அமெரிக்காவில் காட்டூத் தீ: பெரும் சேதம்
03/06/2013 அமெரிக்காவின் கலிபோர்னிய மாநிலத்தின் லொஸ் ஏஞ்சலெஸ் மற்றும்
நியூ மெக்ஸிகோவின் செண்டா பீ பகுதிகளில் காட்டூத் தீயினால் பெரும் சேதம்
ஏற்பட்டுள்ளது.
பல்லாயிரக் கணக்கான ஏக்கர் மரங்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் அப்பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
தென் கலிபோர்னியாவின் லொஸ் ஏஞ்சலெஸ் தேசிய வன பகுதியில் 22,400 ஏக்கர்
நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளதுடன் லேக் எலிசபெத் மற்றும் லேக் ஹக்ஸ்
பகுதியில் 1000 வீடுகள் வரை தீயினால் பாதிக்கப்படும் அபாயம் நிலவுவதாக
தெரிவிக்கப்படுகின்றது.
நிவ் மெக்ஸிகோவின் செண்டா பீ தேசிய வனத்தில் 7000 ஏக்கர் பகுதி தீயால் பாதிக்கப்பட்டுள்ளது.
தீயை அணைக்கும் பணியில் சுமார் 2,100 தீயணைப்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லொஸ் ஏஞ்சலெஸ்ஸின் வட பகுதியில் மாத்திரம் சுமார் 2000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவருகின்றது.
கடந்த 4 நாட்களுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறப்படும் காட்டூத் தீயை
கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாமல் தீயணைப்பு படைவீரர்கள் திணறி
வருகின்றனர்.
அப்பகுதியில் நிலவும் சூடான வெப்பநிலை மற்றும் வேகமான காற்று ஆகியன தீ
பரவுவதற்கு ஏதுவான காரணிகளாக அமைந்துள்ளதாக தீயணைப்பு படை வீரர்கள்
தெரிவிக்கின்றனர்.
காட்டூத் தீ ஏற்படுவதற்கான காரணம் தொடர்பில் விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பொருட்டு அவசர சிகிச்சை நிலையங்களை அப்பகுதியில் ஆரம்பித்துள்ளது.
நன்றி வீரகேசரி
மைக்கல் ஜக்சனின் மகள் பாரிஸ் தற்கொலை முயற்சி: வைத்தியசாலையில் அனுமதி
06/06/2013 மறைந்த பொப் பாடகர் மைக்கல்
ஜக்சனின் மகள் பாரிஸ் ஜக்சன் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.
இதையடுத்து, உடலில் பலத்த காயங்களுடன், வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த
பிரபல பொப் பாடகர் மைக்கல் ஜக்சனின் மகள் பாரிஸ் ஜக்சன்(15); நேற்று தனது
கையை கிழித்துக் கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்த
அவர் குடும்பத்தினர் அவரை லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வைத்தியசாலை ஒன்றில்
அனுமதித்துள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வருவதாகவும் அவர் விரைவில் நலமாகிவிடுவார் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள்
குறிப்பிட்டுள்ளன.
நேற்று முன்தினம் அவர் தனது டுவிட்டரில்,
கண்ணீர் ஏன் உப்பாக இருக்கிறது? என் துன்பங்கள் எல்லாம் வெகு தூரம் சென்றது
போன்று உள்ளது. அவை எல்லாம் இங்கே இருக்க வந்தது போன்று தெரிகிறது என்று
தெரிவித்துள்ளார்.
மைக்கல் ஜக்சன் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம்
இறந்தார். அவருக்கு பிரின்ஸ், பாரிஸ் மற்றும் பிளாங்கெட் ஆகிய 3 குழந்தைகள்
உள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஆண் வாரிசுக்காக கணவன் கொடுமை: மனம் வெறுத்து போன பெண் 5 மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை
06/06/2013 ஆண் வாரிசு வேண்டும் என்று
கூறி கணவர் அடித்துத் துன்புறுத்தியதில் வெறுத்துப் போன பெண்னொருவர், தனது 5
மகள்மார்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று
உத்தரபிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரேமா தேவி என்ற பெண்னே தனது, மகள்மார்களான சுதா (வயது 12), ரேகா (வயது
10), நிஷா (வயது 7), ரூபா (வயது 5), ஷிகா (வயது 2) ஆகியோருடன்
தீக்குளித்தவராவார்.
பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
லக்னோவிலிருந்து 120 கிலோமீற்றர் தொலைவில் உள்ளது திவ்லி என்ற கிராமம்.
இங்கு தனது 5 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் பிரேமா தேவி. இவரின்
கணவர் ஜெகதாம்பா பிரசாத் லோத். இவர் தனக்கு ஆண்வரிசு வேண்டும் எனக்கூறி
பிரேமா தேவியை தொடர்ந்து அடித்துத்துன்புறுத்தி வந்துள்ளார். இதனால்
வெறுத்துப் போன பிரேமா தேவி, ஒரு நாள் விபரீதமான முடிவை எடுத்தார்.
அதன்படி தனது மகள்மார்களான சுதா, ரேகா, நிஷா, ரூபா, ஷிகா ஆகியோருடன் தீக்குளித்து விட்டார்.
இதைப் பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அனைவரையும் மீட்க முயற்சித்தனர். ஆனால் பரிதாபமாக 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பிரேமாவின் சகோதரர் ஸ்ரீசந்த் கொடுத்த புகாரின்
அடிப்படையில் ஜெகதாம்பா பிரசாத் லோத்தை பொலிஸார் தற்போது கைது
செய்துள்ளனர். நன்றி வீரகேசரி
சிரியாவில் முக்கிய நகரை மீளக் கைப்பற்றிய அசாத் ஆதரவுப் படையினர்!
05/06/2013 சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாகக் கருதப்படும் குயிசாயரை
அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் அசாத் ஆதரவுப் படையினர் மீளக்
கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 3 வார கடும் மோதலையடுத்து இந்நகர் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இதன்
மூலம் சிரிய மோதலில் அசாத் ஆரதரவுப் படையினரின் கை மீளவும் ஓங்கியுள்ளதாகத்
தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஒரு வருடமாக கிளர்ச்சியாளர்கள் வசமிருந்த குயிசாயரை அரச ஆதரவுப்
படைகள் வசம் வந்துள்ளமையை அந்நாட்டு தேசிய தொலைக்காட்சிச் சேவை
அறிவித்துள்ளது.
லெபானை ஒட்டிய எல்லையோர நகரான குயிசாயரைக் கைப்பற்ற அந்நாட்டு
ஹிஸ்புல்லா போராளிகளுக்கும் அசாத் ஆதரவுப் படையினருக்கு பெருமளவில்
உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திடீரென தாக்குதல் தொடுக்கப்பட்டதாகவும் இதனை சற்றும்
எதிர்ப்பார்க்காத கிளர்ச்சியாளர் நகரை விட்டு தப்பியோடி விட்டதாகவும்
ஹிஸ்புல்லா போராளியொருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களில் அசாத் ஆதரவுப் படையினர் தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.
இதேவேளை அரச படைகளானது விஷ வாயுவைப் பிரயோகித்துள்ளதாக பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியன குற்றஞ்சாட்டியுள்ளன.
இது தொடர்பிலும் படங்களும் சிலவு வெளியாகியுள்ளன.
நன்றி வீரகேசரி