தன்னைத் தானே தபாலில் அனுப்பிய மனிதர்

ரெக் ஸ்பியர்ஸ் 1964-இல் தனது தபால் பயணத்தை தொடங்க முன்னர் லண்னில்

1960-களில் ஆஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ்லண்டனிலுருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார்.
தனது மகளின் பிறந்த நாளுக்குள் தான் வீட்டுக்குச் செல்லத் தீவிரமாக முயன்றும், அது முடியாமல் போகவே இந்த வழியை தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன நிலையில், தனது இந்த சுவாரஸ்யமான பயண அனுபவம் குறித்து அவர் இப்போது நினைவு கூர்ந்திருக்கிறார்.
ஈட்டி எறியும் விளையாட்டு வீரரான ரெக் ஸ்பியர்ஸ் தன் விளையாட்டுக்குத் தடையாய் இருந்த காயத்தில் இருந்து மீண்டு டோக்யோவில் நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் விளையாட்டில் பங்குகொள்ள விரும்பினார்.


மருத்துவ சிகிச்சைக்காக இங்கிலாந்து வந்த அவர், தன்னால் ஒலிம்பிக்ஸில் பங்கு கொள்ள முடியாது என்று புரிந்து கொண்ட நிலையில் ஊர் திரும்ப முடிவெடுத்தார்.
ஆனால், அதற்கு அவரிடம் பணம் இல்லை. பணத்தேவைக்காக, விமானநிலையத்தில் சரக்குகளை ஏற்றும் பிரிவில் ஒரு வேலையைத் தேடிக்கொண்டார்.
ஆனால் அவர் உழைத்துச்சேர்த்த பணத்தை யாரோ ஒருவர் திருடிவிட, ஸ்பியர்ஸின் மூளையில் உதித்தது தான் இந்த தபால்வழிப் பயணம்.

மூன்றுநாள் பயணம்

பலதடவைகள் விலங்குகள் மரப்பெட்டிகளுக்குள் அடைக்கப்பட்டு அனுப்பப்பட்டதை நேரில் பார்த்திருந்ததால், தானும் ஏன் அதே வழியில் பயணிக்க முடியாது என்று தன்னுடைய நண்பர் ஜான் மெக்சார்லியுடன் ஆலோசித்து அவரையும் இந்த முயற்சிக்கு பணிய வைத்துவிட்டார்.
இதற்காக மரப்பெட்டி ஒன்றை தயார் செய்தார் ஜான். கண்டிப்பாக இந்த பயணத்தை ஸ்பியர்ஸ் மேற்கொள்வார் என நம்பி, அவர் வசதியாக குத்துக்காலிட்டு அமர்ந்து கொண்டோ அல்லது முட்டியினை மடக்கி முதுகுப்புறமாக படுத்துகொள்ளும் வகையிலும் இந்த மரப்பெட்டி தயாரானது.

ரெக் ஸ்பியர்ஸ் பயணித்த மரப்பெட்டி

பெட்டியின் இரண்டு பக்கமும் ஸ்பியர்ஸ் திறந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பெற்று, அவர் வேண்டும் போது வெளியே வர வாய்ப்பு இருக்கும் படி அந்தப்பெட்டி பயணத்திற்குத் தயாரானது.
சந்தேகத்தைத் தடுக்கும் வகையில், பெயிண்ட்டு டப்பாக்கள் உள்ள பெட்டி என்று லேபிள் ஒட்டப்பட்டு, கற்பனையாக ஒரு ஆஸ்திரேலிய ஷூ நிறுவனத்தின் முகவரி பெட்டியின் மேல் எழுதப்பட்டது.
ஒரு விமான பயணச்சீட்டுக்கான செலவை விட இந்த மரப்பெட்டி பயணத்துக்கு மிகவும் கூடுதலான செலவாகும் என்று தெரிந்திருந்தும் கூட, சொந்த ஊருக்கு சென்று சேர்ந்துவிட்டால் பிறகு எப்படியும் செலவை சமாளித்து விடலாம் என்று ஸ்பியர்ஸ் எண்ணினார்.
ஒரு டார்ச் , பதப்படுத்தப்பட்ட உணவு டப்பா, ஒரு தலையணை, ஒரு போர்வை, ஒரு தண்ணீர் பாட்டில், மற்றுமொரு பாட்டில் சிறுநீர் கழிக்க என்று பெட்டிக்குள் வைத்து, ஆஸ்திரேலியாவின் பெர்த் நகர் நோக்கி ஏர் இந்தியா விமானத்தில் ஆரம்பமானது தபால் பயணம்.
பனிமூட்டம் காரணமாக 24 மணிநேரம் லண்டன் விமானநிலயத்தில் பெட்டிக்குள் காத்திருப்பு, பெட்டிக்குள்ளேயே பாட்டிலில் சிறுநீர் கழிப்பு, மும்பையில் தலைகீழாக்கப்பட்ட பெட்டியில் 4 மணிநேரம் தவம், மும்பையின் கொளுத்தும் வெயிலில் ஆடைகளை பெட்டிக்குள்ளேயே களைந்த களைப்பு என ஏராளமான அதிரவைக்கும் விடயங்கள் நிறைந்த ஸ்பியர்ஸின் இந்த மூன்று நாள் பயணம் தன்னுடைய தாய் நாட்டினரின் மொழியை கேட்டபோது நிறைவுக்கு வந்தது.
விமான நிலையத்தில் பெட்டிகள் வைக்கும் களஞ்சியப் பகுதிக்குள்ளிருந்து, சில சிறிய ஆயுதங்களைக் கொண்டு சுவரில் ஓட்டையிட்டு வெளியே வந்து விட்டார் ஸ்பியர்ஸ்.
மூன்று நாட்களாகியும் ஸ்பியர்ஸிடமிருந்து செய்தி வராமல் போகவே பயந்து போன ஜான், ஊடகத்திற்கு இந்த செய்தியைத் தெரிவித்துவிட, தீயாய் பரவிய இந்த விஷயம் புகழ்பெற்ற ஆஸ்திரேலிய அரசியல்வாதி ஒருவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
5 ஆஸ்திரேலிய டாலர்களை அனுப்பி இவரின் இந்த முயற்சியைப் பாரட்டியிருக்கிறார் அந்த அரசியல்வாதி.
கடைசியில், விமானப்பிரிவு இவரிடம் காசு வசூலிக்கவில்லை என்றாலும், தன் தெரு முழுவதும் கேமராக்களும் பத்திரிகை நிருபர்களும் சூழ்ந்திருப்பதை பார்த்ததும், தான் வியப்படைந்து போனதாக ஸ்பியர்ஸ் கூறினார்.
தன் மகளின் பிறந்தநாளுக்கு நேரத்தில் வந்து சேர்ந்தாலும், இந்த பயணத்தை நம்பாமல் இருந்த மனைவியை சமாதானப்படுத்தியது கடினமாக இருந்தது என்றார் அவர்.
அதேவேளை, இப்படி ஒரு பயணம் இந்தக் காலத்தில் சாத்தியமே இல்லை என்கிறது விமானத்துறை. சரக்குகள் வைக்கும் இடம் அதிக 'அழுத்த நிலை' கொண்டதாகவும், உறைநிலைக்கும் அதிகமான குளிர் இருக்கும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்காக, பெட்டிகள் சோதனை செய்யப்படும் போது மறைந்திருக்கும் மனிதர் கண்டுபிடிக்கப்பட்டுவிடுவார் என்றும் விமானநிலய அதிகாரிகள் கூறுகின்றனர்.
NANTRI http://www.bbc.co.uk/

No comments: