11/11/2018 ஜனாதிபதியை எதிர்த்து பாரளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பற்ற முயன்றமைக்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி நான் எதிர்கொள்ள தயார் என  முன்னாள் அமைச்சர் கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பலகட்சிகளின் தலைவர்கள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் செல்லப்போவதாக தெரிவித்துள்ளனர்.பாராளுமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கையின் சட்டபூர்வதன்மை குறித்து தீர்மானிப்பதை, ஜனாதிபதி தடுத்துள்ளதன் காரணமாக இந்த நடவடிக்கை சட்டபூர்வமானதா என்பதை உச்சநீதிமன்றமே தீர்மானிக்கவேண்டும்.
பாரளுமன்றத்தின் பாதுகாவலன் என்ற அடிப்படையில் நான் கடந்த இரண்டுவாரகாலமாக ஜனாதிபதி பாராளுமன்றத்தின் உரிமைகளை பறித்ததையும் மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்களை முடக்கியதையும் நான் பார்த்துள்ளேன்.
இலங்கையின் இறைமையின் இயந்திரமான பாராளுமன்றம் குறித்து ஜனாதிபதி வெளிப்படுத்திய வேண்டுமென்ற அலட்சியம்காரணமாக  இலங்கையின் சாதாரண பொதுமக்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் இதேபோன்று துஸ்பிரயோகத்திற்குள்ளாக கூடிய ஆபத்து உருவாகியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் அரசமைப்பை பாதுகாப்போம் என சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட அனைத்து அரச பணியாளர்களையும் அந்த சத்தியப்பிரமாணம் குறித்து சிந்திக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.நாங்கள் ஏன் அரசமைப்பு என்ற ஆவணத்திற்கு கட்டுப்படவேண்டும் , ஏன் தனியொரு மனிதரிற்கோ அதிகாரத்திலுள்ளவர்களிற்கோ கட்டுப்படக்கூடாது என எங்களை நாங்களே கேள்வி கேட்க வேண்டும். எங்களது  தலையாய கடமை என்பது அரசமைப்பிற்கேயுரியது.
நாட்டின் அனைத்து அரசபணியாளர்களையும் எங்கள் தாய்மண்ணின் அதிஉயர் சட்டத்திற்கான தங்கள் கடப்பாடுகளை நினைத்துப்பார்க்குமாறும் பொதுச்சேவை பொலிஸ்சேவை மற்றும் நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்குமாறும். நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அரச ஊழியர்களை அவர்களிற்கு கிடைக்கும் சட்டவிரோதமான உத்தரவுகளை நடைமுறைப்படுத்த மறுக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அரசமைப்பின் கீழ் கடப்பாடுகள் வழங்கப்பட்டுள்ள அனைத்து பிரஜையும் நாடு குறித்தே முதலில் சிந்திக்கவேண்டும் கட்சி அல்லது தனிப்பட்ட தொடர்புகள் குறித்து சிந்திக்க கூடாது.
எமதுநாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்காக நாங்கள் அனைவரும் தேசப்பற்றுடனும் சுதந்திரமாகவும செயற்படவேண்டும்.
நவம்பர் 14 ம் திகதி பாராளுமன்றம் கூடவிருந்தவேளை ஜனாதிபதி உரையாற்றுவதை நான் தடுக்கமுயன்றேன் என போலியான  வெளிவிவகார அமைச்சரும் நன்கு மதிக்கப்பட்ட அரசியல்வாதியுமானவர் பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளமை குறித்து அறிந்து நான் கவலையடைந்தேன்.இவ்வாறான அனுமானத்தை முன்வைத்துள்ள அமைச்சர் இதன் காரணமாகவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.
நான் குறிப்பிட்ட அமைச்சர் தனது சகாக்களின் நடவடிக்கைள் குறித்து நேர்மையான நம்பத்தகுந்த  காரணங்களை முன்வைத்திருந்தால் அது சர்வதேச சமூகத்தின் மத்தியில் எங்கள் நாடு அவமானப்படுவதை   குறைத்திருக்கும் என நான் கருதுகின்றேன்.
அவரது கட்டுக்கதையை அடிப்படையாக வைத்து அவரது சகாக்கள் பலர் என்னை சிறைக்கு அனுப்பபோவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சபாநாயகரினதும் பாராளுமன்றத்தினதும் செயற்பாடுகள் எப்போதும் ஜனாதிபதியின் விருப்பத்திற்கமைவாக காணப்படாது. 1641இல் பொதுச்சபையின் சபாநாயகர் தனது உறுப்பினர்கள் முதலாம் சார்ல்ஸ் மன்னனால் கைதுசெய்யப்படுவதிலிருந்து அவர்களை பாதுகாத்தது  முதல் பாராளுமன்றத்தின் இந்த சுதந்திரம் காணப்படுகின்றது.
அரசாங்கத்தின் சட்டபூர்வதன்மை குறித்த வாக்கெடுப்பை நடத்துமாறு பாராளுமன்றத்தின் 124 உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்தார்கள்.
116 உறுப்பினர்கள் என்னை சந்தித்து வேண்டுகோள் லிடுத்தனர், ஏனைய 8 உறுப்பினர்கள் என்னை தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு இந்த அழைப்பை விடுத்தனர்.
பாராளுமன்றத்தின் சபாநாயகர்கள் முன்னர் நடந்துகொண்டது போல நானும் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை ஏற்று வாக்கெடுப்பை நடத்த அனுமதிப்பேன் என தெரிவித்தேன்
அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிறுத்துமாறு எந்த உறுப்பினரும் கேட்டுக்கொள்ளவில்லை நானும் அதனை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.
முன்னாள் படையதிகாரி என்ற அடிப்படையில் நான் எப்போதும் நாட்டிற்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராகயிருக்கின்றேன். ஜனாதிபதியை எதிர்த்து பாரளுமன்றத்தின் உரிமைகளையும் அரசமைப்பின் ஆதிபத்தியத்தையும் மக்களின் இறைமையையும் காப்பாற்ற முடிந்தமை எனக்கு கிடைத்த சிறப்புரிமையாகும்.
இந்த நடவடிக்கைகளிற்காக எந்த விளைவுகளையும் தயக்கமின்றி நான்  எதிர்கொள்ள தயார் என  கருஜெயசூரிய தெரிவித்துள்ளார்  நன்றி வீரகேசரி