மேலும் சில பக்கங்கள்

பரமட்டா பொங்கல் உள்ளரங்கத்தில்

.

மழை காரணமாக பரமட்டா பொங்கல்  Pemulwuy Community Center மண்டபத்தில் இடம்பெறும் என்பதை அறியத் தருகிறோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கிறது தமிழ்முரசு .


தீ ஆடிய கோரம் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா

      
             கருகியது உடல்கள் கதறியது  உள்ளம்
             பதறியது நாடு சிதறியது வீடு 
             சுட்டெரிக்கும் வெப்பம் தாக்கியது எங்கும்
             சுடர்விட்டு தீயும் ஆடியது கோரம்  !

             கங்காரு நாடு கருகியது தீயால்
             கணக்கில்லா விலங்கு அக்கினிக்கு விருந்து 
             கண்முன்னே யாவும் கரிமேடாய் போச்சு
             கலக்கமுடன் மக்கள் வெறுமையுடன் நின்றார்    !

             உயிர் பறிக்கும் தீயை உளவுறதியுடனே
             எதிர் கொண்டவீரர் இதயம் உறைகின்றார் 
             அர்ப்பணிப்பு என்னும் அளப்பரிய பண்பை 
             அவுஸ்திரேலிய நாட்டில் அவர்களிடம் கண்டோம்  ! 

பானு பத்மஸ்ரீக்கு கண்ணீர் அஞ்சலி - செ .பாஸ்கரன் ( Bhanu Pathmasri )



.

பானு இறந்து விட்டார், செய்தி கேட்டதும் ஒருகணம் அசைவு நின்றது.  ஆம் பானுவின் அசைவும் நின்றுவிட்டது . நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கும் சக்கரம் பூட்டிய கால்கள். புன்னகை சிந்திய முகம். அன்பு ததும்ப அண்ணா அக்கா என்று உறவு சொல்லி அழைக்கும் பண்பு , இனி இல்லை என்று ஆகிவிட்டது. சிட்னியில் அவர் பணிபுரிந்த அமைப்புக்கள் எத்தனை எத்தனை. இன்முகத்தோடு கேட்டும் வேலைகளை எல்லாம் சிரமேற்கொண்டு அத்தனை அழகாக செய்துமுடிக்கும் திறமை அனைவரையும் கவர்ந்தது. சமூக அமைப்புக்கள் , பக்தி அமைப்புக்கள், வானொலி , பாடசாலை அமைப்புகள் என்று அனைத்திலும் இணைந்து கொண்டு சேவை புரிந்தவர். சேவை என்றுஅமைப்புக்களில் புகுந்துகொண்டு  பலர் தங்களை முன்னிலைப் படுத்தும் இக்காலகட்டத்தில்  பானு தான் ஆற்றும் சேவைகளை மற்றவர்கள் அறியாமலே செய்து முடிப்பார். தன்னலம் கருதாது தன்னை வெளிப்படுத்தாது செயல்பட்டுக்கொண்டிருந்த ஒரு வெள்ளை உள்ளம் கொண்ட பெண்மணி தான் புரிந்த சேவை போதுமென்று கருதிநிறுத்திக் கொண்டுவிட் டார்.  

அவர்பணிபுரிந்த அமைப்புக்கள் அத்தனையும் அதிர்ச்சி அடைந்து நிற்க, தன் சிரிப்பினாலே அனைவரையும் கவர்ந்து கொண்டவர் சிரிக்கமறந்து தூங்கிக் கொண்டிருக்கிறார். Macquarie  Chappal  இரண்டு நாட்களாய்  மக்கள் கூட் டத்தால் நிரம்பி வழிகிறது, அஞ்சலி செலுத்த வந்தவர்கள் எல்லோரது கண்களிலும்  கண்ணீர் வழிகிறது. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்பதுபோல் அவர் அன்பு பாராட்டிய அத்தனை மக்களும் வயது வித்தியாசமின்றி திரண்டு நிக்கின்றார்கள். ஜுவாலை விட்டு எரிந்துகொண்டிருந்த சிட்னி வானத்தில் இருந்து கூட அவரின் இறுதிச் சடங்கு நேரத்தில் கண்ணீர்த்துளிகளாக மழைத்துளிகள் விழுகிறது. பூ அஞ்சலி செலுத்த நீண்ட வரிசையில் நின்றவர்கள்  " அவர் காட்டிய அன்பு இந்த நீண்ட வரிசையை பார்க்கத் தெரிகிறது" என்று பேசுவது காதில் விழுகிறது " அத்தனை கூட்டம் அவரின் இறுதி யாத்திரைக்கு. 

புகைக்குள் புலர்ந்த புத்தாண்டு - (கன்பரா யோகன்)


சிறையினின்றும், அடிமைத் தளையிலிருந்தும்  விடுபட்டோர் விடுதலையானதும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்தோம் என்று சொல்வது வழக்கம். ஆனால் சிறையோ, அடக்குமுறையோ இல்லாமலே கடந்த பல நாட்களாக கன்பராவில் சுதந்திரமாகக் காற்றை சுவாசிக்கமுடியாதுள்ளது.     
அவுஸ்திரேலியா எங்கும் எரிந்த, எரிந்து கொண்டிருக்கும்  தீயின் புகை, இந்நாட்டின் பல மாநிலங்களின் வளி மண்டலத்தையும்  மாசு படுத்தியது.  அதை விடவும் இம்முறை தீயின் புகை கடல் கடந்து நியூசிலாந்து வரை சென்றது  பலருக்கும்  ஆச்சரியம்தான்.
வளி மண்டலத்தில் புகையினால் ஏற்பட்ட இந்த அசுத்தக் காற்றை வடிகட்டிச் சுவாசிப்பதற்காக விசேடமான  P2  வகை  மாஸ்க்குகளை மூக்கையும், வாயையும் மறைத்து அணிய வேண்டியுள்ளது.  புகையினால் காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரோ மீட்டருக்கும்  அதிகமான  பருமனுள்ள  நச்சுச் தன்மை கொண்ட மாசுத் துணிக்கைகளை வடிகட்டுவதற்கே இவற்றைப்  பயன்படுத்துவது வழக்கம்.
2.5 மைக்ரோ மீட்டர் என்பது தலை மயிரின்  தடிப்பின் 0.03 அளவுடையது.        
இந்த விசேடமான   வகை  மாஸ்க்குகள்  உடனடியாக இங்கே கிடைக்கவில்லை.  தற்போது இதன் விநியோகம் ஓரளவு சீரடைந்து தற்போது மூத்த பிரசைகளுக்கு இலவசமாகவும் வழங்கப் படுகிறது.
வளிமண்டல மாசுச் சுட்டெண் அளவிடும் கருவிகள் கன்பெராவில் மூன்று வெவ்வேறு இடங்களில் அளவிடப்பட்டு ஒவ்வொரு மணித்தியாலத்திற்கும்  இணையத் தளத்தில் பதிவிடப்படுகின்றன.  இதை அடிக்கடி பார்த்து அதற்கேற்றாற் போல வீட்டை விட்டு வெளியேறாமல் புகைச் சுவாசத்தைத் தவிர்க்க முடியும், அல்லது மாஸ்குகளை  அணிந்து கொண்டு வெளியே செல்ல முடியும்.
காட்டுத்தீயின் புகை சூழ்ந்த கடந்த டிசம்பரின்  பிற் பகுதியிலிருந்தே  வளிமண்டல மாசுச் சுட்டெண் (Air quality index - AQI) உச்சத்தையடைந்த நகரங்களில் எங்கள் கன்பெரா முதலிடத்தைப் பெறத் தொடக்கி விட்டது.

அவுஸ்திரேலிய காட்டுத்தீ பற்றிய சில குறிப்புகள்




1. ஏன் அவுஸ்திரேலியக் காடுகள் மாத்திரம் இப்படி எரிகிறது? 

முக்கிய காரணம் இங்குள்ள காடுகளில் நிறைந்திருக்கும் யூகலிப்டஸ் மரங்கள். எங்கள் ஊர்ப்பாசையில் சொன்னால் விக்ஸ் அல்லது தைல மரங்கள். அம்மரங்களில் இலகுவில் தீப்பற்றக்கூடிய யூகலிப்டஸ் எண்ணெய் இருக்கிறது. அதனால் பல மரங்கள் வெப்பநிலை அதிகமாகும்போது சூடேறி வெடிக்கவும் செய்யும். அவுஸ்திரேலியாவின் சுதேசிய மரம் இது. அதனாலேயே சிகரட் நெருப்போ மின்னலோ அல்லது இயல்பாகவே சூடேறி வெடித்தோ காடு உடனேயே தீப்பற்றிவிடுகிறது. தவிர இங்கே காற்றில் ஈரப்பதன் இருப்பதில்லை. கொஞ்சம் வெயில் என்றாலும் மண்ணிலும் வளியிலும் குளிர்மை அகன்றுவிடும். இந்த சூழ்நிலையில் காற்றும் சேர்ந்துகொள்ள தீ இலகுவில் பற்றி விரிவடைய ஆரம்பிக்கிறது.
2. அப்படியானால் காட்டுத்தீ அவுஸ்திரேலியாவுக்குப் புதிதில்லையா? காலம் காலமாக இருப்பதா?
காட்டுத்தீ காலம் காலமாக இங்கு இருப்பதுதான். காட்டுத்தீ இங்குள்ள உயிரினச் சுழற்சியின் ஒரு அம்சம். வெப்பநிலை அதிகரித்து மரங்கள் வெடிப்பதன்மூலம் மரங்களின் வித்துகள் பரம்பலடைகின்றன. சூழலைப்பயன்படுத்தி பிழைக்கும் கூர்ப்பின் யுக்தி இது.. யூகலிப்டஸ் மரங்கள் எரிந்தபின்னரும் அவற்றின் கருகிய கிளைகளுக்குள்ளாலிருந்து புதிதாக முளைவிட வல்லவை. தவிர காட்டுத்தீ புதிய ஒரு தாவர சுழற்சிக்கும் சிறிய செடிகளின் வளர்ச்சிக்கும் உறுதுணை செய்யும். காட்டுத்தீயை உள்வாங்கிய கூர்ப்பு இது.


NSW மாநிலப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி - திரு ந.ரகுராம் அவர்களின் சிறப்புச் செவ்வி


“NSW மாநிலப் பாடசாலைகளில் தமிழ்க் கல்வி - வாய்ப்புகளும், சவால்களும்” 

தமிழ்க் கல்வி ஆசிரியர் திரு நவரட்ணம் ரகுராம்  அவர்களின் சிறப்புச் செவ்வி இன்றைய வீடியோஸ்பதி பகிர்வாக


நன்றி கானா பிரபா














அழிந்து வரும் தமிழர் இசைக்கருவிகள் - பகுதி 2 – கொம்பு




கொம்பு – ஊதுகருவி

அமைப்பு
S’ என்ற ஆங்கில எழுத்தை ஒத்த வளைவுகள் கொண்ட இந்த இசைக்கருவி ஐந்து பாகங்களால் ஆனது. சுமார் 5 கிலோ எடையுள்ளது. தற்போது புழக்கத்தில் இருக்கும் கொம்புகள் ஐம்பொன்னால் செய்யப்பட்டவை. இதன் ஊதும் பகுதி சிறுத்தும், அடிப்பகுதி சற்றே விரிந்தும் காணப்படும். “C” என்ற ஆங்கில எழுத்தின் வடிவத்தையுடைய கொம்புக்கருவி கேரளத்திலும் வட இந்தியாவிலும் உண்டு.

குறிப்பு
பழந்தமிழகத்தில் பகுத்தறியப்பட்ட நிலத்திணைகளில் முல்லை நிலத்துக்குரிய இசைக்கருவி இது. முருகக்கடவுள் இக்கருவியை விருப்புடன் இசைப்பதாக கந்தபுராணம் கூறுகிறது. இலக்கியங்களில் ‘கோடு’ என்ற பெயரால் குறிக்கப்படும் இக்கருவியை இசைப்பவர்கள் கோடியர் எனப்பட்டனர்.இதன் ஒசை யானையின் பிளிரலை ஒத்து இருக்கும்.
கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடிப் புசித்த மனிதன், அவற்றின் எலும்புகளில் ஓட்டையிட்டு ஊதி, சத்தம் எழுப்பிய தருணத்தில் உதித்த கருவி இது. காலப்போக்கில் எலும்புகளை விடுத்து விலங்கின் கொம்பை வைத்து ஊத, அதுவே இன்றளவுக்கும் பெயராக விளங்குகிறது.
சோழ மாமன்னன் ராஜராஜன் காலத்தில் இந்த இசைக்கருவி செல்வாக்குப் பெற்று திகழ்ந்தது. ஆலயங்கள் அனைத்திலும் கொம்பு இசைப்பாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.
தமிழகத்தில் குரும்பர் இன மக்கள் கொம்பை தங்கள் குலதெய்வ வழிபாட்டில் இசைக்கிறார்கள். கேரளாவில் பஞ்ச வாத்தியங்களில் ஒன்றாக செண்டை மேளத்தோடு இணைத்து கொம்பு இசைக்கப்படுகிறது. தமிழர்களாகிய நாம் தொலைத்த/மறந்த பல இசைக்கருவிகள் கேரளத்தில் சிறப்புடன் போற்றப்பட்டு வருகின்றது. நேபாள நாட்டில் நர்சிங்கா என்றும் வடஇந்திய மாநிலங்கள் சிலவற்றில் சிருங்கா என்ற பெயரிலும் இக்கருவி இசைக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் கம்பளர் இனத்தவர் இக்கருவியை புனிதமாக கருதி இசைக்கிறார்கள். மகாராஷ்டிரத்தில் இக்கருவி மாநில அரசின் சின்னமாக உள்ளது. துத்தாரி என்று அழைக்கப்படுகிறது.தமிழகத்தில் இதன்நிலை சோகமானது. தற்போது சுவாமிமலையில் மட்டுமே விரும்பிக் கேட்பவர்களுக்கு செய்து தரப்படுகிறது. மேற்கு தமிழக பகுதிகளில் பெரிய சலங்கையாட்டம், கடவு மத்தாட்டம்  ஆகிய கலைகளில் மண் மேளத்துடன் சேர்த்து கொம்பும் இசைக்கப்படுகிறது.

படித்தோம் சொல்கின்றோம்: அம்ரிதா ஏயெம்மின் கதைத் தொகுதி விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் - முருகபூபதி



கிளிநொச்சி அறிவியல் நகரில்  நடைபெற்ற  49 ஆவது இலக்கியச் சந்திப்பிற்கு   வடக்கு, கிழக்கு, தலைநகரத்திலிருந்தும் கனடா, லண்டன், மற்றும்  தமிழ்நாட்டிலிருந்தும் பல கலை, இலக்கிய ஆளுமைகள் வந்திருந்தனர்.
நண்பர் கருணாகரனின் அழைப்பில் அங்கு சென்றிருந்தேன்.
அவுஸ்திரேலியா திரும்பியது முதல் பல்வேறு பணிகள் இருந்தமையால் அந்த இரண்டு நாள் சந்திப்பு குறித்து எந்தவொரு பதிவும் எழுதுவதற்கு   கால அவகாசம் கிடைக்கவில்லை.
ஆனால், அதற்கு வந்திருந்த பலரும் தத்தமது முகநூல் வழியாக படங்களையும் குறிப்புகளையும் வெளியிட்டிருந்ததாக அறிந்தேன். என்னிடம் முகநூல் கணக்கு இல்லையென்பதனால், வேறு எதுவும் தெரியவில்லை!

குறிப்பிட்ட 49 ஆவது இலக்கியச்சந்திப்பில் உரையாற்றிய இலக்கிய நண்பர் எஸ். எல். எம். ஹனீபா அவர்கள், அந்த சந்திப்புக்கு  வருகை தந்திருந்த அம்ரிதா ஏயெம் எழுதிய விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற  கதைத்தொகுதி பற்றி ஒரு வரியில் சிலாகித்துச்சொன்னார்.

அன்றுதான் அம்ரிதா ஏயெம் அவர்களை முதல் முதலில் சந்திக்கின்றேன்.  அவர் இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தில் விலங்கியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் எனவும் இயற்பெயர் ஏ.எம். றியாஸ் அகமட் எனவும் அறிந்துகொண்டடேன்.

அங்கு நின்ற இரண்டு நாட்களும் அவருடன் பழகியதனால், அவரது எளிமையான சுபாவங்களும் அதிர்ந்து பேசாத இயல்புகளும் என்னை பெரிதும் கவர்ந்தன.

இலக்கிய சந்திப்பில் எஸ். எல். எம். ஹனீபா,  இவரது கதைத் தொகுதி பற்றிச்சொல்லும்போது அதில் வரும் இரண்டு பாத்திரங்களின் பெயர்களைச் சொன்னதும் அரங்கம் சிரித்தது. 

ஒன்று ராஜபக்‌ஷ. மற்றது விக்னேஸ்வரன்.

மதிய உணவு இடைவேளையில், அம்ரிதா,  எனக்கு தனது கதைத்தொகுதியை தந்தார். எனது புகலிட நாடு திரும்பியதும் படித்துவிட்டு எழுதுவேன் எனச்சொல்லியிருந்தாலும், ஏற்கனவே  குறிப்பிட்ட பணிச்சுமைகளினால் எழுதுதற்கான நேரம் கடந்துகொண்டேயிருந்தது.

ஆனந்தம் அகநிறைவு அமைய பொங்கல் அமையட்டும் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .... அவுஸ்திரேலியா


  பொங்கலென்று சொன்னாலே
      பூரிப்பும் கூடவரும்
  மங்கலங்கள் நிறையுமென்று
      மனமதிலே தோன்றிவிடும்
 சங்கடங்கள் போவதற்கும்
       சந்தோசம் வருவதற்கும்
 பொங்கலை நாம்வரவேற்று
        புதுத்தெம்பு பெற்றிடுவோம்  ! 

  தைபிறந்தால் வழிபிறக்கும் 
      எனவெண்ணி மகிழுகிறோம்
  கைகட்டி நின்றுவிடின்
         வழியெமக்கு வந்திடுமா
   தைபிறக்க முன்னாலே
          தளர்வின்றி  உழையுங்கள்
   தைபிறக்கும் வேளையிலே
          கைகொடுக்கும் தைமாதம்  ! 

சு.வெங்கடேசனுக்கு இயல்விருது – 2019 “வீரயுக நாயகன் வேள்பாரி” ஒரு சிலாகிப்பு 🏹


கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் 2019ம் வருடத்திற்கான இயல் விருது என அழைக்கப்படும் தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதை 1989ல் இருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தீவிரமாக இயங்கிவரும் கவிஞரும், எழுத்தாளரும் அரசியல்வாதியுமான திரு சு. வெங்கடேசன் அவர்களுக்கு வழங்குவதாக அறிவித்திருக்கிறார்கள்.

வீடியோஸ்பதி சிறப்புப் பகிர்வாக எழுத்தாளர் சு.வெங்கடேசனின் “வீரயுக நாயகன் வேள்பாரி” என்ற வரலாற்றுப் புதினம் குறித்து, அந்த நாவல் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த காலத்தில், வாராவாரம் அந்தந்தப் பகுதிகளைச் சிலாகித்துக் கருத்திட்ட இணைய உலகில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர் திரு கோ.ராகவன் (ஜி.ரா) விடம் முன் வைத்த பின்வரும் கேள்விகளுக்கான ஒலிக் கருத்தாக இந்தப் பெட்டக நிகழ்ச்சி அமைகின்றது.

நளபாகம்



நமக்கு யார் உணவிடுகிறார்களோ அவர்களை நமக்கு மிகபிடிக்கும்


அம்மாவை நினைக்கையில் அம்மாவின் சமையல் மனதில் வராமல் போகாது...



இன்று நம் அனைவரையும் ஊட்டிவளர்ப்பது உணவகங்களும், ஊப்ர் ஈட்ஸும், ஸ்விக்கியும்தான்.



அடுத்ததலைமுறையில் சமையல் என்பது சுத்தமாக ஒழிந்துவிடும். இப்போதே இலையதலைமுறையில் ஆண்/பெண் யாருக்கும் சமையல் தெரியாது.



நம்மை உணவிடுபவர்கள் மேல் நாம் பாசமாக இருப்போம் எனும் லாஜிக்கின் அடிப்படையில் மக்களின் பாசம் உணவகங்கள் மேல் திரும்பியுள்ளது



யுடியூப் விடியோக்கள் பலவற்றில் உணவகம் நடத்துபவர்களை "அக்கா கடை, அண்ணா கடை" என மக்கள் அழைத்து பாசமாக இருப்பதை காணமுடிகிறது. நல்ல விசயம்தான், தவறேதும் இல்லை.



இதேபாசம் ஸ்டார்பக்ஸ், மெக்டாலன்ட்ஸ் என சங்கிலி உணவகங்கள் மேலும் பிராண்ட் அட்டாச்மெண்ட், பிராண்ட் இக்விடி என ஏதேதோ பெயர்களில் காட்டபடுகிறது.



ஆய்வு ஒன்றில் ரொமாண்டிக் காமடி படங்களை பார்க்கும் தம்பதியினர் கூடுதல் அளவில் விவாகரத்து பெறுவார்கள் என சொல்கிறது.



திரையில் இயக்குனரின் கற்பனையில், எங்னெங்கோ பாரின் லொகேசன்களில் எடுக்கபட்ட அழகான காதல்பாடல்களை பார்த்துவிட்டும், அழகான நாயகன், நாயகி வாழ்வில் நிகழ்வதாக காட்டபடும் ரொமாண்டிக் சினிமா காதலை பார்த்து ரசித்துவிட்டு திரும்பினால் நிஜவாழ்க்கையில் தன் அருகே இருப்பது தன் கணவன்/மனைவி....சினிமா காதலை தன் வாழ்வுடன் ஒப்பிட்டு "ஆகா. என் வாழ்க்கை இப்படி இல்லையே?" என மனஸ்தாபம் வந்து விவாகரத்து பெறுகிறார்கள்.



உணவகங்களின் லாஜிக்கும் இதுதான். உணவகங்களின் வெரைட்டி, செயற்கை சுவை வீட்டு சமையலில் இல்லை. அதனால் வீட்டு சமையல் பிடிக்காமல் போய்விடுகிறது, அல்லது நேரம் இல்லை என சொல்லிக்கொள்கிறார்கள்.



அதற்காக பெண்களை பிடித்து மூணுவேளையும் சமையல் கட்டில் ஆழ்த்தணும் என இல்லை...ஆண்கள் சமைக்கவேண்டும், பாத்திரம் கழுவுவதில், வீட்டு வேலைசெய்வதில் பங்கெடுக்கவேண்டும்..மிக எளிமையான, ஆரோக்கியமான, சுவையான ரெசிபிகளை செய்து பழகினால் உணவகம் அதன்பின் பிடிக்காமல் போய்விடும்.


மழைக்காற்று – தொடர்கதை – அங்கம் 18 - முருகபூபதி



டெங்கு காய்ச்சல் குறைந்தாலும்,  இப்போது கற்பகம் ரீச்சரின் மனதில் கருக்கட்டியிருக்கும் காய்ச்சலின் வெக்கை உடனடியாகத்தீராது போலிருக்கிறதே – அபிதா யோசிக்கத் தொடங்கினாள்.
அந்த இரண்டு மாணவர்களும் ஏன்தான் இந்தநேரத்தில் வந்து சங்கடத்தை தந்துவிட்டார்கள்.  அவர்கள்தான் என்ன செய்வார்கள். அதிபரும் இதர ஆசிரியர்களும் தந்த உற்சாகமேலீட்டால், ஓடிவந்துவிட்டார்கள்.
பாவம். வந்து நற்செய்தி சொன்ன அந்த பிஞ்சுகளை உபசரிக்கவும் முடியாமல்போய்விட்டதே. ஆசையோடு எடுத்து வந்துதந்த கேக்கையும் சுவைக்கமுடியாமலிருக்கிறது. 
கற்பகம் ரீச்சருக்கு அபிதா மீது அர்த்தமேயற்ற எரிச்சலை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு  காரணம் கிடைத்துவிட்டது.
இன்று மாலையோ ,  இரவோ ஜீவிகா, சுபாஷினி, மஞ்சுளா வேலையால் திரும்பியதும் கற்பகம் ரீச்சரின் மனதில் கனன்றுகொண்டிருக்கும் எரிமலை வெடிக்கலாம்.  அதனை முதலில் தணிப்பதற்கு வழிதேடவேண்டும்.
கற்பகம்,  ஜெர்மனி சென்று ஏமாற்றத்துடன் திரும்பியதன் பின்னர்தான் குணஇயல்புகள் மாறியிருக்கவேண்டும் எனவும் தனக்குள் அபிதா கற்பனை செய்தாள்.
அந்த மாணவர்களை அனுப்பி கேட்டை பூட்டிவிட்டு உள்ளே திரும்பிய அபிதாவை, தொலைக்காட்சியில்  கல்யாணவீடு நாடகம் பார்த்துக்கொண்டிருந்த கற்பகம் அருகில் அழைத்தாள்.
 “ எத்தனை நாட்களாக உனக்கு அந்தப்பெடியன்களைத் தெரியும். உனக்கு பேர்த்டே கேக் கொண்டு வந்து தருமளவுக்கு இந்த ஊரில் புதிய உறவுகளைத்தேடிக்கொண்டாயோ…? ஜீவிகா இங்கே உன்னை அழைத்தது, வீட்டு வேலைகள் செய்வதற்கும் சொன்னதைக்கேட்டு நடப்பதற்கும்தானே…?! அது என்ன நீயும் ரீச்சர் வேலை பார்க்கத் தொடங்கிவிட்டாய்.  “ தொலைக்காட்சியை அணைத்து, ரிமோட்டை அருகிலிருந்த குஷனில் வீசி எறிந்தவாறு  கற்பகம் கேட்டாள்.
அபிதா தலைகுனிந்து மௌனமாக நின்றாள்.
அந்த ரீமோட்டை தூக்கி எறிந்த தோரணையிலும் கற்பகத்தின் வெஞ்சினத்தின் உக்கிரம்  அபிதாவுக்கு புலப்பட்டது.
 “ இல்லை ரீச்சர்…  “ என்று இழுத்தாள்.
 “ என்ன இல்ல ரீச்சர்… நொல்லை ரீச்சர்…? கேட்டதற்கு பதில் சொல்லு.. “

இலங்கைச் செய்திகள்

யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்

STF கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைது


யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்





யாழ். குருநகர் பகுதியில் சுற்றிவளைப்பு; தேடுதல்-Forces Search Operation-Gurunagar-Jaffna

உலகச் செய்திகள்


உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது   

அமெரிக்க தூதரகம் அருகில் மீண்டும் ரொக்கெட் தாக்குதல்

உக்ரைன் விமான விபத்து: கறுப்பு பெட்டியை அமெரிக்காவிடம் வழங்குவதை நிராகரித்தது ஈரான்

இங்கிலாந்து அரச குடும்ப நிலையில் இருந்து ஹரி தம்பதி திடீர் விலகல்


உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது   

Saturday, January 11, 2020 - 11:10am


"உக்ரைன் விமானம் தவறுதலாகவே சுட்டு வீழ்த்தப்பட்டது"-Iran admits they shot down Ukrainian plane unintentionally

- IRGC இராணுவ மையத்தை நோக்கி விமானம் வந்ததால் அச்சம்

- சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

தமிழ் சினிமா - தர்பார் திரை விமர்சனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படம் என்றாலே சினிமா ரசிகர்கள் அனைவரும் திருவிழா போல் கொண்டாடுவார்கள்.
கடந்த சில வருடங்களாக அவர் படம் பெரியளவில் வசூல் செய்தாலும் ஏதாவது ஒரு குறை சொல்லிக்கொண்டே இருக்க, பேட்ட படத்தில் பழைய எனர்ஜியுடன் ரஜினி களத்தில் இறங்கி கலக்கினார். தற்போது முருகதாஸ் இயக்கத்தில் டபுள் எனர்ஜியுடன் களத்தில் இறங்கிய ரஜினிக்கு இது பெரிய வெற்றியை கொடுத்ததா, என்பதை பார்ப்போம்?

கதைக்களம்

டெல்லியில் யாருக்கும் அஞ்சாது பல என்கவுண்டர்களை செய்து ரவுடிகளை அழித்து வரும் ரஜினிக்கு மும்பைக்கு ட்ரான்ஃஸ்பர் ஆகிறது.
மும்பையில் போலிஸ் பயமின்றி அனைவரும் இருக்க, சார்ஜ் எடுத்த இரண்டே நாளில் ரஜினி மும்பையில் ட்ரக் விற்பவர்களை, பெண் பிள்ளைகளை கடத்துபவர்கள் என அனைவரையும் பிடித்து சிட்டியை தன் கண்ட்ரோலுக்கு கொண்டு வருகின்றார்.
அந்த ரெய்டில் பெரிய தொழிலதிபர் மகனும் மாட்ட, அவனை வெளியே விடாமல் ரஜினி பிடிவாதம் பிடிக்க, தனது பவரை பயன்படுத்தி அந்த தொழிலதிபர் மகனை வேறு நாட்டிற்கு அனுப்பி வைக்கின்றார்.
அதை தொடர்ந்து ரஜினி தன் தந்திரத்தால் அந்த தொழிலதிபர் மகனை கொல்கிறார், பிறகு தான் தெரிகிறது, இறந்தது வெறும் தொழிலதிபர் மகன் இல்லை, மிகப்பெரும் டான் சுனில்ஷெட்டி மகன் என்று, பிறகு என்ன இருவருக்குமிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமே இந்த தர்பார்.

படத்தை பற்றிய அலசல்

ரஜினி ரஜினி என்றும் ரஜினி தான், சூடம் ஏற்றி சத்தியம் செய்தால் கூட இவருக்கு 70 வயது என்று நம்ப முடியாது, அந்த அளவிற்கு அதகளம் செய்துள்ளார்.
வெறப்பான போலிஸ், நயன்தாராவுடன் காதல் என ரவுண்ட் கட்டி அடித்துள்ளார். அதுவும் இரண்டாம் பாதியில் ரெயில்வே ஸ்டேஷனில் நடக்கும் சண்டைக்காட்சி மற்றும் ஜிம் ஒர்க் அவுட் செய்யும் காட்சி இதற்காக ரஜினி ரசிகர்கள் கண்களை மூடிக்கொண்டு டிக்கெட் புக் செய்யலாம்.
படத்தில் முதல் பாதி துப்பாக்கி போல் செம்ம விறுவிறுப்பாக செல்கிறது, இரண்டாம் பாதி பல எதிர்ப்பார்ப்புடன் தொடங்க படத்தின் மெயின் வில்லன் யார் என்பது நமக்கு தெரிந்துவிடுகிறது, ரஜினிக்கு தெரியவில்லை அதனால் அவருக்கு சஸ்பென்ஸ் இருக்கும், ஆனால், நமக்கு பெரிய சஸ்பென்ஸ் ஒன்றும் இல்லை.
ஒரு கட்டத்தில் அட சீக்கிரம் பைட்டுக்கு வாங்கப்பா என்ற மனநிலைக்கு சென்று விடுகிறது. ஆனால், சமீபத்திய ரஜினி படங்களில் இல்லாத செண்டிமெண்ட் காட்சிகள் இதில் கொஞ்சம் தூக்கல் தான், நிவேதா தாமஸும் அழகாக நடித்துள்ளார்.
யோகிபாபு காமெடி கூட பல இடங்களில் க்ளிக் ஆகிறது, நயன்தாரா வழக்கம் போல் செட் ப்ராபர்டி போல் வந்து செல்கிறார்.
படத்தின் மிகப்பெரிய பலம் சந்தோஷ் சிவம் ஒளிப்பதிவு, மும்பை மற்றும் அதன் புறநகர்களுக்குள் நாமே போன அனுபவம், அனிருத் இசையில் பாடல்கள் ஓகே என்றாலும், பின்னணி சற்றே இறைச்சல்.

க்ளாப்ஸ்

ரஜினி ரஜினி ரஜினி தான், மொத்த படத்தையும் தோலில் தாங்கி செல்கிறார்.
படத்தின் முதல் பாதி, விறுவிறுவென செல்கிறது.
இரண்டாம் பாதியில் வரும் எமோஷ்னல் காட்சிகள், அதைவிட அந்த ரெயில்வே சண்டைக்காட்சி மிரட்டல்.
படத்தின் ஒளிப்பதிவு

பல்ப்ஸ்

கிளைமேக்ஸ் இன்னும் கொஞ்சம் அழுத்தமாக இருந்திருக்கலாம்.
வில்லன் கதாபாத்திரம் இன்னும் மிரட்டலாக அமைந்திருக்கலாம்.
மொத்தத்தில் தர்பார் ரஜினி ரசிகர்களுக்கு திருவிழா, ஆனால் முருகதாஸ் சர்காரை தாண்டி ஜெஸ்ட் பாஸ் ஆகியுள்ளார்.



நன்றி  CineUlagam







வேர்களும் விருட்சமும் 2 ஆம் பாகம் - பேராசிரியர் மௌனகுரு

.
மரபிருந்து எவ்வாறு நவீனம் நோக்கிய எனது பயணம் இருந்தது என்பதனைப் பேட்டி மூலம் வெளிகொணர்கிறார் டான் ஒளிபரப்பு நிலைய ஊடகவியல் கலைஞரான சௌமியா
2019 இல் மட்டக்களப்புக்கு வந்து
 மார்கழி மாதக் கொட்டும் மழைக்குள்
 13 எப்பிசோட்டுகளில் என்னை அவர் பேட்டிகண்டு சென்றமையை நான்
 ஏற்கனவே எனது முக நூலில் பதிந்துள்ளேன்
இத் தொடரில் முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாவது 
 2.1.2020 இரவு 8.00 மணிக்கு

https://www.facebook.com/watch/?v=2785360691524490