சரித்திரத்தைப் பேசும் சமூக அக்கறையுள்ள குறும்படம் ரேகை

.
பயாஸ்கோப் முனுசாமி



மருதிருவர் குறும்படத்தை இயக்கிய தினகரன் ஜெய், ஜெகமதி கலைக்கூடத்துக்காக இயக்கியிருக்கும் இன்னொரு சரித்திர ஆவணம் - ரேகை குறும்படம். அவருடைய முதல் முயற்சியான மருதிருவர் படத்தில் மருது சகோதரர்களின் விடுதலைப்போர் வரலாற்றையும் ஆலயங்களுக்கு அவர்கள் ஆற்றிய திருப்பணிகளையும், நல்ல ஓவியங்கள் மற்றும் ஆவணங்களின் வழியாகக் காட்சிப்படுத்தியிருந்தார் தினகரன் ஜெய்.
ரேகை படமும் தமிழக விடுதலைப் போராட்டத்துடன் தொடர்பு உடையது.

பிரிட்டிஷ் அரசின் ஆளுகையில் இருந்த நாடுகளில் அவர்களுக்கு எதிராகக் கலகத்தில் இறங்கிய இனக் குழுக்களையும் சமூகங்களையும் அடக்கி ஆளுவதற்கு பலவிதமான வழிகளை பிரிட்டிஷ் அரசு கடைப் பிடித்தது. அதில் ஒன்று ""குற்றப் பழங்குடிகள் சட்டம்''. 1911ல் நடைமுறைப் படுத்தப்பட்ட இந்தச் சட்டம் நான்கு முறை திருத்தி அமைக்கப்பட்டது. ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்கள் எவையெவை என்று நாடு முழுதும் கணக்கெடுக்கப்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்ட இந்திய இனக்குழுக்களைத் தேர்ந்தெடுத்தனர். தமிழகத்தில் கள்ளர், மறவர், அகமுடையார் உள்ளிட்ட சுமார் 90க்கும் மேற்பட்ட சாதியரை இந்தக் கொடுஞ் சட்டத்தின் கீழ் வகைப்படுத்தினர். இதில் குறிப்பாக பிற மலைக்கள்ளர்கள் இச்சட்டத்தின் கீழ் மிகவும் அதிகமாகக் கொடுமைப் படுத்தப் பட்டனர். சுமார் 15000 பேர் கண்காணிக்கப்பட்டு பலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றனர் என இந்த சட்டத்தின் கொடுமையை சொல்லி விரிகிறது திரைப்படம். 

இதற்கு எதிரான கிளர்ச்சிகள் பல இடங்களில் வெடித்தன. ஆனால் போலீசாரோ கள்ளர்களுக்கு எதிராக பிற சாதியினரை புகார் கொடுக்கத் தூண்டி விட்டனர். பிறமலைக் கள்ளர்கள் ராதாரி சீட்டு வாங்கிக் கொண்டுதான் ஊரில் நடமாட வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டது. போலீசுக்குப் பிடிக்காதவர்களும் இந்தச் சட்டத்தால் பெரிதும் பழி வாங்கப் பட்டனர். 1920ன் இறுதியில் போலீஸ் ரேகை நிபந்தனையை விதித்தது. இந்தக் கொடுமையான சட்டத்தின் படி குற்றம் சாட்டப்பட்ட குழுக்களில் இருக்கும் ஆண்கள் அனைவரும் தங்கள் பகுதியில் இருக்கும் காவல் நிலையங்களில் வைக்கப்பட்ட பதிவேட்டில் தங்கள் கைவிரல் ரேகையைப் பதித்து விட்டு இரவு முழுதும் காவல் நிலையத்திலேயே தங்க வேண்டும். அதில் மேலும் கொடுமை என்னவென்றால் அதிகப் போக்குவரத்து வசதி இல்லாத அந்தக் காலத்தில் பல கிராமத்தில் வசித்தவர்களுக்கு நடந்து வந்து காவல் நிலையம் சேரவே பல மணி நேரங்கள் பிடித்தன. அந்த இனக்குழுக்களைச் சேர்ந்த பெண்களும் குழந்தைகளும் அடைந்த துயரங்களுக்கு அளவே இல்லை. 
இதை எதிர்த்து 1920, ஏப்ரல் 3 அன்று பெருங்காமநல்லூரில் பெரும் கலவரம் வெடித்தது. படையாச்சி, ஆதிதிராவிடர் போன்ற பல சாதியினரும் இதற்கு எதிராகக் கிளம்பினார்கள். கிளர்ச்சியாளர்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ""கட்டை விரலை வெட்டிக்கொள், அல்லது சிறைக்குப்போ. ஆனால் ரேகை மட்டும் வைக்காதே'' என முத்துராமலிங்கத் தேவர் முழங்கினார். வன்னியகுல சத்திரிய சபா நடத்திய ரேகை சட்ட ஒழிப்புப் போராட்டம், செய்யூர் ஆதிதிராவிடர் பேரவை நடத்திய ரேகை எதிர்ப்புப் போராட்டம் எனப் பல போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன. ஒரு வழியாக 1947 ஜ÷ன் 05ல் ரேகை சட்டம் ரத்து செய்யப்பட்டது. 
இந்த ஒரு பரந்த வரலாற்றை, குற்றப்பரம்பரை சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் கதையை, அவர்களுடைய போராட்டத்தின் கதையை திறம்படச் சொல்லிச் செல்கிறது படம். இந்தப் படத்தின் சிறப்பு அம்சம் என்று சொல்ல வேண்டும் என்றால், ஆவணப்படமாக இருந்தும், ஆவணங்களையும் ஓவியங்களையும் மட்டும் துணைக்கு எடுத்துக் கொள்ளாமல் தேர்ந்தெடுக்கப் பட்ட சம்பவங்களை நடிகர்களை வைத்து நடிக்க வைத்துப் படமாக்கி இருப்பதும் படத்தின் கதை சொல்லும் களத்தை வலுவாக்குகிறது.இந்திய சுதந்திரப்போர் குறித்த சரித்திரத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறும் குற்றப்பரம்பரை சட்டம் மற்றும் அதன் கொடுமையால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் வரலாற்றையும் முறையாகப் பதிவு செய்ய வேண்டும் என்னும் சமூகப் பொறுப்புடனும் அக்கறையுடனும் இந்தப் படைப்பினை வழங்கியிருக்கும் ஜெகமதி கலைக்கூடமும் தயாரிப்பாளர் சி.தீனதயாளபாண்டியனும் எழுதி இயக்கிய தினகரன் ஜெய் மற்றும் இதில் ஈடுபட்ட கலைஞர்கள் அனைவரும் நம் பாராட்டுக்கு உரியவர்கள். சமீபத்தில் ரேகை குறும்படம் மக்கள் தொலைக்காட்சியில் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பு பெற்றது மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி.
மற்ற தொலைக்காட்சி நிலையங்களும், தினகரன் ஜெய் போன்ற இயக்குநர்களையும் ரேகை போன்ற சமூக அக்கறையுள்ள படைப்புக்களையும் ஊக்குவிக்க வேண்டும். தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் தமிழில் பேச முடியாத தமிழ்த் திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அபத்தமான பேட்டிகளையும் தரமற்ற படங்களுக்கும் நடிகர்களுக்கும் அரசியல் காரணங்களால் தரப்படும் தராதரமல்லாத விளம்பரங்கள் மற்றும் விருதுகள் வழியாக பார்வையாளர்களிடையே கருத்துத் திணிப்பு செய்வதையும் மற்ற மூன்றாம் தரமான கண்றாவிகளையும் சற்றுக் குறைத்து இவை போன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும். இதனால் சமூக அக்கறையுள்ள திரைப்படங்களை எடுக்க முன் வருபவர்களுக்கு மேலும் ஊக்கம் தருவதாக அது அமையும் இல்லையா?

Nantri sanimoolai.blogspot.com

No comments: