உலக செய்திகள்


மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன் மர்ம பெண்ணிடமிருந்து விமானிக்கு தொலைபேசி

271 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்

MH370 விமானத்தில் பணித்த பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

எகிப்து இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்தார்

மலேசிய விமானம் புறப்படுவதற்கு முன் மர்ம பெண்ணிடமிருந்து விமானிக்கு தொலைபேசி



24/03/2014  காணாமல் போன மலேசிய எம்.எச்.370 விமானத்தின் விமானி சஹாரி அஹ்மட் சாஹ் அந்த விமானத்தில் புறப்படுவதற்கு முன் அவருக்கு கையடக்க தொலைபேசியில் அழைப்பு விடுத்த பெண்ணொருவர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
அந்த கையடக்க தொலைபேசி இலக்கமானது போலியான அடையாளத்தை காண்பித்து பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

மேற்படி கையடக்க தொலைபேசி எண்ணானது கோலாலம்பூரில் சிம் கார்ட்டுகளை விற்பனை செய்யும் கடையிலிருந்து பெண்ணொருவரால் அண்மையில் போலி அடையாளத்தையும் பெயரையும் வழங்கி பெறப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 
இது சஹாரி அஹ்மட்டிற்கு பயங்கரவாதத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தை அதிகரிப்பதாக உள்ளதாக கூறப்படுகிறது. 
காணாமல்போன விமானத்தின் புதிய பிரதிமைகள்
வெளியானதையடுத்து தேடும் நடவடிக்கை விரிவாக்கம்
காணாமல்போன மலேசியா எம்எச் 370 விமானத்தை தேடும் நடவடிக்கையில் சர்வதேச நாடுகளை சேர்ந்த மேலும் பல விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இணைந்து கொண்டுள்ளன.
அந்த விமானத்தின் சிதைவுகளாக இருக்க சாத்தியமுள்ள பொருட்களை வெளிப்படுத்தும் புதிய புகைப்படங்களை சீனா வெளியிட்டதை அடுத்து பரந்தளவான பிரதேசத்தில் விமானத்தை தேடும் முகமாக 8 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை அனுப்பப்பட்டன.
இந்த தேடுதல் நடவடிக்கைக்கு தலைமை தாங்கும் அமெரிக்கா அவதானிக்கப்பட்ட மர சிதைவுகள் மற்றும் ஏனைய பொருட்கள் தொடர்பில் தாம் ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. 
மலேசியா எயார்லைன்ஸ் விமானம் கடந்த 8ம் திகதி 239 பேருடன் மலேசியா கோலாலம்பூர் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு புறப்பட்ட வேளை காணாமல்போனது.
செய்மதியொன்றிலிருந்து பெறப்பட்ட தகவலின் பிரகாரம் அந்த விமானம் அது இறுதியாக காணப்பட்ட மலாக்கா நீரிணைக்கு மேலான பிரதேசத்திலிருந்து வடமேற்காகவோ அல்லது தென்மேற்காகவோ பயணித்திருக்கலாம் என நம்பப்பட்டது.
இந்நிலையில் வடமேற்கு பகுதியிலுள்ள நாடுகள் எதுவும் மேற்படி விமானத்திலிருந்து ராடர் தொடர்பு எதனையும் பெற்றிருக்கவில்லை.
அதேசமயம் தென் இந்து சமுத்திரத்தில் விமானத்தின் சிதைவுகள் மிதப்பதற்கான சாத்தியப்பாட்டை வெளிப்படுத்தும் இரு தொகுதி செய்மதி புகைப்படங்கள் வெளியானதையடுத்து தென் இந்து சமுத்திரத்தில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென் இந்து சமுத்திரத்திலான தேடுதல் நடவடிக்கையை ஒருங்கிணைக்கும் செயற்பாட்டை மேற்கு அவுஸ்ரேலியாவின் பேர்த் நகரிலிருந்து அவுஸ்ரேலியா கடற்பாதுகாப்பு சபை மேற்கொண்டு வருகின்றது.
4சிவில் விமானங்கள் ஒரு அமெரிக்க பி8 பொஸெயிடன் உள்ளடங்களாக 8 விமானங்கள் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில் பங்கேற்றன.
அதேசமயம் பேர்த் நகரை இரு சீன ஐஎல் - 76 தேடுதல் விமானங்கள் வந்தடைந்துள்ளன. எனினும் அவை இன்னும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை.  நன்றி வீரகேசரி 





271 பயணிகளுடன் பயணித்த மலேசிய விமானம் அவசரமாக தரையிறக்கம்


27/03/2014 கோலாலம்பூரிலிருந்து சியோலுக்குச் சென்ற மலேசிய விமானமொன்று அவசரமாக ஹொங்கொங் விமான நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணியளவில் தரையிறக்கப்பட்டுள்ளது.
எம்எச்066 என்ற மலேசியன் விமானம் 271 பயணிகளும் பறந்துகொண்டிருந்த போது விமானத்தின் மின்பிறப்பாக்கி இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. 
இதனையடுத்து விமானி ஹொங்கொங் விமான நிலையத்துக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து ஹொங்கொங் விமானநிலையத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் விமானம் எவ்வித பாதிப்பும் இல்லாமல் தரையிறக்கப்பட்டுள்ளது. 
நன்றி வீரகேசரி 





MH370 விமானத்தில் பணித்த பயணிகளின் உறவினர்கள் மலேசிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

27/03/2014  மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம்  நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என  எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் விமானத்தில் பயணித்தவர்களின் உறவினர்கள் கடும்  ஆத்திரம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் பேரணியாக மலேசிய  தூதரகத்தை நோக்கி சென்ற அவர்கள், 'மலேசியா ஒரு கொலைகார  அரசு" , 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின்  உயிரை திருப்பி கொடு" போன்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தியவாறு  கோஷமிட்டபடி சென்றனர்.
மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு கடந்த  8ஆம் திகதி புறப்பட்ட மலேசியன் ஏயார்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது.  
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 26 நாடுகளைச் சேர்ந்த ஏராளமான  போர் விமானங்களும், கப்பல்களும் மாயமான விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டன. 
2 வாரத்துக்கும் மேலாக நடந்த தேடுதல் பணியின் போது தினமும் ஒவ்வொரு தகவல்கள் கூறப்பட்டன. விமானம் கடத்தப்பட்டதாகவும்,  விபத்துக்குள்ளானதாகவும் மலேசிய அரசு மாறி மாறி குழப்பியது. விசாரணை  குறித்த தகவல்களையும் அந்நாட்டு அரசு முழுமையாக வெளியிடவில்லை. 
இந்நிலையில், தெற்கு இந்திய பெருங்கடலில் அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில்  இருந்து 2,500 கி.மீ. தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டதாக அவுஸ்திரேலியாவும் சீனாவும் தெரிவித்தன. 
இவற்றை கைப்பற்ற கப்பல்கள் விரைந்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென  ஊடகவியலாளர் மாநாட்டை கூட்டிய மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்,  
இங்கிலாந்து செயற்கைகோள் நிறுவனம் இன்மர்சாட் அளித்த தகவலின்  அடிப்படையில் மாயமான விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்து  நொறுங்கிவிட்டதாகவும், அதில் பயணம் செய்த விமான ஊழியர்கள் உட்பட  மொத்தம் 239 பேரும் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை எனவும் ஆழ்ந்த  வருத்தத்துடன் தெரிவித்தார். 
இது, உலகம் முழுவதும் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியது. விபத்துக்குள்ளான விமானத்தில் பயணம் செய்தவர்களில்  பெரும்பாலானோர் சீனர்கள் தான். 154 சீன பயணிகள் பயணம் செய்துள்ளனர்.  அவர்களின் உறவினர்கள் பீஜிங்கில் மலேசிய தூதரம் அருகே உள்ள ஹோட்டலில்  தங்கி தினமும் தகவல்களை கேட்டறிந்து வந்தனர். விமானம் நொறுங்கிய  தகவலை அவர்களுக்கு குறுந்தகவல் மூலம் சீன அரசு உடனடியாக தெரிவித்தது.  இதனால் சீன மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
அதே சமயம், விமானம் நொறுங்கியதற்கான காரணம், அதற்கான ஆதாரம் என  எதையும் மலேசிய அரசு வெளிப்படையாக தெரிவிக்காததால் அவர்கள் கடும்  ஆத்திரம் அடைந்தனர். 
இந்நிலையில், நேற்று காலை சீன பயணிகளின்  உறவினர்கள், அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பேரணியாக மலேசிய  தூதரகத்தை நோக்கி சென்றனர். 
அவர்கள் கையில், 'மலேசியா ஒரு கொலைகார  அரசு", 'மலேசிய அரசு எங்களை ஏமாற்றி விட்டது", 'எங்கள் உறவினர்களின்  உயிரை திருப்பி கொடு" என்ற வாசகங்கள் அடங்கிய பாதகைகளை ஏந்தி  கோஷமிட்டபடி சென்றனர். 
மலேசிய தூதரகத்தை சுற்றி பலத்த பொலிஸ்  பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தூதரகத்தில் நுழைய முயன்றவர்களை பொலிசார்  தடுத்து நிறுத்தினர். இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது.  கற்களையும், வெற்றுப் போத்தல்களையும் தூதரகம் மீது வீசினர். 'மலேசிய அரசு  தவறான தகவல்களை தந்து விசாரணையை திசை திருப்பியுள்ளது. மனித  உழைப்பும், காலமும் வீணடிக்கப்பட்டுள்ளது.
இதில் பல நாடுகளின் பணமும் நேரமும் விரயமாக்கப்பட்டுள்ளது. மலேசிய  அரசும்இராணுவமும், ஏயார்லைன்சும் எங்கள் மதிப்பு மிகுந்த உறவினர்களின்  வாழ்க்கையோடு விளையாடி அவர்களை கொன்றுவிட்ட கொலைகாரர்கள், பொய்யர்கள், அவர்களால் எங்கள் உறவினர்களை திருப்பித் தர முடியுமா" என  கேட்டு கோஷமிட்டனர். 
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  இந்நிலையில், விமானம் விபத்துக்குள்ளானதாக மலேசிய அரசு முடிவுக்கு வந்தது  எப்படி என்பதை விளக்க வேண்டும் என சீன அரசு கேட்டுள்ளது. 
இது குறித்து,  மலேசிய தூதருடன் பேசிய சீனாவின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி  ஹாங்ஷெங், 'மலேசியாவிடம் உள்ள அனைத்து தகவல்களையும்,  ஆதாரங்களையும், செயற்கைகோள் தகவல்களையும் வெளியிட வேண்டும்" என  கூறியுள்ளார். இந்த விவகாரத்தில் சீனாவைத் தொடர்ந்து மற்ற உலக நாடுகளும் மலேசியாவுக்கு நெருக்கடி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பத்திரிகைகளில் கறுப்பு பக்கம்
மலேசியாவின் நியூ ஸ்ரைட் டைம்ஸ் என்ற செய்தித்தாள் முதல் பக்கம்  முழுவதையும் கறுப்பு நிறத்தில் அச்சிட்டுள்ளது. மேலும், அப்பக்கத்தில் 'குட் நைட்  எம்எச்370" என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது. அதுதான் மாயமான  மலேசிய விமானத்தில் இருந்து வந்த கடைசி செய்தி. மலாய் மற்றும் சீன மொழி  பத்திரிகைகளும் முதல் பக்கத்தை கறுப்பு நிற பின்னணியுடன் வெளியிட்டுள்ளன.
ஆங்கில பத்திரிக்கையான சன் தனது செய்தித்தாளின் பெயரை கருப்பு நிறத்தில்  வெளியிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராப்,  'காணாமல் போன மலேசிய விமானம் குறித்து மலேசிய அதிகாரிகள் அளித்த  அறிக்கைகள் முரண்பாடாக உள்ளது. விமானி குறித்த விசாரணையை திசை  திருப்புகிறது. மலேசிய அதிகாரிகள் மிகக்குறைவான தகவல்களையே வெளியிட்டு  உள்ளனர். விமானம் குறித்து விசாரணை நடத்தியவர்களிடம் எந்த தகவலையும்  அவர்கள் சரிபார்க்கவில்லை என செய்தி வெளியிட்டுள்ளது.
கறுப்பு பெட்டி?
கடலில் மூழ்கிய மலேசிய ஏயார்லைன்ஸ் விமானத்தின் கறுப்புப் பெட்டியை  கண்டுபிடிக்க அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த கறுப்புப்  பெட்டியின் பற்றரி 30 அல்லது 40 நாட்களுக்கு மட்டுமே செயல்பாட்டில்  இருக்குமாம். 
அதற்குள் கண்டுபிடிக்காவிட்டால், கறுப்பு பெட்டியை தேடுவது  மிகவும் கடினமாகி விடும் என கூறப்படுகிறது. ஆனாலும் எப்போது  கண்டுபிடித்தாலும் அதில் உள்ள தகவல்கள் அழியாமல் இருக்கும். இதற்கு முன்,  ஏயார் பிரான்ஸ் 447 என்ற விமானம் விபத்துக்குள்ளாகி 2 ஆண்டுக்கு பிறகுதான்  அதன் கறுப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. அதில் தகவல்கள் அனைத்தும்  பத்திரமாக இருந்துள்ளன என இங்கிலாந்தின் இன்மர்சாட் செயற்கைகோள்  நிறுவனம் கூறியுள்ளது.
உயிரின் விலை ரூ.3 இலட்சமா?
விமான விபத்தில் பலியான பயணிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 இலட்சம்  வழங்குவதாக மலேசிய ஏயார்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தேவைப்பட்டால்  கூடுதல் நிதியையும் தருவதாக கூறியுள்ளனர். இது பயணிகளின் உறவினர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரு உயிரின் விலை ரூ.3 இலட்சமா  என மக்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.



நன்றி வீரகேசரி 





எகிப்து இராணுவத் தளபதி பதவியை இராஜினாமா செய்தார்

27/03/2014 எகிப்து இராணுவத் தளபதிஅப்துல் பத்தாஹ் அல் சிசி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். தான் இராணுவ சீருடையுடன் தோன்றும் இறுதி சந்தர்ப்பம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு இடம்பெறவுள்ள எகிப்தின் தேசிய தேர்தல்களில் போட்டியிடும் எண்ணம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
எகிப்தில் கடந்த வருடம் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றதையடுத்து அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸியை பதவி கவிழ்ப்பதில் முக்கிய இடம் வகித்தவர் அப்துல் பத்தாஹ் அல் சிசி என்பது குறிப்பிடத்தக்கது.
அப்துல் பத்தாஹ் அல் சிசிக்கு மக்கள் செல்வாக்கு காணப்படுவதால் எகிப்தின் ஜனாதிபதித் தேர்தலில் அவர் இலகுவாக வெற்றியடைவார் என  சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
நன்றி வீரகேசரி 

No comments: