பூமிக்கு வந்த சாமிகள் ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ... அவுஸ்திரேலியா


               தேடிக் கண்டுகொண்டேன் - திரு

               மாலொடு நான்முகனும்
               தேடித் தேடொணாத் தேவனை யென்னுளே 
               தேடிக் கண்டுகொண்டேன்.

     என்னும் திருமுறைப் பாடல் இறைவனை உள்ளத்தினுள்ளே கண்டு கொண்டதாக உரைத்து
நிற்கிறது.உள்ளத்தினுள் கண்ணுற்றேன் இறைவனை என்று சொல்லும் இந்தத் திருமுறைக்கு இப்போ என்னதான் அவசியம் என்று எண்ணுகிறீர்களா கண்கண்ட தெய்வம் என்கிறோம் கலியுக வரதன் என்கிறோம். பார்க்குமிடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்கிறோம். தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கிறோம். கூப்பிட்ட  குரலுக்கு ஓடிவருவான் என்கிறோம். இப்படிஎல்லாம்  நாங்கள்  நினைத்திருக்கும் கடவுளைக் கண்ணால் கண்டோமா என்றால் அதற்குச் சரியான பதிலை வழங்குவது கடினம். சரியான பதிலைத் தருகிறோம் என்று சிலர் முன்வந்தாலும்கூட அங்கும் சரியான பதில் கிடைக்குமா என்பதும் ஐயத்துக்குரியதே. 

    கடவுளைக் காணமுடியுமா என்பது உலகத்தில் அன்று தொடக்கம் இன்றுவரை மனதுக்குள் பதிந்திருக்கும் பெருவினாவாகும். எதிர்பாராமல் எதிர்பாரா நேரத்தில் யாராவது உதவி நிற்கும் வேளை அவரை " கடவுள் போல வந்தீர்கள் " என்று அழைப்பது நம்வாழ்வில் காண்கிறோம். தக்க சமயத்தில் கைகொடுக்கும் செயலை கடவுளின் செயலாகக் கருதுகிறோம். தக்க சமயத்தில் உதவு நிற்பவர்களைக்கூட  சமூகத்தில் கடவுள் வடிவிலேயே 
காணும் நிலையும் காணப்படுகிறது.  தேவ உலகம் இருக்கிறது. அங்கு தேவன் இருக்கின்றான். அந்தத் தேவன் உதவிடுவான் என்னும் நம்பிக்கை சமுகத்தில் வேரூன்றி இருக்கிறது எனலாம். 
  கடவுளை நம்பாதவர்கூட தம்மை அறியாமலே " கடவுளே " என்று சொல்லு வதையும் காண்கிறோம். கடவுளுக்கென பல பெயர்கள் பல உருவங்கள் கொடுக்கப் பட்டாலும் "கடவுள் ஒருவரே " என்னும் கருத்தை மறுப்பதற்கும் இல்லை என்பதும் கருத்திருத்த வேண்டியதே ஆகும்.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்கூட "  கடவுளை இயற்கை வடிவில் காண்கிறார்கள்"   என்பதும் நோக்கத்தக்கதாகும்.அதுமட்டுமல்ல கடவுள் என்னும் பெயரை உச்சரிக்க விரும்பாதவர்கள் " எமக்கு மேற்பட்ட சக்தி  " என்று அழைப்பதும் கருத்திருத்தக் கூடியதே. 

  மனிதன் வாழுகின்ற இந்தப்பூமி இப்போது அவலத்தின் மடியில் அல்லற்பட்டு நிற்கிறது.ஆர்வருவார் காப்பாற்ற என்று அவலக்குரல் எழுப்புகிறது.சாதரண வாழ்க்கை சீர்குலைந்து நிற்கிறது. சட்டமா ஒழுங்கா சமயமா கோவிலாஎன்றெல்லாம் எண்ணி நிற்கும் நிலையும் காணப்படுகிறது. இனத்துக்காய் சண்டை மொழிக்காகச் சண்டை மதத்துக்காய் சண்டை என்று சண்டை செய்த மனோபாவம் மங்கிப்போய் நிற்கிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர் '
உணர்வுடன் கலக்க ஆரம்பிக்கின்றது.  சாதிகள் பறக்கின்றன. தத்துவங்கள் பறக்கின்றன. ஏதுவரும் எனவறியா ஏக்கமே மிகுகிறது. போதிமரப் புத்தரும் சிலுவைதரும் கர்த்தரும்பிறை காட்டும் அல்லாவும்விடையேறும் பெருமானும் பள்ளிகொள்ளும் திருமாலும் எல்லாமே சரியென்னும் நிலையிப்போ எழுகிறது. 
     எல்லாக் கடவுளும் எல்லா மதங்களும் இணைகின்ற புரட்சியைத்தான் இப்போது காணுகிறோம். இந்தப் புரட்சிக்கு வித்திட்டு சமத்துவத்தை சமநிலையை சமதர்மத்தை உருவாக்கியது கொடுமையான கொரனோ என்னும் நோயாகும்.
  இது ஏன் வந்தது யார் பரப்பியது இதில் அரசியல் உண்டா பொருளாதார நோக்குண்டா என்றெல்லாம் வாதப்பிரதி வாதங்கள் நடந்து கொண்டு இருக்கிறது. ஒவ்வொருவரும் விமர்சனங்களையும் விதண்டா வாதங்களையும் வெளிப்படுத்துவதில் காலத்தை கழிக்கிறார்கள். தொலைக்காட்சிகள் , முகநூல்கள் , கைபேசிகள் யாவும் சரியான வகையில் பயன்படாமல் போகும் நிலையும் காணப்படுகிறது. 
   இப்படியான விடயங்களை எதற்காக இங்கு காட்டுகிறீர்கள் என்னும் வினா உங்கள் எல்லோர் உள்ளத்திலும் நிச்சயமாக எழாமல் இருக்கவே முடியாது ! 
அவசியம் கருதியே சொல்லும் நிலை !அனைவரின் மனத்திலும் அமரவேண்டிய நிலை ! அதனாலேயே இத்தனை விளக்கங்கள் ! 
    கொரனோ வந்து கோரமாய் தாண்டவம் ஆடி பல உயிர்களைப் பறித்தபடி இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்க்கவோ பேசவோ கைகுலுக்கவோ முடியாத நிலையை கொரனோ ஏற்படுத்தி விட்டது. உறவுகள் பிரிவுகள் ஆகிவிட்டன. கூடினால் ஆபத்து !  குலவினால் ஆபத்து ! நினைக்கவே இருள் எம்மைச் சூழந்த உணர்வே எழுகிறது.
    இந்த நிலையில் வைத்தியர்களும் தாதியர்களும் எப்படி இருக்கிறார்கள் என்றால் மண்மீது வந்த மருத்துவ தெய்வங்களாய் மாறியிருக்கிறார்கள் என்று தான் கொள்ள வேண்டும். சாதாரண வேளையில் மருத்துவம் பார்ப்பதைவிட தற்போதுள்ள நிலையில் மருத்துவம் பார்ப்பதும் கம்பியில் நடப்பது போல் என்றுதான் சொல்லவேண்டும். கொரனோ தொற்றியவர்களைப் பராமரிக்கும் மருத்துவர்களே கொரனோவுக்கு இலக்காகி உயிரை இழக்கும் நிலைகூட நேர்கிறது. அதனால் தற்போது மருத்துவர்கள் கம்பியில்த்தான் நடக்கிறார்கள்.
   வைத்தியர்கள் தாதியர்கள் வானாத்தால் வந்து குதித்தவர்கள் அல்ல. அவர்களுக்கும் எங்களை ஒத்தவர்களே. குடும்பம் அவர்களுக்கும் இருக்கிறது. அன்பான கணவன் ஆசையான குழந்தை  அன்பான மனைவி அணைத்திடக் குழந்தை அப்பா அம்மா சகோதரங்கள் என்று உறவுகளால் பிணைக்கப் பட்டே அவர்களும் இருக்கிறார்கள். அப்படி அவர்கள் இருக்கிறார்கள் என்பதை நாம் மறந்தே விடுகிறோம். வைத்தியசாலை சென்றால் அது எந்த நேரமானாலும் எம்மைக் கவனித்துப் பராமரிக்கும் கடமை அவர்களுக்கு உண்டு என்பதை மட்டுமே நாமெல்லோரும் நினைவில் வைத்தபடியே இருக்கி றோமே தவிர - அவர்களும் மனிதர்களே அவர்களுக்கும் களைப்பு இருக்கும்.
அவர்களுள்ளும் பல நினைப்புகள் ஓடும் என்பதையெல்லாம் எவருமே எண்ணுவதே இல்லை. வைத்தியத்துக்குப் போய்விட்டால் சுகமாக்கி அனுப்புவது அவர்களது கடமை மட்டுமே என்றுதான் எண்ணுகிறோம். அப்படி நினைப் பதற்கு நாம் ஒருவரல்ல. எம்மைப் போல் பலரும் அங்கு வந்து நிற்கிறார்கள். அவர்கள் அனைவரையும் முகங்கோணாமல் சினங்காட்டாமல் பசியை நித்திரையை மறந்து மருத்துவர்கள் தாதியர்கள் வேலை செய்யவில்லை பணியாற்றுகிறார்கள் என்பதை எம்மில் பலரும் நினைத்துக்கூடப் பார்ப்பதே இல்லை.
   இரத்தமும் ,சதையும் ,மரணமும் , ஓலமும் அவர்களின் நாளாந்த வாழ்க்கை ஆகிவிட்டது. அவர்கள் படுக்கைக்குப் போனாலும் அவர்கள் கனவில்கூட  ஓலமிட்டு நிற்பவரும் மரணவாயில் நிற்பவரும்தான் வந்துநிற்பார்கள். கார் இருந்தும் நல்லவீடிருந்தும் , நல்லபடுக்கை இருந்தும் அவர்களுக்கு நல்ல நித்திரைதான் வந்திடுமா ஒருகணம் நாம் நினைத்துத்தான் பார்த்ததுண்டா
   நாளாந்தம் இதுதான் அவர்களது நிலை. ஆனால் இப்போது இந்த நிலை இன்னும் மோசமாகிவிட்டது . இதுவரை நாளும் பணிக்குச் சென்றால் பணி முடிந்தபின்னர் வீடு வந்திடலாம். சிறிது பொழுதாவது குடும்பத்துடன் இருந் திடலாம். ஆனால் கொரனோவின் கோரத்தால் மருத்துவர்களோ தாதிகளோ
மருத்துவ மனையிலேயே இருக்கும் நிலை உருவாகிவிட்டது. 
  பணிகூட இப்போது பயமாகிவிட்டது. தொற்றிவிடும் எனும் பயத்தால் எட்ட நிற்கும் நிலை. தொற்றிவிடும் எனும் பயத்தால் தொடமுடியா நிலை. பெற்ற பிள்ளை வீட்டில். பெற்றவரும் வீட்டில். கட்டிய கணவனும் வீட்டில். தொட்டிலிலும் ஒரு பிள்ளை. பால் கொடுக்க தாயில்லை. பார்க்கத்துடிக்கும் பிள்ளைக்கு அம்மாவைப் பார்க்கவே முடியாத நிலை. 
    மூன்றுபிள்ளைகளின் தாயான மருத்துவர் பிள்ளைகளைக் கட்டி அணைத்து முத்தமிட்டுப் பிரியவிருப்பின்றி மருத்துவமனை செல்கின்றாள். சென்றவள் வீட்டுக்கு வரமுடியா நிலை. சின்னக் குழந்தைகள் அம்மாவைக் காணாது 
அடம்பிடிக்கின்றன. அப்பாவினால் அம்மாவை அணுகமுடியாத நிலை. கை பேசியில் கதைக்கிறார்கள். காணொளியில் பிள்ளைகளுக்கு முத்தம் இடுகிறாள். இரண்டுவாரத்தின் பின் காணொலியில் முத்தமிட்ட தாய் காணாமலே போய்விடுகிறாள். கட்டியகணவன் கதறி அழுகிறான். மருத்துவ மாது மனிதம் காக்க தெய்வமாகிறாள்.!
  இங்கிலாந்தில் இருய அறுவைச் சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றியவர் இரண்டுபிள்ளைகளின் தந்தை. அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர். சகமருத்துவர்களால் பெருதும் மதிக்கப்பட்டவர். மருத்துவமனையிலேயே மனைவியைக் குழந்தையைத் தவிக்கவிட்டு மரணத்தை தழுவிக் கொள்ளுகின்றார்.இந்தியரானவர் இங்கிலாந்து சென்று மருத்துவத்தில் பெரும்புலமை பெற்றார். மருத்துவத்துக்கே தன்னையே கொடுத்தும் விட்டார்.மாடிமனை வீடிருந்தும் அவர் குடும்பத்தையே பார்க்காமலேயே பணியிலேயே பலியாகிவிட்டார்.
   வீடுசென்றால் மனைவிக்கும் குழந்தைக்கும் தொற்று பரவிடும் என்பதால் தனது வாகனத்தையே வீடாக்கி அதிலேயே தங்கி நோயாளரைக் கவனித்து வருகிறார் என்னும் செய்தியைப் பார்க்கும்பொழுது அவரை வணங்காமல் இருக்கத்தான் முடியுமா? மனைவியுடன் குழந்தையுடன் கைபேசியில் மட்டுமே தொடர்பில் இருக்கும் அவரும் எங்களைப் போல் ஒருவர்தானே !
  வருகிறேன் என்று சொல்லி விடைபெற்ற மருத்துவர் திரும்பி வரவேயில்லை. இரண்டு வயதுக் குழந்தையை காணொளி வாயிலாகக் கண்டு தனது அன்பு முத்தத்தை அளிக்கிறாள் அந்த மருத்துவ மாது.தாயைக் கண்ட குழந்தை அழுகிறது.அழுகை தாங்கமுடியாக் கணவன் குழந்தையுடன் மருத்துவமனை செல்கிறான். மனைவியோ பக்கம் வரமுடியாமல் தூரவே நிற்கிறாள். தாயைக் கண்ட மழலை தவித்து அழுகிறது. தாயும் தவிக்கிறாள். அழுகிறாள். பார்த்திருக்கும் ஏனைய பணியாட்களும் அழுகிறார்கள். கணவன் கலங்கிய கண்களுடன் அழுங்குழந்தையுடன் ! இதுதான் மருத்துவர்களின் நிலை ! அழுகையை ஓரங்கட்டிவிட்டு தனது பணியில் இறங்கிவிடுகிறாள் அவள். இது இறை நிலை அல்லவா ? விருப்பை வெறுப்பை வெளிக்காட்டா நிலை ! பற்றற்ற நிலை !  
   தன்கையால் உணவு கொடுத்து தயாளமாய் தடவிக் கொடுத்த பலரின் மரணத்தை கண்டதும் தற்கொலை முயற்சிக்கே பல தாதியர்கள் சென்று விடுகிறார்கள். பேசியபடி வந்தவர்கள் பேசாமலே ஆகிவிடுதலைக் காணும் தாதியர்கள் எப்படி இருப்பார்கள் ?மருத்துவர்கள் சேவை ஒருவிதம் தாதியர்கள் சேவை இன்னொருவிதம் " மக்கள் சேவை மகேசன் சேவை " இதைத்தான் மருத்துவர்களிடமும் தாதியரிடம் காணுகிறோம். " மக்கள் சேவையே மகேசன் சேவை " என்பதை மகான்களே மொழிந்திருக்கிறார்கள்.
மகான்களின் வழியில் செல்லும் மருத்துவர்களும் தாதிகளும் மண்ணுலகில் இன்று " கண்கண்ட தெய்வம் " ஆகின்றார்.
  விதண்டாவாதம் பேசுவதும், விஷமத்தனமாய் கருத்துக்களைப் பதிவிடுவதும் குறைசொல்லி நிறைவடைவதும், நாட்டுநிலை புரியாமல் செயற்படுவதும் சமூக அக்கறையின்மையினயே காட்டும்.வீட்டுக்கே வரமுடியாமல் நாட்டினைக் காத்திட தம்வாழ்வினையே அர்ப்பணிக்கும் மருத்துவர்களையும் தாதியர்களையும் வணங்கவே வேண்டும். " மானிட உருவில் பூமிக்கு வந்ததெய்வங்களே "  இவர்கள் என்பதை யாவரும் மனமிருத்தல் அவசியமாகும்.   



No comments: