உலகச் செய்திகள்


அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு!

பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்

பாகிஸ்தானில் இன்று தேர்தல்

பங்களாதேஷ் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு 

 உளவுபார்க்கவும், தாக்குதல் நடத்தவும் கூடிய ஈரானின் ஆளில்லா விமானம்!

===================================================================

அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன் காணாமல்போன யுவதிகள் மூவர் உயிருடன் மீட்பு!

08/05/2013 அமெரிக்காவில் 10 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன 3 யுவதிகள், அந்நாட்டின் ஒஹியோ மாநிலத்தில் கிளேவ்லாந்த் எனும் இடத்திலுள்ள வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட யுவதிகள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களது உடல் நலம் நல்ல நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமண்டா பெரி, கினா டிஜீஸஸ், மெசெல் நைட் ஆகியோரே கடத்தப்பட்ட யுவதிகளாவர்.



அமண்டா 2003 ஆம் ஆண்டில் தனது 16 ஆவது வயதிலும், கினா 2004 ஆம் ஆண்டு தனது 14 ஆவது வயதிலும், மிசெல் 2002 ஆம் ஆண்டில் தனது 20 வயதிலும் கடத்தப்பட்டனர்.
மேற்கு கிளேவ்லாண்டில் சேமர் ஒழுங்கையிலிருந்த வீட்டின் வாசலில் பெண்ணொருவர் உதவி கோரி கூச்சலிடும் சத்தத்தை கேட்டு அயலவர் ஒருவர் பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டையடுத்தே, இந்த 3 யுவதிகளும் மீட்கப்பட்டுள்ளனர்.
அமண்டா பெரியே தாம் சிறைவைக்கப்பட்டிருந்த வீட்டின் முன்வாசலருகே வந்து உதவி கேட்டு கூச்சலிட்டுள்ளார்.
மேற்படி மூவரையும் கடத்திய குற்றச்சாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மூவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

மூன்று பெண்களில் ஒருவருக்கு குழந்தையொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றைது.   நன்றி வீரகேசரி  
.





பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவர் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தல்


08/05/2013 பாகிஸ்தான் தீவிரவாதி ஒருவரை இந்தியா, இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளது. 34 வயதான நிஸார் அஹமட் என்ற நபரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளார். உரிய வீசா இன்றி ஆந்திர பிரதேசத்தின் சுட்டப்பா கிராமத்தில் வாழ்ந்து வந்த போது குறித்த நபரை மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கடந்த ஏழு ஆண்டுகளாக உரிய வீசா எதுவுமின்றி குறித்த தீவிராவதி இந்தியாவில் வாழ்ந்து வந்துள்ளார். பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு சென்று அங்கிருந்து அவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார். இலங்கையிலிருந்து இந்தியா சென்ற காரணத்தினால் அவரை இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

சென்னையிலிருந்து குறித்த நபர் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த நாடு கடத்தல் தொடர்பில் இந்திய அதிகாரிகள் இலங்கைக்கு அறிவித்துள்ளனர். இலங்கை அதிகாரிகள் குறித்த தீவிரவாதியை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது   நன்றி வீரகேசரி 
.




பாகிஸ்தானில் இன்று தேர்தல்


11/05/2013 பாகிஸ்தானில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் நாளில் நாடு முழுவதும் தற்கொலைப்படை, வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக தெரிக் இ தலிபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் முதல் முறையாக ஜனநாயக அரசொன்று 5 ஆண்டுக் கால பதவிக்காலத்தை பூர்த்தி செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அடுத்த ஜனநாயக அரசை தேர்ந்தெடுக்கும் வகையில் இன்று பொதுத் தேர்தல் நடக்கிறது.
ஆனால், இதற்கு தெரிக் இ தலிபான் அமைப்பு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தேர்தல் பிரசாரங்களை சீர்குலைக்கும் வகையில், தலைவர்களுக்கு மிரட்டல் விடுப்பது, வெடிகுண்டு தாக்குதல் நடத்துவது, வேட்பாளர்களை கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தது.
இதன் உச்சக்கட்டமாக நேற்று முன்தினம், முன்னாள் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மகன் அலி ஹைதர் கடத்தப்பட்டார். நன்றி வீரகேசரி 




பங்களாதேஷ் கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 1000 ஆக உயர்வு


10/05/2013 பங்களாதேஷில் அண்மையில் இடம்பெற்ற கட்டிட விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1000 ஐத் தாண்டியுள்ளது.
மேலும் மீட்புப் பணிகள் தொடர்வதாகவும் இன்று முழுப் பணியும் நிறைவடையக் கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் கடந்த மாதம் 24 ஆம் திகதி இவ்விபத்து இடம்பெற்றது.
இதன்போது 8 மாடிக் கட்டிடமொன்றி இடிந்து வீழ்ந்தது.
இவ்விபத்தில் சுமார் 2,500 பேர் காயமடைந்ததாகவும் 2,437 பேர் வரை மீட்கப்பட்டதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 1000 ஆக உயர்ந்துள்ளது. 

நன்றி வீரகேசரி 
.



உளவுபார்க்கவும், தாக்குதல் நடத்தவும் கூடிய ஈரானின் ஆளில்லா விமானம்!

10/05/2013   உளவு பார்ப்பது மட்டுமன்றி தாக்குதல் நடத்தவும் கூடிய ஆளில்லா விமானமொன்றை ஈரான் அறிமுகப்படுத்தியுள்ளது.
இச்செய்தியை அந்நாட்டின் மெஹர் செய்திச் சேவை வெளியிட்டுள்ளது.
தெஹ்ரானில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் இவ்விமானம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுவொரு ஸ்டெல்த் விமானமென்றும் இதனை எதிரிகளால் கண்டுபிடிக்க முடியாதெனவும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் ஹமட் வாய்டி தெரிவித்துள்ளார்.
இதேபோல் கடந்த ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி 3 வேறு வகை விமானங்களையும் ஈரான் அறிமுகப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி