பந்தொன்றை சுவர் மீது விட்டெறிந்தால்.....மணிமேகலா

.



ராஜாஜி எழுதிய ராமாயணம் வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அதில் தசரதனின் புத்திர சோகம் பற்றிய பகுதி ஒன்று வருகிறது.ராமனைப் பிரிந்த சோகம் அது. அது எல்லோருக்கும் தெரிந்த கதை ஒன்று தான். ஆனால், அதற்குள் மறைந்து கிடக்கிறது செழுமை மிக்க தத்துவ முத்தொன்று.

தசரதன் சக்கரவர்த்தி எனப்புகழப்பட்டவன். தர்மங்கள், யாகவேள்விகள்  பல செய்தவன். தர்மத்தின் வழியில் அயோத்தியை வழிநடத்தியவன். நல்ல புத்திரர்களையும் நிறைவான வாழ்வையும் வாழ்ந்தவன்.அவனுக்கு ஏன் இந்த புத்திர சோகம் ? தர்ம சங்கடம்? என்ற கேள்வி எழுவது நியாயம் தானே?

அதற்கான பதிலை ராஜாஜி இப்படிச் சொல்லிச் செல்கிறார்.

”.........கர்ம பலனை மாற்ற முடியாது. நான் செய்த பாவத்தின் விளைவை இபோது அனுபவிக்கிறேன்.அற்ப சந்தோஷங்களுக்காக பெருந்தீமை விளைவிக்கக் கூடிய காரியத்தை அறியாமையினால் மக்கள் விளைவித்து விடுகிறார்கள். பிறகு பயனை அனுபவிக்கும் போது வருந்துகிறார்கள்.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் குறியைப் பார்க்காமல் ஓசையைக் கேட்டு  அம்பு எய்யும் திறமை பெற்றிருந்தேன். இந்தச் சமர்த்தியத்தின் அற்ப சந்தோஷத்திற்காக, ஒரு காலத்தில் நான் பெரும் பாவத்தைச் செய்ய நேர்ந்தது.




அக்காலத்தில் நீ (கெளசல்யை) என்னை வந்தடைந்திருக்கவில்லை.ஒரு நாள் இரவில் தேர் ஏறி சரயூ நதிக்கரையில் வேட்டையாடப் போனேன். மழை பெய்து மலைத் தாதுக்களும் புது மண்ணும் கலந்து பலவித நிறங்களில் ஜலம் எங்கு பார்த்தாலும் ஆறுகளாக ஓடிக்கொண்டிருந்தது. பட்சிகளின் சப்தம் ஒடுங்கிப்போய், வனம் தூங்கினாற் போல் இருந்தது. இரவில் தண்னீர் குடிக்க புலி, கரடி முதலிய மிருகங்கள் வரும் சப்தத்தை வைத்து குறி பார்த்து அப்பைய்தும் பயிற்சி  எனக்கு இருந்த படியால், அதைப் பயன் படுத்திப் பரீட்சிக்கலாம் என்று ஆசை தோன்றியது. நல்ல இருட்டு. அந்தச் சமயம் ஒரு யானை தண்ணீர் குடிக்கும் சத்தம் போல “ பொளு பொளு” வென்று ஒரு ஓசை கேட்டது. உடனே சமர்த்தியமாக சத்தத்தைக் குறி வைத்து அம்பை எய்தேன். என்னுடய அம்பு விஷ சர்ப்பம் போல் பாய்ந்து சரியாகவே போய் குறியைத் தாக்கிற்று. “ஐயோ ” என்று ஒரு மனிதக் குரல் கிளம்பியதைக் கேட்டுத் திடுக்குற்றேன்.

‘என் பேரில் யாருக்குத் துவேஷம்? நான் யாருக்கும் ஒரு குற்றமும் செய்யவில்லையே! தண்ணீர் மொண்டு கொண்டு  போக வந்த என்னை எவனோ கொன்றானே! என்ன பயனைக் கருதி என்னைக் கொண்றான்? நான் ஒரு பாவமும் செய்யவில்லையே! விரத வாழ்க்கை வாழும் தபஸ்வியான என் பேரில் யாருக்கு என்ன விரோதம்? கண்ணில்லாத என் கிழத்தாயும் தகப்பனாரும் இனி என்ன செய்வார்கள்?  என்னையே நம்பி இருந்தார்களே!  அவர்கள் இனி எப்படி உயிர் வாழ்வார்கள்? ஐயோ நான் இப்படி அநியாயமாகக் கொல்லப்பட்டேனே! “ என்று பரிதாபக் குரலில் ஒருவன் அழுத வார்த்தைகளைக் கேட்டேன்.பெரும் திகிடைந்து என் வில்லும் கையிலிருந்த அம்பும் கீழே நழுவி விழுந்தன.



அழுகுரல் வந்த இடம் நோக்கிச் சென்றேன். தலைமுடி விரிந்து சிதறி கிடக்க, பக்கத்தில் தண்ணீர் குடம் உருண்டு கிடந்தது. உடல் எல்லாம் ரத்தமும் சேறுமாக தரையில் புரண்டு கொண்டிருந்த ஒரு தபஸ்வியைக் கண்டேன் என்னைப் பார்த்ததும் அவர் கண்களில் இருந்து வீசிய ஒளி என்னைச் சுடும் போல் இருந்தது.

” பாவி, நீயா என்னைக் கொன்றது? ..... ஏன் என்னைக் கொன்றாய்? என் தவமும் விரதமும் வேத அத்யாயனமும்  வியர்த்தமாய் போயிற்றா? என் காபோதிகளான பெற்றோருக்கு நான் இப்படி அடிபட்டுக் கிடப்பது தெரியாதே! ....நீ கோசல தேசத்து அரசனல்லவா?  தாமதமின்றி அவர்கள் கிடக்கும் ஆச்சிரமத்துக்கு நேராய் போவாய்! இங்கிருந்து அவ்விடத்துக்கு ஒற்றையடிப்பாதை ஒன்று போகிறது. அதன் வழியே விரைவாய் சென்று உள்ளதைச் சொல்லி உன்னைக் காப்பாற்றிக் கொள். போகு முன் இவ் அம்பை இழுத்து என் பிராணனை வெளியேற்றி விட்டுச் செல்.’என்றார்.

அம்பைப் பிடுங்கினால் அவருடய வேதனை தீரும். ஆனால் என் கையால் அவர் உடனடியாக உயிர் விடும் படி நேரும். அதற்கு எனக்கு மனம் வரவில்லை. இந்த தர்ம சங்கடத்தில் நான் ஒன்றும் செய்யத் தோன்றாமல் ஒரு கணம் திகைத்து நின்றேன்.எனினும் அவரது வேதனையைக் காணச் சகியாமல் மெல்ல அம்பைப்பிடித்து இழுத்து விட்டேன். தபோதனர் என்னைப்பார்த்த வண்ணம் பெருமூச்சு விட்டு உயிர் நீத்தார்.

மகா பாவ காரியத்தைச் செய்து விட்டு, ரிஷி குமாரர் உயிர் நீத்ததையும் பார்த்து விட்டு, இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். சரி, இவர் சொன்னபடி செய்வதே கடமையும் நன்மையும் என்று தீர்மானித்தேன்.அவருடய குடத்தை எடுத்து தண்ணீர் மொண்டு கொண்டு அவர் சொன்ன ஒற்ரையடிப்பாதை வழியாகச் சென்று  ஆச்சிரமத்தை அடைந்து நடந்ததைச் சொன்னேன்.

“சுவாமி நான் தசரதன்.உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்ட ஷத்ரியன். உங்களுடய குமாரன் அல்ல. என் பூர்வ ஜென்ம பாவத்தின் பயனாக எவராலும் வெறுக்கத் தக்க பாவ செயலைச் செய்து விட்டு உங்கள் முன் வணங்கி நிற்கிறேன்.............................நான் அஞ்ஞானத்தால் செய்து விட்ட பாவத்தைச் சொன்னேன். இனி உங்கள் திருவுள்ளம் எப்படியோ அப்படிச் சாபத்துக்குக் காத்திருக்கிறேன் அடியேன்” என்றேன்.

நான் சொன்ன பயங்கர விருத்தாத்தத்தைக் கேட்ட கிழவர்கள் பேச்சிழந்தார்கள். கண்களில் இருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிற்று. “ அரசே, எங்களுக்கு நீ விளைவித்த துக்கத்தை நீயும் அனுபவிப்பாய்.புத்திர சோகத்தால் நீயும் மாள்வாய்” என்று சொல்லி விட்டு மகனுடய சிதையிலேறி அவர்களும் மாண்டார்கள் .நான் அன்று செய்த பாவம் இன்று என்னைப் பற்றிக் கொண்டது



இந்தப் பாவமல்லவா என்னை இப்போது வாட்டுகிறது. கபோதியான அந்தப் பெற்றோர் பட்ட துக்கத்தை நான் இப்போது அனுபவிக்கிறேன் என்றான்...............

பத்தியத்திற்கு மாறான உணைவையுண்ட நோயாளியின் வியாதி அதிகரித்து அவனைக் கொல்வது போல் அந்தப் பாவம் என்னை இப்போது கொல்கிறது. தன் துக்கம் பொறுக்க மாட்டாமல் அவ் இள தபஸ்வி சொன்ன சொல் உண்மையாயிற்று.

எதிர்பாராத படியும் சுபாவத்துக்கு விரோதமாகவும் நிகழ்ச்சிகள் நிகழ்வதற்கு வேறு காரணமில்லை.

புத்திர சோகத்தால் தசரதனும் உயிர் நீத்தான்.




No comments: