ஒரு மனிதநேயவாதியின் தார்மீகக் குரலாக ஒலிக்கும் நூல் நடேசனின் "எக்ஸைல்" குறித்து எனது நோக்கு - கலாநிதி மு. ஸ்ரீகௌரிசங்கர்


எக்ஸ்ஸைல் என்றால் என்ன? ஆங்கிலத்தில் பின்வருமாறு விளங்கப்படுத்தியுள்ளார்கள்.
Exile: The state of being barred from one's native country, typically for political or punitive reasons.
அதாவது ஒருவர் தேசத்தினின்று அகற்றப்படுதல் அல்லது வேறு நாட்டில் தலைமுறை வாழ்வு வாழுதல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இது ஏன் நடைபெறுகிறத?  என்பதற்கு பல விளக்கங்கள் கொடுக்கப்படமுடியும், என்றாலும் நடேசன் அவர்கள் இங்கு தனது அனுபவம் மூலம் வித்தியாசமான ஓர் உணர்வை பதிவுசெய்துள்ளார்.
" 1984 ஏப்ரலில் எனக்கு,  குருட்டுப் பூனை இருட்டில் பாய்வது போன்றது இந்தப்பயணம். நாட்டைவிட்டு வெளியேறும் பலர் வியாபாரம், உல்லாசப்பயணம், முதலான காரணங்களினால் பிரியும் போது அந்தப்பயணம் உணர்வு கலந்தது அல்ல. ஆனால்,  நான் இப்போது வெளியேறும்போது எனது நாடு, மக்கள், உறவினர் முதலான பந்தங்கள் அறுபடுகிறது. எட்டு மாத கர்ப்பிணியான மனைவியையும் இரண்டு வயதே நிரம்பாத மகனையும் விட்டு எதற்கு பிரதேசம் போகிறோம் என்பது தெரியாமல் எனது பயணம் தொடங்குகிறது." என்று நடேசன் தனது எக்ஸையில் அனுபவத்தை ஆரம்பிக்கிறார்.
நனவிடை தோய்தல் உத்தியில் எழுதப்பட்டுள்ள இந்த நூல்,  எமது வாசகர்களுக்கு புதிய வரவு. அவர்கள் இதுவரையில்  தங்கள் வாழ்க்கையில் பார்க்கத்தவறிய பக்கங்களை இந்த நூலின் மூலம் அறிந்துகொள்வதற்கான வாய்ப்புக்களை நடேசன் அவர்கள் ஏற்படுத்தியுள்ளார்.
இந்நூலை அறிமுகம் செய்வதில் நான் மிகவும் பெருமை அடைகிறேனென்று கூறினால் அது மிகையாகாது. அதற்குமுன் யார் இந்த நடேசன்? மற்றும் அவரின் பின்புலம் என்ன? என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

இவரது தொழில் விலங்கு மருத்துவம். அது சார்ந்த உண்மையும் புனைவும் கலந்த கதைகளையே தொடக்கத்தில் எழுதியவர். அத்தகைய எழுத்துக்களின் ஊடாகவே சிறுகதை, நாவல், பத்தி எழுத்துக்கள், பயண இலக்கியங்கள் என தனது பார்வையை விரிவுபடுத்திக்கொண்டவர்.
இவரது அத்தகைய படைப்புகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளன.  வடக்கில் எழுவை தீவில் பிறந்து, அங்கு ஆரம்பக்கல்வியைக்கற்று, யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரியான இந்துக்கல்லூரியில் உயர்தர வகுப்பை தொடர்ந்த காலத்தில் இலங்கை அரசியலின் அரிச்சுவடியும் தெரியாமல், அங்கு 1974 ஆம் ஆண்டில் நடந்த நான்காவது உலகத்தமிழாரய்ச்சி மாநாட்டு நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்கச்சென்றவர்.
அதிலிருந்து  அவரின் அரசியல் சார்ந்த பயணம் அவரை அறியாமலே அவருடன் ஒட்டிக்கொண்டது.
அங்கு நடந்த நிகழ்வுகள் மற்றும் அநியாயச்ச்சாவுகள் என்பவற்றை தன கண் முன் கண்ட நடேசன் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் இவரது அந்த மாணவப்பருவம், அன்றைய அரசின் கல்வி மீதான தரப்படுத்தலையும் எதிர்கொண்டது.  அக்காலப்பகுதியில் வடபகுதி மாணவர்களை அரசியல் எவ்வாறு  ஆட்கொண்டது என்பதை இந்த நூலில் இவ்வாறு பதிவுசெய்கிறார்.
" எனது வயதையொத்த இளைஞர்கள் அரசியல் சாயம் படாமல் தப்பமுடியாது. ஹோலி பண்டிகை காலத்தில் ஹோலி பண்டிகை கொண்டாடாதவனும் வர்ணத்தை பூசிக்கொள்வதுபோல் அரசியல் வாடை என்னைத் தழுவியது."
மேலும் பல சுவாரசியமான சம்பவங்களையும் இந்நூலில் நடேசன் பதிவுசெய்துள்ளார்.
அந்தக்காலத்திய   பிரபலமான "கல்லெறி" கலாச்சாரத்தையும் அதனை தொடர்ந்து வந்த கார் இலக்கத்தகடுகளில் உள்ள சிங்கள  ஸ்ரீ அளிக்கும் போராட்டம் என்பவற்றையும் இதில் பதிவுசெய்துள்ளார். அன்று நிகழ்ந்த கல்லெறிதல்தான், காலப்போக்கில் துப்பாக்கி வேட்டுக்கள் என்று சொல்ல வரும் நடேசன், "புடையன் பாம்பு அக்காலத்தில் குட்டியாக இருந்தது"  எனச்சொல்லிவிட்டு,  அந்த அங்கத்தை கடந்து செல்கிறார். இதில் எவ்வளவு உண்மை புதைந்துள்ளது என்பதை நீங்கள் வாசிக்கும்  போது புரிந்துகொள்வீர்கள்.
நடேசன் அவர்கள் ஒரு ஆயுதம் ஏந்திய போராளியா? அல்லது இயக்கங்களின் அரசியல் ஆலோசகரா ? அல்லது அரசியல் கட்சித் தலைவரா ? இல்லவேயில்லை. அப்படியென்றால் அவரால் எவ்வாறு இப்படி ஒரு போராட்டகால நிகழ்வுகளின்  உண்மையை பதிவுசெய்ய முடிந்தது?
நடேசன், ஆயுதம் ஏந்திய எந்தவொரு தமிழ் இயக்கத்திலும் இணைந்திராதுவிட்டாலும், அவற்றின் தலைவர்கள், தளபதிகள், மற்றும் போராளிகளுடன் உறவைப்பேணியிருப்பதும் தெரிகிறது. அவரின் இந்த உறவின் பகிர்வே இந்நூல் என்றால் அது மிகையாகாது.
இந்த நூலில் ஒவ்வொரு அங்கத்தையும்  இலங்கை தமிழர் அரசியலில் ஈடுபட்டவர்களை சுயவிமர்சனம் செய்யத்தூண்டும் விதமாகவே எழுதியிருப்பதுடன் எமது சமூகத்தையும் கேள்விக்குட்படுத்துகிறார்.
அதுமட்டுமல்ல, ஈழத்துக்கான ஆயுதப்போராட்டம் அதன் ஆரம்ப எத்தனிப்புகளுடன் தீவிரமடைந்து 1980 களில் இயக்கங்கள் சேர்ந்து தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அமைப்புக்கள் சேர்ந்து உருவாக்கிய தமிழர் மருத்துவ நிறுவனத்தின் செயலாளராக இருந்தவர் இந்த நடேசன். அவ்வேளையில் அந்தஅமைப்பில் இருந்த 5 பிரதான இயங்கங்களின் தலைவர்களோடு இருந்த நட்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து செயற்பட்ட மற்றும் முரண்பட்ட  நிகழ்வுகள் மூலம் பெற்ற அனுபவங்களின் தொகுப்பே இந்த நூலாகும்.
இலங்கை - தமிழக,   தமிழ் அரசியல் தலைவர்கள் ஆயுதம் ஏந்திய இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் தொண்டில் ஆர்வம் காண்பித்த மருத்துவர்கள், ஆயுதத் தரகர்கள், இந்திய மத்திய உளவுப்பிரிவைச்சேர்ந்தவர்கள், காணமலாக்கப்பட்டவர்கள்  என பலரும் இந்த எக்ஸைலில் வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, சில பல சிரிக்கவைக்கும் நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளார். உதாரணமாக இலங்கையிலிருந்து தமிழ்நாடு சென்ற நடேசன் இராமேஸ்வரத்தில் இந்தியக்கரையில் இறங்கும்போது,கையில் பணம் இருந்தாலும் அதனை செலவிடாமல், எடுத்துச்சென்ற சிங்கப்பூர் குடை, லக்ஸ் சோப் முதலானவற்றைக்கொடுத்து சமாளிக்கும் காட்சி, இராமேஸ்வரத்தில் இறங்கியதும் ரயில் ஏறி சென்னை செல்லாமல் அந்த ஊரைச்சுற்றிப்பார்க்கும் போது சந்நியாசி ஒருவரினால் "கங்காதீர்த்தம் " பருகும் காட்சி என்று பல இடங்களில் நடேசன், படிம உத்தியோடும், உவமான உவமேயங்களுடனும், அங்கதமாகவும் காட்சிகளை சித்திரிப்பதனால், இந்த நூலை வாசகர்கள் மிகவும் சுவாரசியமாக அனுபவிக்கமுடியும்.
இவ்வாறு ஒவ்வொரு அங்கத்திலும் பல துல்லியமான காட்சிகள் வருகின்றன.
மதவாச்சியா, அநுராதபுரம் பிரதேசங்களில் மிருக வைத்திய பணிநிமித்தம் வாழ்ந்த காலத்தில் அமைச்சர் தொண்டமான் உட்பட பிரதேச நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் பழகியிருப்பவர் நடேசன்.  அவர்களுடன் உறவாடிய பாணியிலேயே  சென்னையில் அக்கால கல்வி அமைச்சர் அரங்கநாயகத்துடனும் உரையாடும்போது, தமிழக திராவிட கலாசாரத்தின் பிரகாரம் வணக்கம் சொல்லாதமையினால், அமைச்சரின் அடியாளிடம்  வாங்கிக்கட்டிக்கொள்கிறார்.
இரண்டு நாடுகளின் அரசியல்வாதிகளிடத்திலும் அடியாள்களிடத்திலும் நிலவும் வேறுபாடு இங்கு அம்பலமாகின்றது.
மேலும் ஒரு சுவாரசியமான,  ஆனால் கனமான செய்தியாக ஈழப்போராட்டத்திற்கு ஆயுதங்களை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டவர் சிங்கப்பூரில் கைதாகி மரணதண்டனைக்குற்றவாளியாகி, இறுதிநேரத்தில் அங்கு நேர்ந்த அரசியல் மாற்றத்தினால் தப்பிவந்து சென்னையில் அடைக்கலமாகின்றார்.
அவருடைய அடுத்த எதிர்காலத்திட்டம் என்ன தெரியுமா...? சென்னையில் ஒரு தோசைக்கடை வைத்து பிழைப்பது! இந்தக்காட்சி ஈழப்போராட்டத்தின் மொத்த வடிவத்தையே கேள்விக்குட்படுத்துகிறது. அதுமட்டுமல்ல இதன்மூலம் ஒரு போராளி எவ்வளவுதூரம் நொந்துபோயுள்ளான் என்பதையும் அறிய முடிகிறது.
இன்றும் இந்த அவலநிலை ஈழத்தில் தொடர்வது மிகவும் கவலையான ஒரு நிகழ்வாகும்.
இயக்கங்கள் கூட்டணியாக இருந்தபோதும் அவர்களிற்கு இடையில் இருந்த நம்பிக்கையின்மையையும் எதிர்காலத்தில் இக்கூட்டணியின் நிலைமை குறித்த தனது அவநம்பிக்கையையும் நாசூக்காக குறித்துள்ளார்.
ஈழப்போராட்டத்தில் ஆயுதக்கலாசாரத்திற்கு பலியாகாமல், ஆயுதங்களை நேசித்தவர்களுடனெல்லாம் நெருங்கிப்பழகியிருக்கும் நடேசன், தனது இந்துக்கல்லூரி, பேராதனை பல்கலைக் கழக வாழ்க்கை, வட மத்திய மாகாணத்தில் விலங்கு மருத்துவ பணி, தென்னிந்தியாவில் மருத்துவ நிலையத்தில் மேற்கொண்ட தன்னார்வத்தொண்டு,  போரில் கால் ஊனமுற்றவர்களுக்காக ஜெய்ப்பூர் வரையும் சென்ற அனுபவங்கள் என்பனவற்றை  விரிவாக நினைவுக்குறிப்புகளாக  பதிவுசெய்துள்ளார். இந்த அனுபவங்களின் திரட்சியாக நடேசன் மெல்பன் வந்து இறங்கியதும் நடக்கும் சந்திப்பில் தனது கைக்குட்டையை எடுத்து காண்பித்து, "போரில் துன்புற்ற மக்களின் கண்ணீரைத் துடைப்பதற்கு இனியாவது பயன்படுங்கள்" என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப்பின்னர் பலராலும் எழுதப்பட்ட நூல்கள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள் என்பவற்றில் பெரும்பாலானவை சுயவிமர்சனப்பாங்கில் எழுதப்பட்டிருந்தவை. இலங்கை - இந்திய பாதுகாப்புத் தரப்பைச்சேர்ந்தவர்களும் ஐக்கியநாடுகள் சபைக்காக இலங்கையில் பணிபுரிந்த மேற்குலக வாசிகளும், ஆண்கள் - பெண்கள் உட்பட முன்னாள் போராளிகளும் , படைப்பாளிகளும் எழுதும் நூல்கள், ஆவணங்கள், ஆய்வுகள் வந்தவண்ணமிருக்கின்றன.
போர் முடிவடைந்த  பின்னர் வெளிவந்த பல நூல்கள், அதனை நியாயப்படுத்தியும் கேள்விக்குட்படுத்தியும் பூகோள அரசியலை முதன்மைப்படுத்தியும், தவறவிட்ட இராஜதந்திரங்களை சித்திரித்தும் வெளியாகியிருக்கும் பின்னணியில்,  எந்தப்பக்கமும் சாராத ஒரு மனிதநேய வாதியின்   தார்மீகக்குரலாக நடேசனின் எக்ஸைல் ஒலிக்கிறது.
எக்ஸைல் -  இலங்கையில் மகிழ் பதிப்பகத்தின் புதிய வெளியீடு.  நடேசனுக்கு எமது வாழ்த்துக்கள்.
(மெல்பனில் அண்மையில் நடந்த எழுத்தாளர் நடேசனின்  நூல்களின் அறிமுக - விமர்சன அரஙகில் கலாநிதி மு. ஶ்ரீகௌரி சங்கர் "எக்ஸைல் " நூல் தொடர்பாக சமர்ப்பித்த மதிப்பீடு)

-->













No comments: