெற்றுள்ளார்.

கசாண்ட்ரா பெனாண்டோ 1999 ஆம் ஆண்டு தனது 11ஆவது வயதில் தனது பெற்றோருடன் அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.

கசாண்ட்ரா பேஸ்ட்ரி சமையல்கலைஞர் என்பதோடு, அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞராகவும் ஹோல்ட் தொகுதிக்கான தொழிலாளர் கட்சி வேட்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 


No comments: