கண்ணீர்க் கனவு, கடல் மேல் பயணம்..


பாலையின் சுடுமணலில்
வாழ்வையும் சுட்டவர்கள் நாங்கள்;
குளிர்க்காற்றில் ஆசைகளைக் கொய்து
விடுமுறையில் மட்டுமே கொஞ்சம்
வாழ்ந்துக்கொண்டவர்கள்..

போர்வைக்குள் சுடும்
கண்ணீரை மறைத்தவர்கள் நாங்கள்;
ஒட்டகத்தோடு சந்தோசத்தையும் விரட்டி
கனவுகளுள்
வயதை தொலைத்தவர்கள்..
வரிசையில் நின்று நின்றே
வானத்திற்கு
ஏணியைப் போட்டவர்கள் நாங்கள்;
கைப்பேசிக்கு தெரிந்த முத்தத்தில்
கருத்தரிக்காத முட்டைகளை உடைத்தவர்கள்..


பெண்ணெனும் மந்திரச் சொல்லுள்
புன்னகையை ஒளித்தவர்கள் நாங்கள்;
அத்தைப் பெண்ணோ.. மாமனின் மகளோ..
பக்கத்து வீடோ.. காதலியோ,
அழுகையை மட்டுமே
மரணம் வரை சுமப்பவர்கள்..

வலிக்குமொரு பாடல் வந்தால்கூட
துடி துடிக்கும் பித்தகர்கள் நாங்கள்;
அழுக்குத் தலையணையோ
அன்றைய சினிமாவோ
கதைப் புத்தகமோ பழைய கடிதங்களோ
எதையோ படித்து எதற்கோ உயிரை நொந்தவர்கள்..

உறவிற்கும் உதவிக்கும் ஓடி ஓடியே
வழுக்கையானவர்கள் நாங்கள்;
வாட்சப்பில் காதலியையும் 
மின்னஞ்சலில் அம்மா பெயரையும்
வங்கிக் கணக்கில் அப்பாவும்
கைப்பேசி முகப்பில் அக்காப் பிள்ளைகளையும் வைத்து
தனைமட்டும் முழுதாய் இழந்தவர்கள்.. 

பிரிவெனும் துயரில் நொந்து
பாதி இரவில் பலமுறை எழுந்தழுது
பேருக்கொருமுறை
மீண்டுமிறப்பவர்கள் நாங்கள்;
அம்மாவை தேடி மனைவியை தேடி
பிள்ளைகளைப் பிரிந்து
மௌனக் குழிக்குள் சோகமாய் சரிபவர்கள்..

கூலிக்கு வேலையின்றி
மேலே படிக்க வாய்ப்புமின்றி
திறமைதனை
அரபிகளுக்கு அடகுவைத்தவர்கள் நாங்கள்;
கூரைவீட்டிற்கு ஓலை முடையவும்
கிழிந்த கால்சட்டைக்கு சன்னலை மூடவும்
சாய்ந்த சவுக்குக் குளியலறைக்கு
ஒரு புதிய மூங்கில் கதவு போடவுமே
கடவுச்சீட்டோடு எங்களின் கனவுகளையும் விற்றவர்கள்..

ஆம்.......
நாங்கள் பாலைமண்ணின் சுடுமணலில்
எங்களின் வாழ்வையும் சுட்டவர்கள்..
--------------------------------------------------------------
வித்யாசாகர்

No comments: