
அவ்வாறு ஏறக்குறைய மூன்று தசாப்த காலமாக அவுஸ்திரேலியாவில்
வாழ்ந்தவாறு கலை, இலக்கியம் உட்பட , வானொலி ஊடகம், இதழியல், சமூக அமைப்புகள் தொடர்பான
பணிகளில் இயங்கிவருபவர் கிழக்கிலங்கையின் மீன்பாடும் தேனாட்டின் பிரதிநிதியான சட்டத்தரணி
' பாடும்மீன்' சு. ஶ்ரீகந்தராசா.
பாடும்மீன் என்ற சொற்பதம் எமது தமிழ்சமூகத்தின்
அழிக்கமுடியாத ஓர் அடையாளம். தண்ணீரில் மீன் அழுதால், அதன் கண்ணீரை யார் அறிவார்? என்று
ஒரு பாடல் வரி இருக்கிறது. அதுபோன்று மீன்பாடுமா..? எனக்கேட்பார்கள். ஆம், பாடும் என்று நிரூபித்திருக்கிறார்கள்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து முழுமதி
நாட்களில் செவிமடுத்தால் பாலத்தின் கீழே ஒடும் வாவியிலிருந்து எழும் ஓசையை கேட்கமுடியும் என்று அதனை ஒலிப்பதிவுசெய்து இணையத்தில்
பதிவேற்றியுள்ளனர்.
ஏறக்குறைய ஆறு தசாப்தங்களுக்கு முன்னரே, கத்தோலிக்க
மதகுருவான அருட்தந்தை லாங் அடிகளார் அந்த ஒலியை பதிவுசெய்து இலங்கை வானொலியில் ஒலிபரப்பினார்
என்ற செய்தியிருக்கிறது.
இந்த ஒலி, இலக்கியங்களில் " நீரர மகளீர் இசை" என்றும் வர்ணிக்கப்படுகிறது. இத்தகைய சிறப்புவாய்ந்த
பாடும் மீன் பெயரில் இலக்கிய இதழ்கள், விளையாட்டுக்கழகங்கள், சமூக அமைப்புகள் இருக்கும்
அதேசமயம் அந்தப்பெயரையே தனது பொது வாழ்வின் முதல் எழுத்துக்களாக்கி இயங்கிவருபவர்தான்
எம்மத்தியிலிருக்கும் ' பாடும் மீன்' சு. ஶ்ரீகந்தராசா.

களுவாஞ்சிக்குடியில் சுப்பையாபிள்ளை - சின்னம்மா தம்பதியரின்
ஏகபுத்திரனான ஶ்ரீகந்தராசா, தனது கல்வியை பட்டிருப்பு மத்திய மகாவித்தியாலயம், மட்டக்களப்பு இந்துக்கல்லூரி
ஆகியவற்றில் தொடர்ந்த பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் அதன்பிறகு இலங்கை சட்டக்கல்லூரியிலும்
இணைந்து சட்டத்தரணியானவர்.

சிறுவயதுமுதலே பேச்சாற்றல், நடிப்பாற்றல், எழுத்தாற்றல்,
முதலான ஆளுமைப்பண்புகளுடன் வளர்ந்திருக்கும் பாடும்மீன் ஶ்ரீகந்தராசாவுக்கு முதலில்
களம் வழங்கி எழுத்தாளன் என்ற அடையாளத்தை உருவாக்கியது சிந்தாமணி வார இதழ். கொழும்பு
எம்.டீ. குணசேனா நிறுவனம் அக்காலப்பகுதியில் தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மும்மொழிகளிலும்
பல பத்திரிகைகளை வெளியிட்டது. அங்கிருந்துதான் தினபதி நாளேடு, சிந்தாமணி வார இதழ்,
மற்றும் மாலைத்தினசரி தந்தி, ராதா, சுந்தரி முதலான இதழ்கள் வெளிவந்தன.
இலங்கை பத்திரிகை உலக ஜாம்பவான் என வர்ணிக்கப்படும்
எஸ்.டி. சிவநாயகம் ஆசிரியராக பணியாற்றிய பத்திரிகைகள்தான் தினபதியும் சிந்தாமணியும்.


அவுஸ்திரேலியா விக்ரோரியா மாநிலத்தில் முன்னர்
இயங்கிய தமிழ் அகதிகள் கழகம், நீண்ட காலமாக இயங்கிவரும் ஈழத்தமிழ்ச்சங்கம், கடந்த
2001 ஆம் ஆண்டுமுதல் தமிழ் எழுத்தாளர் விழா இயக்கத்தை முன்னெடுத்துவரும் அவுஸ்திரேலியத்
தமிழ் இலக்கிய கலைச்சங்கம் ஆகியனவற்றிலும் தலைவராக பணியாற்றியிருக்கும் பாடும்மீன்
ஶ்ரீகந்தராசா, விக்ரோரியா மாநிலத்தில் தமிழ் ஆர்வலர் மருத்துவர் பொன். சத்தியநாதன்
நடத்திய தமிழ் உலகம் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியிருப்பவர்.

இவ்வாறு பல ஆற்றல்களை தனது வசம் வைத்திருக்கும்
இவரிடம் நாடகம் எழுதும் இயக்கும் வல்லமையும் இருப்பதனால், இவரை எங்கள் அவுஸ்திரேலியாவின்
பல்கலை வேந்தன் என்றும் அடையாளப்படுத்தியிருக்கிறது.
மூத்த எழுத்தாளர் எஸ்.பொன்னுத்துரையின் பிரபல
நாடகமான 'வலை' இவரது இயக்கத்தில் மெல்பனில்
மேடையேற்றப்பட்டதை பார்த்து வியந்திருக்கின்றேன். அதனை இவர் நெறிப்படுத்தியிருந்த பாங்கும்
ஒலி, ஒளி அரங்க நிர்மாணம் என்பனவும் மறக்கமுடியாத
நிகழ்வாக மனதில் நிலைத்திருக்கிறது.

எம்மத்தியில் ஶ்ரீகந்தராசா என்ற பெயரில் நாமறிந்த
பலர் இருக்கலாம். ஆனால்," பாடும்மீன் " என்றும் குறிப்பிட்டால்தான் அது இவரைத்தான்
அடையாளப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளும் நிலையில்தான் நாம் இருக்கின்றோம்.

விக்ரோறிய மாநிலத்தில்
பல்கலைக்கழகப் புகுமுகத் தேர்வுக்கான
12 ஆம் வகுப்புப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழி ஒரு பாடமாகச் சேர்க்கப்படுவதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களுள் இவரும் ஒருவர்.
கடந்த பல வருடங்களாக
தமிழ் மாணவர்களுக்குப் தமிழ்ப்பேச்சுக்கலையில் பயிற்சிகொடுத்து, பேச்சுப்போட்டிகளுக்குத் தயார்செய்து
வரும்பணியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றார்.
இவர்
எழுதியிருக்கும் நூல்கள்: சந்ததிச் சுவடுகள், மனதைக்கவரும்
மட்டக்களப்பு
நாட்டுப்பாடல்கள்,
தமிழினமே தாயகமே, தமிழின் பெருமையும் தமிழரின்
உரிமையும்
, ஓர் ஆஸ்திரேலிய ஈழத்தமிழரின்
இந்தியப்பயணம்,
Sankam Period and Sankam
Literature ( சங்ககாலமும்,
சங்க
இலக்கியங்களும்
- ஆங்கில
மொழிபெயர்ப்பு)
நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்னும் உரைச்சித்திர இறுவட்டையும்
வெளியிட்டுள்ளார்.
பாடும் மீன் ஶ்ரீகந்தராசா
மேலும் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தவேண்டும் என வாழ்த்துகின்றோம். கிழக்கிலங்கை
எழுத்தூழியக்காரர்களின் வரிசையில் இவரது பெயர் முக்கியத்துவம் வாய்ந்தது.
No comments:
Post a Comment