மூத்த முற்போக்கு படைப்பாளி செ. கணேசலிங்கன் சென்னையில் மறைந்தார் முருகபூபதி


இலங்கை வடபுலத்தில் உரும்பராயில் 1928 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 09 ஆம் திகதி பிறந்திருக்கும்  ஈழத்தின் மூத்த முற்போக்கு  எழுத்தாளர் செ. கணேசலிங்கன் அவர்கள் தமது 93 ஆவது அகவையில் கடந்த  04 ஆம் திகதி சென்னையில் மறைந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04 ஆம் திகதி மாலையே சென்னையில் நிறைவுபெற்றது. 


சுமார் அறுபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் பல சிறுகதைகள் , கட்டுரை – விமர்சன நூல்கள் – சிறுவர் இலக்கியம் – பயண இலக்கியம் என நூறுக்கும் மேற்பட்ட நூல்களை தமிழ் இலக்கிய உலகிற்குத்தந்துள்ள கணேசலிங்கனின் தற்போதைய வயதிலிருந்து கணக்குப்பார்த்தாலும் வருடத்துக்கு ஒரு புத்தகம் என பிறந்தது முதல் இன்று வரையில் அதிகம் புத்தகங்கள் எழுதியிருக்கின்றார்.  

மூத்த தமிழ் அறிஞர் மு.வரதராசனும் (மு.வ) இவரது நெருங்கிய நண்பர். மு.வ. மறைந்தபின்பு அவரது நினைவாகவும் ஒரு நூலை எழுதியிருக்கின்றார்.

செவ்வானம் நாவல் கைலாசபதியின் முன்னுரையுடன் வெளியானது. குறிப்பிட்ட நீண்ட முன்னுரையே பின்னாளில் தமிழ் நாவல் இலக்கியம் என்ற விரிவான நூலாகியது.

சர்வதேசப்புகழ்பெற்ற கவிஞர் பாப்லோ நெருடா (இலக்கியத்திற்காக நோபல்


பரிசு பெற்றவர்) இலங்கை வந்த சமயம் அவரை வரவேற்கும் எழுத்தாளர்களின் கூட்டத்திற்கு தலைமைதாங்கிச் சிறப்பித்த பெருமையும் கணேசலிங்கனுக்குண்டு. புனா திரைப்படக்கல்லூரியிலும் அவர் சிறிதுகாலம் பயிற்சி பெற்றவர். அங்கு பிரபல இயக்குநர் மிருணாள் சென் போன்றவர்களுடன் நட்புறவுகொண்டவர். கமல்ஹாஸன் நடித்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான கோகிலா (கன்னடம்) திரைப்படத்தின் தயாரிப்பு நிர்வாகியாகவும் இயங்கியிருக்கும் கணேசலிங்கன் – தமிழக சினிமா உலகின் கோலங்களை தமது கவர்ச்சிக்கலையின் மறுபக்கம் என்ற நாவலில் சித்திரித்துள்ளார்.

நான் வதியும் அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகப்பிரவேசப் பரீட்சைக்கு தமிழும் ஒரு பாடம். தமிழ்மொழிப்பாடப் பரீட்சைக்கு தோற்றும் பல மாணவர்களுக்கு பெண்கள் தொடர்பாக வரும் நேர்முக – எழுத்துப்பரீட்சைகளுக்கு கணேசலிங்கனின் பெண்ணடிமை தீர என்ற நூல் உசாத்துணையாகப்பயன்பட்டது என்ற புதிய தகவலையும் இங்கு பதிவு செய்யவிரும்புகிறேன். இந்த நூலும், குமரனுக்கு கடிதங்கள், குந்தவைக்கு கடிதங்கள் முதலான நூல்களும் பல ஆயிரம்பிரதிகள் வாசகர் மத்தியில் சென்றுள்ளன.




சாரு மஜூம்தார் என்ற இந்திய சுதந்திரபோராட்ட போராளி, பின்னாளில் இடதுசாரி இயக்கங்களில் ஈடுபட்டு, நக்சல்பாரி என்ற ஆயுதப்போராட்ட இயக்கத்தை உருவாக்கியவர். அவரது சிந்தனையின் தாக்கத்தினால், கணேசலிங்கன் எழுதிய மண்ணும் மக்களும் என்ற நாவல் இந்திய அரசினால் தடைசெய்யப்பட்டது.

நிலமானிய சமூக ஒடுக்குமுறையைச் சித்தரித்தே மண்ணும் மக்களும் நாவலை எழுதினார். இலங்கையில் - புரட்சி ஏதோ ஒரு வடிவத்தில் தோன்றும் வாய்ப்பு நேரலாம் என்பதை நீண்ட காலத்திற்கு முன்பே நாவலாக எழுதிக் காண்பித்தவர். ஈழத்துத் தமிழ் இலக்கிய உலகில் செ.கணேசலிங்கனின் சிறுகதைகள், நாவல்கள் பல முக்கியமானவை. தடம் பதித்தவை. ஆண்மையில்லாதவன் போன்ற இவரது பல சிறுகதைகள் குறிப்பிடப்படவேண்டியவை. நாவல்களிலும் 'சடங்கு''செவ்வானம்', 'நீண்ட பயணம்', 'மண்ணும் மக்களும்' போன்றவை முக்கியமானவை. இவரது நாவல்களை வெறும் பிரச்சாரப் படைப்புகளாக ஒதுக்கி விட முடியாது. ட்ரோல்ஸ்ரோய், தாஸ்த்தாவஸ்கி போன்றவர்கள் தங்களது படைப்புகளில் கையாண்ட மத போதனைகளை வைத்து மட்டும் எவ்விதம் அவர்களது படைப்புகளைக் கணிப்பிட முடியாதோ, அவ்விதமே செ.கணேசலிங்கனின் படைப்புகளில் ஊடுருவியிருக்கும் பொருளின் தீவிரத்தை வைத்து மட்டும் அவரது படைப்புகளை எடை போட முடியாது.

இலங்கையிலும் தமிழ்நாட்டிலும் குமரன் பதிப்பகம் என்ற பெயரில் நூல்


வெளியீட்டு நிறுவனத்தையும் நடத்திக் கொண்டு Front Line சஞ்சிகை ஆசிரியர் இந்து ராமின் நண்பராகவும் திகழ்ந்த கணேசலிங்கன், இந்து குழுமத்தின் நூலகத்திலும் சிறிது காலம் பணியாற்றினார்.

தமிழில் அரசியல் சார்ந்த நாவல்களை எழுதும் ஆற்றல் மிக்கவராக இனம் காணப்பட்டவர். மாக்ஸீய சிந்தனைகளினால் ஆகர்ஷிக்கப்பட்ட கணேசலிங்கன் சிறந்த மனிதநேயவாதி எனவும் விதந்து பேசப்படுபவர். ஆங்கிலத்திலும் நல்ல புலமைமிக்க கணேசலிங்கன், ஸ்ரிபன்  செவாக்
(Stefan Zweig)  எழுதிய  Letter from an Un-known Woman  என்ற   குறுநாவலை   தமிழில்    அபலையின்  கடிதம்   என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார். 

கணேசலிங்கனின் முதலாவது நாவல் நீண்டபயணம் வடமாகாண சாதி ஒடுக்குமுறையை சித்திரித்தது, மற்றுமொரு பிரசித்தி பெற்ற நாவலான சடங்கு பேராசிரியர் கா. சிவத்தம்பியின் முன்னுரையுடன் வெளிவந்து வாசகர்களின் கவனத்தைப் பெற்றது.

வெள்ளவத்தையில் இயங்கிய கணேசலிங்கனின் விஐயலஷ்மி புத்தகசாலை
1983 ஆடிக்கலவரத்தில் முற்றாக எரிந்து நாசமாகியது. இலங்கையில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் பெரிதும் உதவிய இந்த புத்தகசாலையை கொடியவர்களிடம் இழந்த போதிலும் - சென்னையில் புகலிடம் பெற்று, ஈழத்து படைப்பாளிகளின் நூல்கள் தொடர்ந்து வெளிவருவதற்கு அயராமல் உழைத்தார்.


கொழும்பில் நீண்டகாலம் குமரன் மாத இதழை நடத்தினார். அவ்விதழ் - கலை, இலக்கிய, அரசியல், அறிவியல் ஏடாக வெளியானது. இலங்கையில் மிகுந்த கவனத்தைப் பெற்ற கவிஞரான புதுவை இரத்தினதுரை ஒரு காலத்தில் வரதபாக்கியான் என்ற புனைபெயரில் பல கவிதைகளை எழுதியதும் இந்த குமரன் இதழில்தான். ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப் - “ தான் குமரன் இதழ்களைத் தொடர்ந்து படித்தே அரசியல் அறிவு பெற்றதாக ஒரு சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தின் முன்னோடி முற்போக்கு எழுத்தாளர் அ.ந. கந்தசாமி அந்திம காலத்தில் நோய்வாய்ப்பட்டிருந்த வேளையில் அவருக்கு அருகே இருந்து பலவிதத்திலும் பணிவிடை புரிந்த முன்மாதிரியாளர் இந்த கணேசலிங்கன்தான். அ.ந.கந்தசாமி எழுதிய வாழ்வுக்கு வழிகாட்டும் உளவியல் நூலான வெற்றியின் இரகசியங்கள் தமிழகத்தில் பாரி நிலைய வெளியீடாக வெளிவரக் காரணமாகவிருந்தார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் எழுத்தாளர் கூட்டுறவு பதிப்பக வெளியீடாக வந்த அ.ந.க.வின் மதமாற்றம் நாடகம் நூலாக வெளிவரவும் கணிசமான ஒத்துழைப்பு நல்கியதோடு அந்நூலுக்கு நல்லதொரு முகவுரையினையும் எழுதியவர். அ.ந.க.வின் வெளிவராத நாவலான செ.க.வின் வசமிருந்த களனி வெள்ளம் 
1983 ஆடிக் கலவரத்தில் செ.க.வின் எரிந்த உடமைகளுடன் எரிந்து போனதாகவும் அறியப்படுகிறது. இலங்கையில் கார்ல்மார்க்ஸ் நூற்றாண்டு கொண்டாடப்பட்ட வேளையில் கணேசலிங்கன் வழங்கிய ஆக்கபூர்வமான உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் நேரடியாக கண்ட தோழர் என். சண்முகதாஸன் அவரை மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

கணேசலிங்கன், பெண்ணடிமைத்தனத்திற்கு - திருக்குறள் விமோசனம் அளிக்கவில்லை என்பதை ஆய்வு மூலம் நிரூபிக்கும் நூல் ஒன்றையும் எழுதி விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்தவர். பேராசிரியர்கள் க. கைலாசபதி, இந்திரபாலா உட்பட பல முன்னணி விமர்சகர்கள், ஆக்க இலக்கிய கர்த்தாக்களின் நூல்களை பதிப்பித்துமுள்ள கணேசலிங்கனின் மிகப் பெரிய பலம் - அவரிடம் இயல்பாகவே குடிகொண்டிருந்த அமைதியும் அடக்கமும்தான். ஒருவகையில் அவர் ஒரு நிறைகுடம்.

““கருத்தை இலக்கியத்தோடு மட்டும் வைத்துக் கொண்டு முற்போக்கு, பிற்போக்கு பேதமற்ற நட்புறவை சகல எழுத்தாளரோடும் கொண்டுள்ள ஒரு - சிலவேளை ஒரே - ஈழத்து எழுத்தாளர் இவர் “ - என்று இலக்கு இதழ்                               செ. கணேசலிங்கனைப் பற்றி பல வருடங்களுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளது.

எங்கள் முற்போக்கு இலக்கியக்குடும்பத்தின் மூத்த சகோதரர் செ. கணேசலிங்கன் அவர்களுக்கு  சிரம்தாழ்த்தி அஞ்சலி செலுத்துகின்றேன்.

letchumananm@gmail.com

 

 

1 comment:

Pon Kulendiren said...

ஒரு மூத்த எழுத்தாளரின் மறைவுக்கு அவரின் குடும்பத்துக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். . அவரின் ஆத்மா சாந்தி பெறட்டும் அவர் மறைந்தலும், அவரின் படைப்புகள் இன்றும் எம் நினிவில் நிற்கும்
பொன் குலேந்திரன் - கனடா
இரு மொழி எழுத்தாளன்