இலங்கைச் செய்திகள்

ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்

யாழில் 50 பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைப்பு


ஈஸ்டர் தாக்குதலுக்கு மைத்திரியே பொறுப்பு 

- பொறுப்புக்கூறலிலிருந்து தப்பிக்க முடியாது
- இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு

ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும் அதனை தடுக்காதது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

சங்கத்தின் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன இதனை தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமையின் ஊடாக அடிப்படை மனித உரிமை மீறல் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு நேற்று முன்தினம் மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ள இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் மன்றில் முன்னிலையான போதே ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹார, எல்.டீ.பீ.தெஹிதெனிய, முர்து பெர்னாண்டோ, எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டீ.நவாஸ் மற்றும் ஷிரான் குணரத்ன ஆகிய நீதியரசர்கள் அடங்கிய ஆயம் முன்னிலையில் குறித்த வழக்கு மூன்றாவது நாளாகவும் அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 



இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இலங்கைக்கு 1 பில்லியன் (100 கோடி டொலர்) டொலர் கடனுதவி வழங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கைச்சாத்திட்டுள்ளது.

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ இன்றையதினம் (17) இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் மத்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் ஆகியோரை புது டில்லியில் வைத்து சந்தித்து கலந்துரையாடினர்.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இதன்போது பரஸ்பர நலன் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பின் பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்து அமைச்சர்கள் கலந்துரையாடியதாக இந்திய உயர் ஸ்தானிகராலாயம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு உணவு, மருந்து மற்றும் ஏனைய அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்காக 1 பில்லியன் டொலர் (100 கோடி டொலர்) கடன் வசதி தொடர்பில் இந்தியாவின் SBI (State Bank of India) மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

குறித்த ஒப்பந்தத்தில் இலங்கை அரசாங்கம் சார்பில் நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இந்திய நிதியமைச்சுகளினதும் செயலாளர்கள் கைச்சாத்திட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடமிருந்து 100 கோடி டொலர் கடன்; ஒப்பந்தம் கைச்சாத்து-USD 1 Billion Loan From India-MoU-Agreement Signed

இதேவேளை, பெற்றோலியப் பொருட்களுக்காக இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை (இந்திய ரிசர்வ் வங்கி (RBI)) இந்தியா ஏற்கனவே அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 




இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவிப்பு

- பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விசேட அவதானம்

நிதியமைச்சர் பசில் ராஜபக் ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று (16) டில்லியில் சந்தித்தார். இதன்போது, இந்தியா எப்போதும் இலங்கையுடன் இருப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விசேட அவதானம் செலுத்தப்பட்டதாக புது டில்லியில் உள்ள இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா மற்றும் மீன்வளம் குறித்து இதன்போது கருத்துகள் பரிமாறப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இயற்கை விவசாயத்தில் கவனம் செலுத்துவது மற்றும் அத்துறைக்கு இந்தியாவில் இருந்து கிடைக்கும் தொழில்நுட்ப உதவிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ அந்நாட்டு வெளியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்து உரையாடினார். இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் இந்திய விஜயத்தின் போது, அந்நாட்டு வௌிநாட்டலுவல்கள் அமைச்சர், கலாநிதி எஸ். ஜெய்சங்கர் மற்றும் உதவி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ விக்ரம் மிஸ்ரி உள்ளிட்ட உயர்மட்ட பிரதிநிதிகளையும் அவர் சந்தித்து கலந்துரையாடினார். இந்தியாவிடமிருந்து பெறப்படவுள்ள ஒரு மில்லியன் டொலர் ஒப்பந்தம் தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து இதன் போது முன்னெடுக்கப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்தது.   நன்றி தினகரன் 




யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு

யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு-Jaffna Navatkuli Bhikku Residence

யாழ்ப்பாணம் நாவற்குளி சமித்தி சுமண விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (19) திறந்து வைக்கப்பட்டது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சினால் இலங்கை இராணுவத்தினரின் பங்களிப்புடன் இந்த தங்குமிடக் கட்டடம் கட்டப்பட்டது.

யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு-Jaffna Navatkuli Bhikku Residence

பிக்குமார் தங்குமிடக் கட்டிடத்தை திறந்துவைத்த பிரதமர், அப்பகுதியில் உள்ள 50 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 போசாக்கு உணவு பொதிகளை வழங்கினார். அதனைத் தொடர்ந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் நாவற்குளி வீடமைப்புத் திட்டத்தின் பயனாளிகள் 36 பேருக்கு பிரதமரினால் வீட்டு உரிமைகள் வழங்கி வைக்கப்பட்டன.

யாழ்ப்பாணம் நாவற்குளி விகாரையின் பிக்குமார் தங்குமிடக் கட்டடம் பிரதமரினால் திறந்துவைப்பு-Jaffna Navatkuli Bhikku Residence

உடரட அமரபுர மஹாநிகாயவின் அதிகரன சங்கநாயக்கர், நந்தாராம பௌத்த மத்தியஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய உடுவெல சுமேத நாயக்க தேரர், உடரட அமரபுர மஹாநிகாயவின் வடமாகாண பிரதான சங்கநாயக்கர், நாவற்குளி சமித்தி சுமண விகாராதிபதி ஹங்வெல்லே ரதனசிறி தேரர் உள்ளிட்ட மஹாசங்கத்தினர் இதன்போது பிரதமருக்கு ஆசீர்வாத பிரித் பாராயணம் நிகழ்த்தினர்.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.     நன்றி தினகரன் 



நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்-Nainativu Rajamaha Temple Jaffna-Prime Minister Mahinda Rajapaksa, Nainativu Rajamaha Viharaya-Jaffna-Declared as Sacred Area

அன்றும் வடக்கு மக்களைப் பாதுகாத்த நாம், அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் இன்றும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம் வழங்கும் வகையில் யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரையில் இன்று (19) இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்-Nainativu Rajamaha Temple Jaffna-Prime Minister Mahinda Rajapaksa, Nainativu Rajamaha Viharaya-Jaffna-Declared as Sacred Area

யாத்ரீகர்களுக்குத் தேவையான தங்குமிட வசதிகளை விரிவுப்படுத்தி நயினாதீவு ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்ப்பதாக பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், முதலில் அமரபுர மஹா சங்க சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய கங்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர் மற்றும் நயினாதீவு பீடாதிபதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்தார்.

புனித பூமி பணிப்பாளர் ருச்சிர விதான அவர்கள் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார், அதன் பின்னர் செயலாளர் சன்னஸ் பத்திரத்தை வாசித்தார்.

நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி சன்னஸ் பத்திரம்-Nainativu Rajamaha Temple Jaffna-Prime Minister Mahinda Rajapaksa, Nainativu Rajamaha Viharaya-Jaffna-Declared as Sacred Area

சன்னாஸ் பத்திரம் பேராசிரியர் கபில குணவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பின்னர் பிரதமர் ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் அம்பகஹபிட்டிய பிரிவின் பிரதம சங்க தலைவர் நயினாதீவு ரஜமஹா விகாரை விகாராதிபதி வண. நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரருக்கு வழங்கினார்.அமரபுர மகா சங்கசபையின் தலைவர் கந்துனே அஸ்ஸஜி மகாநாயக்க தேரர் சிறப்புரையாற்றினார்.

நயினாதீவு விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்துவதற்கு அரச அனுசரணை வழங்கியமைக்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் புத்தசாசன அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன ஆகியோருக்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வடக்கில் பாழடைந்த வனவிலங்கு தளங்களை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கு அமரபுர நிகாயாவின் பிக்குகள் விசேட அர்ப்பணிப்பை மேற்கொண்டுள்ளனர். நான் முதன்முதலில் யாழ்ப்பாணத்திற்கு 1970 இல் வந்தேன். ஆனால் அப்போது ஏற்பட்ட கலவரத்தால் நயினாதீவிற்கு வரமுடியவில்லை. பின்னர் இந்த வாய்ப்பு வந்தது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அன்றைய பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முப்படைகளின் தளபதிகளினால் யாழ் குடாநாட்டிற்கு இன்று எவருக்கும் விஜயம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது.

அதனால்தான் மகா சங்கத்தினர் உங்களுக்கு நற்பெயரை வழங்கினர். கடந்த கால மன்னர்கள் பௌத்தத்தைக் காக்க நடவடிக்கை எடுத்தது போல், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பௌத்தத்தைக் காக்க நடவடிக்கை எடுத்ததால் 'ராஜவங்ஷ பூஷண' என்றும், தர்மத்தீவு பிளவுபடாமல் பாதுகாத்ததால் 'தர்மத்வீப சக்கரவர்த்தி' என்றும் அழைக்கப்பட்டீர்கள். அந்தப் பெயர் என்னால் உருவாக்கப்பட்டது.

நயினாதீவை தேசிய ஒற்றுமையை கட்டியெழுப்பும் இடமாக எமது நவதகல தேரர் உருவாக்கியுள்ளார். அதற்குக் காரணம் அவர் சரளமாகத் தமிழ் பேசக்கூடியவர். இப்பிரதேசங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த பிக்குகளை அதிகளவில் வரவழைப்பதன் மூலம் இப்பிரதேசங்களில் சிறந்த தேசிய ஒற்றுமையை ஏற்படுத்த முடியும் என மகாநாயக்க தேரர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதமர் ஆற்றிய முழுமையான உரை,

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ரஜமஹா விகாரை என்பது புத்தரின் வருகையால் புனிதமடைந்த இடமாகும். சூலோதர மஹோதர மாமாவுக்கும் மருமகனுக்கும் இடையே எழுந்த இரத்தினக்கல் கதிரைக்காகக நடந்த போரை நிறுத்துவதற்காக புத்தபெருமான் இந்த புனித இடத்திற்கு வந்ததாக சாசன வரலாறு கூறுகிறது.

அப்போது அனைவருக்கும் தர்மம் உபதேசம் செய்யப்பட்டதால், ஏற்படவிருந்த பெரும் பேரிடரை தடுத்து நிறுத்த முடியும்.

அன்றிலிருந்து இந்த பெறுமதி வாய்ந்த இடம் சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி பௌத்த தத்துவத்தில் பற்று கொண்ட அனைத்து தேசிய இன மக்களும் வழிபடும் இடமாக மாறியுள்ளது.

துடுகெமுனு மன்னன், சத்தாதிஸ்ஸ மன்னன் போன்ற மாபெரும் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சிக்காலத்தில் இந்த இடத்தை பாதுகாத்ததாக வரலாறு கூறுகிறது.

வடக்கிலும் தெற்கிலும் பழங்காலத்திலிருந்தே மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்துள்ளனர் என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகிறது.

1983 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த நாட்டில் ஏற்பட்ட பாதகமான நிகழ்வுகளால் 30 வருடங்களுக்கு மேலாக இந்த இடம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது என்று  கூறுவது சரியானது. தென்னிலங்கை மக்கள் வடபகுதிக்கு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

அன்றைய காலப்பகுதியில் இலங்கை கடற்படையினர் இந்த ஆலயத்தை பராமரித்து பாதுகாத்து வந்ததோடு பிக்குகளுக்கு அன்னதானம் வழங்கியதையும் நினைவுபடுத்த விரும்புகின்றேன்.

வடக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட யுத்தம் இந்தப் பிரதேசத்தின் அபிவிருத்தியையும் மக்களையும் அழித்தது.இவ்விகாரையை பராமரிக்க அப்பகுதியில் வாழும் ஏராளமான தமிழர்களும் ஒன்று திரண்டு வந்ததை மரியாதையுடன் நினைவு கூர்கிறேன்.

அவர்கள் மற்றும் கடற்படையினரின் உதவியோடு இவ்விகாரை தற்போதைய விகாராதிபதியினால் அபிவிருத்தி செய்யப்பட்டது.எமது வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி நாயக்க தேரர் அவர் என்னுடன் மிகவும் நட்புடன் பழகும் தேரர்.

மேலும், அவர் சொல்ல வேண்டியதை பயப்படாமல் சொல்வதும் அவரிடமிருந்து நான் கண்ட பண்புகளில் ஒன்று. மேலும் இந்த பகுதி மீதும் விகாரையின் மீதும் மிகுந்த அன்பு கொண்டவர்.அவர் இந்த மக்களையும் விகாரையையும் விட்டு வெளியே வரவே இல்லை. எனக்கும் அரசாங்கத்துக்கும் மிகவும் விசுவாசமாக இருந்தார்.

புத்தர் பீடத்தை சீர்செய்தல், பக்கச்சுவர் அமைத்தல், விகாரை மற்றும் தேவ மந்திராவை புனரமைத்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்களுக்கு தேவையான சுகாதார வசதிகளை விரிவுபடுத்துதல் போன்றவற்றை எம்மால் செய்ய முடிந்தது.

மேலும், நயினாதீவில் உள்ள நயினாதீவு விகாரைக்கு செல்லும் பாதையை அமைக்கவும், மருத்துவமனையை சீரமைக்கவும் முடிந்தது.

நயினாதீவு மற்றும் ஏனைய தீவுகளுக்கு செல்லக்கூடிய குறிகட்டுவான் ஜெட்டியை புனரமைத்து, நயினாதீவு விகாரைக்கு வருகை தரும் பக்தர்களுக்கான தங்குமிட வசதிகளை மேலும் மேம்படுத்தவும் நாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த ஆலயம் புனிதமான இடமாக மாற்றப்பட்டதன் காரணமாகவே இவை அனைத்தும் சாத்தியமானது என்றே கூறவேண்டும்.

30 ஆண்டு கால பயங்கர போருக்குப் பின்னர் இந்த விகாரையை பெரிய அளவில் மேம்படுத்தி பக்தர்கள் வழிபடும் இடமாக மாற்ற நினைத்தோம்.

எனவேதான் கடந்த வருட அரச வெசாக் விழாவை வடமாகாணத்தில் இந்த ஆலயத்தை மையப்படுத்தி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.துரதிர்ஷ்டவசமாக, உலகம் முழுவதையும் மூழ்கடித்த கொவிட் 19  தொற்றினால் அதனை செய்ய முடியாது போனது.

இதனை நிறைவேற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் புத்தசாசன அமைச்சு ஏற்பாடு செய்திருந்தது.இந்த நிகழ்வை பிரமாண்டமாக நடத்துவதற்கு அரசு அமைப்புகள், பாதுகாப்புப் படையினர் உட்பட இந்தப் பகுதி மக்கள் திட்டமிட்டனர்.

எனினும், சுகாதாரத் துறையின் ஆலோசனையின் பேரில், நிகழ்ச்சியை ரத்து செய்தோம். இந்த விகாரையின் மீதும், இந்த மாகாணத்தின் மீதும், அங்கு வாழும் மக்கள் மீதும் கொண்ட பக்தியின் காரணமாகவே இந்த விழாக்களில் இணைந்தோம் என்றே கூற வேண்டும்.

அப்போதும் நாங்கள் வடக்கு மக்களை பாதுகாத்தோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் எமது அரசாங்கமும் இன்று அந்த மக்களைப் பாதுகாத்து இந்த மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இவ்விகாரைக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.

இப்பணிகளை முன்னெடுப்பதில் புத்தசாசன அமைச்சு உட்பட அரச நிறுவனங்களும், இலங்கை கடற்படை மற்றும் இராணுவமும் கணிசமான பங்காற்றியுள்ளன.

இந்தப் புனித பூமியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் அரசாங்கம் தன்னால் இயன்ற அனைத்தையும் தொடர்ந்து செய்யும் என்று உறுதியளிக்கிறேன். 'என்று பிரதமர்  கூறினார்.

நிகழ்வின் நிறைவில் நயினாதீவில் உள்ள ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலிலும் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.   நன்றி தினகரன் 





யாழில் 50 பாடசாலை மாணவர்களுக்கு பிரதமர் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைப்பு

யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த மத்திநிலையத்தின் தலைவர் வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரரைச் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) சந்தித்து நலம் விசாரித்தார்.

வணக்கத்திற்குரிய மீகஹஜதுரே சிறிவிமல நாயக்க தேரருடன் சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்ட பிரதமர், அவரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னர், யாழ்ப்பாணம் ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டார்.

இதன்போது பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த 50 பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களை பிரதமர் வழங்கினார்.

இலங்கை இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு அதற்கு அனுசரணை வழங்கியது.

குறித்த சந்தர்ப்பத்தில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன, யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, 51 ஆவது படைப் பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க உள்ளிட்ட இராணுவத்தினர் மற்றும் பிரதேசவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.  நன்றி தினகரன் 




No comments: