“ நெஞ்சைத் தொட்டு அள்ளிக் கொண்ட” பாடலாசிரியர் பிறைசூடன் - கானா பிரபா

 


அன்புக்குரிய பாடலாசிரியர், கவிஞர் பிறைசூடன் நவராத்திரி காலத்தில் வானகம் சென்றிருக்கிறார்.  

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பிள்ளையார் சுழி போட்டுக் கொண்ட அதிர்ஷ்டம் கொண்ட பாடலாசிரியர்.
தன் பேட்டிகளில் வறுமையோடு கவி பாடியதையும், ஒரு பாட்டுக் கேட்க அந்தரப்பட்டதையும், ஏன் தன் முதல் பாடலையே கேட்க அவர் பட்ட துன்பியலையும் சொல்லியிருப்பார். ஆனால் அவரின் பாடல்கள் எல்லாம் வற்றாத செல்வம் கொழித்த வரிகள்.
 
அறுபத்தைந்து என்பது கவிஞனைப் பொறுத்தவரை அகால மரணமே தான். ஆனால் அள்ளிக் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார்.

புதுக்கோட்டை சாந்தானந்த ஸ்வாமி வழி வந்தவரால் “சந்திரசேகரன்” என்ற இயற் பெயர் கொண்டவர் “பிறைசூடன்” ஆகி முப்பத்தாறு ஆண்டுகள் தொட்டிருக்கின்றது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் ராசாத்தி "ரோசாப்பூவே வெட்கம்" 

https://www.youtube.com/watch?v=yVqz6AQakOc
 என்ற சிறை படப் பாடலோடு வெளிவராத எம்.ஜி.ஆர் இல்லம் படம் உட்பட ஏராளம் தனிப் பாடல்களுக்கும் மெல்லிசை மன்னரோடு இணைந்து பணிபுரிந்திருக்கின்றார் கவிஞர்.
தன்னை நேசித்த இசையமைப்பாளர் வி.குமார் தன் மகனுக்குக் கொடுத்த ட்ரம்ஸ் வாத்தியப் பரிசின் ராசியே பின்னாளில் தன் பிள்ளை இசையமைப்பாளரான ராசியையும் சொல்லி நெகிழ்ந்தவர் அவர்.
 
தான் இறந்தால் மரணச் செலவுக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சட்டைப் பைக்குள் 200 ரூபாவை வைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் இவர் வாழ்ந்த காலமெல்லாம் உண்டு.

பிறைசூடனை இன்று காலை நினைத்த போது
“ஓ நெஞ்சோடு ராகம் யார் தந்ததோ
கண் மூடும் போதும் யார் வந்ததோ”


பாடலைத் தான் ஓடிப் போய்க் கேட்டேன். காலவெள்ளத்தில் மறந்து போன இந்த இசையமைப்பாளர் யுவராஜ் போன்றே பிறைசூடனது பாடல்கள் தேடித் தேடி ரசிக்க வேண்டியவை. அவற்றில் தேர்ந்தெடுத்த தொகுப்பாய் இங்கே பகிர்கின்றேன்.  
பிறைசூடன் தான் எழுதியது என்று தெரியாமலேயே என் சம கால கட்டத்து ரசிகர் மனதைக் கொள்ளை கொண்டவை.
இவற்றை உறுதிப்படுத்தப் பெரிதும் துணை நின்றவை, ஒரு காலத்தில் கலைஞர் தொலைக்காட்சியில் பாடலாசிரியர் பிறைசூடன் பங்களித்த "வானம்பாடி" இன்னிசைப் போட்டி நிகழ்ச்சி மற்றும் எண்பதுகள், தொண்ணூறுகளில் வெளிவந்த திரையிசைப் பெருந்தகடுகள்.

ஆதித்யன் இசையில்

1. வசந்தமே அருகில் வா – அமரன்
2. சந்திரனே சூரியனே – அமரன் (எஸ்பிபி பாடியது, இதே பாடலின் கே.ஜே.ஜேசுதாஸ் வடிவம் விஸ்வகுரு இசையில் வைரமுத்து எழுதியது)
3. வெத்தல போட்ட ஷோக்குல – அமரன்
4. லக்கி மேன் – அனைத்துப் பாடல்களும்

யுவராஜ் இசையில்

1. சின்னஞ்சிறு கூட்டுக்குள்ளே – பூவிழி ராஜா
2. ஓ நெஞ்சோடு ராகம் – பூவிழி ராஜா
3. ஏ மாமா ஒனக்கு – பூவிழி ராகம்
சங்கர் கணேஷ் இசையில்
1. வங்கக் கடலிது – உத்தம புருஷன்
2. வாழ்வு முழுதும் யோகம் – செல்வாக்கு
3. வச்சுக்கோடி – தாயா தாரமா
4. ஒண்ணும் தெரியாத பாப்பா படத்தின் அனைத்துப் பாடல்களும்
5. ஞாயமா நம்ம போலிஸ் – காவல் நிலையம்
6. ஆவணித் திங்கள் – முதல் உதயம்
7. ராசி நல்ல ராசி – முதல் உதயம்

மனோஜ் பட்னாகர் இசையில்

1. Take it Easy – என்றென்றும் காதல்

சங்கீத ராஜன் இசையில்

1. பட்டுப் பாப்பா – நீ எந்தன் வானம்
2. யே மச்சக்காளை ( 2 பாடல்) – நீ எந்தன் வானம்

தேவா இசையில்

1. உயிரே உயிரே – வேலுச்சாமி
2. மண்ணைத் தொட்டு – மண்ணைத் தொட்டுக் கும்பிடணும்
3. பல்லாக்கு – கருப்பு நிலா
4. பதவிப் பிரமாணம் – மூன்று பாடல்கள்
5. யாரோ நீயாரோ – இளவரசன்
6. மனசொண்ணு துடிக்குது – என் பொட்டுக்குச் சொந்தக்காரன்
7. தாயகம் படத்தின் அனைத்துப் பாடல்களும், (தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதும் கிட்டியது) 

சிற்பி இசையில்

1. தேவன் கோயில் – நான் பேச நினைப்பதெல்லாம்

எம்.எம்.கீரவாணியின் தெலுங்கு மொழி மாற்றுப் படங்களில்
எல்லாமே என் காதலி, வீர மருது எல்லாப் பாடல்கள்

எஸ்.டி.சாந்தகுமார் இசையில்
1. ஒய்யார மயில் மேல் – பொட்டு அம்மன்
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில்

1. ஆணும் பெண்ணும் – பெரும் புள்ளி

ஏ.ஆர்,ரஹ்மான் இசையில்

1. போர்க்களம் அங்கே – தெனாலி
2. ரசிகா ரசிகா – ஸ்டார்


இசைஞானி இளையராஜாவோடு பணியாற்றிய பாடலாசிரியர்களில் எண்பதுகளின் நடுப்பகுதியிலிருந்து அடுத்த தசாப்தம் வரை கவிஞர் வாலி தொட்டு புலவர் புலமைப்பித்தன், கங்கை அமரன், நா.காமராசன், பொன்னடியான், மேத்தா வரிசையில் கவிஞர் பிறைசூடன் ஆகியோரின் பங்களிப்பு வெகு அதிகமாக அமைந்திருந்தது.
துரதிஷ்டவசமாக, முறையான ஆவணப்படுத்தல் இல்லாத காரணத்தால் கவிஞர் வாலி அல்லது வைரமுத்து என்று எழுந்தமானமாக இணையத்தளங்கள் மட்டுமன்றி வானொலிகள் கூட அறிவித்து இந்தப் பாடலாசிரியர்களின் செழுமையான பங்களிப்பைத் தாழ்த்தி விட்டன.

பாடலாசிரியரை இனம் கண்டு பாடலை ரசித்து மகிழும் போதுதான் குறித்த ஆளுமையின் கைவண்ணத்தைச் சீர் தூக்கிப் பார்க்கலாம். அவர் எவ்வாறு மற்றைய பாடலாசிரியரிடமிருந்து வேறுபட்டுத் தனித்து நிற்கின்றார் என்றும் உணரலாம்.
"உயிரே உயிரின் ஒளியே" பாட்டைக் கேட்டாலேயே நெக்குருகி விடும். அந்தக் காலத்து இளைஞர்களின் எழுதப் படாத காதல் தேசிய கீதம் "நாரினில் பூ தொடுத்து" கூட பிறைசூடன் எழுதியது தான்.

இயக்குநரே விருப்பப்படாத “தென்றல் தான் திங்கள் தான்” பாட்டு பின்னர் கே.கே.ஜேசுதாஸ் சிட்னி ஒபரா ஹவுஸில் மேடையேற்றிய கெளரவம் எல்லாம் பகிர்ந்திருக்கின்றேன். http://www.radiospathy.com/2015/08/25.html

தா தந்தன (அதிசயப் பிறவி) பாடல் போன்றே ஒரு தாள லயத்தில் மிகக் கஷ்டமாக வரிகளைப் பொருத்த வேண்டிய பாட்டு ஆனால் அசத்தியிருப்பார் பிறைசூடன்.

என் ராசாவின் மனசிலே படத்தில் “சோலைப் பசுங்கிளியே” பாடலை எழுதத் தான் ராஜ்கிரண் விருப்பப்படாத சூழலில் இளையராஜாவின் நிர்ப்பந்தத்தில் எழுதி முடித்தவருக்குக் கிடைத்தது தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியருக்கான விருது.
இளையராஜாவின் இசையில் அனைத்துப் பாடல்களும் எழுத வேண்டும் என்ற வேட்கை கொண்டவருக்கு ஶ்ரீ ராமராஜ்ஜியம் தான் வழி சமைத்தது. மேலும் இளையராஜாவோடு பிறைசூடன் அவர்கள் இணைந்தவை

1. துளி துளி மழையாய் – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
2. இங்கே பொன் வீணை – கண்ணுக்கொரு வண்ணக்கிளி
3. நாரினில் பூ தொடுத்து – இரண்டில் ஒன்று
4. உயிரே உயிரின் ஒளியே – என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு
5. புல்லைக் கூடப் பாட வைத்த – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்
6. சிறுவாணி தண்ணி குடிச்சு – எங்க ஊரு காவக்காரன்
7. சொந்தம் ஒன்றைத் தேடும் (சந்தோஷம்) என்னைப் பெத்த ராசா
8. சொந்தம் ஒன்றைத் தேடும் (சோகம்) என்னைப் பெத்த ராசா
9. மீனம்மா மீனம்மா – ராஜாதி ராஜா
10. ஒரு கூட்டின் கிளிகள் தான் – அன்புக் கட்டளை
11. குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் – அரங்கேற்ற வேளை
12. நல் அன்பே தான் தாயானது – கை வீசம்மா கை வீசு
13. ஊருக்குள்ளே வந்த – எங்க ஊரு மாப்பிள்ளை
14. வேறு வேலை உனக்கு இல்லையே – மாப்பிள்ளை
15. ஊரெல்லாம் தூங்குது – நினைவுச்சின்னம்
16. பூங்காற்றே இது போதும் – படிச்ச புள்ள
17. பூங்காற்றே இனிப் போதும் – படிச்ச புள்ள
18. சைலன்ஸ் காதல் செய்யும் நேரம் இது – பணக்காரன்
19. இந்த ராசாவை நம்பி வந்த – பொங்கி வரும் காவேரி
20. மன்னன் பாடும் தமிழ் – பொங்கி வரும் காவேரி
21. சிக்குன்னு இழுக்குது – வாத்தியார் வீட்டுப் பிள்ளை
22. மதுர ஒயிலாட்டம் தான் – அம்மன் கோவில் திருவிழா
23. தா தந்தந்தனம் – அதிசயப் பிறவி
24. கலகலக்கும் மணி ஓசை – ஈரமான ரோஜாவே
25. கேளடி என் பாவையே – கோபுர வாசலிலே
26. நாதம் எழுந்ததடி – கோபுர வாசலிலே
27. காதல் கவிதைகள் படித்திடும் – கோபுர வாசலிலே
28. தென்றல் தான் – கேளடி கண்மணி
29. அடி மத்தாளம் தான் – மல்லு வேட்டி மைனர்
30. ஆதாமும் ஏவாளும் போல – மருதுபாண்டி
31. எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேசன் (Stuartpuram Police Station
தெலுங்குப் படத்தின் பாடல்களில் சில. எந்தப் பாடல்கள் என்ற குறிப்பில்லை)
32. ஓ அழகு நிலவு – மை டியர் மார்த்தாண்டன்
33. சாயங்கால சந்திய ராகமே – நீ சிரித்தால் தீபாவளி
34. சும்மா நீ சுத்தாதே – பெரிய வீட்டுப் பண்ணைக்காரன்
35. அம்மா நான் – பொண்டாட்டி தேவை
36. காதலுக்கு ராஜா – ராஜா கைய வச்சா
37. எத்தனை பேர் உன்னை – சிறையில் பூத்த சின்ன மலர்
38.  நல்லா இசைத்தது – வெள்ளையத் தேவன்
39. ஆட்டமா தேரோட்டமா – கேப்டன் பிரபாகரன்
40.  நடந்தால் இரண்டடி – செம்பருத்தி
41. அட வஞ்சிரம் வவ்வாலு – செம்பருத்திராஜா க
42. கடலிலே தனிமையிலே – செம்பருத்தி
43. சோலைப் பசுங்கிளியே – என் ராசாவின் மனசுலே
44. இதயமே இதயமே – இதயம்
45. எத்தனை பேரை – காவல் கீதம்
46. தோம் தோம் தோம் – ஊரெல்லாம் உன் பாட்டு
47. என்னைப் பார்த்து – பாண்டித்துரை
48. மாலையிட்ட பொண்ணு – பாண்டித்துரை
49. மணிக்குயில் இசைக்குதடி – தங்க மனசுக்காரன்
50. மானே மயங்குவதேனோ – தங்க மனசுக்காரன்
51. மணிக்குயில் இசைக்குதடி (2 வது) – தங்க மனசுக்காரன்
52. ஒரு ராகம் தராத வீணை – உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
53. நட்டு வச்ச – அரண்மனைக் கிளி
54. வெண்ணிலவு கொதிப்பதென்ன – சின்ன மாப்ளே
55. மஞ்சள் வெயில் – என்றும் அன்புடன்
56. பாத்தியாபடி பாத்தியா – மாப்பிள்ளை வந்தாச்சு
57. வாங்க வாங்க மாப்பிள்ளையே – நாடோடிப் பாட்டுக்காரன்
58. காதலென்ன உங்க வீட்டு – ஒண்ணா இருக்கக் கத்துக்கணும்
59. மானுக்கும் மீனுக்கும் – பார்வதி என்னைப் பாரடி
60. சிங்கார மானே – தாய்மொழி
61. ஜிஞ்ஞில்லாரோ – தாய்மொழி
62. என்னைத் தொட்டு அள்ளிக் கொண்ட – உன்ன நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
63. கண்ணா உன் கண்ணில் – உன்னை நெனைச்சேன் பாட்டுப் படிச்சேன்
64. அட எதிர்த்த வீட்டு – சின்ன தேவன்
65. சின்னச் சின்னப் பூங்கொடி – சின்னக் கண்ணம்மா
66. புன்னைவனப் பூங்குயிலே – செவ்வந்தி
67. ஆத்துல மேட்டுல – தம்பித்துரை
68. காலேஜ் கலாட்டா அனைத்துப் பாடல்களும் (கே.விஸ்வநாத் இயக்கிய Chinnabbayi தெலுங்கின் தமிழ் மொழி மாற்று)
69. ஶ்ரீராமராஜ்ஜியம் தெலுங்குப் படத்தின் தமிழ் மொழி மாற்று 14 பாடல்கள், ஸ்லோகம் நீங்கலாக

ஓ.... நெஞ்சோடு ராகம்..
யார் தந்ததோ.......
கண்மூடும் போதும் யார் வந்ததோ...
நீ செய்த காயம்
உன் பார்வையாற்றும்
நேரிலே வந்தாலென்ன.....

இறவாக் கவிஞரை வழியனுப்பி வைக்கிறோம்.

கானா பிரபா
09.10.2021

No comments: