கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர் வரிசை புகலிடத்திலும் அயராது இயங்கும் 'பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா - முருகபூபதி


உள்ளார்ந்த ஆற்றல் மிக்கவர்கள் எங்கிருந்தாலும் இயங்கிக்கொண்டிருப்பார்கள். அவர்கள் தாயகத்தை விட்டு ஆபிரிக்காவுக்கு சென்றாலும் அவுஸ்திரேலியாவுக்குச்சென்றாலும், தாம் ஆழ்ந்து நேசித்த பணிகளை தொடருவார்கள்.
அவ்வாறு ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவாறு கலை, இலக்கியம் உட்பட , வானொலி ஊடகம், இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான பணிகளில் இயங்கிவருபவர் கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி ' பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
பாடும்மீன் என்ற சொற்பதம் எமது தமிழ்சமூகத்தின் அழிக்கமுடியாத ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? என்று ஒரு பாடல் வரி இருக்கிறது. அதுபோன்று மீன்பாடுமா..? எனக்கேட்பார்கள். ஆம்,  பாடும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி நாட்களில் செவிமடுத்தால் பாலத்தின் கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை  கேட்கமுடியும் என்று அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.
ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கு முன்னரே, கத்தோலிக்க மதகுருவான அருட்தந்தை லாங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார் என்ற செய்தியிருக்கிறது.
                             இந்த ஒலி,  இலக்கியங்களில் " நீரர மகளீர் இசை" என்றும் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த பாடும் மீன் பெயரில் இலக்கிய இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும் அதேசமயம் அந்தப்பெயரையே தனது பொது வாழ்வின் முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான் எம்மத்தியிலிருக்கும் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

இலங்கையில் தமது பாடசாலைப்பருவத்தின் இளம்பராயத்திலேயே இலக்கிய எழுத்துப்பணியை ஆரம்பித்திருக்கும் இவர், கடந்த அரைநூற்றாண்டு காலமாக (1968 -2018)  தொடர்ச்சியாக தங்கு தடையின்றி எழுத்தூழியத்தில் ஈடுபட்டுவருபவர்.
களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை - சின்னம்மா தம்பதியரின் ஏகபுத்திரனான ஶ்ரீகந்தராசா,  தனது கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி ஆகியவற்றில் தொடர்ந்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும் இணைந்து சட்டத்தரணியானவர்.
இவர்  கல்வி கற்ற கல்லூரியில்  வெளியான  உயிர்ப்பு என்ற கையெழுத்து  இதழின் ஆசிரியராக  இவர் இயங்கியபோது இவரது வயது 14 என்பது வியப்பானது!
சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல், முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவுக்கு முதலில் களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது சிந்தாமணி வார இதழ். கொழும்பு எம்.டீ. குணசேனா நிறுவனம் அக்காலப்பகுதியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும் பல பத்திரிகைகளை வெளியிட்டது. அங்கிருந்துதான் தினபதி நாளேடு, சிந்தாமணி வார இதழ், மற்றும் மாலைத்தினசரி தந்தி, ராதா, சுந்தரி முதலான இதழ்கள் வெளிவந்தன.
இலங்கை பத்திரிகை உலக ஜாம்பவான் என வர்ணிக்கப்படும் எஸ்.டி. சிவநாயகம் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.
கிழக்கிலங்கையிலிருந்து எழுதத்தொடங்கிய  பாடும் மீன் சு. ஶ்ரீகந்தராசாவுக்கு தென்னிலங்கையிலும் எழுத்துப்பணியை தொடருவதற்கு களம் அமைத்துக்கொடுத்தது சிந்தாமணி. அத்துடன், தந்தை செல்வநாயகம் அவர்கள் நடத்திய சுதந்திரன் பத்திரிகையிலும் ஊடகவியலாளராக பணியாற்றியிருக்கிறார்.
தொழில் ரீதியாக தொடக்கத்தில் அரசாங்க எழுதுவினைஞர் சேவையில் இணைந்திருந்தாலும், பின்னர் சட்டத்தரணியானதும் கிழக்கிலங்கை நீதிமன்றங்களில் தனது பணியை தொடர்ந்தார். கலை, இலக்கிய, ஊடகத்துறையில் கவிதை, சிறுகதை, விமர்சனம், பத்தி எழுத்துக்கள், ஆய்வு, நாடகம், வில்லிசை முதலான அனைத்து துறைகளிலும் அகலக்கால் பதித்து பல்துறை விற்பன்னராக விளங்கியிருக்கும் பாடும் மீன் ஶ்ரீகந்தராசா, மேடை நாடகங்களிலும் நடித்து புகழ்பெற்றிருப்பவர். கவிதை இயற்றுவதில் மட்டுமல்ல மெல்லிசைப்பாடல்கள் புனைவதிலும் ஆற்றல் மிக்கவராகத்திகழ்ந்திருப்பவர்.
தனது 15 வயது  பாடசாலைப் பருவத்திலேயே நாடகம் எழுதி இயக்கி மேடையேற்றி அனுபவம் பெற்றவர். தான் பிறந்து தவழ்ந்து வளர்ந்த களுவாஞ்சிக்குடியில் ஒரு நூலகம் இல்லாத குறையைபோக்குவதற்காக தனது நண்பர்களுடன் இணைந்து பொதுமக்களின் ஆதரவுடன் நூலகம் அமைத்தமை, இளஞர்களை இணைத்து இளம் நாடக மன்றம் அமைத்து கிராமங்கள்தோறும் நாடகங்களை அரங்காற்றுகை செய்தமை, வில்லுப்பாட்டுக்களை இயற்றி அவற்றையும் பொதுமேடைகளில் அரங்கேற்றியமை, மட்டக்களப்பின் நாட்டார் பாடல்களுக்கு நாடகவடிவம் வழங்கி அவற்றையும் மக்களிடம் அரங்கங்கள் வாயிலாக எடுத்துச்சென்றமை, உட்பட பல்வேறு கலை, இலக்கிய பணிகளில் தீவிரமாக செயற்பட்டிருக்கும் இவர், கடல் சூழந்த கண்டம் அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தபின்னரும் அயராமல் இயங்கிவருகிறார்.
இந்தப்பதிவின் தொடக்கத்தில் குறிப்பிட்டிருந்தவாறு தனது உள்ளார்ந்த ஆற்றல்களை புலம் பெயர்ந்தபின்னரும் வற்றிப்போகச்செய்யாமல் இவர் வெளிப்படுத்தி வந்திருப்பதை அருகிருந்து பார்த்துவந்திருப்பதனாலும், இவருடன் இணைந்து சில பொதுப்பணிகளில் ஈடுபட்டதனாலும் இவர் பற்றி மேலும் அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது.
அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் முன்னர் இயங்கிய தமிழ் அகதிகள் கழகம், நீண்ட காலமாக இயங்கிவரும் ஈழத்தமிழ்ச்சங்கம், கடந்த 2001 ஆம் ஆண்டுமுதல் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை முன்னெடுத்துவரும் அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியிருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா, விக்ரோரியா மாநிலத்தில் தமிழ் ஆர்வலர் மருத்துவர் பொன். சத்தியநாதன் நடத்திய தமிழ் உலகம்  பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.
அத்துடன் அவுஸ்திரேலியாவில் ஒலிக்கும் பல வானொலிகளிலும் இவரது உரைகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. குறிப்பாக பழந்தமிழ் இலக்கியம், தமிழ்த் திரையிசையையும் அதற்கு உயிர்ப்பளித்த கவிஞர்களின் பாடல் வரிகளையும் இணைத்து பல ஒலிச்சித்திரங்களையும் வழங்கியிருக்கிறார்.
இவ்வாறு பல ஆற்றல்களை தனது வசம் வைத்திருக்கும் இவரிடம் நாடகம் எழுதும் இயக்கும் வல்லமையும் இருப்பதனால், இவரை எங்கள் அவுஸ்திரேலியாவின் பல்கலை வேந்தன் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறது.
மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் பிரபல நாடகமான 'வலை' இவரது இயக்கத்தில் மெல்பனில் மேடையேற்றப்பட்டதை பார்த்து வியந்திருக்கின்றேன். அதனை இவர் நெறிப்படுத்தியிருந்த பாங்கும் ஒலி, ஒளி அரங்க நிர்மாணம்  என்பனவும் மறக்கமுடியாத நிகழ்வாக மனதில் நிலைத்திருக்கிறது.
தனது பணிகளுக்காக இலங்கையிலும் அவுஸ்திரேலியாவிலும் பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசா அவர்களின்   மணிவிழாக்காலத்தில், இலங்கையில் வெளிவரும் ஞானம் மாத இதழ் அட்டைப்பட அதிதியாக பாராட்டி இவரது சேவைகளை பதிவுசெய்து  கௌரவித்திருக்கிறது.
எம்மத்தியில் ஶ்ரீகந்தராசா என்ற பெயரில் நாமறிந்த பலர் இருக்கலாம். ஆனால்," பாடும்மீன் " என்றும் குறிப்பிட்டால்தான் அது இவரைத்தான் அடையாளப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.
இவர் இலங்கைத்தமிழ்ச்சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில்தான் அதன் பெயர் ஈழத்தமிழ்ச்சங்கமாக மாறியது. இச்சங்கத்தினால்  நிருவகிக்கப்பட்டு வந்த தமிழ்ப்பாடசாலைகள்  இரண்டாயிரமாம்  ஆண்டுவரையில்   இச்சங்கத்தின் உபகுழு ஒன்றின் மேற்பார்வையிலேயே இயங்கிவந்தன.  இவர் சங்கத்தின் தலைவராகப் பொறுப்பேற்றதும், தமிழ்ப்பாடசாலைகள் கூட்டமைப்பு என்னும் ஓர் அமைப்பைச் சட்டரீதியாக அமைப்பதற்கான சரத்து ஒன்றினை அமைப்புவிதிகளில் முறைப்படி இணைத்து,   சகல தமிழ்ப் பாடசாலைகளும் பாடசாலைகள் கூட்டமைப்பினால் நிர்வகிக்கப்படும் செயற்பாட்டினை ஏற்படுத்தினார். அதன்மூலம் பாடசாலைகளின் நிர்வாகம் சிறப்புற நடைபெறுவதற்கு வழிவகுத்தார்.
விக்ரோறிய மாநிலத்தில் பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழி ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் இவரும் ஒருவர்.
நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில், சிட்னியில் இருந்து இயங்கும் அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தினால் தேசியப் பரீட்சகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்ட இவர்,   இச்சங்கத்தினால் வருடாந்தம்  ஏற்பாடு செய்யப்படும்  தமிழ் மாணவர்களுக்கான தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளுக்கு மெல்பன் மாநிலத்தில்  மேற்பார்வையாளராகவும், ஆலோசகராகவும் பணியாற்றி வருகின்றார்.
கடந்த பல வருடங்களாக தமிழ்  மாணவர்களுக்குப் தமிழ்ப்பேச்சுக்கலையில் பயிற்சிகொடுத்து, பேச்சுப்போட்டிகளுக்குத் தயார்செய்து வரும்பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
இவர் எழுதியிருக்கும் நூல்கள்: சந்ததிச் சுவடுகள்,    மனதைக்கவரும் மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள்,  தமிழினமே தாயகமே,    தமிழின் பெருமையும் தமிழரின் உரிமையும் ,   ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின் இந்தியப்பயணம், Sankam Period and Sankam Literature  ( சங்ககாலமும், சங்க இலக்கியங்களும் - ஆங்கில மொழிபெயர்ப்பு)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்  என்னும் உரைச்சித்திர இறுவட்டையும் வெளியிட்டுள்ளார்.
பாடும் மீன் ஶ்ரீகந்தராசா மேலும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என வாழ்த்துகின்றோம். கிழக்கிலங்கை எழுத்தூழியக்காரர்களின் வரிசையில் இவரது பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது.



-->

No comments: