புதிய விடியலுக்கான நம்பிக்கையுடன் புத்தாண்டுக்குள் பிரவேசிப்போம்!

புதிய ஆண்டுக்குள் பிரவேசி த்துள்ளோம். நெருக்கமான மற்றும் முகம் தெரியாத மனிதர்களுக்கெல்லாம் ‘ஹேப்பி நியூ இயர்’ என்று நேரிலும், தொலைபேசி ஊடாகவும் வாழ்த்து சொல்கிறோம். புதுவருட வாழ்த்தை விதம் விதமாக எல்லோருக்கும் கூறுகின்றோம்.

புத்தாண்டு என்பது நாட்காட்டி போன்றது. அதில் நேற்றைய நாள் என்பது பயனற்ற நாள். ஆகவே, அது கிழித்து எறியப்படுகிறது. அது போல நேற்றைய வாழ்வில் நம்மில் படிந்திருந்த தீயபழக்கங்களைத் தூக்கியெறிந்து, இன்றைய வாழ்வினைப் புதுவிடியலாய்த் தொடங்கும் நாள்தான் புத்தாண்டு.

பிள்ளைகளைப் பொறுத்த வரை பெற்றோரை சாபமிட வைக்காமல் இங்கிதமாக வாழப் பழக வேண்டும். அதிகாலையில் துயிலெழுதல், விடிந்ததும் செல்போனில் கண்களைப் புதைத்து நள்ளிரவு வரை அதிலேயே வாழ்ந்து மடியும் விட்டில் பூச்சி வாழ்க்கையைத் தவிர்த்தல், சோம்பியிருக்க மறுத்தல், சினம் தவிர்த்தல், குட்டிப் பொய் கூட சொல்ல மறுத்தல் என நல்ல உறுதி மொழிகளை எடுக்கும் நாளாக இன்றைய நாள் அமையட்டும். அதனை வழக்கத்திற்குக் கொண்டு வரும் ஆண்டு 2021 என்போம்.

மதுவுக்கும், போதைக்கும் அடிமையானோர் அதற்கு விடைகொடுக்கட்டும். நல்ல மனிதனாய் வாழ்வதே சிறப்பென்று உறுதியேற்போம் என உரக்கச் சொல்லும் ஆண்டாக 2021 அமையட்டும்.

ஒவ்வொரு வருடத்திலும் எத்தனையோ தினங்கள் கொண்டாடப்படுகின்றன. உலகின் மிகச் சிறந்த நிறுவனங்கள் அனைத்தும் ஒவ்வொரு வருடத்திலும் ஏதாவது ஒரு குறிக்கோளை வலியுறுத்தியும், அதற்காக வாசகத்தினை முன்னிறுத்தியும் கொண்டாடுகின்றன. அதே போல், ஒவ்வொரு படிநிலையிலுள்ள மனிதனும், புதுவருடத்தில் தனக்கென ஒரு குறிக்கோளுடன் கூடிய ஒரு வாசகம் கொண்டால் அது அவரது வெற்றிக்கு வழிகோலும். அவ்வாறில்லையெனில் காற்றில் பறந்த துரும்பாய், துடுப்பில்லாத கலமாய் வாழ்க்கை அலைபாய்ந்து செல்லுமிடம் தெரியாமல் மறைந்து, ஒரு வருடம் மறைந்தோடி விடும்.

புதியன புகுதலில் அளவான உணவு, அனுதினமும் உடற்பயிற்சி, மாணவருக்கு படிப்பதெற்கென்றே பல மணி நேரம், மரம் நடுதல், பிறருக்கு உதவியாயிருத்தல் என வாழ்க்கையை உயர்த்தும் நேரங்களைத் தேடிப்பிடித்து அட்டவணைப்படுத்தி வாழ்வது நன்று.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு சரித்திரம். அதில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கங்கள். ஒவ்வொரு நாளிலும் தனக்கோ, தன் குடும்பத்திற்கோ, சமுதாயத்திற்கோ பயன்படாத நாட்கள் வெறும் பக்கங்களாகவே இருக்கும். இப்பக்கங்கள் கிழிக்கப்படும்; இல்லையெனில் பிறரால் கிறுக்கப்பட்டு விடும். எனவே, ஒவ்வொரு நாளும் பயனுள்ளதாக வாழ்வதால் மட்டுமே நம் வாழ்நாள் பக்கங்களை அலங்கரிக்க முடியும்.

சாதனையான ஒரு வருடம் வேண்டுமெனில், வெற்றிகரமான மாதங்கள் அவசியம். வெற்றிகரமான ஒரு மாதத்திற்கு அற்புதமான வாரங்கள் அடிப்படை. அற்புதமான வாரங்கள் அமைய உழைத்து மகிழும் ஒவ்வொரு நாள் அவசியம். அத்தகைய ஒவ்வொரு நாளையும் நட்சத்திரங்களை சேகரிக்கும் வானம் போல் சேகரிப்போம். நமது வாழ்க்கையையும் நம்பிக்கை நட்சத்திரமாக்குவோம். அதற்கு தயாராகும் நாள் தான் இன்றைய புத்தாண்டு. இதற்கான தீர்மானத்தை எவரிடமும் இருந்து பிரதி செய்யாது, சொந்தமாக நிர்மாணிப்பவனே தனது தலைவிதியைத் தீர்மானிக்கிறான்.

அமெரிக்க முன்னாள் அதிபர் ஏப்ரகாம் லிங்கன் ஒரு சிறந்த மேடைப் பேச்சாளர். அவரது பேச்சினை ஓர் அரங்கத்தில் வியந்து கேட்ட ஓர் இளைஞன், “ஐயா! கடந்த அரை மணி நேரம் உங்களால் எப்படி இவ்வளவு அற்புதமாக பேச முடிந்தது?” என்று கேட்டார்.

அதற்கு அவர், நான் மேடையில் பேசிய அரை மணி நேரம்தான் என்னை நீ பார்த்தாய். அதற்காக நான் ஆறு நாட்கள் தயாரானதை நீ பார்க்கவில்லையே” என்றார்.

ஒலிம்பிக் விளையாட்டில் வெற்றி பெறும் வீரனின் வெற்றி, அவன் சாதாரண நாட்களில் மைதானத்தில் மேற்கொள்ளும் பயிற்சியில் அடங்கியுள்ளது. அதே போல், ஒரு மனிதனின் வெற்றியானது அவன் ஒவ்வொரு நாளையும் வெற்றியாக்குவதில்தான் உள்ளது.

ஒவ்வொரு நாளையும் நமது செயற்பாட்டால் உயர்த்தும் போது, நாமும் உயர்கிறோம். ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்ளும் போது, “நான் சிறந்தவன்; இந்த நாள் பிறந்தது எனக்காக; இந்நாளில் நான் வெற்றியடைவேன். மனதாலோ, சொல்லாலோ, செயலாலோ நான் யாரையும் காயப்படுத்த மாட்டேன். பிறருக்கு இன்று உதவி செய்வேன்” என்ற மந்திர வார்த்தைகளோடு பயணிக்கும் நாட்கள் வெற்றியான நாட்களாய் அமையும்.

அன்றைய நாளில் செய்ய வேண்டியது யாவை? செய்யக் கூடாதது எவை? என்று முந்திய நாளில் திட்டமிட்டு இரவு உறங்கச் சென்றால் ஒவ்வொரு நாளும் நாம் எதிர்பார்த்தது போல் புத்தாண்டாய் விடியும்.

புத்தாண்டில் வருடத்தின் எண் உயர்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டிலும் நம் வாழ்வின் சாதனைகள் உயரட்டும். எண் உயர்ந்தால் புத்தாண்டு, எண்ணம் உயர்ந்தால் புதுவாழ்வு.

இரா.திருநாவுக்கரசு  - நன்றி தினகரன் 

No comments: