எனது தாத்தா கார்த்திகேசு, சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷாரின் காலத்தில் பொலிஸ் சார்ஜன்ட்டாக இருந்தவர் என்று இந்த தொடரின் முன்னைய அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.
அவர் கண்டிப்பானவர். எங்கள் ஊரில் அவருக்கு மரியாதை இருந்தது. அவர் முன்னிலையில் எவரும் புகைக்கமாட்டார்கள். மது அருந்தமாட்டார்கள். பாட்டியின் அண்ணன் ஒருவர் கஞ்சா- அபின் விற்பனை செய்தார் என்று அவரை
கைதுசெய்து சட்டத்தின் முன்னால் தாத்தா நிறுத்தியவர். அந்தச் செல்வந்தர் இறுதிவரையில் அந்தக்கோபத்தைக்காண்பித்து, தங்கை குடும்பத்துடன் உறவைப்பேணவேயில்லை.
பொலிஸ் தாத்தாவின் முகத்தில் கனிவை காண்பது அபூர்வம். எப்பொழுதும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருப்பார்.
அவர் தனது பொலிஸ் சேவையில் நீதி – நேர்மையை கடைப்பிடித்தமைக்காகவும் சாதனைகள் புரிந்தமைக்காகவும் பிரித்தானிய மகாராணியிடத்திலும் பதக்கம் பெற்றவர்.
அவரது பொலிஸ் வாழ்க்கையில் நிகழ்ந்த திடுக்கிடும் கதைகளை , பாட்டியிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்டேன். ஆனால், தாத்தா எனக்கு அக்கதைகளைச் சொல்லவில்லை. அவர் சொல்லித்தந்தது தேவாரமும் திருவாசகமும்தான். அவர் எங்கள் வீட்டு முற்றத்தில் வளர்த்த மல்லிகைப்பந்தலின் கீழே அமர்ந்து என்னை தனது மடியிலிருத்தி சொல்லித்தந்தார்.
ஆரம்பப் பாடசாலைக்கு அழைத்துச்சென்றதும், பாடசாலைவிடும்போது அழைத்துவருவதும் அவர்தான். அதனால் எங்கள் வீதியில் எனக்கு பொலிஸாரின் பேரன் என்ற பெயரும் இருந்தது.
அவரது சீருடைகளையும், பொலிஸ் தரப்பில் அவருக்குத்தரப்பட்டிருந்த குண்டாந்தடியையும் அந்த பதக்கத்தையும் பார்க்கும்போதெல்லாம், வளர்ந்தால் நானும் பொலிஸ்காரனாகவேண்டும் என்ற கனவுதான் அந்த பால்ய பருவத்தில் என்னிடம் நீடித்திருந்தது.
தாத்தா எனக்கு ஆறுவயதாகவிருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்து மறைந்தார். நான் பாடசாலை விட்டு வரும்வரையில் அவர் காத்து நிற்கும்போது நிழல் தரும் அரசமரம் பாடசாலைக்கு முன்னாலிருந்தது. நிழல்பரப்பிய அரசமரத்தின் கிளைகளை மாநகர சபை ஊழியர்கள் மின் இணைப்பு பணிகளுக்காக வெட்டி வீழ்த்தியபோது அவர் அவர்களுடன் சண்டை பிடித்தார். அரசமரத்தின் கிளைகளை வெட்டியது அவருக்கு உடன்பாடில்லை.
அன்றைய தினம் இரவு அவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உயிரை விட்டார். பின்னாளில், பல வருடங்களுக்குப்பிறகு அந்த அரசமரம், வீதி அகலமாக்கப்பட்டபோது முற்றாக தரித்து வெட்டப்பட்டசமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருக்கின்றேன். அம்மாவிடமிருந்து வந்த கடிதத்தில் அரசமரம் வெட்டப்பட்ட செய்தி அறிந்து எனக்கும் நெஞ்சுநோ வந்தது.
அந்த அரசமரம் பற்றி நான் எழுதிய சிறுகதை வீரகேசரியிலும், சிங்கப்பூர் தமிழ் முரசுவிலும் வெளியாகியிருக்கிறது.
எனது குடும்பத்தில் எனக்கு தாத்தாவும் பாட்டியும்தான் ஆதர்சம். அவர்கள் எனக்கு Role model. வாழ்வின் மீதான தன்னம்பிக்கையை ஊட்டியவர்கள்.
தாத்தா, நேர்மை , கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கற்றுக்கொண்ட பொலிஸ் திணைக்களம் பின்னாளில் அந்தக் கட்டுப்பாட்டை இழக்கின்ற காலத்தில்தான் நான் எழுத்துலகத்துள் பிரவேசித்தேன்.
பொலிஸ் துறை திணைக்களம் சார்ந்தது. ஆயுதப்படை,
விமானப்படை, கடற்படை , அதிரடிப்படை என்பன திணைக்கள விதிமுறைகளிலிருந்து வேறுபட்டு, பாதுகாப்புத்துறைக்குள் வருகின்றன.
1971 இல் ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணியினர் ஆயுதக்கிளர்ச்சியை தொடங்கியபோது அவர்களின் முதலாவது குறி - பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதலாகவே இருந்தது. கதிர்காமம், வெல்லவாய முதலான தென்னிலங்கை நகரங்களின் பொலிஸ் நிலையங்கள் முதலில் தாக்கப்பட்டன.
இதே காலப்பகுதியில் ஹக்மனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. டீ. சமரநாயக்கா சம்பந்தப்பட்ட இரட்டைக்கொலை வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, நானும் நண்பர் செல்வரத்தினமும் அந்தச் செய்திகளை வீரகேசரிக்கு எழுதநேர்ந்தது.
அந்த பொலிஸ் அதிகாரியின் கதையை மரணதண்டனை தீர்ப்பு..? என்ற தலைப்பில் எனது சொல்லமறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.
இதே சமயம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின் நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து மரணமான தொடம்பே முதலாளி மரணவிசாரணை செய்திகளையும் படித்திருந்தேன்.
பொலிஸ்காரரின் பேரனாக வளர்ந்த எனக்கு அந்தத் துறையில் வேலை தேடும் படலத்தில் ஆர்வம் அற்றுப்போனதற்கு பொலிஸின் அராஜாகங்கள் பற்றிய செய்திகளும் முக்கியகாரணம்.
வீரகேசரியில் பொலிஸ் செய்திகளை எழுதியும் ஒப்புநோக்கியும் வந்தமையால், தென்னிலங்கை சிங்கள இளைஞர்கள் மற்றும் வட இலங்கை தமிழ் இளைஞர்களின் அறச்சீற்றங்களை புரிந்துகொள்ளமுடிந்தது.
1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தனா பதவியேற்ற சில தினங்களில் யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த களியாட்ட நிகழ்ச்சியில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகங்களிலிருந்து ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஆயுதக்கலசாரத்தின் கதை ஆரம்பமாகிறது. 1981 இல் யாழ். பொது நூலகம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டதிலிருந்து ஆயுதப்போராட்டம் உக்கிரமடைந்தது.
சம்பத்தரிசியார் கல்லூரி களியாட்ட விழாத்திடலில்
தொடங்கிய கலவரம் அநுராதபுரம் தொடக்கம் தென்னிலங்கை வரையில் விஸ்தீரணமடைந்தது. யாழ்ப்பாணத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரா மீது உரும்பராய் சிவகுமாரனின் குண்டுவீச்சுத்தாக்குதலிலிருந்து படிப்படியாக இரண்டு தரப்பிலிருந்தும் வன்முறைகள் வெடித்தன.
தினம் தினம் பொலிஸ் தரப்பு செய்திகள் வீரகேசரிக்கு வந்தமையால் அவற்றை ஒப்புநோக்கும்போதே இலங்கையின் எதிர்காலம் குறித்த கவலையும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது. நான் தினமும் நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன். அச்செய்திகள் சிங்கள ஊடகங்களிலும் வெளியானமையால் பயணிக்கும் பஸ்ஸில் தெரிந்த தமிழர்கள் இருந்தாலும் உரத்துப்பேசுவதற்கு தயக்கம் இருந்தது.
1976 ஆம் ஆண்டு மேமாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்றம்பெற்றிருந்தது. அத்துடன் வேறும் சில ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்யத் தொடங்கியிருந்தன.
வடக்கில் நீர்வேலி, புத்தூர், புலோலி , கோப்பாய் வங்கிக்கொள்ளைகள் இடம்பெற்றன. அதில்
சம்பந்தப்பட்டவர்களை தேடும் தீவிர வேட்டையில் ஈடுபட்ட பொலிஸாரும் குறிவைக்கப்பட்டனர். யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவை கொலைசெய்தவர்களை தேடுவதில் சில தமிழ் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.
அவ்வாறு சம்பந்தப்பட்ட முக்கிய பொலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை. 1978 ஏப்ரில் மாதம் அவரும் அவருடன் முருங்கன் காட்டுக்குள் தேடுதலுக்கு சென்ற மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளதும் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளை ஒப்புநோக்கிய காலப்பகுதியில், மற்றும் ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் இரத்மலானை விமான நிலையத்தில் நடந்தது.
அச்செய்தி:
1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை முதலில் பலாலிக்குப்பறந்த அவ்ரோ விமானம், அங்கிருந்து இரத்மலானை திரும்பி, கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலைத்திற்கு வந்து, அங்கிருந்து பம்பாய்க்கு பறக்கவிருந்தது. எனினும் இரத்மலானை விமானநிலையத்தில் அதனை சுத்தம்செய்யும் தருணத்தில் வெடித்துச்சிதறியதனால், 1931 இல் திறக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த முன்னைய பழைய பாராளுமன்ற கட்டிடம் உயிர்தப்பியது.
அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம்.
வீரகேசரிக்கு அன்று தரப்பட்ட அக்கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:
தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:
1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)
2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)
3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)
4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.
(அதே நாளில் சுட்டுக்கொலை)
5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)
6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)
7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)
8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)
9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)
10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)
11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)
1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.
இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
எனது எழுத்துலக வாழ்வில் இலங்கை அரசியலும் இவ்வாறு கவனத்திற்குள்ளாகிக்கொண்டே வருவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது !
( தொடரும் )
No comments:
Post a Comment