எழுத்தும் வாழ்க்கையும் --- அங்கம் 24 பொலிஸாரின் அராஜகமும் இயக்கங்களின் அறச்சீற்றமும் ! விடுதலைப்புலிகள் உரிமை கோரியிருந்த கடிதம் !! முருகபூபதி


எனது தாத்தா கார்த்திகேசு,  சுதந்திரத்திற்கு முன்னர் பிரிட்டிஷாரின் காலத்தில் பொலிஸ் சார்ஜன்ட்டாக இருந்தவர் என்று இந்த தொடரின் முன்னைய அங்கங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

அவர் கண்டிப்பானவர்.  எங்கள் ஊரில் அவருக்கு மரியாதை இருந்தது. அவர்  முன்னிலையில்  எவரும் புகைக்கமாட்டார்கள். மது அருந்தமாட்டார்கள்.   பாட்டியின் அண்ணன்  ஒருவர்  கஞ்சா- அபின்  விற்பனை செய்தார் என்று அவரை


கைதுசெய்து சட்டத்தின் முன்னால்  தாத்தா நிறுத்தியவர்.  அந்தச் செல்வந்தர்  இறுதிவரையில்  அந்தக்கோபத்தைக்காண்பித்து,   தங்கை குடும்பத்துடன் உறவைப்பேணவேயில்லை.   

பொலிஸ் தாத்தாவின்  முகத்தில் கனிவை காண்பது அபூர்வம்.  எப்பொழுதும் முகத்தை இறுக்கமாகத்தான் வைத்திருப்பார்.

அவர் தனது பொலிஸ் சேவையில்  நீதி – நேர்மையை கடைப்பிடித்தமைக்காகவும்   சாதனைகள் புரிந்தமைக்காகவும்   பிரித்தானிய மகாராணியிடத்திலும் பதக்கம் பெற்றவர்.

அவரது பொலிஸ் வாழ்க்கையில்  நிகழ்ந்த திடுக்கிடும் கதைகளை , பாட்டியிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொண்டேன்.  ஆனால், தாத்தா எனக்கு அக்கதைகளைச்  சொல்லவில்லை. அவர் சொல்லித்தந்தது தேவாரமும் திருவாசகமும்தான்.  அவர் எங்கள் வீட்டு முற்றத்தில் வளர்த்த மல்லிகைப்பந்தலின் கீழே அமர்ந்து என்னை தனது மடியிலிருத்தி  சொல்லித்தந்தார். 

ஆரம்பப்  பாடசாலைக்கு அழைத்துச்சென்றதும், பாடசாலைவிடும்போது  அழைத்துவருவதும் அவர்தான்.  அதனால் எங்கள் வீதியில் எனக்கு பொலிஸாரின் பேரன் என்ற பெயரும் இருந்தது.

அவரது சீருடைகளையும்,  பொலிஸ் தரப்பில் அவருக்குத்தரப்பட்டிருந்த குண்டாந்தடியையும் அந்த பதக்கத்தையும் பார்க்கும்போதெல்லாம்,  வளர்ந்தால் நானும் பொலிஸ்காரனாகவேண்டும் என்ற கனவுதான் அந்த பால்ய பருவத்தில்  என்னிடம் நீடித்திருந்தது.


தாத்தா எனக்கு ஆறுவயதாகவிருக்கும்போது திடீரென மாரடைப்பு வந்து மறைந்தார்.  நான் பாடசாலை விட்டு வரும்வரையில்  அவர் காத்து நிற்கும்போது நிழல் தரும்  அரசமரம் பாடசாலைக்கு முன்னாலிருந்தது.  நிழல்பரப்பிய அரசமரத்தின் கிளைகளை மாநகர சபை ஊழியர்கள் மின் இணைப்பு பணிகளுக்காக வெட்டி வீழ்த்தியபோது அவர் அவர்களுடன் சண்டை பிடித்தார்.  அரசமரத்தின் கிளைகளை வெட்டியது அவருக்கு உடன்பாடில்லை.

அன்றைய தினம் இரவு அவர் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு உயிரை விட்டார்.  பின்னாளில்,  பல வருடங்களுக்குப்பிறகு அந்த அரசமரம்,  வீதி அகலமாக்கப்பட்டபோது முற்றாக தரித்து வெட்டப்பட்டசமயத்தில் நான் அவுஸ்திரேலியாவிலிருக்கின்றேன்.  அம்மாவிடமிருந்து வந்த கடிதத்தில் அரசமரம் வெட்டப்பட்ட செய்தி அறிந்து எனக்கும் நெஞ்சுநோ வந்தது.

அந்த அரசமரம் பற்றி நான் எழுதிய சிறுகதை வீரகேசரியிலும்,  சிங்கப்பூர் தமிழ் முரசுவிலும் வெளியாகியிருக்கிறது. 

எனது குடும்பத்தில் எனக்கு தாத்தாவும் பாட்டியும்தான் ஆதர்சம்.  அவர்கள் எனக்கு Role model. வாழ்வின் மீதான தன்னம்பிக்கையை ஊட்டியவர்கள். 

தாத்தா,  நேர்மை , கடமை,  கண்ணியம்,  கட்டுப்பாட்டை கற்றுக்கொண்ட பொலிஸ் திணைக்களம் பின்னாளில் அந்தக் கட்டுப்பாட்டை இழக்கின்ற காலத்தில்தான் நான் எழுத்துலகத்துள் பிரவேசித்தேன்.

பொலிஸ் துறை திணைக்களம் சார்ந்தது.  ஆயுதப்படை,


விமானப்படை, கடற்படை ,  அதிரடிப்படை என்பன திணைக்கள விதிமுறைகளிலிருந்து வேறுபட்டு,  பாதுகாப்புத்துறைக்குள் வருகின்றன.

1971 இல் ஏப்ரில் மாதம் மக்கள் விடுதலை முன்னணியினர்  ஆயுதக்கிளர்ச்சியை தொடங்கியபோது அவர்களின் முதலாவது குறி -  பொலிஸ் நிலையங்கள் மீதான தாக்குதலாகவே இருந்தது. கதிர்காமம், வெல்லவாய முதலான தென்னிலங்கை நகரங்களின் பொலிஸ் நிலையங்கள் முதலில் தாக்கப்பட்டன.

இதே காலப்பகுதியில்  ஹக்மனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே. டீ. சமரநாயக்கா சம்பந்தப்பட்ட இரட்டைக்கொலை வழக்கு நீர்கொழும்பு உயர் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்தபோது, நானும் நண்பர் செல்வரத்தினமும் அந்தச்  செய்திகளை வீரகேசரிக்கு எழுதநேர்ந்தது.

அந்த பொலிஸ் அதிகாரியின் கதையை மரணதண்டனை தீர்ப்பு..? என்ற தலைப்பில் எனது சொல்லமறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியுள்ளேன்.


இதே சமயம் கொழும்பு பொலிஸ் தலைமையகத்தின்  நான்காவது மாடியிலிருந்து வீழ்ந்து மரணமான தொடம்பே முதலாளி மரணவிசாரணை செய்திகளையும் படித்திருந்தேன்.

பொலிஸ்காரரின் பேரனாக வளர்ந்த எனக்கு அந்தத் துறையில் வேலை தேடும் படலத்தில் ஆர்வம் அற்றுப்போனதற்கு பொலிஸின் அராஜாகங்கள் பற்றிய செய்திகளும் முக்கியகாரணம்.

வீரகேசரியில்  பொலிஸ் செய்திகளை எழுதியும் ஒப்புநோக்கியும் வந்தமையால், தென்னிலங்கை  சிங்கள இளைஞர்கள் மற்றும் வட இலங்கை தமிழ் இளைஞர்களின் அறச்சீற்றங்களை புரிந்துகொள்ளமுடிந்தது.

1977 இல் ஜே.ஆர். ஜெயவர்தனா பதவியேற்ற சில தினங்களில் யாழ். சம்பத்தரிசியார் கல்லூரியில் நடந்த களியாட்ட நிகழ்ச்சியில்  இடம்பெற்ற  பொலிஸாரின் அராஜகங்களிலிருந்து  ஈழவிடுதலைப்போராட்டத்தில் ஆயுதக்கலசாரத்தின் கதை ஆரம்பமாகிறது. 1981 இல் யாழ். பொது நூலகம் பொலிஸாரினால் எரிக்கப்பட்டதிலிருந்து  ஆயுதப்போராட்டம் உக்கிரமடைந்தது.

சம்பத்தரிசியார் கல்லூரி   களியாட்ட  விழாத்திடலில்


தொடங்கிய கலவரம் அநுராதபுரம் தொடக்கம் தென்னிலங்கை வரையில் விஸ்தீரணமடைந்தது. யாழ்ப்பாணத்தில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரா மீது உரும்பராய் சிவகுமாரனின் குண்டுவீச்சுத்தாக்குதலிலிருந்து படிப்படியாக  இரண்டு தரப்பிலிருந்தும் வன்முறைகள் வெடித்தன.

தினம் தினம் பொலிஸ் தரப்பு செய்திகள் வீரகேசரிக்கு வந்தமையால் அவற்றை ஒப்புநோக்கும்போதே இலங்கையின் எதிர்காலம் குறித்த கவலையும் மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியது.  நான் தினமும் நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பஸ்ஸில் வந்துகொண்டிருந்தேன்.  அச்செய்திகள் சிங்கள ஊடகங்களிலும் வெளியானமையால் பயணிக்கும் பஸ்ஸில்  தெரிந்த தமிழர்கள் இருந்தாலும் உரத்துப்பேசுவதற்கு தயக்கம் இருந்தது.

1976 ஆம் ஆண்டு மேமாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம்  தோற்றம்பெற்றிருந்தது. அத்துடன் வேறும் சில ஆயுதம் ஏந்திய  தமிழ் இயக்கங்கள் தங்கள் பங்கிற்கு ஏதாவது செய்யத் தொடங்கியிருந்தன.

வடக்கில்  நீர்வேலி, புத்தூர், புலோலி , கோப்பாய் வங்கிக்கொள்ளைகள் இடம்பெற்றன.  அதில்


சம்பந்தப்பட்டவர்களை தேடும் தீவிர வேட்டையில் ஈடுபட்ட பொலிஸாரும் குறிவைக்கப்பட்டனர்.   யாழ். மேயர் அல்ஃபிரட் துரையப்பாவை கொலைசெய்தவர்களை தேடுவதில்  சில தமிழ் பொலிஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருந்தனர்.

அவ்வாறு சம்பந்தப்பட்ட முக்கிய பொலிஸ் அதிகாரி இன்ஸ்பெக்டர் பஸ்தியாம் பிள்ளை.   1978 ஏப்ரில் மாதம் அவரும் அவருடன் முருங்கன் காட்டுக்குள் தேடுதலுக்கு சென்ற மேலும் நான்கு பொலிஸ் அதிகாரிகளதும்  சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட செய்திகளை ஒப்புநோக்கிய காலப்பகுதியில், மற்றும்  ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் இரத்மலானை விமான நிலையத்தில் நடந்தது.

அச்செய்தி:

1978 செப்டெம்பர் 7 ஆம் திகதி காலை முதலில் பலாலிக்குப்பறந்த அவ்ரோ  விமானம், அங்கிருந்து இரத்மலானை திரும்பி, கட்டுநாயக்கா சர்வதேச விமானநிலைத்திற்கு வந்து, அங்கிருந்து பம்பாய்க்கு பறக்கவிருந்தது. எனினும் இரத்மலானை விமானநிலையத்தில் அதனை சுத்தம்செய்யும் தருணத்தில் வெடித்துச்சிதறியதனால், 1931 இல் திறக்கப்பட்ட வரலாற்றுச்சிறப்புமிக்க அந்த  முன்னைய பழைய பாராளுமன்ற கட்டிடம் உயிர்தப்பியது.


இரத்மலானை விமான நிலையத்தில் அவ்ரோ வெடித்தபோது, கொழும்பு கிராண்ட்பாஸில் மற்றுமொரு சம்பவம் நடந்தது. ஒரு இனந்தெரியாத நபர் வீரகேசரி அலுவலகத்தின் வாயிலிலிருக்கும் பாதுகாவலர் அறையில் ஒரு கடித உறையை கொடுத்துவிட்டு மாயமாகிவிட்டார்.

வீரகேசரி ஆசிரியருக்கு எனத்தலைப்பிடப்பட்ட அந்த உறையை பிரித்துப்பார்த்தபோது ஆசிரியபீடம் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.
பஸ்தியாம் பிள்ளை உட்பட  நால்வரின் கொலைக்கும் உரிமைகோரியும் மேலும் சில கொலைச்சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்களுக்கும் தாமே பொறுப்பு என்றும் தெரிவித்திருந்த அந்தக்கடிதம் பல சந்தேகங்களை எழுப்பியது.


புலிகள் இயக்க லெட்டர்ஹேடில் தட்டச்சுசெய்யப்பட்டிருந்த அக்கடிதம் போலியானதா, நிஜமானதா என்பதை தெரிந்துகொள்ளவேண்டி பிரதம ஆசிரியர் சிவப்பிரகாசம் பிரதம செய்தி ஆசிரியர் டேவிட்ராஜூ, சிரேஷ்ட துணை செய்தி ஆசிரியர்கள் நடராஜா, கார்மேகம் ஆகியோர் மந்திராலோசனை நடத்தினர்.


இறுதியில் புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளை அழைத்து அவர்களின் அனுமதியுடன் அதனை வீரகேசரியின் முதல் பக்கத்தில் பிரசுரிக்க ஆவன செய்தனர். குறிப்பிட்ட முதல் பக்கத்தின் முழுமையான பக்கம்  தயாரான வேளையில் மாலை நேரம்  நான்  எனது இரவு நேரக்கடமைக்கு அலுவலகத்தினுள்ளே ஒப்புநோக்காளர் பிரிவுக்கு வந்துசேர்ந்தேன்.

அன்று இரவு வீரகேசரியில் பணிமுடியும்போது நடுஇரவும் கடந்துவிட்டது. அங்கு ஒப்புநோக்காளர் பிரிவில் பணியாற்றிக்கொண்டிருந்த நானும் நண்பர் தனபாலசிங்கமும் வீட்டுக்குத்திரும்பாமல் அலுவலகத்தின் ஆசிரியபீடத்திலேயே தங்கிவிட்டோம்.


எனக்கு நீர்கொழும்புக்குச்செல்வதற்கு இரவு 12.30 மணிக்குத்தான் கடைசி பஸ். அதனை தவறவிட்டால் பின்னர் அதிகாலை 4 மணிக்குத்தான் மறுநாளுக்கான முதல் பஸ். இரவுக்கடமையின்போது கடைசிபஸ் தவறவிடப்படுமானால் அலுவலகத்திலேயே தங்கிவிடுவது எனது வழக்கம்.


1977 கலவரத்திற்குப்பின்னர், தனபாலசிங்கம் வேலைமுடிந்து நடந்துபோகும் தூரத்திலிருக்கும் கொட்டாஞ்சேனைக்கு நடு இரவில் வீடுதிரும்பமாட்டார். அவ்வாறு வீடு திரும்ப முடியாத ஊழியர்கள் வீரகேசரி அலுவலகத்தில் தங்கலாம். ஆனால் படுக்கை, தலையணை, விரிப்புகள்தான் இருக்காது.
ஆசிரியபீடத்திலிருக்கும் உதவிஆசிரியர்கள் பயன்படுத்தும் மேசைகள் எமக்கு கட்டில். அங்கிருக்கும் வீரகேசரி பிரதிகளும் இதரபத்திரிகைப்பிரதிகளும் தொகுக்கப்பட்ட பெரிய கோவைகளே எமக்கு தலையணைகள். அச்சுக்கூடத்திலிருந்து பத்திரிகை அச்சிடும் நீண்ட தாளை உருவி எடுத்துவந்து மேசையில் விரித்துப்படுப்போம்.


நுளம்புகள் ரீங்காரமிடும். டெங்கு அபாயம் அக்காலத்திலிருந்ததாக ஞாபகம் இல்லை. விட்டத்தில் சுற்றும் மின்விசிறிகள் நுளம்புகள் எம்மை அண்டவிடாது பாதுகாக்கும். ஆனால்,  காலை எழும்போது கண்கள் எரியும். மூக்கு அடைத்திருக்கும்.


செய்தி ஆசிரியர்களாக பணியிலிருந்த நடராஜா மற்றும் கார்மேகம் ஆகியோர் சில நாட்கள் இரவுக்கடமையின்போது அங்கு தங்கிவிடுவதும் உண்டு.
அந்த நாட்கள் இனிமையானவை. ஆமர்வீதிச்சந்தியிலிருக்கும் அம்பாள் கபே, வாணிவிலாஸ் தோசை, இடியப்பம் உண்ட நாட்கள் அவை. கெப்பிட்டல் தியேட்டருக்கு அருகில் ஒரு குச்சொழுங்கையிலிருந்த தீவுப்பகுதியைச்சேர்ந்த அன்பர் ஒருவர் நடத்திய சாப்பாட்டுக்கடையில் புட்டும் சம்பலும் முட்டைப்பொரியலும் நண்டுக்குழம்பும் சுவையானவை.
அக்காலப்பகுதியில் பாராளுமன்ற உறுப்பினராக பதவியிலிருந்த ஆனந்தசங்கரியும் அங்கு இரவுச்சாப்பாட்டிற்கு வருவதைக்கண்டிருக்கின்றேன்.


அந்தப்பிரதேசத்தில் அந்த சாப்பாட்டுக்கடை பிரசித்திபெற்றது.
மேற்படி மூன்றில் ஏதாவது ஒன்றில் இரவு உணவை முடித்துக்கொண்டு, மீண்டும் பணிதொடங்கி, வீரகேசரி அலுவலகம் தரும் இரவு நேர பால்தேநீருடன் படுக்கை விரித்து உறங்கிவிடுவோம்.


மறுநாள் எழுந்து அங்கேயே சிரமபரிகாரம் செய்து குளித்து உடைமாற்றிக்கொண்டு சீனிச்சம்பலும் பாணும் சாப்பிட்டுவிட்டு மீண்டும்பணி தொடருவோம்.
இப்படி கழிந்த நாட்களில்  அந்த ஒருநாள் இரவை மறக்கவே முடியாது.

நண்பர் தனபாலசிங்கத்துடன் அரசியல், இலக்கியம், சமூகம் தொடர்பாக அடிக்கடி உரையாடுவதும் விவாதிப்பதும் அன்றாட நிகழ்வு.  புலிகளின் கடிதம் வந்த அன்றையதினம் நாமிருவரும் இரவுக்கடமையில் இருந்தோம்.
எங்களது உரையாடல் குறிப்பிட்ட கடிதம் பற்றியே சுற்றிச்சுற்றி வந்தது.


அன்று மதியம் அலுவலகம் வந்த புலானாய்வுப்பிரிவு அதிகாரிகள், குறிப்பிட்ட கடிதத்தின் மூலப்பிரதியை பிரதி எடுத்துக்கொண்ட பின்பே பிரசுரிக்க அனுமதியளித்துள்ளனர்.
இதுபோன்ற கடிதத்தின் பிரதிகள் கொழும்பிலிருந்து வெளியாகும் ஏனைய தமிழ், ஆங்கில, சிங்கள ஏடுகளுக்கும் வந்திருக்கிறதா? என்ற கேள்விக்கு குறிப்பிட்ட அதிகாரிகளிடமிருந்து திருப்திகரமான பதில் இல்லை.
வீரகேசரி இலங்கையில் பிரசித்தி பெற்ற முன்னணிப் பத்திரிகை. விற்பனை எண்ணிக்கையும் அதிகம். அந்தக்கடிதத்தை வீரகேசரிக்கு மாத்திரம் கொடுப்பதன் மூலம் புலிகள் இயக்கம் தமது நோக்கத்தை நிறைவேற்றிக்கொண்டிருக்கலாம்.


அல்லது அப்படி ஒரு கடிதத்தை தயார்செய்து அதனை வீரகேசரியில் வெளியிட்டு, அதன்பின்னர் அவசரகாலச்சட்டத்தையும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தையும் விரிவுபடுத்தி புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கும் அரசின் புலானாய்வுப்பிரிவு திட்டமிட்டிருக்கலாம்.


குறிப்பிட்ட புலிகளின் கடிதம் வீரகேசரியில் மாத்திரமே வெளியானது. அதுவே எமது ஐயப்பாடுகளின் ரிஷிமூலம்.
அந்தச்செய்தி வெளியான அனைத்து வீரகேசரி பத்திரிகை பிரதிகளும் வெளியாகி சில மணிநேரங்களிலேயே விற்றுத்தீர்ந்துவிட்டன. வீரகேசரி குழுமத்தின் மற்றுமொரு பத்திரிகையான மித்திரனிலும் அச்செய்தி வெளியாகி விற்றுத்தீர்ந்துவிட்டது.
எனது சில இலக்கிய நண்பர்கள் என்னுடன் தொடர்புகொண்டு குறிப்பிட்ட வீரகேசரியின் பிரதிகளை பெற்றுத்தருமாறு பலதடவை கேட்டனர். எனினும் பிரதிக்கு தட்டுப்பாடு நிலவியது.


அந்தக்கடிதம் தொடர்பாக பிரபல இடதுசாரி தொழிற்சங்கத்தலைவர் பாலாதம்பு மாத்திரமே வெளிப்படையாக கருத்துவெளியிட்டிருந்தார்.
புலிப்படைத்தடைச்சட்டத்தை அமுல்படுத்துவதற்காகவே, அரசாங்கமே தயாரித்து வெளியிட்ட கடிதம் என்பது அவரது கருத்தாக அமைந்திருந்தது.


அவ்ரோ விமான சம்பவத்திற்கும் அந்தக்கடிதத்திற்கும் ஒற்றுமை இருந்தது. புலிகள் இயக்கம் ‘உரிமைகோரும்’ மரபு அந்தக்கடிதத்துடன் ஆரம்பமாகியது.
அந்தக்கடிதம் வெளியானதும், புலிப்படைத்தடைச்சட்டம் அமுல்படுத்தப்பட்ட நாளன்று இரவுக்கடமை முடிந்து வழக்கம்போன்று வீரகேசரி ஆசிரிய பீடத்தில் பேப்பர் விரித்து படுத்துவிட்டோம்.


நடுச்சாமம் கடந்து அதிகாலை இரண்டு  மணியிருக்கும். ஆழ்ந்த உறக்கத்தை குழப்பியது ஒரு தொலைபேசி அழைப்பு. அடுத்தடுத்த மேசைகளில் படுத்திருந்த தனபாலசிங்கமும் கொம்போசிட்டர் கதிர்வேல் அண்ணையும் எழுந்திருக்க பஞ்சிப்பட்டனர்.


தொலைபேசி தொடர்ந்து சிணுங்கியது.


“ மச்சான் எழும்பி எடுடாப்பா… இந்த நேரத்தில் யார்தான் எடுக்கிறாங்களோ…” என்று எரிச்சல்பட்டார் தனபாலசிங்கம்.
நானும் சலிப்புடன் எழுந்து தொலைபேசியை எடுத்து, ‘ஹலோ’ சொன்னேன்.


மறுமுனையிலிருந்து ஒரு தடித்த ஆண்குரல். புலிகள் இயக்கத்தின் தலைமைக்காரியாலயத்திலிருந்து பேசுவதாகவும் தொலைபேசி ஊடாக ஒரு அறிக்கை தருவதாகவும் அதனை எழுதி ஆசிரியபீடத்தில் கொடுக்குமாறும் அதிகார தோரணையில் அந்தக்குரல் பேசியது.
உறக்கக்கலக்கத்திலிருந்த நான் திடுக்கிட்டு சுதாரித்துக்கொண்டேன்.
“தற்போது இரவு நேரம். இனி மறுநாள் காலைதான் வீரகேசரி அலுவலகம் பணிகளுக்காக திறக்கப்படும். அப்பொழுது தொடர்புகொள்ளுங்கள்” என்றேன்.
“ பரவாயில்லை. நாம் தருவதை எழுதிக்கொடுங்கள்” என்று அந்தக்குரலுக்குரியவர் வற்புறுத்தினார்.
சொல்லச்சொல்ல எழுதினேன். பலதாக்குதல் சம்பவங்ளை பட்டியலிட்டு அவற்றுக்கெல்லாம் தாமே உரிமைகோருவதாக அந்தக்குரல்  சொன்னது.

“ புலிகளின் தாகம் தமிழ் ஈழத்தாயகம். வணக்கம்.” என்று செல்லிவிட்டு தொடர்பை துண்டித்துக்கொண்டார்.
குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு எங்கிருந்தும் வந்திருக்கலாம்.
தனபாலசிங்கத்தை தட்டி எழுப்பி தகவல் சொன்னேன்.
“ எழுதியதை பிரதம ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு படுக்குமாறு” நண்பர் சென்னார்.
திகதி, நேரத்தையும் அதில் குறித்து ஆசிரியரின் மேசையில் வைத்துவிட்டு, மறுநாள் காலை பிரதம செய்தி ஆசிரியர் கடமைக்கு வந்ததும் சொன்னேன்.


மீண்டும் ஒரு மந்திராலோசனை ஆசிரியபீடத்தில் நடந்தது. தொலைபேசி வாயிலாக வந்த அந்த அறிக்கையை வீரகேசரி தீவிரமான கவனத்திற்குட்படுத்தவில்லை.


அக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்துடன் பல்வேறு இயக்கங்களும் களத்திலிருந்து சம்பவங்களுக்கு உரிமைகோரிக்கொண்டிருந்தன.


ஏனைய இயக்கங்கள் புலிகளினால் களத்திலிருந்து வெளியேற்றப்பட்டதும், பல சம்பவங்களுக்கு புலிகள் மறுப்பறிக்கை வெளியிடும் மரபையே தொடக்கியிருந்தனர்.

 

வீரகேசரிக்கு அன்று  தரப்பட்ட அக்கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது:

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

எனது எழுத்துலக வாழ்வில்  இலங்கை அரசியலும் இவ்வாறு கவனத்திற்குள்ளாகிக்கொண்டே வருவது தவிர்க்கமுடியாததாகிவிட்டது !

 

( தொடரும் ) 

No comments: