நதியாய் வாழ்கிறேன் - எழுத்தாளர் சிவசங்கரி

.




பச்சை பட்டுடுத்தி நிற்கும் மலை, மலையின் நடுவே பயணிக்கும் தார்ச்சாலை, சாரல் மழையில் குளித்தபடி மரங்கள், மிதமான வேகத்தில் பேருந்து, கணவன் தோளில் சாய்ந்தபடி காதல் மனைவி. அவளின் கைகளில் ஒரு புத்தகம். இயற்கை காட்சிகளில் விழிகளை தொலைக்காமல், புத்தகத்தின் அர்த்தமுள்ள எழுத்துக்களில் மனதையும் தொலைத்து, பேருந்தில் இருந்து இறஙகிய தம்பதிகளிடம் ஒரு கேள்வி.... "பயணம் சுகமாக இருந்ததா?' பதில்.. "அர்த்தமுள்ளதாக இருந்தது!' சொன்னவர்கள் கைகளில் எழுத்தாளர் சிவசங்களியின் "சின்ன நூல்கண்டா நம்மை சிறைபடுத்துவது?' புத்தகம்.


இப்படி மனித உணர்வுகளை மயிலிறகால் வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று வருடும் சிவசங்கரியின் எழுத்துக்கள் தற்போது நின்று போயிருக்கிறது. காரணம்...

எழுதணுங்கற கனவோ, எழுத்துல சாதனை புரியணுங்கற வெறியோ இல்லாம, எதேச்சையா எழுத தொடங்குனேன். இப்போ... போதும்!னு தோணுச்சு நிறுத்திட்டேன். மறுபடியும் எழுதணும்னு தோணுச்சுன்னா நிச்சயம் எழுதுவேன்!' மனதில் தெளிவு சிவசங்கரியின் வார்த்தைகளிலும் பிரதிபலிக்கிறது.


அம்மாவுக்கு என்னென்ன பிடிக்கும்?

பௌர்ணமி நிலவு, அன்னையின் தாலாட்டு, குழந்தைகளின் சிணுங்கல், உள்ளத்தை சாந்தப்படுத்தும் சங்கீதம், மனதையும் நிறைக்கிற சாப்பாடு, கண்ணீர் விடாத ஆண்கள், அழகு நிரந்தரமில்லை!ன்னு ஆணித்தரமா நம்புற பெண்கள், எந்த சூழ்நிலையிலும் தோள் கொடுக்க தயாராக இருக்கிற நண்பர்கள், தன் வாழ்க்கைக்கு எது தேவை?ன்னு தெளிவா தெரிஞ்சு வைச்சிருக்கிற மனிதர்கள்... இப்படி நிறைய பிடிக்கும். எந்த ஒரு விஷயத்தையுமே, கண்களால் பார்க்காம மனசால பார்க்க பழகிட்டா, நமக்கு பிடித்தமான விஷயங்கள் இந்த உலகத்துல நிறைய தெரியும். இந்த பழக்கத்துக்கு நான் அடிமையாகி பல வருஷங்கள் ஆச்சு!


மனம் வருடும் நினைவுகள்....

14 வயசுல, தேசிய மாணவர்படை நிகழ்ச்சிக்காக தேர்வாகி டெல்லிக்கு போன நாட்கள், 15 வயசுல வாணி மஹால்ல நடந்த என்னோட முதல் அரங்கேற்றம், என் திருமண நாள், காதல் கணவரோட வாழ்ந்த அழகிய நாட்கள், பாரத முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியோட இரண்டு முறை வெளிநாடு சென்ற அனுபவங்கள், அன்னை தெரசா நோபல் பரிசு வாங்குன மறுநாள் காலையில், முதல் பத்திரிக்கையாளரா வாழ்த்து சொன்ன தருணம், ஒரு நாளைக்கு 19 மணி நேரம் வரை உழைத்த ஆரம்ப கால நாட்கள், நம்ம பாரம்பரிய உடைகளோட கடந்து போற அழகான பெண்கள்... இப்படி நிறைய இருக்கு. ஆனா, நான் கடைசியா சொன்ன விஷயம் மட்டும் நினைவுகளாகவே இருக்கறதுல வருத்தம் இருக்கு. யாரையும் சார்ந்து இல்லாம, பெண்கள் தன்னம்பிக்கையோட வாழ பழகியிருக்கறது சந்தோஷமா இருந்தாலும், நம்முடைய மொழியையும், கலாச்சாரத்தையும் இவ்வளவு வேகமா மறந்துட்டு வர்றது வேதனையா இருக்கு. பெத்த தாயை தெரியாது?ன்னு சொல் மாதிரிதான், இந்த இரண்டு விஷயங்களை மறக்கறதும்!


இழப்புகள் சாபமா?

இளமை இழப்பு, உறவு இழப்பு, நம்பிக்கை இழப்பு, பண இழப்பு, பொருள் இழப்பு, மானம் இழப்புன்னு இழப்புகள்ல பலவகை இரக்கு. ஆனா, எந்த இழப்புமே சாபம் இல்லை. ஒரு சின்ன உதாரணம்... 1972ல் சஞ்சய் காந்தியை இந்திரா காந்தி பறிகொடுத்த நேரம். அவங்களை நான் சந்திச்சப்போ கேட்டேன். "உங்க மனசுல வலி இல்லையா?' அவங்க சொன்ன பதில்... "வலி இருக்கும்மா? ஆனா வலியோட வாழ பழகிட்டேன்!' அவங்க சொன்னதோட அர்த்தம் எனக்கு அப்போ புரியலை. 1984ல் என் கணவர் சந்திரசேகரனோட மறைவுக்கு பின்னாடிதான், வலியோட வாழ பழகறதுன்னா என்ன?ன்னு தெரிஞ்சுக்கிட்டேன். இழப்புகள் நிச்சயம் வலி கொடுக்கும். ஆனா, அந்த வலிகளை தாங்க பழகிட்டா, நல்ல அனுபவங்கள் கிடைக்கும். வாழ்க்கையில விழுந்த கருப்பு புள்ளிகளை மட்டுமே நினைச்சுட்டு இருக்காம வெண்மை பிரதேசங்களையும் பார்க்க பழகணும், இது எல்லாத்தையும்விட, "நமக்கும் கீழே நிறைய பேர் இருக்கறாங்க!'ங்கற உண்மையை எப்பவும் மனசுல வைச்சுக்கணும்!


அடிக்கடி மலரும் கனவு....

வயது 68 ஆயிடுச்சு. நிறைய எழுதிட்டேன். நிறைய உறவுகளை சம்பாதிச்சு வைச்சிருக்கேன். ஆசைப்பட்ட எல்லாமும் எனக்கு கிடைச்சிருக்கு. இப்போ, என் கவனம் முழுக்க சமூக சேவையில்தான்... ஏதோ, என்னால் முடிஞ்ச அளவுக்கு செஞ்சுட்டு வர்றேன். குடும்பம் நடத்த தேவையான அடிப்படை பொருட்களோட, இதுவரைக்கும் 80 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வெச்சிருக்கேன். 100 ஜோடிகளுக்கு திருமணம் செஞ்சு வைச்சுடணும்னு மனசுல ஆசை இருக்கு. என் கணவருக்கும் இந்த ஆசை இருந்துச்சு! நமக்குதான் குழந்தைகள் இல்லையே!... நாம ஏன் இந்த சமுதாயத்தை தத்து எடுத்துக்க கூடாது?ன்னு அவர் அடிக்கடி கேட்டுட்டே இருப்பார். அவரோட கனவுதான் இப்போ என் கனவும்!


எதிர்பார்ப்புகள்...

நதி மாதிரி ஓடணும்னு ஆசை! அப்படித்தான் ஓடிட்டு இருக்கறேன். நிறைய கத்துக்கறேன். என் வீட்டுல வளர்ந்த ஷியாமா(நன்றியுள்ள பிராணி)வோட மறைவுக்கு வருந்துற அளவுக்கு, மனசுல ஈரத்தோட இருக்கறேன். போதும் தம்பி! மனசு திருப்தியா இருக்கு. இனிமே என்ன? "வெள்ளரிப்பழம் காம்பிலிருந்து பிரியற மாதிரி, உயிர் இந்த உடம்புல இருந்து வெளியேறிடணும்...' யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுத்துட கூடாது. அவ்வளவுதான்!


முட்கள் மீது நடந்து சென்று...

பூப்பறிக்கும் வைபவம்தான் வாழ்க்கை!

மனதா... முள்ளை மற! பூவை நினை...

எழுதியபடியே வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மா, உங்கள் காலத்தில் வாழ்வதை நினைத்த பெருமைப்படுகிறோம்!


Nantri dinamalar

No comments: