ஹைதராபாத்துக்கு ஒரு நாள் காவல்துறை ஆணையரான 10 வயது சிறுவன்!

.
10 வயது சிறுவன் சாதிக்கின் காவல்துறை ஆணையராக வேண்டும் என்ற கனவை ஹைதராபாத் காவல்துறை ஆணையர் மகேந்தர் ரெட்டி நிறைவேற்றியுள்ளார். உடல்நிலை பாதித்து, தன் வாழ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சாதிக்கின் ஆசையை நிறைவேற்ற “ஆசையை நிறைவேற்றும் அறக்கட்டளை” முன் வந்தது. இதையடுத்து சிறுவனின் நிலை குறித்து காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஒரு நாள் மட்டும் சாதிக் காவல்துறை ஆணையராக காவல்துறை உடை அணிந்து கொண்டு, அதற்கான தொப்பியையும் அணிந்து கொண்டு காவல்துறை ஆணையர் நாற்காலியில் அமர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தான். அப்போது, சிறுவனுக்கு காவல்துறை ஆணையர் உட்பட அனைத்து உயர் அதிகாரிகளும் சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினர்.
காவல்துறை ஆணையராக நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, ரௌடிகளை பிடிக்க வேண்டும் என்று மகிழ்ச்சியோடு பதிலளித்தான். சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றியிருப்பது தனக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக காவல்துறை ஆணையர் மகேந்திர ரெட்டி கூறினார். நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் சிறுவனின் விருப்பம் நிறைவேறியிருப்பதன் மூலம், அவனது வாழ்நாட்கள் சற்று அதிகரிக்கும் என்று அறக்கட்டளை நிர்வாகி கூறியுள்ளார். நாமும் அந்த சிறுவனுக்கு ஒரு சல்யூட் வைப்போம்.

No comments: