நடந்தாய் வாழி களனி கங்கை - அங்கம்14 சகாயவிலையில் குமுழ் முனைப்பேனாவை வழங்கிய கே.ஜீ. நிறுவனம் சிங்கள சினிமாவை வளர்த்து தேசிய பொருளாதாரத்தையும் ஊக்குவித்த சினிமாஸ் குணரத்தினம் - ரஸஞானி




எமது   ஈழத்து  இலக்கிய   நண்பர்   பல்கலைவேந்தன்  சில்லையூர் செல்வராசன்    சிறந்த   குரல்வளம்    மிக்கவர்.    அவர்   இலங்கை வானொலியில்    வர்த்தக   விளம்பரங்களை   அறிவிக்கும் பணியிலுமிருந்தவர். போல்பொய்ன்ட்   பேனைக்கு   அவர்   வழங்கிய   தமிழ்   வடிவம்            குமுழ் முனைப்பேனா.   ஒரு   காலத்தில்   எமது   தமிழ்   மொழி மாத்திரமல்ல   ஏனைய   பல   மொழிகளும்  வழக்கொழிந்துபோன பல   மொழிகளும்   கல்லிலே   பொழியப்பட்டன.
கல்வெட்டுகள்  அவற்றின்    சரித்திரத்தைச்சொல்கின்றன.
காளிதாசர்   -   வள்ளுவர்   -   கம்பர்   -    இளங்கோ   -  கபிலர்   -  அவ்வையார்   -   தொல்காப்பியர்   -   புகழேந்தி   -  ஒட்டக்கூத்தர் -சீத்தளைச்சாத்தனார்   உட்பட   பல   முன்னோர்கள்    பனையோலை ஏட்டிலே   எழுதிய    காலத்தில்   மின்சாரம்   இல்லை.
தொட்டெழுதும்   பேனை   அறிமுகமான   காலத்தில்  மன்னர் ஆட்சிக்காலம்     முடிவுக்கு   வந்து   காலனி    ஆதிக்கம் உருவாகிவிட்டது.
பிற்காலத்தில்    தொட்டெழுதும்   பேனை   தனது   ஆயுளை நிறைவுசெய்தபொழுது    மைநிறப்பிய   பவுண்டன்   பேனைகள்  -   பாக்கர்  பேனைகள்   -   பைலட்  பேனைகள்   வரவாகின.    காலப்போக்கில் குமுழ்முனைப்பேனை  பாவனைக்கு   வந்துவிட்டது.
களனி கங்கைக்கும் இந்த போல்ட் பொயின்ட் பேனைக்கும் என்ன சம்பந்தம்? என்று கேட்கிறீர்களா? கொழும்பு - கிராண்ட்பாஸ் வீதி சந்திக்கும் ஆமர்வீதியில் ஒரு காலத்தில் கே.ஜீ. இண்டஸ்றீஸ் என்ற பெரிய நிறுவனம் அமைந்திருந்தது. இங்கிருந்து தயாரிக்கப்பட்ட குமுழ் முனைப்பேனைகளுக்கு  அப்பொழுது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பிருந்தது.

பாக்கர் பேனைக்கு மை செலுத்தவேண்டும். ஆனால், குமுழ்முனைப்பேனாவுக்கு அந்தத்தேவை இல்லை. கே.ஜீ. இண்டஸ்றீஸ் உரிமையாளர் கே. குணரத்தினம் அதற்கு முன்னர் சினிமாஸ் லிமிட்டட் என்ற திரைப்பட இறக்குமதி நிறுவனத்தையும் விஜயா ஸ்ரூடியோ என்ற  படத்தயாரிப்பு - படப்பிடிப்பு - ஒலி - ஒளிப்பதிவு நிறுவனத்தை வத்தளை ஹெந்தளையிலும்  அமைத்தவர்.
கொழும்பில் ஆமர் வீதிக்கு  அருகாமையில் புதுச்செட்டித்தெருவில்தான் சினிமாஸ் லிமிட்டட் கம்பனி இயங்கியது.
கனகசபை குணரத்தினம் என்ற இயற்பெரைக்கொண்டிருந்த இவரை சினிமாஸ் குணரத்தினம் எனவும் கே.ஜீ. எனவும் அழைப்பார்கள். யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகக்கொண்டிருந்த இவர் 1917 ஆம் ஆண்டு பிறந்து கொழும்பிலேயே நிரந்தரமாக தங்கியிருந்து, இந்தியாவிலிருந்து திரைப்படங்களை இறக்குமதி செய்து இலங்கை  எங்கும் திரையிட்டவர்.
கொழும்பில் இவருடை திரையரங்குகளில் குறிப்பிடத்தகுந்தவை: கிங்ஸ்லி, கெப்பிட்டல், வெள்ளவத்தை பிளாஸா, பொரளை லிடோ. மருதானை காமினி. இவை தவிர வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் பல திரையரங்குகளையும் குத்தகை அடிப்படையில் எடுத்து நடத்தினார்.
வத்தளை ஹெந்தளையில் அமையப்பெற்ற விஜயா ஸ்ரூடியோவிலிருந்து பல சிங்களத்திரைப்படங்களை தயாரித்து திரையிட்டார். அதற்கு முன்னர் பல இந்தியத்திரைப்படங்களை சிங்களத்தில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டுவந்திருக்கும் குணரத்தினம், 1953 ஆம் ஆண்டு இலங்கையிலேயே திரைப்படங்களை தயாரிப்பதற்காக குறிப்பிட்ட விஜயா ஸ்ரூடியோவை உருவாக்கினார். இவர் எடுத்த முதல் சிங்களப்படம் சுஜாதா. அதன் வெற்றியைத்தொடர்ந்து, இருபத்தியைந்திற்கும் மேற்பட்ட சிங்களத்திரைப்படங்களை தயாரித்து வெளியிட்டு சிங்கள ரசிகர்களுக்கு விருந்துபடைத்தார்.
என்னதான் அவர் சிங்களப்படங்கள் எடுத்திருந்தாலும், அவர் சிங்களவர் இல்லையே!? என்பதுதான் 1983 இல் இனவாத சங்காரத்தில் ஈடுபட்ட தீயசக்திகளின் எண்ணமாக இருந்திருக்கிறதுபோலும். அதன்விளைவு குறிப்பிட்ட விஜயா ஸ்ரூடியோ வன்முறை கும்பலினால் தீயிட்டு கொளுத்தப்பட்டது.
இச்சம்பவத்தை கேள்விப்பட்ட நடிகரும் ஶ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவரும் சந்திரிக்கா பண்டாரநாயக்காவின் காதல் கணவருமான விஜயகுமராணதுங்கா பதறியடித்துக்கொண்டு,  தான் வீட்டில்  அணிந்திருந்த சாரத்துடனேயே தனது காரை செலுத்திவந்து விஜயாவிலிருந்த சிங்கள திரைப்படச்சுருள்களை காப்பாற்ற போராடினார்.
இரண்டு வேறு வேறு சந்தர்ப்பங்களில் சினிமாஸ் குணரத்தினமும் விஜயகுமராணதுங்கவும் இனந்தெரியாத நபர்களினால் தலைநகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கே.குணரத்தினம், தமிழ் வர்த்தகப்பிரமுகர். அவர் விரும்பியிருந்தால் தான் பிறந்த வடபுலத்தின் ஊரிலேயே தனது தொழில்துறைகளை தொடங்கி விருத்தி செய்து தனது இனத்து மக்களுக்ககாக மாத்திரம் ◌வாழ்ந்திருக்க முடியும். அவருக்கு இலங்கையின் தேசிய பொருளாதாரத்தை ஊக்குவிக்கவேண்டும் என்ற நல்லெண்ணமும் தீர்க்கதரிசனமும் இருந்தது.
அதனால் உள்நாட்டில் பெரும்பான்மை இனத்தவர்களுக்காக சிங்களப்படங்களை தயாரித்தார். அதன்மூலம் சிங்கள கலைஞர்களுக்கும் சினிமாத்துறை தொழில் நுட்பவியலாளர்களுக்கும் வேலை வாய்ப்பினை வழங்கினார். அவரது திரையரங்குகளில் மூவினத்தவர்களும் பணியாற்றினர்.
இவை தவிர ஆமர்வீதியில் கே.ஜீ. இண்டஸ்றீஸ் நிறுவனத்தை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பினை வழங்கினார். அத்துடன் அஸ்பெஸ்டாஸ் உற்பத்திகள், குமுழ் முனைப்பேனா தயாரிப்பு முதலான தொழில் துறைகளிலும் முதலிட்டு உள்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கடுமையாக உழைத்தார்.
1983 இல் போர்க்கால நெருக்கடி தொடங்கியதும் வடக்கிற்கான ரயில்சேவையும் சீர்குலைந்ததை அறிவீர்கள். மக்களின் வடக்கு - தெற்கிற்கான போக்குவரத்து வசதியை கவனத்தில் கொண்டு கே.ஜீ. பஸ் சேவையையும் ஆரம்பித்து. பல பஸ்வண்டிகளை இறக்குமதி செய்து சேவையில் ஈடுபடுத்தினார்.
அதில் பயணிக்கும் பயணிகளின் வசதி கருதி யாழ்ப்பாணம் சென்று திரும்பும் மார்க்கத்தில் நீர்கொழும்பில் அவரது ராஜ் சினிமா என்ற திரையரங்கின் வளாகத்தில் ஒரு சிற்றுண்டிச்சாலையையும் பயணிகள் ஓய்வெடுக்கும் மண்டபத்தையும் அமைத்தார்.
அத்துடன் ஏ 9 பதையில் முறிகண்டி கோயிலுக்கு அருகிலும் சிற்றுண்டிச்சாலையும் பயணிகள் ஓய்வெடுக்கும் மண்டபத்தையும் அமைத்தார்.
அவருடை நிறுவனங்கள் தனியார் துறை சார்ந்திருப்பினும் அவற்றினால் பயனடைந்தவர்கள் இலங்கையின் மூவின மக்களும்தான். ஆனால், அவருடை அருமை பெருமை தெரியாத தீய சக்திகள் அவருடைய நிறுவனங்களை தீயிட்டுக்கொளுத்தி அழித்து நிர்மூலம் செய்தன. இறுதியில் அவரையும் சுட்டுக்கொன்றன.
இதனால் யாருக்கு நட்டம்?
எல்லோரும் பிறக்கிறார்கள். இறுதியில் மறைகிறார்கள். அவர் என்றாவது ஒருநாள் இயற்கையின் தீர்ப்பின் பிரகாரம் மறைந்திருப்பார். ஆனால், அந்த இயற்கையை முந்திக்கொண்டு அவருக்கு  படுகொலைத்தீர்ப்பு வழங்கியவர்களுக்கு காலம் பதில் சொல்லும். அவரைக்கொன்றவர்கள், எங்கள் தேசத்தின் பொருளாதாரத்தையும் கொன்றவர்கள்தான்.
அவர் தயாரித்து சிங்கள மக்களுக்காக வழங்கிய திரைப்படங்களின் பட்டியலைப்பாருங்கள்:
சுஜாதா ( 1953) - வரத காகெத? -(1954) ரதல பிலிருவ ( 1956) -தொஸ்தர 1956) -  துப்பதாகே துக்க (1956) சந்தேசய ( 1960) - வீர விஜயா (1960) அதட்ட வெடிய ஹெட்ட ஹொந்தாய் - (1963) - உடரட்ட மெனிக்கே (1963) -  தீவரயோ - ( 1964) ண்டியா - ( 1965) -  அல்லப்பு கெதர ( 1965) ஒப துட்டு தா (  1966) - சூர சௌரயா (1967) - தென் மதக்கத ( 1972)
சினிமாஸ் குணரத்தினம் மிகவும் சிக்கனமான பேர்வழி என்றும் சமூகத்தில் ஒரு பார்வை இருந்தது. அவரது சிக்கனமான வாழ்க்கை முறை எளிமையானது. அவர் தனது தொழில் நிறுவனங்களை விருட்சமாக்கி பலருக்கும் நிழல் பரப்பியவர்.
மாணவர்களுக்கும் அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்காகவும் சகாய விலையில் போல்ட் பொயின்ட் பேனைகளை அறிமுகப்படுத்தியவர்.
அத்தகைய பெருந்தகையை தீயசக்திகள் வாழவிடவில்லை. அவரை இன்று யாராவது நினைத்துப்பார்க்கிறார்களா? என்பதும் தெரியவில்லை.
(தொடரும்)
(நன்றி: " அரங்கம்" இலங்கை இதழ்)



-->












No comments: