இன்னிசை இரட்டையர் நதீம் – ஷ்ரவன் சில குறிப்புக்கள் - கானா பிரபா


கானா பிரபா

“ஆண்டவனின் தொழிற்சாலையில் அரிதாக விளைந்த படைப்பு பாலுஜி”

என்று எஸ்,பி.பாலசுப்ரமணியம் அவர்களது மறவில் நினைவு கூர்ந்தவர் நதீம் ஷைஃபி. இவர் ஹிந்தித் திரையிசையில் முக்கிய பாங்காற்றிய இரட்டை இசையமைப்பாளர்களான நதீம் - ஷ்ரவன் கூட்டில் ஒருவர்.
ஷாஜன் படப் பாடல்கள் வெளிவந்து 31 வருடங்களாகி விட்டது. அந்தப் பாடல்களில் பெரும் உச்சம் பெற்ற Dekha Hai Pehli Baar https://www.youtube.com/watch?v=PEbSW6mMWvE
பாடலைப் பதிவாக்கியதே புத்தாண்டு தினத்துக்கு முன் தினம். தானாம். நகரமே புத்தாண்டுக் களியாட்டத்தில் இருந்த போது எதிர்காலத்தில் இந்த உலகமே கொண்டாடப் போகும் பாடலை எஸ்பிபி ஒலிப்பதிவுக் கூடத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்.
அவர் வாத்திய இசைக் கருவிகளில் ஒன்றானவர் என்று தன் நினைவுகளை மீட்டிப் பார்த்தவர் ஷ்ரவன்.
இளையராஜா காலத்துக்குப் பின் ஹிந்திப் பாடல் மோகம் என்பதன் வீச்சு தமிழ்ப் பாடல்களில் அந்நியபட்டிருந்தாலும், தமிழ் ரசிக உலகு முற்றிலும் அதை ஓரம் கட்டி விடவில்லை. அவ்வப்போது அவற்றைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அதுவும் எஸ்பிபாலுவின் பாலிவூட் பாடல்களை நம்மாளின் பாடல்களாகக் கொண்டாடிக் கொண்டோம்.
ஏக் துஜே கேலியே காலத்தில் கமல்ஹாசனோடு பயணப்பட்ட எஸ்பிபியை ஒரு சிறு இடைவெளிக்குப் பின் பாலிவூட் உலகம் சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்றது மைனே பியார் கியா படத்தின் வழி, ராம்லக்‌ஷமன் இசை கொடுத்த அந்தப் படத்தின் வழியாக சல்மான்கான் மிகப் பெரும் நட்சத்திர அடையாளமாகின்றார். தன் இரண்டாவது படத்தில் உச்சம் கண்டு அதன் அறுவடையை 32 வருடங்களாக இன்னும் அனுபவிக்கின்றார்.
வட நாட்டு சல்மான்கானுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போனது தென்னிந்திய எஸ்பிபி குரல். சல்மானுக்கான குரலாக தொடர்ந்து அடையாளப்படும் எஸ்பிபியைத் தம் இசையிலும் பயன்படுத்தி அழகு பார்க்கிறார்கள் நதீம் – ஷ்ரவன் இசையமைப்பாளர்கள்.
அவ்விதம் எழுந்தது தான் சல்மானுக்கு இன்னொரு மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்த சாஜன். மொத்தம் பத்துப் பாடல்கள் அவற்றில் 6 பாடல்கள் எஸ்பிபிக்கே எழுதி வைக்கப்படுகின்றன.
தொடந்து ஆனந்த் – மிலிந்த் இரட்டையர்களும் லவ் என்ற திரைப்படத்தில் மூலப்படமான பிரேமா (தமிழில் அன்புச் சின்னம்) வில் இளையராஜா கொடுத்த மெட்டையும லவுட்டி அதே எஸ்பிபி கலந்து சல்மான்கானுக்குக் கொடுத்தார்கள்.
சல்மான் கானின் ஆரம்ப கால சினிமா இயக்கத்தில் ஒவ்வொரு முக்கிய வெற்றிகளிலும் எஸ்பிபியின் பங்களிப்பு இருந்திருக்கின்றது. அப்படியாக இன்னொரு பாய்ச்சல் ராம்லக்‌ஷ்மன் இசையில் ஹம் ஆப்கே ஹைன் கோன் இலும் விளைந்தது.
நதீம் – ஷ்ரவன் இரட்டையர்களுக்கான வெற்றி ஒன்றும் உடனே கிடைத்த்தல்ல, Maine Jeena Seekh Liya வழியாக 1981 ஆம் ஆண்டில் அவர்கள் அடியெடுத்து வைத்தாலும் ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஷிகி (1990) தான் அவர்கள் மேல் ஒரு வெளிச்சத்தைப் பரவ விடுகின்றது, ஆஷிகி என்றால் மோகம் இங்கே இசை ரசிகர்கள் இந்த இரட்டையர்கள் மேல் மோகம் கொண்டு அவர்களைத் தொடர்ந்து 10 ஆண்டுகள் கொண்டாடினார்கள்.
அந்தக் காலத்தில் 20 மில்லியன் இசைத்தட்டுகளை விற்றுத் தின்றது ஆஷிகி. Planet Bollywood தனது பட்டியலில் 100 தலை சிறந்த பாலிவூட் இசைத் தொகுப்புகளில் ஒன்றாகச் சொந்தம் கொண்டாடியது.
ஆஷிகி பாடல்கள் https://www.youtube.com/watch?v=KgsYJRnBNeE
ஆஷிகி சிறந்த இசையமைப்பாளர் தொட்டு, பாடலாசிரியர், பாடகர், பாடகி என்று எல்லாவற்றையும் பிலிம்பேரில் அள்ளியது.
இந்த வெற்றிக்களிப்பு f T-Series என்ற இசை நிறுவன அதிபர் குல்ஷான் குமார் படுகொலையில் நதீம் இன் பங்களிப்பும் இருக்கிறது என்ற சந்தேகக் குற்றச்சாட்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னாலும் வெற்றிகளைப் படைத்தாலும் அதுவே இந்தக் கூட்டணியின் முக்கிய கரும்புள்ளி ஆயிற்று.
பொதுவாக ஒரு இசையமைப்பாளரின் உச்சம் அதிகமாகப் பத்து ஆண்டுகள் இருக்கும் என்பது இவர்கள் கணக்கில் ஒரு துரதிஷ்ட நிகழ்வோடு முடிந்தது அவலம்.
சல்மானுக்காக மட்டுமன்றி இன்னொரு உச்ச நட்சத்திரம் ஷாருக் கான் இன் ஆரம்ப கால வெற்றிகளிலிம் நதீம் – ஷ்ரவன் கூட்டணியின் இசை பங்கு போட்டது.
அவ்விதம் எழுந்த “தீவானா”
பின்னாளில் “பர்தேஷ்”
படப் பாடல்களையும் ரசிகர்கள் கொண்டாடித் தீரா அனுபவமாக இன்னும் கொண்டாடிக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இன்னொரு முக்கிய நட்சத்திரம் அமீர்கானுக்காக ராஜா ஹிந்துஸ்தானி
இந்தப் படத்தின் பாடல்களும் முந்திய நட்சத்திரங்களுக்கு அள்ளிக் கொடுத்தவை போன்றே விருந்து வைத்ததால் விருதும் கிட்டியது.,
அகத்தியனின் காதல் கோட்டை Sirf tum ஆன போது அதற்கும் இவர்கள் தான் இசை.
Raaz என்ற அமானுஷ்யக் கதைக் களத்துக்கு இந்த இரட்டையர்களின் இசை விருந்து பெரு வெற்றியை அறுவடை செய்ய வைத்தது.
தமிழில்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி, சங்கர் கணேஷ் இரட்டையர்கள் போலவே இவர்களில் நதீம் தனித்து இசையமைப்பாளாராகப் பின்னாளில் களம் இறங்கினாலும் இன்றுவரை இசை ரசிகர்கள் நதீம் – ஷ்ரவன் கூட்டணியையே கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இந்த இரட்டையர்களில் ஒருவரான ஷ்ரவன் கொரோனா நோய்த் தொற்றால் இறந்தது இந்த கூட்டணிக்கு நிரந்தர சமாதியை எழுப்பி விட்டது.
எந்தக் காலகட்டத்திலும் எந்த மொழிச் சினிமா உலகிலும் வணிக சினிமாவின் முதுகெலும்பாக இரண்டாம் கட்ட இசையமைப்பாளர்கள் இருப்பார்கள் அதுபோலவே இயங்கிய நதீம் – ஷ்ரவன் இரட்டையர் இந்தியத் திரையுலகின் மறக்க முடியாத வெற்றிக் கூட்டணியாக அமைந்து விட்டார்கள்.


கானா பிரபா
புகைப்படம் நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

No comments: