கங்காருநாட்டு காகிதம் ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் அவுஸ்திரேலியாவில் இயங்கும் இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் முப்பது ஆண்டுகாலம் (1988 - 2018) - முருகபூபதி






திரும்பிப்பார்ப்பதும் மனிதவாழ்வில் இரண்டறக்கலந்த அனுபவம். அதனால்தான் " நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத்தெரியாதா?" என்று  கவிஞர் கண்ணதாசன் எழுதினார்.
எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், ஆய்வாளர்கள் திரும்பிப்பார்க்கும் இயல்புகொண்டிருப்பவர்கள். அவர்களின் எழுத்துலகத்திற்கும் கலையுலகத்திற்கும் ஆய்வுலகத்திற்கும்  திரும்பிப்பார்த்தல் அவசியமானது. பிரதானமானது. ஆதாரங்களைப்பெற்றுத்தருவது.
இந்தப்புலம்பெயர் தேசத்து வாழ்க்கைக்கு நான் பிரவேசித்தபோது அவ்வாறு என்னையும் திரும்பிப்பார்க்கவைத்த பால்யகால சம்பவம் நினைவுக்கு வந்தது. எனது பாட்டி, அதாவது எனது தாயாரின் தாயார். அவரது பெயர் தையலம்மா.  பாடசாலைக்குச்செல்லாதவர். கையெழுத்தும் போடத்தெரியாதவர். கைநாட்டுப்போடும் அந்த மூதாட்டி,  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பொலிஸ்சார்ஜன்டாக இருந்தவருக்கு வாழ்க்கைப்பட்டவேளையில்  பதிவுத்திருமணம் செய்யாதிருந்தமையால் தாத்தா கார்த்திகேசு இறந்த பின்னரும் அவரது ஓய்வூதியம் பெறமுடியாமல் அவதிப்பட்டவர். அவருக்கு பள்ளிப்படிப்பு இல்லையென்றாலும் பாட்டி வைத்தியத்தில் கைதேர்ந்தவர்.
எங்கள் குடும்பம் ஏழ்மையோடு போராடிய காலத்தில் (1956 இல்) பாடசாலைக்கொப்பி புத்தகம் வாங்குவதற்கும் சிரமப்பட்டவேளையில், எங்கள் பாட்டி கடலைவிற்று பெற்ற பணத்தில் எனக்கு அவற்றை வாங்கித்தந்து பாடசாலைக்கு அனுப்பியவர். அதிகாலையே எழுந்து அம்மா சுட்டுத்தரும் தோசையை வட்டிலில் சுமந்துசென்று விற்றுவந்து எங்கள் பசிபோக்கியவர்.  அவர் எனக்கு என்றைக்கும் ஆதர்சமானவர். அவரது முயற்சியினால் நான் ஆறாம் தரப்புலமைப்பரிசில் பெற்று யாழ்ப்பாணத்திற்கு படிக்கச்சென்றிருக்கின்றேன்.
அந்தப்பாட்டி இரவுவேளையில் உறங்கும்போது தனது மடியில் என்னைக்கிடத்தி சொல்லித்தந்த கதைகளே, பின்னாளில் பாட்டி சொன்ன கதைகள் என்ற தொடரை எழுதவும் அதனை நூலாக்கவும்  என்னைத்தூண்டியிருக்கிறது.
இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலப்பகுதியில்  வடக்கு - கிழக்கில் போர்மேகம் சூழ்ந்திருந்தது. அதனால் நான் தினமும் எழுதிய செய்திகள் போர் பற்றியதாகவும் போரில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியதாகவுமே இருந்தன. இதுபற்றி எனது சொல்ல மறந்த கதைகள் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன்.
எந்தவொரு நாட்டிலும் நடக்கும் உள்நாட்டுப்போரில் முதலில் பெரிதும் பாதிக்கப்படுபவர்கள் பெண்களும் (தாய்மாரும்) குழந்தைகளும்தான்! இலங்கையிலும் இதுதான் நடந்தது.
எமது தாயகத்தில் நீடித்தபோர், கணவனை இழந்த பெண்களினதும் பெற்றவர்களை இழந்த குழந்தைகளினதும் எண்ணிக்கையைத்தான் பெருக்கும் என்பதை பத்திரிகை வாழ்க்கை தெளிவுபடுத்தியிருந்தது.

இன்றும்,  வருடக்கணக்காக காணாமலாக்கப்பட்ட  தமது கணவர்மாரை தேடும் பெண்களும், காணாமல்போன தந்தைமாரைத்தேடும் குழந்தைகளும்தான் ஊடகங்களில் பேசுபொருள்.
எனது தனிப்பட்ட வாழ்விலும் எழுத்துலக சமூக வாழ்விலும் எனக்கு ஆதர்சமாகத்திகழும்  எனது பாட்டி தையலம்மாவை திரும்பிப்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். எனது  நினைவுகளில் பாட்டியும்  இலங்கையில் நீடித்த போரில் பெற்றவர்களை இழந்த மாணவர்களுமே வந்துகொண்டிருந்தமையால் எனக்கும் ஒரு கனவு வந்தது.  எனது கல்விக்கு உதவுவதற்கு அன்று ஒரு பாட்டி இருந்தார்கள். போரைக்காரணமாகச்சொல்லி இங்கு புகலிடம்  பெற்றிருக்கும் எனக்கும் ஒரு தார்மீக கடமை இருப்பதாக அந்தக்கனவில்  உணர்ந்தேன்.  அதனை எனது நண்பர்களிடம் பகிர்ந்துகொண்டேன். அதன் வெளிப்பாடுதான்  1988 ஆம் ஆண்டு  மெல்பனில் எனது நண்பர்களையும் இணைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட  இலங்கை மாணவர் கல்வி நிதியம் ( Ceylon Students Educational Fund) என்ற தொண்டு நிறுவனம்.
எனது கல்விக்காக எனது பாட்டி அன்று  வழங்கிய ஊழியத்தொண்டு அவுஸ்திரேலியா வந்து சேர்ந்த மறுகணமே எனக்கு  முன்னுதாரணமாகியது.
முப்பது ஆண்டுகளை (1988 -2018) நிறைவுசெய்துகொண்டு தொடர்ந்தும் இயங்கிவரும் இந்த அமைப்பினால் இதுவரையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட  பெற்றவர்களை குறிப்பாக தந்தையை அல்லது குடும்பத்தின் மூல உழைப்பாளியை இழந்த மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள்.
வடக்கு - கிழக்கில் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களிலும், இடம்பெயர்ந்து வந்து வாழ்ந்த கம்பஹா மாவட்டத்திலும் இந்த நிதியத்தினால்  பல தமிழ் மாணவர்கள் பயனடைந்தனர்.
வடக்கு - கிழக்கில் மாணவர் கண்காணிப்பாளர்களை தெரிவுசெய்து அவர்கள் ஊடாக போரில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களைத்திரட்டி அதற்கான விண்ணப்பங்களையும் பெற்று உதவும் அன்பர்களின் பரிசீலனைக்கு வழங்கி மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை நிதியுதவி அனுப்பி, மாணவர்களிடமிருந்து பெறப்படும் கடிதங்கள், பாடசாலை தவணைப்பரீட்சை புள்ளிவிபர முன்னேற்ற அறிக்கைகளை உதவும் அன்பர்களுக்கு வழங்கிவரும் நடைமுறையை தொடர்ந்தும் பின்பற்றுவதனால் இந்த புலமைப்பரிசில் திட்டத்தில் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கின்றோம்.
இந்தப்பதிவை எழுதும் தருணத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் இந்நிதியத்தின் தலைவர்களாக இருந்தவர்கள் பற்றியும் குறிப்பிடவிரும்புகின்றேன். இந்நிதியத்திற்கான அமைப்புவிதிகளை (Constitution) தயாரித்து, இந்த அமைப்பினை விக்ரோரியா மாநிலத்தின் Consumer Affairs இல் பதிவுசெய்துதந்த சட்டத்தரணி செல்வத்துரை ரவீந்திரன் முதலாவது தலைவராகவும் அதன்பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு தடவை தெரிவாகும் தலைவர் பதவிக்கு, கணக்காளர் ஏ.வி. முருகையா, திருமதி புவனா இராஜரட்ணம், குமாரவேலு மகேந்திரன், இராஜரட்ணம் சிவநாதன், சட்டத்தரணி நிவேதனா அச்சுதன்,  Dr. நடேசன்,  Dr சந்திரானந்த், ஆவூரான் சந்திரன்,  Dr (திருமதி) மதிவதனி சந்திரானந்த், (அமரர்) திருமதி அருண் விஜயராணி, விமல் அரவிந்தன், ஆகியோர் தெரிவாகினர்.
சிட்னியில் இயங்கிய தமிழ் மக்கள் மனித உரிமை  அமைப்பைச்சேர்ந்தவரும் எமது கல்வி நிதியத்தின் துணைத்தலைவருமான  அன்பர் துரைசிங்கம் அவர்களின் ஏற்பாட்டினால் 1990 ஆம் ஆண்டில் சிட்னி லிங்காலய நடனப்பள்ளியின் இயக்குநர் பிரபல நடன நர்த்தகி தமது மாணவர்களின் "சகுந்தலா" நாட்டிய நாடகத்தை அரங்கேற்றி நிதியுதவி திரட்டித்தந்து எமது நிதியத்தை ஊக்குவித்தார்.
பின்னாளில் அன்பர் துரைசிங்கம் தங்கள் அமைப்பின் சார்பாக 25 ஆயிரம் அவுஸ்திரேலியன் ($25,000)  வெள்ளிகளை நன்கொடையாக வழங்கினார். குறிப்பிட்ட நிதி அவர்களது அமைப்பின் ஸ்தாபகர் (அமரர்) மருத்துவர் இராசநாயகத்தின் ஞாபகார்த்தமாக இன்றுவரையில் பாதுகாப்பாக நிதியத்தின் நிரந்தர வைப்பு நிதியில் இருக்கிறது. எமது நிதியம் காலத்துக்குக்காலம் சேமித்த மேலும் பத்தாயிரம் அவுஸ்திரேலியன் ($10,000) வெள்ளிகளுடன், தற்பொழுது மொத்தம் 35 ஆயிரம் வெள்ளிகளை நிரந்தரவைப்பிலிட்டிருக்கிறது. உதவும் அன்பர்கள்  இதுவரையில் தெரிவுசெய்யப்படாத மாணவர்களுக்கு குறித்த நிரந்தர வைப்பு நிதியிலிருந்து பெறப்படும் வட்டிப்பணத்தின் உதவியுடன் ஆதரவு வழங்கிவருகின்றோம்.
கிழக்கு, தென்கிழக்கு   மற்றும் வவுனியா , யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் இந்நிதியத்தினால் பயனடைந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பட்டதாரிகளாகியிருப்பதுடன் அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் கல்வி அதிகாரிகளாகவும்  பணியாற்றுகின்றனர். மேலும் பலர் சிறந்த தொழில்வாய்ப்பும் பெற்றுள்ளனர்.
கடந்த முப்பது ஆண்டுகால நிதியத்தின் வளர்ச்சியின் பெறுபேறுகள் சிறப்பானவை. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுற்றதையடுத்து, வவுனியாவில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முன்னாள் போராளிகளில் மாணவர்களாகவிருந்த 356 பேர் விடுவிக்கப்பட்டு, அவர்களையும் மீண்டும் பாடசாலைகளுக்கும் கல்லூரிகளுக்கும் அனுப்புவதற்கும் அதற்குத்தேவையான மூலவளங்களை பெற்றுக்கொடுப்பதற்கும் கல்வி நிதியம் ஆக்கபூர்வமான பணிகளை முன்னெடுத்தது. இதுவிடயத்தில் நிதியத்தின் முன்னாள் தலைவர் Dr. நடேசனின் செயலூக்கம் முன்மாதிரியானது. குறிப்பிட்ட புனர்வாழ்வுத்திட்டத்திற்குத் தேவைப்பட்ட சுமார் பத்தாயிரம் அவுஸ்திரேலியன் ($10,000) வெள்ளிகளை சேகரித்து வழங்கிய அவுஸ்திரேலியா வாழ் இரக்கமுள்ள அன்பர்களின் மனிதநேயத்தையும் நினைத்துப்பார்க்கின்றேன்.
மெல்பன் இளம்கலைஞர் செல்வன் பிரகதீஸ் சண்முகராஜா தனது அரங்கேற்றத்தின் மூலம் பெற்ற அன்பளிப்புகளை (நிதியை) முழுமையாகவே வழங்கி, முன்னாள் போராளி மாணவர்களின் புனர்வாழ்விற்கு எமது நிதியத்தின் ஊடாக உதவினார்.
கிழக்கிலங்கையிலும்  முல்லைத்தீவு பிரதேசத்திலும் சுநாமி கடற்கோள் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும் எமது கல்வி நிதியம்  வாழ்வாதார உதவிகளை நேரடியாகச்சென்று  வழங்கியிருக்கிறது.
தற்பொழுது நவீன கணினி தொழில் நுட்ப முறைக்கு  (MYOB) எமது நிதியம் மாறியிருப்பதனால் அன்பர்கள் - மாணவர்கள் கொடுப்பனவு விபரங்களை முற்கூட்டியே தெரிவிப்பதை சாத்தியமாக்கியிருக்கிறது. குறிப்பிட்ட புதிய நடைமுறையை நிதியத்தின் தொடக்க கால உறுப்பினர் திரு. தர்மரத்தினம் ரவீந்திரன் நிதியத்தின் இலகுவான பயன்பாட்டிற்கு ஏற்ப தயாரித்துள்ளார்.
1988 இல் சிறிய வித்தாக ஊன்றப்பட்ட கல்வி நிதியம், விருட்சமாக வளர்ந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏழைத்தமிழ் மாணவர்களுக்கு நிழல் பரப்பியிருக்கிறது.
இந்நிதியத்திற்கான இலட்சினையை (Logo) வரைந்துதந்தவர் (அமரர்) கே.ரி. செல்வத்துரை அய்யா அவர்கள். கங்காருவின் கரத்தில் ஒரு புத்தகம் இருப்பதுபோன்றதொரு அர்த்தமுள்ள படத்தினையே அவர் நிதியத்தின் இலட்சினையாக்கியிருந்தார்.
அதன்பின்னர் நிதியத்திற்கான இணையத்தளத்தை அன்பர் திரு. குமாரவேலு கணேசன் வடிவமைத்துதந்துள்ளார்.  நிதியம் 2014 ஆம் ஆண்டில் வெள்ளிவிழாவையும் கொண்டாடியது.
நிதியத்தின் பணிகளுக்கு தேவைப்பட்ட கணினி மற்றும் பிரதிபண்ணும் இயந்திரம் முதலானவற்றை அன்பர்கள் "Land Mark Computers" திருவாளர்கள் யோகநாதன், நரேந்திரன் சகோதர்களும் Dr. சந்திரானந்த் அவர்களும் வழங்கினார்கள். 1997 இல் திருமதி ரேணுகா ஆறுமுகசாமியின்  கலாஞ்சலி  நடனப்பள்ளி மாணவிகளும் 2017 இல் திருமதி யாழினி திருலோஜனின் சிவாலயம் நடனப்பள்ளி மாணவிகளும் எமது நிதியத்திற்காக நடன அரங்காற்றுகைகளை நிகழ்த்தி நிதியாதரவு வழங்கியிருக்கிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் எமது தாயகத்தின் மாணவர்களின் சார்பிலும் கல்வி நிதியத்தின் சார்பிலும்  நன்றி தெரிவிக்கின்றேன்.  "ஊர்கூடி தேர் இழுத்தல்" என்பார்கள்.  இலங்கை மாணவர்கள் விடயத்தில் அவுஸ்திரேலியா அன்பர்கள் ஒன்றுகூடி கல்வித்தேரை இழுத்திருக்கிறார்கள்.
 மேலும் பல மாணவர்களுக்கு நிதியம் உதவி வழங்கவேண்டியிருப்பதனால் இரக்கமுள்ள அன்பர்களிடம் உருக்கமான வேண்டுகோளையும் தெரிவிக்கின்றேன். உதவ விரும்பும் அன்பர்கள் நிதியத்தின் இணையத்தளத்தையும் பார்வையிடலாம். மின்னஞ்சலில் தொடர்புகொள்ளலாம்.
E Mail: kalvi.nithiyam@yahoo.com     Web: www.csefund.org 
Face book: https://www.facebook.com/Kalvi-Nithiyam-402302623272336/?fref=ts
 அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல்  /ஆலயம் பதினாயிரம் நாட்டல்/
 பின்னருள்ள தருமங்கள் யாவும்  / பெயர்விளங்கியொளிர நிறுத்தல்/
                   அன்னயாவினும் புண்ணியம் கோடி /
                     ஆங்கோர் ஏழைக்கெழுத்தறிவித்தல்.
                                                                                      --- மகா கவி பாரதி.
                                                               ---0---


-->





No comments: