உயிர்க்காற்று அறிவியல் புனைகதை -கே.எஸ்.சுதாகர்

.
(இரண்டு சம்பவங்கள்)


கதை ஒன்று:
படார்' என்றொரு சத்தம். நான் விழித்துக் கொண்டேன். இரவுப்பொழுதாகையால் அந்தச் சத்தம் பெரிதாகக் கேட்டது. எத்தனை மணியாக இருக்கலாம்? அப்பா வழக்கமாக நேரத்திற்கு (நாலரை ஐந்து மணியளவில்) எழும்பி  சுவாமி கும்பிடத் தொடங்கி விடுவார்.

"அது என்ன சத்தம்?" படுக்கையிலிருந்தபடியே அப்பாவும் கேட்டார். எல்லாரும் எழுந்து கொண்டோம். விளக்கைப் போட்டோம். ஆளாளுக்கு ஒவ்வொரு அறையாகத் தேடுதல் செய்தோம். ஒன்றையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பா மணிக்கூட்டைப் பார்த்தார். மணி மூன்று பதினைந்து.

"சரி எழும்பி விட்டேன். இனிச் சுவாமியைக் கும்பிடுவோம்" காலைக்கடன்களை முடித்து குளித்து பூக்கூடையை எடுத்துக் கொண்டார். தேவாரம் பாடியபடியே பூக்கள் கொய்வதற்காக முற்றத்திற்கு விரைந்தார். நாங்கள் மீண்டும் உறங்க முயற்சி செய்தோம். மனதில் பயம். அந்தச் சத்தம் இப்பவும் காதிற்குள் ஒலித்தபடி.


அப்பாவின் தேவாரங்களைக் கேட்டபடியே கண்ணயரும்போது, "ஓடி வாங்கோ! ஓடி வாங்கோ!!" என்ற கூக்குரல் சுவாமிப்பட அறையிலிருந்து கேட்டது.

சுவாமிப்பட அறையில் - ஒரு பக்கச் சுவரில் நீட்டிற்கு தட்டு அடித்து, அதிலே நிறைய சுவாமிப்படங்களை வைத்திருந்தார் அப்பா. அவற்றின் மத்தியில் இருந்த ஒரு படம் நூற்றியெண்பது பாகையால் திரும்பி எதிராகி நின்றது.

அறையின் ஜன்னல்கள் எதுவுமே திறந்திருக்கவில்லை. காற்றும் ஒன்றும் பெரிதாக வீசவில்லை. நாங்கள் திகைத்துப் போனோம். இது எப்படி நடந்தது?

அப்பா கொஞ்ச நேரம் அந்தப்படத்தையே உற்று நோக்கியபடி இருந்தார். பின்னர் அந்தப்படத்தை திருப்பி நேராக வைத்தபோது அவர் கைகள் நடுங்கின. முருகன் படம். கற்பூரம் சாம்பிராணி கொழுத்தி மணி அடித்து தேவாரங்கள் பாடினார்.

அம்மா எல்லாரிற்கும் சுடச்சுட தேநீர் வைத்துத் தந்தார். நானும் அண்ணாவும் படிப்பதற்காக புத்தகங்களை மேசை மீது பரப்பினோம். புலன்கள் ஒன்றாகவில்லை. ஆளாளுக்கு எப்படி நடந்திருக்கலாம் என்று கதைத்தபடி இருந்தோம். அப்பா கும்பிட்டு முடித்து சாய்வணைக்கதிரையில் சரிந்தார். விடியத் தொடங்கியது.

சற்று நேரத்திற்கெல்லாம் படலையில் அரவம் கேட்டது. "துரை... துரை..." என்று கூப்பிட்டபடியே ஒருவர் சைக்கிள் மணியையும் அடித்துக் கொண்டு சைக்கிளில் இருந்து குதித்தார். அப்பா அரிக்கன் விளக்கைத் தூக்கிக் கொண்டு 'கேற்' வரைக்கும் சென்றார். கேற்றைத் திறந்து, வந்தவரைக் கூட்டிக் கொண்டு உள்ளே வந்தார். அது சிவம் மாமா. அவர் வளவளவென்று கதைத்தபடியே வந்தார். அப்பாவின் குரலிலும்  ஏதோ கலவரம் தெரிகிறது.

உள்ளே வந்தவர் "தம்பி இறந்து போனார்" என்று அம்மாவிடம் சொல்லிவிட்டு வீட்டிற்குள்ளே சென்று உடுப்பை மாற்றத் தொடங்கிவிட்டார். சிவம் மாமாவை இரு என்று கூடச் சொல்லவில்லை. அம்மாதான் அவருடன் பேச்சுக் கொடுத்தார்.

"என்ன நடந்தது?" - "ஹாட் அற்றாக்!" - "எத்தினை மணிமட்டிலை?" - "விடியப்புறம் மூன்று மணிமட்டிலை"

அம்மா இரண்டு சொல்லுக் கதைக்கவில்லை. அப்பா வெளிக்கிட்டுக் கொண்டு வந்துவிட்டார்.

"நான் போட்டு வாறன். விடிஞ்சாப்பிறகு நீங்களும் வெளிக்கிட்டு வாங்கோ" சொல்லிவிட்டு வந்தவருடன் கூடச் சென்றார். பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. திரும்பவும் வீட்டிற்குள் வந்தார்.

"அந்த முருகன் படம் - என்ரை தம்பி வாங்கித் தந்ததுதான்" என்றார்.

கதை இரண்டு:


ஒருமுறை எனது ஆசன வாயில் நோய் வந்து கஸ்டப்பட்டுப் போனேன். Fistula என்று அந்த நோயைச் சொல்வார்கள். மலம் சிரமமில்லாமல் வெளியேற உதவும் சுரப்பிகளின் துவாரம் அடைபடுவதால், சுரப்பிகளிலிருந்து வெளிவரும் நீர் வெளிப்படாமல் கிருமிகள் அதனைப் பாதிக்கும். மூன்றுமுறை சத்திரசிகிச்சை செய்தபின்னர்தான் ஓரளவு முன்னேற்றம் வந்தது. கார் ஓடும் போதும், இருக்கும்போதும் 'போதும்' என்றாகிவிடும். தலையணை போன்ற வட்ட வடிவிலான 'பிளாஸ்ரிக் குஷன்' ஒன்று எப்போதும் என்னுடன் கூடவே பிரயாணம் செய்யும்.

ஒருமுறை இராசு மாமா என்னைப் பார்க்க வரும்போது - இப்படியானவர்கள் அமருவதற்காக மருத்துவ ரீதியில் செய்யப்பட்ட பிளாஸ்ரிக்கிலான வளையம் ஒன்றிருப்பதாகச் சொன்னார். "எங்கே மாமா அதை வாங்கலாம்?" - "பார்மசியில் வாங்கலாம்" - "அதற்கு என்ன பெயர்?" - அவர் அதன் பெயரை மறந்துவிட்டார். "நான்கூட அதைத்தான் பாவிக்கிறேன். நெடுகலும் கார் ஓட வேண்டி வாறதாலை நோ வராமலிருக்க பாவிக்கிறனான்" சொல்லிக் கொண்டே காருக்குள் வைத்திருந்த அந்த வளையத்தை எடுத்து வந்தார். அந்த வளையத்தில் கூட அதன் 'பிறாண்ட் நேம்' இருந்ததேயொழிய அதன் பெயர் இருக்கவில்லை. பெயர் இல்லாத அதற்குள் மேலும் காற்றை ஊதினார் இராசு மாமா. தனது ஞாபகமாக அதை என்னிடம் தந்தார். தான் இன்னொன்று வாங்குவதாகவும் சொன்னார். அவரது அந்தக் கருணை உள்ளத்தை நான் வியந்தேன்.

கடந்த மூன்று நான்கு வருஷங்களாக அந்த வளையத்தைத்தான் பாவித்து வருகின்றேன். ஒரு 'ஷொக் அப்ஷோவர்' மாதிரி அது என்னைக் காத்து வருகின்றது. காரிற்குள் அதை நிரந்தரமாக விட்டு வைத்திருக்கின்றேன். அதற்குள் திரும்பவும் காற்றை ஊதவேண்டிய தேவை இற்றைவரை எனக்கு ஏற்படவில்லை.

இராசு மாமாவிற்கு திடீரென்று வருத்தம் கண்டது. சத்திரசிகிச்சை செய்த வைத்தியர்கள் அவர் பிழைப்பது மிகவும் கஸ்டம் என்று சொல்லிவிட்டார்கள். அவருக்கும் அது தெரிந்தே இருந்தது. அடிக்கடி வைத்தியசாலை சென்று அவரைப் பார்த்து வந்தேன். அவர் வாங்கித் தந்த வளையத்தை அவருக்கு நினைவூட்டினேன். அவர் ஊதித்தந்த காற்றுடன் பத்திரமாக இருப்பதாகவும் சொன்னேன். திரும்பிப் படுப்பதற்கெல்லாம் மிகவும் கஸ்டப்பட்டார். அந்த வளையத்தைப் போல தனது உடம்பு பூராவும் 'கவர்' பண்ணக்கூடியவாறு ஏதாவது இருந்தால் நல்லாக இருக்கும் என்றார்.

இராசு மாமாவை வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு போகும்படி சொல்லிவிட்டார்கள். இருக்கும் காலங்களை - மகிழ்ச்சியாக - உறவினர்களுடனும் நண்பர்களுடனும் கழிப்பதற்காக அந்த ஏற்பாடு. நோயின் உபாதை நீங்குவதற்கு மாத்திரம் மருந்து கொடுத்தார்கள். இராசு மாமா சிரித்தபடியே காலத்தைக் கழித்தார்.

அடிக்கடி அவரிடம் போய் உரையாடிவிட்டு வருவேன். அப்படி ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை மாமாவைச் சந்தித்துவிட்டு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். மாலை நான்குமணி இருக்கும். இராசு மாமா இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது. அடித்துப்பிடித்துக் கொண்டு மீண்டும் அவர்களின் வீட்டிற்குப் புறப்பட்டேன். காரிற்குள் ஏறி இருந்தபோது முற்றாக ஒரு வேறு அனுபவத்தை நான் பெற்றேன். அந்த பிளாஸ்ரிக் வளையத்தினுள் இருந்த காற்று சுத்தமாக முழுவதும் வெளியேறி சுருங்கி இருந்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. இது எப்படி நடந்தது?

இரவு திரும்பி வரும்போது ஒரு மணியாகிவிட்டது. மறக்காமல் அந்த வளையத்தை எடுத்து வந்து காற்றினால் நிரப்பினேன். எங்காவது ஓட்டை இருக்கின்றதா எனச் சோதித்தேன். எந்தவிதமான துளைகளும் இல்லாமல் இருந்தது. இப்போது அந்த வளையத்தினுள் என்னுடைய 'உயிர்க்காற்று" புகுந்து கொண்டது.



No comments: