இலங்கையில் பாரதி அங்கம் -09 முருகபூபதி




இலங்கைத்  தமிழ்ப் பத்திரிகை உலகின் ஜாம்பவான் என வர்ணிக்கப்பட்டவரும், பல புதிய தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தியவரும், பல தமிழ் ஊடகவியலாளர்களின் ஞானத்தந்தையாக (God Father)  கருதப்பட்டவருமான (அமரர்) எஸ். டி. சிவநாயகம் 'கல்கி' கிருஷ்ணமூர்த்தியினால் விதந்து  பாராட்டப்பட்டவராவார்.
1948  இல் தினகரன் பத்திரிகையில் பணியாற்றத்தொடங்கிய ஈழத்தின் மூத்த பத்திரிகையாளரான சிவநாயகம்,  கொழும்பில் தந்தை செல்வநாயகம் ஆரம்பித்த சுதந்திரன், மற்றும் வீரகேசரி ஆகியவற்றிலும்   ஆசிரியராக பணியாற்றியவர்.   1966 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 29 ஆம் திகதி முதல் வெளியாகத்தொடங்கிய தினபதி தினசரியிலும் பிரதம ஆசிரியரானார்.
தமிழ்ப்பத்திரிகைத்துறையில் பழுத்த அனுபவம் மிக்க இவர், வெளியுலகிற்கு தன்னை பிரபல்யப்படுத்தாமல் அமைதிபேணியவர்.
எனினும்,  அந்த ஆழ்ந்த அமைதிக்குள் எரிமலைக்குரிய குணாம்சம் ஒளிர்ந்தது. முற்காலத்தில் வெளியாகும் தமிழ்த்திரைப்படங்களின் இயக்குநர்களின் பெயர்களும்  தற்காலம்போன்று  வெள்ளித்திரைகளில் தோன்றும். ஆனால், அவர்கள் இக்காலத்து இயக்குநர்கள் போன்று ரசிகர்கள் மத்தியில் திரையில் வலம்வந்து அறிமுகமாகமாட்டார்கள். முன்பிருந்தவர்கள் பின்னாலிருந்து  இயக்கிய உந்துசக்திகளாகத்தான் வாழ்ந்து மறைந்துபோனார்கள்.
இன்றைய தமிழ்த்திரையுலகின் இயக்குநர்கள் திரைகளில் தோன்றுவதுபோன்று தற்கால பத்திரிகை ஆசிரியர்களும் பொதுமேடைகளில் தோன்றும் கலாசாரம் வந்துவிட்டது.
ஆனால்,  தினபதி அதன் ஞாயிறு பதிப்பு  சிந்தாமணி ஆகியனவற்றின் பிரதம ஆசிரியர் சிவநாயகம் அவர்களை -  இவை வெளியான காலகட்டத்தில் பொதுமேடைகளில் காண்பது அபூர்வம்.
கிழக்கிலங்கையில்  பெரியார் ஈ.வே.ரா.வின் பகுத்தறிவுக்கொள்கைகளை பரப்பிய முன்னோடியாகவும் இவர் அறியப்படுகிறார்.  தமிழகத்தின் முதல்வர் அறிஞர் அண்ணாவுடன் பழகியதன் அனுபவங்களை  தொடர்கட்டுரையாக  எழுதியவர். எனினும் இறுதிக்காலத்தில் சத்திய சாயி பக்தராகவும் வாழ்ந்து, 22 ஏப்ரில் 2000 ஆம் திகதி மறைந்தார்.
தினபதி தினசரியில் தினமும் புதிய சிறுகதைகள் என்ற களத்தில்  பல புதிய இளம்தலைமுறை எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, எதிர்காலத்தில் அவர்களை ஆக்க இலக்கியவாதிகளாக்கிய பெருமையும் அவரைச்சாரும். அக்காலப்பகுதியில் இளம் மாணவர்கள்  எழுத்தாளர்களாக  தினபதியில் வளர்க்கப்பட்டார்கள்.


தினபதி, சிந்தாமணி, ராதா, சுந்தரி, தந்தி  முதலான தமிழ் இதழ்களையும் தவஸ உட்பட சில சிங்கள இதழ்களையும் SUN  என்ற ஆங்கிலத்தினசரியையும் அதன் ஞாயிறு பதிப்பையும் வெளியிட்ட சுயாதீன பத்திரிகை சமாஜம் என்ற பெரிய நிறுவனம் 1970 இல் நடந்த பொதுத்தேர்தலில்  ஶ்ரீமா - என். எம், -  பீட்டர் ஆகியோரின் கூட்டணி வெற்றியடைந்து பதவிக்கு வந்த காலத்தில்,  அந்த அரசின் சில  நடவடிக்கைகளை  விமர்சித்த  காரணத்தால்  வெறுப்புக்கும் ஆளாகி  1974 ஏப்ரில் மாதம் 20 ஆம் திகதி  சீல்வைத்து பூட்டப்பட்டது.
ராதா பத்திரிகையின் ஆதரவில்  மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் அவருடைய  அன்றைய கதாநாயகி சரோஜாதேவியும் இலங்கைக்கு அழைக்கப்பட்டனர்.
எனினும்  சுயாதீனப் பத்திரிகை சமாஜம் தடை நீங்கி 1977 இற்குப்பின்னர்    திறக்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் மற்றும் ஒரு பெரிய புத்தக வெளியீட்டு குழுமம் எம்.டி. குணசேனா.
இராஜ .அரியரத்தினம்,  இரத்தினசிங்கம், கானமயில்நாதன், செ. செல்வரத்தினம், வித்தியாதரன், க.சிவகுருநாதன், தில்லைநாதன், சுபாஷ் சந்திரபோஸ், பி.கே. பி. நாதன், பத்மசீலன், மாஸ்டர் சிவலிங்கம், கருணாகரன், இந்திரலிங்கம், செல்வநாயகம், தமிழ்மாறன், செல்வராஜா, இரத்தினம், பேரின்பநாயகம், வரதசுந்தரம், பைரூஸ், தாஜூதீன், மேரி, சந்திரா முதலான  சிரேஷ்ட  பத்திரிகையாளர்களும்  தினபதி -சிந்தாமணி  ஆசிரியபீடங்களில்  பணியாற்றினர்.
இவர்களில்  சிலர் இன்றில்லை. சிலர் வெளிநாடுகளில். மேலும் சிலர் தொடர்ந்தும்  ஏதாவது  ஓர்  ஊடகத்துறையில்  பணியாற்றுகின்றனர்.
சிந்தாமணியில்  இலக்கியபீடம் என்ற பத்தியை சிவநாயகம் தொடர்ந்து எழுதியதுடன்,  பாரதி நூற்றாண்டு காலத்தில் " நான் கண்ட பாரதி" என்ற நீண்ட தொடரையும் வாராந்தம் எழுதியிருக்கிறார்.
இத்தொடரே பாரதி பற்றிய பார்வையை அக்காலப்பகுதியில் சிந்தாமணி தரப்பில் விரிவாகச்சொன்னதனால்  வேறு குறிப்பிடத்தகுந்த பாரதி குறித்த ஆக்கங்களை அதில் எதிர்பார்க்க இயலவில்லை. எனினும் சிவநாயகம் அதற்கு முன்னர் பணிபுரிந்த தினகரன், சுதந்திரன், வீரகேசரி முதலானவற்றில் பாரதிக்கு போதிய களம் வழங்கப்பட்டிருக்கிறது.
சுயாதீன பத்திரிகை சமாஜம் எதிர்பாராதவிதமாக அதன் நிருவாகத்தினால் 1990 இல் நிரந்தரமாக மூடப்பட்டதும்  சோகமான முடிவு.  கொழும்பு பாமன் கடையிலிருந்து வெளியான மாணிக்கம்  என்னும் கலை இலக்கிய மாத இதழுக்கும் சிவநாயகம் சிறிது காலம் ஆசிரியராக  இருந்துள்ளார்.
பாரதியார் தமது காலத்தில் சுதேசமித்திரன், இந்தியா, கர்மயோகி, சூர்யோதயம், விஜயா, சித்ராவளி, பாலபாரதி, சக்கரவர்த்தினி முதலான பத்திரிகைகளில் பணியாற்றியிருப்பவர். பாரதநாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே எதிர்கால பாரதம் எவ்வாறு அமையவேண்டும்  என்று  தீர்க்கதரிசனக்கண்ணோட்டத்தில் இந்தப் பத்திரிகைகளில்   எழுதியதுடன், தமிழில் அங்கதம் நிரம்பிய கேலிச்சித்திரங்கள் வெளியாவதற்கும் வழிகோலியவர்.
பாரதி இளைஞராகவே மேற்சொன்ன பத்திரிகைகளில் அர்ப்பணிப்புடன் இயங்கியவர். அவர் அன்று அவற்றில் எழுதிய கருத்துக்கள் தொடர்பாக  இன்றுவரையில் ஆய்வுகள், எதிர்வினைகள் தொடருகின்றன.
தினபதி - சிந்தாமணி ஆசிரிய பீடங்களில் பணியாற்றியவர்களுக்கு சிவநாயகம் வழிகாட்டியாகவும் நல்லாசானாகவும் விளங்கியவர். அரசியல் சார்ந்த செய்திகளில் - முக்கியமாக அவற்றின் தலைப்புகளில் விவரணங்களும்  காணப்படும்.
உதாரணத்திற்கு ஒரே ஒரு தகவலை மாத்திரம் சொல்லிவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்வோம்.
தமிழர் விடுதலைக்கூட்டணித்தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம், 1977 இல் நடந்த பொதுத்தேர்தலையடுத்து எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவரானார். அவ்வேளையில் தினபதியில் ஒரு செய்தியின்  தலைப்பு  இவ்வாறு இடம்பெற்றது.
"தமிழ் ஈழம் கேட்ட  'அமிர்' இலங்கை அரசின் காரும் வீடும் ஏற்பாரா..? "
அத்துடன் நில்லாமல் இந்தத்தலைப்புக்கு இருமருங்கும் ஒரு காரின் படத்தையும் ஒரு வீட்டின் படத்தையும் சிவநாயகமோ அல்லது அவரது தூண்டுதலினால் வேறு யாரோ  அதில்  பதிவுசெய்தனர்.
ஏற்கனவே 1965 இல் நடந்த பொதுத்தேர்தலில் அமிர்தலிங்கம், வட்டுக்கோட்டை தொகுதியில் ஆ. தியாகராசா என்ற முன்னாள் கல்லூரி அதிபர் ஒருவரிடம் தோற்றிருந்தவர். அதன் பின்னர் அவரும் அவர் மனைவி மங்கையற்கரசியும் தமிழ் உணர்ச்சியை தூண்டும் விதமாக  மேடைகளில்  முழங்கி  இளம்தலைமுறையினரை எழுச்சிகொள்ளவைத்தனர். 
அதன் விளைவே வட்டுக்கோட்டை மாநாட்டில்  தனித்தமிழ் ஈழத்தீர்மானம். ஆயினும் அமிர், எதிர்பாராத விதமாக எதிர்க்கட்சித்தலைவராகி,  அன்றைய ஜே.ஆர். அரசு வழங்கிய சௌகரியங்களை  ஏற்கநேர்ந்தது.
முன்னர் தனித்தமிழ் ஈழம் கேட்டவர், இன்று எவ்வாறு காரும் வீடும் ஏற்கிறார்...? என்ற தொனிப்பொருளில் கேலிச்சித்திரமாக அல்ல செய்தியாகவே தினபதியில் வெளியானது.
இலங்கையில் தோன்றிய தமிழ்ப்பத்திரிகைகள் தமிழ் உணர்வை பறைசாற்றவும் அதனை மக்களிடம் வளர்க்கவும் பாரதியின் கருத்தியல்களையே உள்வாங்கியிருப்பதும் துலக்கமானது.
அரசியலுணர்வாக இருந்தாலென்ன, தேசிய - சர்வதேசிய உணர்வாக இருந்தாலென்ன - இனவுணர்வாக இருந்தாலென்ன, இவற்றுக்கெல்லாம் பாரதி ஊற்றுக்கண்ணாக விளங்கியிருப்பவர்.
" ஜனத்தலைவர்களாவார் யார்...? " ( WHO ARE THE REAL LEADERS OF THE  PEOPLE...? ) என்ற கட்டுரையில்  உண்மையான தலைவன் யார்...? என்பதை பாரதி விளக்கியுள்ளார்.
" காங்கிரஸ்களும் கான்பிரன்சுகளும் ஒன்றுக்குப்பத்தாக  மலிந்து கிடக்கும்  இந்நாட்களில் ஜனத்தலைவர்களும் 'புற்றீசல்' போல மலியத்தொடங்கினர். பொருளுள்ளவர்களும்  இரயில்வேயில் பிரயாணம்  செய்யத்தக்க சௌகரியம்  வாய்ந்தவர்களும் - இங்கிலீஷ் பாஷையில் குளறிக்குளறியாவது  பேசப்படித்தவர்களும் - இன்னும் இப்படிப்பட்ட  பலரும் - தாங்களும்  ஜனத்தலைவர்களென வாய்ப்பறை அடிக்கின்றனர்.
யாவனொருவன் தனது ஜனன தேசமாகிய இந்தியாவானது, இந்த வறிய நிலையிலிருப்பதைப்பற்றி  இராப்பகல் வருந்துகிறானோ யாவனொருவன் இந்த முப்பது கோடி இந்தியனும் வயிறார உண்பதற்கு உணவும் உடுக்க உடையுமின்றித் தவிக்கிறார்களே என மனமிரங்கிக்  கண்ணீர் சொரிகிறானோ, யாவனொருவன் பொதுஜனங்களுக்கு வந்த சுப துக்கங்களும் கஷ்ட நஷ்டங்களும் தனக்கு வந்ததாய் எண்ணி அனுதாபிக்கின்றானோ - இன்னும் யாவனொருவன் இந்தத் துன்பங்களை நிவர்த்திப்பதன் பொருட்டுத் தனது உயிரையும் இழக்கத்தயாரயிருக்கின்றானோ அவன் ஒருவனே ஜனத்தலைவன். அவனொருவனே  தேசாபிமானி. அவனொருவனே இத்தேசத்தார் வணங்கும் கண்கண்ட தெய்வமல்லாமல்,  கேவலம் பொருளைக்கொண்டும்  வாயாடிக்கொண்டும் தேசாபிமானியெனவும் ஜனத்தலைவனெனவும் பிதற்றுவோர்கள் உண்மையான ஜனத்தவைர்களாக மாட்டார்கள் "  ( ஆதாரம்: பாரதியார் சிந்தனைகள் - நூல் கலாநிதி க. அருணாசலம்)
பாரதியார்  மேற்குறித்த பத்தியை எழுதும்பொழுது அவருக்கு வயது 24. இந்தியா சுதந்திரமடைவதற்கு முன்னர் எழுதப்பட்டது. அந்த வரிகளில் இழையோடிய  அவருடைய தீர்க்கதரிசனம் இன்றைக்கும் பொருந்துகிறது அல்லவா...?
அரசுகளை உருவாக்குவதிலும் வீழ்த்துவதிலும் தலைவர்களை உருவாக்குவதிலும் அதேசமயம் மக்களிடம் அவர்களை வளர்ப்பதிலும் - தனிமைப்படுத்துவதிலும் பத்திரிகைகள் பெரும்பங்கு வகித்துள்ளன.
இலங்கையில் அரசியல் கட்சிகள் மாத்திரமின்றி, தொழிற்சங்கங்களும் தலைவர்களும் வளருவதற்கும் பத்திரிகைகள் பக்கபலமாகத்திகழ்ந்துள்ளன.
அதேவேளை பத்திரிகைகளுக்கு 'வாய்ப்பூட்டு' போடுவதற்கும் தணிக்கை செய்வதற்கும் - சீல் வைத்து மூடுவதற்கும் பத்திரிகை ஆசிரியர்களை தண்டிப்பதற்கும் அரசுகளும் அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும், தலைவர்களும் பின்னணியில் இயங்கிய வரலாறையும் நாம் இலகுவில் மறந்துவிடமுடியாது.
தமிழ்ப்பத்திரிகை ஊடகத்துறையில் இந்த நிலையானது பாரதி காலத்திலிருந்தே தொடருகின்றது. பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப்படுவதும், தாக்கப்படுவதும், கொலைசெய்யப்படுவதும், காணாமலாக்கப்படுவதும் இன்றுவரையில் தொடருகின்றது.
எனவே ஒரு காலகட்டத்தில் தினபதி - சிந்தாமணி வெளியான சுயாதீன பத்திரிகை சமாஜம் சீல்வைத்து மூடப்பட்ட செய்தியானது பாரதியின் பத்திரிகை உலக கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுது எதிர்பார்க்கப்பட்டதே.
ஆயினும் அங்கு பணியாற்றிய சிலர் அத்தகைய தடைகள், ஏமாற்றங்களால் சோர்வுற்றுவிடாமல், தொடர்ந்தும் பத்திரிகைகளை வெளியிட்டும், ஆசிரியர்களாக இயங்கியும் வருவதும் வரலாறாகிவிட்டது.
இலங்கையில் பாரதி என்னும் இந்தத் தொடர் வெளியாகும் யாழ். காலைக்கதிர் பத்திரிகையில் பணியாற்றும் சிலர் கடந்துவந்த பாதையை பாரதியின் கருத்தியல்களிலிருந்தே அவதானிக்க முடிகிறது.
எஸ்.டி. சிவநாயம் சிந்தாமணியில் தொடர்ந்து எழுதிய " நான் கண்ட பாரதி" இதுவரையில் நூல் வடிவம் பெறவில்லை. அவ்வாறு அதனை அவர் வெளியிட விரும்பி குறிப்பிட்ட பத்திரிகை நறுக்குகளை பாதுகாத்து  வைத்திருந்த தகவலும் அண்மையில் தெரியவந்துள்ளது. யாராவது அதனை வெளியிட  ஆவனசெய்யவேண்டும் என்று இந்த அங்கத்தின்  ஊடாக வேண்டுகோள்  விடுக்கின்றோம்.
( தொடரும்)