செருப்பு.. பிஞ்சுபோச்சு!

.


கதை  1

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒருநாள் ஏதோ வேலையாக நடந்துசென்றார்.அப்போது
செருப்பு பிஞ்சுபோச்சு.. அருகே இருந்த வீட்டுக்குச் சென்றார். அந்த வீட்டுக்காரரை அழைத்து...

ஐயா இந்தமாதிரி வரும்போது  என் செருப்பு பிஞ்சுபோச்சு. புதுசெருப்பு வேற.. அதனால இதை இப்படியே தூக்கியெறிய மனசு வரல. இங்க உங்க வீட்டு வாசல் ஓரமா வெச்சிட்டுப்போறேன்... காலையில என் வீட்டு வேலைக்காரனை  அனுப்பி எடுத்துக்கிறேன் என்றார். அதற்குத் தாங்கள் அனுமதி தரவேண்டும் என்றார்.
அதற்கு அந்த வீட்டுக்காரர் அந்த செல்வந்தரைப் பார்த்து...
ஐயா.. “ நீங்க எவ்வளவு பெரிய செல்வந்தர்..! எங்க வீட்டு வாசலில் உங்க செருப்பு கிடப்பது கூட எங்களுக்கு கௌரவம் தான். நீங்க தாராளமா வெச்சிட்டுப்போங்க“ என்று சொன்னார்.

சில ஆண்டுகள் கடந்தன...
ஒருநாள் அந்த செல்வந்தரே இறந்து போனார். அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. செருப்பு வைத்தாரே அந்த வீட்டு வழியே வந்தது. அப்போது நல்ல மழை. பிணத்தைத் தூக்கி வந்தவர்கள் அந்த வீட்டுக்காரரிடம் சென்று...

ஐயா சரியான மழையாக இருக்கிறது தூக்கிச்செல்லமுடியவில்லை. அந்த உடலை இங்கு மழை நிற்கும் வரை வைத்துவிட்டு. பிறகு எடுத்துக்கொள்ள அனுமதி தருவீர்களா? என்று கேட்டனர்.

அந்த வீட்டுக்காரர் அவர்களிடம் சொன்னார்..

ஏன்டா யார் வீட்டுப் பிணத்தை யார் வீட்டு வாசல்ல வைக்கப்பார்க்கிறீங்க? மரியாதையா எடுத்திட்டுப் போயிடுங்க” என்று..

(உயிர் உடம்புக்குள்ள இருக்கும் வரைதாங்க மனுசனுக்குமரியாதை)





கதை  2

ஒரு துறவி ஒருநாள் நல்ல வெயிலில் நடந்து சென்றார். அப்போது அவரது செருப்பு பிஞ்சுபோச்சு. தொடர்ந்து நடக்கமுடியாதவராக அருகே இருந்த செருப்பு தைப்பவனிடம் சென்றுகொடுத்தார். அவரோ அந்தச் செருப்பைப் பார்த்துவிட்டு ஐயா நிறைய தைக்கவேண்டியிருக்கிறது. நீங்கள் உங்கள் செருப்பைத் தந்துவிட்டு. மாலை வாருங்கள் தைத்து வைக்கிறேன் என்றார்.

துறவியோ அந்த செருப்புத் தைப்பவரிடம்..
 ஐயா இந்த வெயிலில் நான் எவ்வாறு நடந்துபோவேன்..? என்றார். 
அதற்கு அந்த செருப்பு தைக்கும் தொழிலாளி...

ஐயா உங்களுக்கு வேண்டுமானால் நான் வேறு செருப்புத் தருகிறேன். இதை அணிந்துகொண்டு செல்லுங்கள். மாலை வரும்போது இந்தச் செருப்பைத் தந்துவிட்டு. உங்கள் செருப்பைப் பெற்றுச் செல்லுங்கள் என்றார்.

ஒரு நொடி சிந்தித்த அந்தத் துறவி...
 என்னது இன்னொருவர் செருப்பை நான் அணிவதா...!! 

என்று சிந்தித்தார்..

அவர் மனசாட்சி பேசியது..
“இன்னொருவர் செருப்பை அணிவதற்கே இவ்வளவு சிந்திக்கிறோமே..
இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களையும், 
அவர் மீதான கோபத்தையும், 
பொறாமையையும் இறக்கிவைக்காமல் தூக்கிசுமக்கிறோமே..என்று

(இன்னொருவர் பற்றிய தவறான எண்ணங்களை நம் மனதில் சுமப்பது, இன்னொருவர் செருப்பை அணிவதுபோல இழிவானது)

No comments: