மல்லிகைஜீவாவின் (1927 -2021 ) வாழ்வில் சுவாரசியமான பக்கங்கள் யாழ். பல்கலைக்கழகத்தில் தனது சைக்கிளை பறிகொடுத்தார் ! 79 வயதிலும் காதலிக்க விரும்பினார் ! ! தன்னை அடையாளம் காண்பிக்காமல் பிச்சை எடுக்கவும் விரும்பினார் ! ! முருகபூபதி


ஈழத்தின் தர்மாவேசக்குரல் மல்லிகை ஜீவா, தனது குரலை  இம்மாதம் 28 ஆம் திகதி நிரந்தரமாக நிறுத்திக்கொண்டாலும், கடந்த சில வருடங்களாகவே இலங்கை தலைப்பட்டினத்திற்கு அப்பால்  புறநகரமான மட்டக்குளியவில் அமைந்த காக்கைதீவு என்ற இடத்தில் ஏகபுதல்வன் திலீபனின் இல்லத்திலிருந்தவாறு மௌனத்தவமியற்றிக்கொண்டிருந்தார்.

மல்லிகை ஜீவாவுடன் எனக்கிருந்த உறவு நான்கரை தசாப்தங்களுக்கும் மேற்பட்டது.  1971 முதல் 1987 தொடக்கம் வரையில் ஒவ்வொரு மாதமும் அவருடன் பல மணிநேரங்களை செலவிட்டிருக்கின்றேன்.

அவருடன் இலங்கையில் பல பிரதேசங்களுக்கும்


இலக்கியப்பயணம் மேற்கொண்டேன். தலைநகரில் அவருடன் வீதிவீதியாக சுற்றியலைந்தேன்.  அவருக்குப்பிடித்தமான உணவகங்களில் பசியையும் போக்கினோம். அவருடனான பயணம் தமிழகம் வரையும் வியாபித்திருந்தது.

அதனால்,  அவரது  93 வயது முதுமையில்  அவரது உடல் நிலையை கருதி,  மறைவுச்செய்தி  எந்தநிமிடத்திலும் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதாயிருந்தாலும்,  அச்செய்தி உறுதியானபோது உள்ளம் சமநிலையின்றி தவித்துப்போனது.

மின்னஞ்சல் ஊடாகவும் காணொளிகள் வாயிலாகவும் வந்துகொண்டிருந்த பதிவுகளை கண்ணுற்றபோது,  மனம் பேதலித்து தொண்டை அடைக்கிறது.  விம்மலை அடக்க பிரயத்தனப்படவேண்டியிருக்கிறது.


உடன் பிறப்பினை இழந்துவிட்ட சோகம்தான் மனதை அலைக்கழிக்கிறது.

அதிலிருந்து விடுபடுவதற்கு மல்லிகை ஜீவாவின் வாழ்வில் நிகழ்ந்த சுவாரசியமான சம்பவங்களையும்  மறக்கமுடியாத நிகழ்வுகளையும் இங்கே பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

ஜீவாவும் சைக்கிளும்  

அவரை 1963 ஆம் ஆண்டு முதல் முதலில் சைக்கிளுடன்தான் அவரை யாழ்ப்பாணத்தில் பார்த்தேன்.  அந்தசைக்கிள்தான் அவரிடமிருந்த முக்கியமான உடைமை. அதில் அவர் யாழ். குடாநாடெங்கும் சுற்றியலைந்தார்.

அதனை எண்பது ரூபாவுக்கு வாங்கியிருந்தார். பின்னாளில்


என்னிடமும் ஒரு சைக்கிள் இருந்தது என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை மல்லிகையிலும் எழுதியிருக்கிறார். மல்லிகை யாழ். கஸ்தூரியார் வீதியில் அவருடைய தந்தையின் ஜோசப் சலூனின் பின்புறத்து அறையில்  மல்லிகையின் பக்கங்களை வெள்ளீய அச்சுக்களில் கோர்த்த பின்னர் அவற்றை பக்குவமாக ஒன்றின்மேல் ஒன்றாக  அடுக்கி காங்கேசன்துறை வீதியில் அமைந்த ஶ்ரீலங்கா அச்சகத்திற்கு எடுத்துவந்து அச்சிடக்கொடுப்பார். 

ஒருநாள், யாரோ ஒரு பாதசாரி குறுக்கே வந்து அவரது சைக்கிளை மோதியதனால், அச்சுக்கோர்க்கப்பட்ட அந்தப்பக்கங்கள் அனைத்தும் சீர்குலைந்து நடுவீதியில் சிந்திவிட்டன.

சைக்கிளை ஒரு பறம் சாத்திவிட்டு, சிதறிக்கிடந்த எழுத்துக்களை கூட்டி அள்ளி எடுத்துச்சென்றார்.


பின்னர் சில வருடங்கள் கழித்துத்தான் அவர் யாழ். ராஜா தியேட்டருக்கு பின்புறம், கஸ்தூரியார் வீதிக்கும் கே.கே. எஸ். வீதிக்கும் இடையில் ஊடறுத்துச்செல்லும் குச்சொழுங்கையில் ஒரு சிறிய கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து மல்லிகை காரியாலயத்தை தொடக்கினார்.

அவரிடம் நீண்டகாலம் அச்சுக்கோப்பாளராகவிருந்த சந்திரசேகரம் அண்ணர் தினமும் தமது ஊர் நீர்வேலி மதுவனிலிருந்து தனது சைக்கிளில் வந்து பணியாற்றுவார்.  அவருக்கு தினக்கூலி கொடுக்கவேண்டும்.

அதற்கும் சிலசமயங்களில் ஜீவா சிரமப்படுவார்.

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் வரவேண்டும் என்று விரும்பியவர்களில் ஜீவாவும் ஒருவர். அது சம்பந்தமாக மல்லிகையில் ஆசிரிய தலையங்கங்களும் எழுதினார். 1974 இல் யாழ். பல்கலைக்கழக வளாகம் அமைந்ததும், அதனை வரவேற்றும் ஆசிரியத்தலையங்கம் எழுதியதுடன், அதன் முதல் தலைவராக பணியேற்ற பேராசிரியர் கைலாசபதி மற்றும் அங்கு விரிவுரையாற்ற வந்த  இதர பேராசிரியர்கள் சிவத்தம்பி,  வித்தியானந்தன்,  கலாநிதிகள் நுஃமான், சுப்பிரமணிய அய்யர், மௌனகுரு , சித்ரலேகா,  நித்தியானந்தன்,   சண்முகதாஸ்,  நிர்மலா, மற்றும் ஏ.ஜே. கனகரத்னா, ஆ. சிவநேசச்செல்வன், சோ. கிருஷ்ணராஜா உட்பட சில கலை, இலக்கியவாதிகளை ஜீவா ஆழமாக நேசித்தார்.

அவர்களுக்கு மாதாந்தம் மல்லிகை பிரதிகளை எடுத்துச்சென்று வழங்கினார்.

பல்கலைக்கழக மாணவர்களும் மல்லிகை காரியாலயம் வந்து உசாத்துணைக்குத் தேவையான குறிப்புகளை எழுதிச்செல்வர்.

ஒரு நாள் ஜீவா யாழ். பல்கலைக்கழக வளவில் விட்டுச்சென்ற அவர் நேசித்த அவரது சைக்கிள் காணாமல்போனது.  திருட்டுப்போன அவரது சைக்கிள்  இறுதிவரையில் கிடைக்கவேயில்லை.

மதத்தை நம்பாமல் மருத்துவரை நம்பியவர்

அவரது மகன் திலீபன் குழந்தையாகவிருந்த காலப்பகுதியில் காலை உணவுக்கு அவன் ஆசைப்படும் அப்பம் வாங்கிக்கொடுக்கவும் வழியின்றி, அவன் துயில் எழுவதற்கு முன்பே வீட்டை விட்டு புறப்பட்டுவிடுவார்.

ஜீவாவின் வீடு யாழ்ப்பாணம் ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒரு சிறிய ஒழுங்கையில் அமைந்திருக்கிறது. அவரது மனைவியின் பெயர் புஷ்பராணி, மூத்த மகள் சுவர்ணலதா, இளைய மகள் பிரேமலதா, திலீபன்தான் வயதில் குறைந்த ஒரே மகன். அவன் அப்பாவின் செல்லம். கூட்டங்களுக்கும் அப்பாவுடன் தொற்றிக்கொண்டு வந்துவிடுவான்.

சுவர்ணலதாவுக்கு இதயத்தில் துவாரம் தோன்றியதால்  உடல் உபாதை இருந்தது. யாழ். போதனா மருத்துவமனையில் கடமையாற்றிய இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் நற்குணம்தான் ஜீவாவின் மகளுக்கு சிகிச்சையளித்தார்.

கொழும்புக்கும் அழைத்து சிகிச்சை செய்வித்தார்.  அந்தப்பிள்ளையின் சித்தியும் ஜீவாவுடன் வந்திருந்தார். மருதானையில்  ஒரு கத்தோலிக்க தேவாலயத்தில் அந்த சித்தி பிரார்த்தனைக்கு மகளையும் ஜீவாவையும் அழைத்துச்சென்றார்.

ஜீவா வெளியே நின்றார். அவருக்கு மருத்துவரில் மாத்திரமே நம்பிக்கை இருந்தது !

மருத்துவர் நற்குணத்தின் மகத்தான சேவைபற்றியும் மல்லிகையில் ஜீவா எழுதினார்.

ஜீவாவின் தாயாரின் மரணம்

யாழ்ப்பாணத்தில் ஜீவாவின் தாயார் மரணமடைந்தபோது, அவரது இறுதிச்சடங்கின் பின்னர் பூதவுடல்  நல்லடக்கத்திற்காக மயானம் சென்றது.

அந்த நிகழ்வு முடிந்ததும், ஜீவா நேரே றீகல் தியேட்டரில் ஆங்கில திரைப்படம் பார்க்கச்சென்றார்.  அவர் ஆங்கில திரைப்படங்கள் பார்ப்பதில் ஆர்வம் மிக்கவர். அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் சார்லி சப்ளின்.

ஜீவாவுக்கும் இளமையில் காதல் வந்தது.  அவரது முதல் காதல் நிறைவேறாமல் தோல்வியில் முடிந்தது.  அந்த யுவதி ஜீவாவின் வீட்டுக்கு அருகில் வசித்த உயர்சாதியைச்சேர்ந்தவர். இருவரும் உளமாற நேசித்தனர்.

ஒருநாள் இரவு, வேலிமறைப்பிலிருந்து இவர்கள் இருவரும் பேசிக்கொண்டிருந்ததைப்பார்த்துவிட்ட அந்த யுவதியின் தாயார் ஜீவாவை கையெடுத்துக்கும்பிட்டு மன்றாடிக்கேட்டு, தனது மகளை விட்டுவிடுமாறு கெஞ்சியிருக்கிறார்.

              “ தங்கள் சாதிசனம் மகளுக்கு ஏதும் செய்துவிடும் தம்பி. தயவுசெய்து விட்டுவிடு. உன் காலில் விழுந்தாவது கேட்கிறேன்  “ என்றதும், ஜீவா அந்தக்காதலைத்துறந்தார்.

பின்னர் தமது உறவினரின் மகளை திருமணம்செய்து மூன்று பிள்ளைகளின் தந்தையானார்.  தமது 75 வயதுக்குப்பின்னரும் தன்னை யாரும் காதலிக்கமாட்டார்களா..? அவ்வாறு காதலிப்பவருக்கு இலக்கிய உணர்வு இருக்கவேண்டும்  “ என்று லண்டன் தீபம் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் சிரித்துக்கொண்டே சொன்னார்.

பிச்சை எடுக்க விரும்பினார்

ஜீவாவுக்கு பல விநோதமான விருப்பங்கள் இருந்தன. அவர் யாழ்ப்பாணத்திலும் பின்னர் கொழும்பிலும் அன்றாடம் காணும் பிச்சைக்காரர்கள் குறித்து அவதானம் இருந்தது.

பிச்சைக்காரர்கள் வீடுவாசல் இன்றி, தெருவோரங்களிலும் மரநிழலிலும் படுத்துறங்கும் காட்சிகளை பார்த்துவந்த ஜீவா, அந்த வாழ்க்கை எப்படி இருக்கும்..? அந்த அனுபவத்தையும் வாழ்ந்து பார்க்கவேண்டும் என்று விரும்பியிருந்தார்.

தான் யார் என்பதை அடையாளம் காண்பிக்காமல், இலங்கையில் தான் என்றைக்குமே நடமாடாத பிரதேசத்தில் பிச்சைக்காரனாக வேடமிட்டு,  மக்களிடம் தானம் வாங்கிச்சாப்பிடவேண்டும் என்ற எண்ணமும் அவரது மனதில் துளிர்த்தது.

ஆனால், அந்த அவரது விநோத ஆசை என்றைக்கும் நிறைவேறவில்லை.

கொழும்பில் புறக்கோட்டை ஶ்ரீகதிரேசன் வீதியில் ஒருநாள் அவர் நடந்து சென்றபோது ஒரு தீப்பெட்டி தெருவோரத்தில் கிடந்ததை கண்ணுற்று, அதனை எடுத்துப்பார்க்கிறார்.

அதனுள்ளே ஐநூறு ரூபா மடித்துவைக்கப்பட்டிருந்தது.  அது யாருடையதோ பணம். அதனை தான் சொந்தம் கொண்டாடக்கூடாது என்று எண்ணத்தில் அதனை ஐந்து ரூபா நாணயக்குற்றிகளாக மாற்றியிருக்கிறார்.

அந்த குற்றிகளை தனது நேஷனல் பொக்கட்டுக்குள் போட்டுக்கொண்டு, அந்த வீதியில் நடந்து திரிந்து ஒவ்வொரு நாணயக்குற்றிகளையும் மெதுவாக போட்டுக்கொண்டு சென்றிருக்கிறார்.

அவ்வாறு நூறு ஐந்து ரூபா நாணயக்குற்றிகளையும் வீதியின் இருமருங்கும் போட்டுவிட்டு, தனது மல்லிகை காரியாலத்திற்கு திரும்பினார்.

( தொடரும் )

 

 

 

 

 

 

 

இந்த ஆண்டு (2015 ) தொடக்கத்தில் நான் இலங்கைக்கு வந்ததும் முதலில் தொலைபேசியில் பேசியவர்களில் டொமினிக்ஜீவாவும் ஒருவர். அவர் நீண்ட காலம் நடத்திய மல்லிகை இதழ் நிறுத்தப்பட்டதன் பின்னர் அவரை சந்திப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. எனினும் 2011 இற்குப்பின்னர் அவருடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தேன்.
மல்லிகை நின்றுவிட்டதை அறிந்து அவர்பற்றிய நீண்ட விரிவான கட்டுரையும் எழுதினேன். பல இதழ்களில் வெளியானது
அவரது பால்ய கால நண்பர் எஸ்.பொ. சிட்னியில் மறைந்ததும் தகவலும் சொன்னேன். இம்முறை பயணத்தில் அவரைச்சந்தித்து நீர்கொழும்பில் பெப்ரவரி 28 ஆம் திகதி நடத்தவிருந்த நெய்தல் விழாவுக்கு அழைப்பதற்காக முற்கூட்டியே தகவல் தெரிவித்து -அவர் அந்த நாளை எமக்காக ஒதுக்கிவைக்கவேண்டும் என்பதற்காக அதுபற்றியும் உரையாடியிருந்தேன்.
எனது குரலைக்கேட்டதும் குதூகலத்துடன் பேசினார்.
” வடக்கு, கிழக்கு பயணங்களை முடித்துக்கொண்டு வருவேன் ” என்று அவருக்கு உறுதியளித்தேன்.
சுமார் 46 வருடமாக வெளிவந்த மல்லிகை கடந்த மூன்று ஆண்டுகாலமாக வெளிவரவில்லை. ஜீவா யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு இடம் பெயர்ந்து வந்த பின்னர் கொழும்பு – 13 இல் 201, ஸ்ரீகதிரேசன் வீதியிலிருந்து (முன்னாள் செக்கடித்தெரு) மல்லிகை வெளியானது. அதற்கு முன்னர் கஸ்தூரியார் வீதியில் அவருடைய ஜோசப் சலூன் முகவரியிலிருந்தும், பின்னர் ராஜா தியேட்டருக்குப் பின்னால் சிற்றொழுங்கையிலிருந்தும் வெளியானது. அந்த ஒழுங்கையிலிருந்து தற்பொழுது தினக்குரல் யாழ்.பதிப்பு வெளியாகிறது.
முன்னர் யாழ். ரயில் நிலையத்திற்கு அருகில் தமது மனைவி மக்களுடன் வாழ்ந்த ஜீவா தற்பொழுது கொழும்பில் மட்டக்குளிய – காக்கை தீவில் மகன் திலீபன் குடும்பத்துடன் வசிக்கிறார். முன்னர் அவரைச்சுற்றி மல்லிகை இதழ்களும் மல்லிகை வெளியீடுகளும் நூல் மதிப்புரைக்கு வந்த எழுத்தாளர்களின் நூல்களும்தான் இருக்கும். ஆனால், இப்பொழுது அவரைச்சுற்றி பேரக்குழந்தைகள்தான் இருக்கிறார்கள்.
மல்லிகையின் தாரக மந்திரமாக ஒலித்த மகாகவி பாரதியின் வரிகளே இந்த அங்கத்தின் தலைப்பில் வருகிறது. சாதாரண குடும்பத்தில் பிறந்து தனக்குத்தெரிந்த தொழிலையே செய்து வாழ்ந்தவரை – தோழர் கார்த்திகேசன் மாஸ்டர் இடதுசாரி அரசியலுக்குள் அழைத்து வந்தார். ராஜகோபாலன் என்ற இலக்கிய ஆர்வலர் இலக்கியத்தின்பால் திருப்பினார். கணித வாத்தியாரின் கணக்கை திருத்தியதனால் “உனக்கெதற்குப்படிப்பு….போய் சிரையேன்டா…” – என்று அவமானப்படுத்தியதும் பள்ளிப்படிப்புக்கு முழுக்குப்போட்டார். மல்லிகை நடத்தியபொழுது இடதுசாரிச் சிந்தனையாளர்களினதும் முற்போக்கு இலக்கியவாதிகளினதும் சகவாசத்தினால் தன்னையும் சர்வதேசியவாதியாக்கிக்கொள்ள முயன்று பிற மொழி இலக்கியங்களுக்கும் மல்லிகையில் களம் வழங்கினார்.
சகோதர சிங்கள இலக்கியவாதிகளின் மீது நேசமுற்று பிரபல மூத்த சிங்கள இலக்கிய மேதை மார்ட்டின் விக்கிரம சிங்காவை கௌரவித்து மல்லிகை முகப்பில் அவரது படத்தை வெளியிட்டு சிறப்பிதழ் வெளியிட்டார்.
அதனைக்கண்டு பொறுக்கமுடியாத ஒரு அதிதீவிர தமிழ்க்கொழுந்து, யாழ். மத்திய கல்லூரிக்கு முன்னால் தமது பிரியத்துக்குரிய சைக்கிளில் வந்துகொண்டிருந்த ஜீவாவை வழிமறித்து – மார்ட்டின் விக்கிரமசிங்காவின் படத்துடன் வெளியான மல்லிகை இதழை வாங்கி அவர் முன்னாலேயே கிழித்து முகத்தில் எறிந்துவிட்டுச்சென்றது.
அதன் பின்னும் பல வருடங்கள் மல்லிகை வெளியானது. ஜீவா தொடர்ந்தும் இலங்கையெங்கும் அலைந்து திரிந்து மல்லிகை விநியோகித்து ஈழத்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தார். வளம்படுத்தினார்.
ஆனால் – அந்த அதி தீவிர தமிழ்க்கொழுந்து அகதியாகச்சென்று ஐரோப்பிய நாடொன்றில் தனது வாழ்வாதாரத்திற்காக ஐரோப்பிய மொழி படித்து வாழ்கிறது.
ஆடுதல் பாடுதல் சித்திரம் கவி
யாதியினைய கலைகளில் உள்ளம்
ஈடுபட்டென்றும் நடப்பவர் பிறர்
ஈன நிலைகண்டு துள்ளுவர்
– என்ற பாரதியின் மந்திரத்தை மல்லிகையில் உச்சாடனம் செய்த ஜீவா இன்று எப்படி இருக்கிறார்….?
இலக்கிய உலகில் கனவுகளை விதைத்தவர்…. இன்று ஒரு புதிய கனவுலகில் வாழ்கிறார். அது குழந்தைகளின் உலகம்.
47 ஆண்டுகளை நெருங்கிய மல்லிகை 50 ஆண்டுகளை நிறைவு செய்துவிடவேண்டும் என்றுதான் மல்லிகையை நேசித்த பலரும் எழுதினார்கள். பேசினார்கள். தமது முகநூல்களில் பதிவுசெய்தார்கள். ஆனால், ஜீவாவுக்கும் மல்லிகைக்கும் யார் மணிகட்டுவது…?
எவரும் முன்வரவில்லை. முன்வந்திருந்தாலும் ஜீவா அதற்கு சம்மதித்திருப்பாரா…? என்பதும் கேள்விக்குறி. அவருக்கு எதிர்பாராதவிதமாக வந்த சுகவீனத்தால் அவர் இன்று மட்டக்குளியில் பேரக்குழந்தைகளுடன் விடப்பட்டுள்ளார்.
நூற்றுக்கணக்கான தமிழ், முஸ்லிம், சிங்கள படைப்பாளிகள் – கல்விமான்கள் , அறிஞர்களின் வாழ்வையும் பணிகளையும் சித்திரிக்கும் கட்டுரைகளையும் அவர்தம் படங்களையும் பதிவுசெய்த மல்லிகை இன்று நூலகம் இணையத்தில் மாத்திரமே பதிவாகியிருக்கிறது. பலரதும் வீடுகளில் பல்கலைக்கழகங்களில் நூலகங்களில் முன்னைய பிரதிகள் , ஆண்டு மலர்கள் இருக்கின்றன.
ஜீவா இலங்கையர்களை மட்டும் மல்லிகையில் கனம் பண்ணவில்லை. இந்திய சோவியத் உட்பட பல சர்வதேச படைப்பாளிகளுக்கும் உரிய மரியாதையை வழங்கினார்.
ஜீவா சில சமயங்களில் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்றும் முகத்துக்கு நேரே பேசும் இயல்புள்ளவர். யாழ்ப்பாணத்தில் பிரபலமாக இருந்த தம்பித்துரை அன் சன்ஸ் என்ற பத்திரிகை – புத்தகக்கடைக்கு மாதாந்தம் மல்லிகையில் பத்துப்பிரதிகளை வழங்குவார். அந்த கடை உரிமையாளர் அதனை பத்திரமாக பாதுகாத்து மேசையின் கீழே வைத்திருந்துவிட்டு, அடுத்த தடவை ஜீவா புதிய இதழின் பிரதிகளை கொடுக்கவரும்பொழுது, ” எதுவும் விற்கவில்லை” – என்று மேசையின் கிழே இருந்த பத்து பிரதிகளையும் எடுத்துக்கொடுப்பார். இந்த நாடகம் பல மாதங்களாக அரங்கேறியது. வழக்கம்போல் கடையில் தொங்கும் குமுதம், ஆனந்தவிகடன், பொம்மை, பேசும் படம் இதழ்கள் விற்பனையாகிவிடும்.
ஒரு நாள் ஜீவாவின் தர்மாவேசம் விழித்துக்கொண்டது.
” நாளைக்கு நீர் இறந்துபோனால் உம்முடைய சாவீட்டுக்கு குமுதம், ஆனந்த விகடன், பொம்மை, பேசும் படம் ஆசிரியர்கள் வரமாட்டார்கள். யாழ்ப்பாணத்திலிருக்கும் இந்த ஜீவாதான் வருவான். ” – எனச்சொன்னது அவரது தர்மாவேசக்குரல்.
ஒரு சமயம் The Island பத்திரிகை வெளியிடும் நிறுவனம் வெளியிட்ட திவயின சிங்கள ஏடு ஜீவாவை பேட்டி கண்டு எழுத விரும்பி நாள் குறித்தது. அவருக்கு சிங்களம் தெரியாது. என்னை உடன் அழைத்துச்சென்றார். அந்த நேர்காணல் சந்திப்பு கொழும்பு கலாபவனத்தில் (Art Gallery ) செய்து தந்தவர் கலாசார திணைக்களத்தில் செயலாளராக பணியாற்றிய தமிழ் அபிமானி கே.ஜி.அமரதாஸ.
அவ்வேளையில் குட்டிமணி – சிறையில் இருந்தார். அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவராக பிரபலமாகியிருந்தார்.
சிங்கள வாசகர்களுக்கு தமிழ் இலக்கியம் போதியளவு அறிமுகம் இல்லாதிருந்த காலம். ஆனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா, டி.பி. இளங்கரத்னா, குணதாச அமரசேகர, கருணாசேன ஜயலத், ஜீ. பி.சேனாநாயக்கா, குணசேன வித்தான, ஆரியரத்தின வித்தான, கே.ஜயத்திலக்க, மடவள எஸ். ரத்நாயக்கா போன்ற இலக்கியவாதிகள் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமாகியிருந்தனர்.

ஜீவா, அந்த நேர்காணலில் மேலே குறிப்பிட்ட சிங்கள எழுத்தாளர்களின் பெயர்களைச்சொல்லி, இவர்களையெல்லாம் எமது தமிழ் இலக்கிய வாசகர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால் , சிங்கள வாசகர்களுக்கு தெரிந்த பெயர்கள் அமிர்தலிங்கமும் குட்டிமணியும்தான். எனச்சொன்னதும், அந்த சிங்கள நிருபர் அசந்துவிட்டார். பின்னர் தன்னை சுதாகரித்துக்கொண்டு, இந்தக்கருத்தையே இந்த நேர்காணலுக்கு தலைப்பாக எழுதுவேன் என்றார்.
அந்த நிருபர் சொன்னவாறே அந்தத்தலைப்பு ஜீவாவின் தர்மாவேசக்குரலாக அந்தச்சிங்கள ஏட்டில் ஒலித்தது.

தொடக்க காலத்தில் மல்லிகையின் ஆண்டு மலர்கள் ஒவ்வொரு வருடமும் ஓகஸ்ட் மாதத்தில் வெளியாகும். பிற்காலத்தில் ஜனவரி மாதத்தில் வெளியானது. இறுதியாக நான் பார்த்த மல்லிகை 46 ஆவது ஆண்டு மலரில் 2001 இல் பாராளுமன்றத்தில் அஸ்வர் எம்.பி., மல்லிகை பற்றி உரையாற்றியபொழுது ஜீவாவையும் அவரது தேசிய உடையையும் விதந்து போற்றியது பற்றிய தகவலை இரத்தினச்சுருக்கமாக வெளியிட்டு பாரளுமன்ற பதிவேட்டு திகதியையும் (Hansard – 04-02-2001) குறிப்பிட்டிருந்தார்.
மல்லிகை இலக்கிய வாசகர்களின் மனதில் மட்டுமல்ல இலங்கைப்பாராளுமன்றத்திலும் ஒலித்திருக்கிறது என்ற பெருமிதம் அதில் தெரிந்தது.
இலங்கையில் தமிழில் முதல் முதலில் சிறுகதைக்காக சாகித்திய விருது பெற்றவர். சாகித்திய இரத்தினா, தேசத்தின் கண், கனடா இலக்கியத்தோட்டத்தின் இயல் விருது என்பனவற்றையெல்லாம் பெற்றுள்ள ஜீவா – 2010 – 2011 காலப்பகுதியில் என்னுடன் உரையாற்றியபோதெல்லாம்… ” எல்லாம் போதுமப்பா… இனி எனக்கு என்ன தேவை….? முடிந்த வரையில் எனக்குத் தெரிந்ததை எனக்குத்தெரிந்த விதமாகச்செய்தேன்…. எல்லாம் போதுமப்பா…” என்ற களைப்புத்தொனியுடன் சொல்லியிருக்கிறார்.
அவர் எனக்குள்ளும், பலருக்குள்ளும் பயனுள்ள விதைகளை விதைத்தவர். எனக்குத் தெரிந்த மட்டில் மல்லிகை நீர்கொழும்பு பிரதேச சிறப்பிதழ், ( 1971) அவுஸ்திரேலியா சிறப்பு மலர் (2000) சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு (2011). அந்தக்கனவுளை நனவாக்கியிருக்கின்றோம்.
ஒருசமயம் இலங்கை வந்தபொழுது எனக்காக மல்லிகை காரியாலயத்தில் நடத்திய சந்திப்பில்தான் மாநாடு பற்றிய எண்ணக்கருவை விதைத்தார்.
நீர்கொழும்பு, திக்குவல்லை, மினுவாங்கொடை, அநுராதபுரம் முதலான தமிழ் மக்கள் செறிந்து வாழாத பிரதேசங்களிலிருந்தெல்லாம் பலரை இலக்கிய உலகிற்கு அழைத்து வந்து களம் அமைத்துக்கொடுத்தவர்.

பிரதேச மொழி வழக்குகள் ஆய்வுகளில் பேசுபொருளாவதற்கு தூண்டுகோலாக இருந்தவர். ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இலக்கியச்சந்திப்பிற்காக அழைக்கப்பட்டு பரிஸிலும் லண்டனிலும் பாரட்டப்பட்டவர். சோவியத்தின் அழைப்பில் சென்று திரும்பியவர். தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கம், கலை, இலக்கிய பெருமன்றம் , எட்டயபுரம் பாரதி மன்றம், கிறிஸ்தவ இலக்கியச்சங்கம், (C.L.S) முதலானவற்றின் அழைப்பில் சென்றவர்.
மணிவிழா, பவள விழா முதலானவற்றை கடந்து வந்தவர்…. இன்று மட்டக்குளியில் , காக்கைதீவில் மாலைப்பொழுதுகளில் சூரியன் மறையும் ரம்மிய காட்சியை கண்டு களித்துக்கொண்டிருக்கிறார்.
நண்பர் மேமன் கவியுடன் அவரைச்சந்திக்கச்செல்லும் பொழுது இரவாகிவிட்டது. கண்டவுடன், ” எப்பொழுது வந்தீர்…? ” எனக்கேட்டார்.
“நான் இலங்கை வந்தவுடனேயே தொலைபேசியில் சொன்னேன்தானே… ஜீவா ” என்றேன்.
” அப்படியா …?” – என்று குழந்தையைப்போன்று சிரித்தார். ” 28 ஆம் திகதி ‘நெய்தல்’ விழாவுக்கு அழைக்கின்றேன். போக்குவரத்து வசதியெல்லாம் செய்து தருவேன். வாருங்கள். உங்கள் நண்பர்கள் பலர் வருகிறார்கள். பழைய நீர்கொழும்பின் இலக்கிய காலம் பற்றி நீங்கள் பேசவேண்டும்.” என்றேன்.
” என்னை மன்னித்துக்கொள்ளும். நான் இப்பொழுது மகன், மருமகள் பராமரிப்பில் இருக்கின்றேன். வெளிநடமாட்டங்களை குறைத்துக்கொண்டேன். வெளியே செல்லும்பொழுது தனக்கேதும் நடந்தால் அது அவர்களையும் பாதிக்கும். அவர்களுக்கு நான் கஷ்டம் தரவிரும்பவில்லை. நீங்கள் நன்றாக விழாவை நடத்துங்கள். எனது வாழ்த்துக்கள் என்றும் இருக்கும்.”- என்றார்.
அப்பொழுது எனது கைத்தொலைபேசி சிணுங்கியது. பேசும் வரையில் அமைதியாக இருந்துவிட்டு, ” பூபதி… அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச்செல்லும் முன்னர் இந்த மொபைலை எனக்கு தந்துவிட்டுச்செல்லும் ” என்று ஒரு குழந்தையைப்போன்று சொன்னார்.
“உங்களிடம் இல்லையா…?” – என்று கேட்டேன். கிடைத்ததெல்லாம் சரியாக வேலை செய்யவில்லை என்றார்.
வெளித்தொடர்புகள் ஏதும் அற்று வீட்டுக்குள்ளே இருக்கும் இவருடைய மொபைல் விருப்பம் பற்றி வெளியே வந்ததும் உடன் வந்த நண்பரிடம் கேட்டேன். எத்தனை மொபைல்கள் அவரிடம் வந்தன என்ற பட்டியலை அவர் சொன்னார்.
மல்லிகை நின்றது கவலைதான். ஏமாற்றம்தான்.
கோமல் சாமிநாதன் நடத்திய சுபமங்களா நின்றபொழுது அவர் முதுகுத்தண்டு நோயினால் காலமாகியிருந்தார். எனினும் இறுதி இதழாக அவருக்கு அஞ்சலி செலுத்தும் சிறப்பிதழ் வெளியானது.
மல்லிகை நின்றதை நாம் இலக்கிய – ஊடக வரலாற்றுப்பின்னணிகளுடன் ஆராய்தல் பொருத்தமானது.
பி.எஸ். ராமையா நடத்திய மணிக்கொடி, ரகுநாதன் நடத்திய சாந்தி, விஜயபாஸ்கரன் நடத்திய சரஸ்வதி, ஜெயகாந்தன் நடத்திய ஞானரதம், நா. பார்த்தசாரதி நடத்திய தீபம் , கண்ணதாசன் நடத்திய கண்ணதாசன் ஆகியன நின்றன. அதன் பிறகு அவற்றை எவரும் நடத்துவதற்கு முன்வந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் – வணிக இதழ்கள் என வர்ணிக்கப்பட்ட குமுதம், ஆனந்தவிகடன், என்பன தலைமுறை தலைமுறையாக வெளியாகிறது.
கல்கியும் – கலைமகளும் வருகின்றன. கல்கி, கிருஷ்ணமூர்த்தியுடன் கல்கியோ, கலைமகள் கி.வா. ஜகந்நாதனுடன் கலைமகளோ நின்றுவிடவில்லை. ஆனால், ஜீவா இருக்கும்பொழுதே மல்லிகை நின்றுவிட்டது. எஸ்.பொன்னுத்துரையின் மறைவுடன் தமிழகத்தில் இயங்கிய அவரது மித்ர பதிப்பகமும் மூடப்பட்டுவிட்டதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வந்தது.
குமரன் இதழையும் பதிப்பகத்தையும் தொடக்கிய மூத்த படைப்பாளி செ. கணேசலிங்கனின் குமரன் இதழ் நின்றுவிட்டாலும் – குமரன் பதிப்பகம் இலங்கையிலும் தமிழகத்திலும் இயங்குகிறது. கணேசலிங்கன் அதற்கென ஒரு வாரிசை உருவாக்கி வளர்த்துவிட்டார்.
எம்மவர்கள் எங்கே தோற்றுப்போனோம்… ? அதற்கான பின்னணி என்ன…?
மல்லிகை ஜீவா பல மேடைகளில் மல்லிகையின் எதிர்காலத்திற்காக உயில் எழுதிவைத்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார். தனது மகன் திலீபன் தனக்குப்பின்னர் மல்லிகையை நடத்துவார் என்று இழையோடும் கருத்துக்களை மல்லிகை ( தூண்டில்) கேள்வி – பதில் பகுதியிலும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஆனால், இன்று அவற்றை அவரிடம் யாராவது நினைவு படுத்தினால்… ” அப்படியா…?” என்றுதான் கேட்பார். இந்த ” அப்படியா ” சொல்லைக்கேட்க விரும்பாமல்தான் அவரைச்சந்திக்கும் பலரும் அவரது சுகத்தை விசாரிப்பதுடன் விடைபெறுகிறார்கள்.
அன்று இரவு நானும் மேமன்கவியும் ஜீவாவை சந்தித்த வேளையில், ஜீவாவை சந்திப்பதற்கு முத்து. முருகமூர்த்தி என்ற விசேட வைத்திய நிபுணர் கிழக்கு மாகாணத்திலிருந்து வந்தார். அவர் எழுதிய ‘ நீரிழிவை வேரறுக்க’ என்ற நூலின் வெளியீட்டு விழாவுக்கு ஜீவாவை அழைப்பதற்காகவே அழைப்பிதழுடன் வந்திருந்தார். அவருக்கும் அன்றுதான் ஜீவாவின் அஞ்ஞாத வாசம் தெரிந்திருக்கும்.
நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் ஜீவாவின் படமும் அவர்பற்றிய குறிப்புகளும் இருக்கின்றன. நீர்கொழும்பு பிரதேசத்தையும் என்னையும் ஈழத்து இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்திய அவரை நீர்கொழும்பு விழாவில் கனம் பண்ணவிரும்பியிருந்தேன். அவ்வாறு அவரை அழைத்தால் அவருக்கு 1970 – 1980 கால கட்டத்தின் புத்துயிர்ப்பு நினைவுகள் மலர்ந்து மீண்டும் அவரை உற்சாகப்படுத்தலாம் என்பதே எனது எண்ணமாக இருந்தது.
“அவரை தாராளமாக அழைத்துச்செல்லுங்கள்…” என்றுதான் அவரது மருமகள் சொன்னார்.
ஆனால் – அவரது எண்ணம் வேறாக இருந்தது. அவர் தாம் அவர்களில் தங்கியிருப்பதாகவும் வெளிப்பயணங்களில் தனக்கு ஏதும் நடந்துவிட்டால்… என்ன செய்வது…? என்ற தயக்கத்தையே மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தார்.
சிட்னியில் மறைந்த எஸ்.பொ. குறித்து அடிக்கடி கேட்டார். கஸ்தூரியார் வீதியில் எஸ்.பொ.வும், கணேசலிங்கனும், தானும் டானியலும் ஒன்றாக அமர்ந்து தேநீர் குடித்த பழைய நினைவுகளை பகிர்ந்தார்.
எஸ்.பொ.வுடன் பல தடவைகள் தான் சண்டையிட்டு பேசாமலும் இருந்திருக்கின்றேன். ஆனால், அவருடனான நினைவுகளை மறக்க முடியவில்லை. பலரும் போய்விட்டார்கள். ஒரு வெற்றிடம் தோன்றியிருக்கிறது. வெறுமை தெரிகிறது. எனச்சொல்லி நீண்ட பெருமூச்சை உதிர்த்தார்.
விடைபெறும்பொழுது மீண்டும் ” தமக்கு ஒரு மொபைல் வேண்டும் ” என்று மறக்காமல் நினைவுபடுத்தினார்.
அந்த மொபைல் தற்பொழுது இயங்காமல் வீட்டில் அவரைப்போன்று ஓய்வு எடுக்கிறது

இலங்கையின் மூத்த எழுத்தாளரும் 45 வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து மல்லிகை கலை, இலக்கிய மாத இதழை வெளியிட்ட அதன் ஆசிரியருமான டொமினிக்ஜீவாவுக்கு எதிர்வரும் ஜூன் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது.

1927 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பிறந்த டொமினிக்ஜீவா முதலில் சிறுகதை எழுத்தாளராகவே இலக்கியத்துறையில் பிரவேசித்தவர். இலங்கை கம்யூனீஸ்ட் கட்சி மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு தமக்கு நாளாந்தம் வருவாய்தரும் தொழிலையும் கைவிட்டு முழுநேர எழுத்தாளராக பல தசாப்தகாலமாக அயராமல் உழைத்தார்.

இலங்கையில் கலாசார அமைச்சின் சாகித்திய மண்டலம் உருவானதும் தனது தண்ணீரும் கண்ணீரும் முதலாவது சிறுகதைத்தொகுதிக்காக சாகித்திய விருதும் பெற்றார்.
இலங்கையில் தமிழ் இலக்கியத்தில் சிறுகதைக்காக முதல் முதலில் சாகித்திய விருதுபெற்றவரும் டொமினிக் ஜீவா என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் முதலில் கஸ்தூரியார் வீதியிலிருந்தும் பின்னர் காங்கேசன்துறை வீதியில் ஒரு ஒழுங்கைக்குள்ளும் இருந்து பல வருடங்களாக வெளியான மல்லிகை மாத இதழ் ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறது.
இலங்கையில் நாடுபூராகவும் தெருத்தெருவாக அலைந்து மல்லிகையை விநியோகித்து தமிழ் இலக்கியத்தை வளர்த்தவர் அதன் ஊடாக ஏராளமான புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் ஜீவாவையே சாரும். அதனால் மல்லிகைஜீவா என்றே அழைக்கப்பட்டார்.
வடக்கில் போர்மூண்டிருந்த காலப்பகுதியிலும் அச்சுக்காகிதாதிகளுக்கு பலத்த தட்டுப்பாடு நிலவிய காலத்திலும் பாடசாலை அப்பியாசக்கொப்பித்தாள்களில் மல்லிகையை அச்சிட்டு வெளியிட்ட சாதனையாளர் மல்லிகை ஜீவா பல நெருக்கடிகளுக்கு மத்தியில் கொழும்புக்கு இடம்பெயர்ந்து புறக்கோட்டை ஸ்ரீகதிரேசன் வீதியில் தொடர்ந்தும் பல வருடகாலமாக மல்லிகை இதழை வெளியிட்டுவந்தார்.

தமிழ்நாட்டிலும் தனது இலக்கியப்பணிகளை விரிவுபடுத்திய மல்லிகை ஜீவா தமிழக படைப்பாளிகளையும் கௌரவிக்கும் நோக்கத்தில் பலரது படங்களை மல்லிகையின் முகப்பில் பதிவுசெய்து தமிழக – இலக்கிய உறவுப்பாலத்தை உருவாக்கினார்.
அதற்காக பல தடவைகள் தமிழ்நாட்டிற்கு பயணித்திருக்கும் ஜீவா – சோவியத்தின் அழைப்பினை ஏற்று மாஸ்கோவுக்கும் ஐரோப்பாவில் இயங்கும் இலக்கியச்சந்திப்பின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், இங்கிலாந்து முதலான நாடுகளுக்கும் பயணித்திருக்கிறார்.

ஜீவாவின் சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அவரது சுயசரிதையை Undrawn Portrait For Unwritten Poetry என்னும் பெயரில் அவுஸ்திரேலியாவில் வதியும் மொழிபெயர்ப்பாளர் நல்லைக்குமரன் குமராசாமி ஆங்கிலத்தில் மொழிபெயர்துள்ளார்.

மல்லிகையில் ஏராளமான சிங்களச்சிறுகதைகள் மற்றும் பிறமொழிக்கதைகள் கட்டுரைகளின் தமிழ்மொழி பெயர்ப்புகளுக்கு களம் வழங்கியிருக்கும் மல்லிகை ஜீவா தேசிய இனங்களின் நல்லிணக்கத்திற்கும் சர்வதேச சகோதரத்துவத்துவப்பண்புகளுக்கும் முன்னுதாரணமாக விளங்கியவர்.

இலங்கையில் பல இளம் எழுத்தாளர்களை மல்லிகை ஊடாக இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார். நீர்கொழும்பு, திக்குவல்லை, அநுராதபுரம், முல்லைத்தீவு, மலையக மல்லிகை சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ள ஜீவா அவுஸ்திரேலியா சிறப்பு மலரையும் வெளியிட்டவர்.
இலங்கையில் சாகித்திய விருது மற்றும் சாகித்திய ரத்தினா, தேசத்தின் கண் ஆகிய சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ள ஜீவாவின் வாழ்வும் பணியும் பற்றி ஏற்கனவே திக்குவல்லை கமால் மற்றும் முருகபூபதி ஆகியோர் நூல்களும் எழுதியுள்ளனர்.

சமீபத்தில் இலங்கையின் மூத்த எழுத்தாளரும் மல்லிகை ஜீவாவின் அபிமானியுமான தெணியான் தினக்குரல் வார இதழில் எழுதிய மனசோடு பழகும் மல்லிகை என்னும் கட்டுரைத்தொடர் தற்பொழுது முழுமையான நூலக வெளிவந்துள்ளது. இந்நூலின் வெளியீட்டு அரங்கும் எழுத்தாளர் ஒன்று கூடலும் மல்லிகை ஜீவா பிறந்ததினத்தை கொண்டாடு முகமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை 27 ஆம் திகதி கொழும்பில் வெள்ளவத்தை இராமகிருஷ்ண சிறிய மண்டபத்தில் நடைபெறுகிறது.
பேராசிரியர் சபா ஜெயராசாவின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் புரவலர் ஹாஸிம் உமர் நூலின் முதல்பிரதியை பெற்றுக்கொள்வார். ஜீவாவின் மகன் திலீபன் டொமினிக்ஜீவா நன்றியுரையாற்றுவார்.

மல்லிகையினால் 1970 களில் அறிமுகப்படுத்தப்பட்ட கவிஞர் மேமன்கவி இந்நிகழ்ச்சிகளை தொகுத்தளிப்பார்.
தமது 88 வயதில் காலடி எடுத்துவைக்கும் மல்லிகை ஜீவா நல்லாரோக்கியத்துடன் இலக்கிய அரங்கில் தொடர்ந்து இயங்கிவரவேண்டும் என வாழ்த்துகின்றோம்.

 

No comments: