உலகச் செய்திகள்


இயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம் 

பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு தமிழ்நாடே காரணம்- கேரளா பரபரப்பு குற்றச்சாட்டு

முல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி



இயற்கையின் கோரத் தாண்டவத்திலிருந்து இயல்பு நிலைக்குத் திரும்புகிறது கேரளா

20/08/2018 இந்தியாவின் கேரளா மாநிலம் கடந்த 11 நாட்களுக்கு பின் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது. 
கேரளாவில் கடந்த 8 ஆம் திகதி முதல்  18 ஆம் திகதி வரை கடும் மழை பெய்தது. கடந்த 10 நாட்களாக இயற்கையின் கோரத் தாண்டவத்தால் விடாது மழை பெய்தது.
தொடர் மழையால் கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களில் 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியன. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மட்டுமின்றி அடுக்குமாடி வீடுகளும் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டது.
எங்கு பார்த்தாலும் வெள்ளக் காடாகக் காட்சி அளித்தது கேரளா. மழையின் மிரட்டலை கண்டு அலறிய மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புக் குழு களம் இறங்கியது.
பேரிடர் மீட்புக்குழுவுக்கு துணையாக இராணுவத்தின் முப்படையும், தீயணைப்புத் துறை, கடலோர காவல் படை, தன்னார்வ குழுவினர், மீனவ அமைப்புகள் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
மீட்கப்பட்டவர்களை தங்க வைக்க மாநிலம் முழுவதும் 5645 அவசர கால நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டன. அவற்றில் இன்று வரை 8 இலட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கேரளாவின் மலை கிராமங்களான குட்டநாடு, வயநாடு, பாண்டநாடு பகுதிகளில் இன்னும் ஆயிரக்கணக்கானோர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இப்பகுதிக்குள் படகுகள் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் அங்கு ஹெலிக்கொப்டர் மூலமே மக்கள் மீட்கப்பட்டு வருகிறார்கள்.
ஆதிவாசி மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் இருப்போர் பலரும் தங்களின் உடைமைகளை விட்டு வர தயக்கம் காட்டுகிறார்கள். கால்நடைகள், வீட்டு விலங்குகளை விட்டு வர மாட்டோம் என பலர் மீட்புக் குழுவிடம் கூறி ஹெலிக்கொப்டரில் ஏறமறுத்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. இதையடுத்து மாநில அரசு இப்பகுதியில் தவிக்கும் மக்களை பொலிஸ் துணையுடன் மீட்டு வர நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறும்போது, வெள்ளம் தேங்கிய பகுதிகளில் தவிக்கும் முதியவர்கள், நோயாளிகள் பலரும் உயிர் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து மீட்டு வருகிறோம்.
இது தவிர நிலச்சரிவிலும் பலர் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் இராணுவத்தின் ஒரு பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒருநாளில் மட்டும் 20 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு அரச வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
11 நாட்களுக்கு பிறகு கேரளாவில் மழை சற்று ஓய்ந்தது. இதையடுத்து சிவப்பு சமிக்ஞையும் பலத்த மழை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் வாபஸ் பெற்றது. இன்றும், நாளையும் சில இடங்களில் சிறு மழையே பெய்யுமென்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் நேற்று நிவாரணப் பணிகள் வேகம் பிடித்தது. சமூக ஆர்வலர்களின் துணையுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து நிவாரண பணிகளை முடுக்கி விட்டனர். இதனால் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்ப தொடங்கியுள்ளது.
மழை குறைந்ததாலும், அணைகளில் திறந்துவிடப்பட்ட நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும், பல இடங்களில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கியுள்ளது. கொச்சி, ஆலுவா, திருச்சூர், காலடி, நெடும் பாச்சேரி பகுதிகளில் வெள்ளத்தில் மூழ்கி கிடந்த வீதிகள் வெளியே தெரிந்தன.
இதுபோல வீடுகளின் முதல் தளம் வரை தேங்கி நின்ற வெள்ளமும் வடிந்து கீழ் தளத்தின் வாசல் தெரியும் அளவிற்கு குறைந்தது.
வீடுகளில் தேங்கிய வெள்ளம் வடிய தொடங்கிய தகவல் அறிந்து முகாம்களில் தங்கிய பெண்கள் பலரும் அவர்களின் வீடுகளுக்கு திரும்ப தொடங்கினர். அவர்களின் வீடுகளில் முழங்கால் அளவிற்கு சேறும், சகதியும் சேர்ந்திருப்பதாகவும், அவற்றை அகற்றிய பின்னரே அங்கு குடியேற முடியும் எனவும் கண்ணீருடன் தெரிவித்தனர்.
கேரளா முழுவதும் இப்படி சுமார் 10 இலட்சம் பேர் தவித்தபடி உள்ளனர். கேரளாவில் இயல்பு நிலை திரும்புவது குறித்து கேரள முதல்வர் தெரிவிக்கையில்,
இதுவரை அனைத்து மீட்புக்குழுவினர் மூலம் 8 இலட்சத்து 46 ஆயிரத்து 680 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் 3 ஆயிரத்து 734 நிவாரண முகாம்களில்தங்க வைக்கப்பட்டுள்ளனர். இனி இவர்களின் வாழ்வாதாரத்திற்கான பணிகளை ஆரம்பிக்க உள்ளோம். வெள்ளத்தால் சேதமான வீடுகள் சுகாதார ஊழியர்கள் மூலம் சீரமைக்கப்படும். நோய் பரவாமல் தடுக்க மருத்துவக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு போக்குவரத்து இன்றியமையாதது. இப்போது வெள்ளம் வடிந்து வருவதால் பிரதான வீதிகள் வேகமாக சீரமைக்கப்பட்டு வருகிறது. முக்கிய ஊர்களுக்கு கேரள அரசு பஸ்களை இயக்க தொடங்கி உள்ளோம்.
மாநிலத்தில் உள்ள 221 பாலங்கள் சேதமடைந்துள்ளன. 59 பாலங்கள் இன்னும் தண்ணீரில் மூழ்கி உள்ளன. இவற்றை வேகமாக சீரமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓரிரு நாட்களில் இப்பணிகள் முடிவடைந்து இப்பாலங்கள் வழியாகவும் போக்குவரத்து தொடங்கும்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள் ஈடுபட்டனர். அவர்களின் வள்ளங்கள், கட்டு மரங்கள் மீட்புப்பணிக்கு பயன் படுத்தப்பட்டன. இதில் பலரது கட்டு மரங்கள் சேத மடைந்துள்ளது. அவற்றிற்கு உரிய இழப்பீடை மாநில அரசு வழங்கும் எனத் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 











பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு மோடி கடிதம் 

20/08/2018 பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் 22 ஆவது பிரதமராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித் தலைவர் இம்ரான் கான் கடந்த 17 ஆம் திகதி பதவியேற்றார். அவரது தலைமையில் 21 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களில் 16 அமைச்சர்கள்  இன்று பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள இம்ரான் கானுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார்.
அண்டைநாடான பாகிஸ்தானுடன் அமைதிப்பாதையிலான நல்லுறவை இந்தியா விரும்புவதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மோடி, தெற்காசிய கண்டத்தை பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து விடுவித்தாக வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், பாகிஸ்தானுடன் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைக்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் மோடி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









பாரிய வெள்ள அனர்த்தத்திற்கு தமிழ்நாடே காரணம்- கேரளா பரபரப்பு குற்றச்சாட்டு

24/08/2018 முல்லைப்பெரியாறு அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் திறந்துவிட்டதன் காரணமாகவே கேரளாவில் வெள்ளப்பெருக்கு   ஏற்பட்டது என கேரள மாநில அரசாங்கம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேரளஅரசாங்கம் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளது.
முல்லைபெரியாறு அணையிலிருந்து தமிழகம் தீடிர் என நீரை திறந்துவிட்டதே கேரளாவில் மிக மோசமான வெள்ளம் ஏற்படக்காரணம் என நீதிமன்றில் தாக்கல் செய்துள்ள மனுவில் கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அணையின் கீழ் பகுதியில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு  தமிழக அதிகாரிகள் போதிய காலஅவகாசத்தை வழங்கவில்லை எனவும் கேரள அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எந்த முன்னறிவிப்பும் இன்றி தமிழக அரசு முல்லைபெரியாறு அணையிலிருந்து  நீரை திறந்துவிட்டுள்ளது, என தெரிவித்துள்ள கேரள அரசு கொஞ்சம் கொஞ்சமாக நீரை திறக்கவேண்டும் என்ற எங்கள கோரிக்கையை தமிழக அரசு ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.  நன்றி வீரகேசரி 









முல்லை பெரியாறு அணை நீர்மட்ட விவகாரம்:கேரளாவின் குற்றச்சாட்டு தவறு - எடப்பாடி

24/08/2018 முல்லை பெரியாறு அணையிலிருந்து அதிகளவில் நீர் திறக்கப்பட்டதால் தான் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது என்ற கேரளாவின் குற்றச்சாட்டு தவறானது என்று முதலமைச்சர் எடப்பாடி தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,
‘அதிக அளவிலான வெள்ள நீர் வெளியேறியதால் அழுத்தம் காரணமாக பழைமையான முக்கொம்பு மேலணையில், அணையின் மதகுகள் உடைந்துள்ளது. தற்போது சீரமைப்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 
ஒன்பது மதகுகள் உடைந்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நான்கு நாட்களில் நிறைவடையும். முக்கொம்பில் உடைந்த அணைக்கு பதிலாக 325 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் புதிதாக கதவணைகள் கட்டப்படும். 
அதே போல் கொள்ளிட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள அய்யன் வாய்க்காலில் 85 கோடி இந்திய ரூபா மதிப்பீட்டில் கதவணைகள் அமைக்கப்படும். 
குறித்த கதவணைகள் அனைத்தும் பதினைந்து மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. முல்லை பெரியாறு அணையில் இருந்து திறக்கப்பட்ட நீரால் கேரளாவிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
 நீர்மட்டத்தை குறைக்காததால் வெள்ளம் ஏற்படவில்லை. அங்குள்ள எண்பது அணைகளிலிருந்தும் அதிகளவிலான தண்ணீர் திறக்கப்பட்டதால் தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முல்லைபெரியாற்றில் 142 அடி நீர் தேக்கக்கூடாது என்பதற்காக கேரளா தவறான குற்றச்சாட்டை கூறுகிறது.’ என்றார். நன்றி வீரகேசரி 





No comments: