தோழர் சி. புலேந்திரன் காலமானார்..!

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்க இணைச்செயலாளராகப் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன் காலமானார்..!


 இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சண் பாதை) ஆதரவாளராகவும்
''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்"
இணைச்செயலாளராகவும் பணியாற்றிய தோழர் சி. புலேந்திரன்
வியாழக்கிழமை (01 - 01 - 2015) காலமானார் என்பதை
மனவருத்தத்துடன் அறியத் தருகிறோம்.

யாழ். கன்பொல்லையைப் பிறப்பிடமாகவும், கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் சின்னத்துரை புலேந்திரன்  01 - 01 - 2015  வியாழக்கிழமை காலமானார்.

தோழர் புலேந்திரன் நீண்ட காலமாக இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்
(சண் பாதை) ஆதரவாளராகவும் ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன
இயக்கத்தின்" செயல்வீரனாகவும் செயற்பட்டவர்.




1979 -ம் ஆண்டு அக்டோர் மாதம் 21 -ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்" மாநாட்டில் இயக்கத்தின் இணைச்செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்டார். 

அவருடன் இணைச்செயலாளராகத் தெரிவுசெய்யப்பட்ட 
தோழர் கே. தங்கவடிவேல் மாஸ்டரும் அண்மையில் காலமாகியமை வருத்தத்திற்குரியது.

தீண்டாமை ஒழிப்பு போராட்ட நடவடிக்கையின்போது கன்பொல்லையில் உயிர்நீத்த தோழர்களுக்கு சிலை அமைக்கும் பணியிலும் தோழர் புலேந்திரன் முன்னின்று உழைத்தவர்.
கன்பொல்லையில் நிறுவப்பட்ட ''தியாகிகள் சிலை" திறப்புவிழாவில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் 
நா. சண்முகதாசன் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

தோழர் புலேந்திரன் அரசியல் நடவடிக்கைகளில் மாத்திரமன்றி கலை இலக்கிய முயற்சிகளிலும் தீவிர ஆர்வம் காட்டியவர்.
1979 -ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21 -ம் திகதி யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற ''தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின்" மாநாட்டில் இடம்பெற்ற கே. டானியலின் கதை வசனத்தில் உருவான ''கதை இன்னும் முடியவில்லை" என்ற நாடகத்தில் மருத்துவப் பேராசிரியர் நந்தி - பிரபல ஈழத்து திரைப்பட - நாடக நடிகர்கள் சிசு நாகேந்திரா - பேரம்பலம் ஆகியோருடன் தோழர் புலேந்திரனும் நானும் பங்குகொண்டமை இன்றும் ஞாபகத்திலுண்டு.
அவரோடு பழகிய - செயற்பட்ட கால நினைவுகள் மறக்கமுடியாதவை.
அவரை இழந்து துயருறும் குடும்பத்தினரின் துயரில் தோழர்களோடு நாமும் பங்குகொள்கிறோம்..!



- வி. ரி. இளங்கோவன்.


No comments: