இலங்கைச் செய்திகள்



மட்டு.மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 127.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

தாதியர்கள் மழைக்கு மத்தியிலும் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்

க்கள் ஆட்சித் தத்துவமும், பாராளுமன்ற ஜனநாயகமும், தலைமைத்துவப் பண்பும்
தேவன் (கனடா)
சுவர்க்க பூமியின் சோகக் கதை


பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டமை முஸ்லிம்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது: மு.கா.

திருகோணமலையில் மூன்று குளங்கள் உடைப்பெடுப்பு 

 சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு

 மண்சரிவு அபாயம்: நுவரெலியாவில் மக்கள் இடம்பெயர்வு

வட, கிழக்கை விட்டு நீங்கிய சூறாவளி அபாயம் 

அனர்த்த்தை எதிர்நோக்கி முல்லைத்தீவு மக்கள் மழை தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும் எச்சரிக்கிறார் மாவட்ட அரச அதிபர்

முல்லைத்தீவில் 1861 பேர் இடம்பெயர்ந்து 10 முகாம்களில் தஞ்சம்

 செல்லும் வழி?

மட்டு.மாவட்டத்தில் 24 மணித்தியாலங்களில் 127.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி
By Jawferkhan
2012-10-30
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் 127.5 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி கே.சூரியகுமார் தெரிவித்தார்.



தொடர்ந்தும் இம்மாவட்டத்தில் அடைமழை பெய்து வருதால் வீதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.



நன்றி வீரகேசரி 




  தாதியர்கள் மழைக்கு மத்தியிலும் குடை பிடித்து ஆர்ப்பாட்டம்
By Jawferkhan
2012-10-30
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர்கள் இன்று பகல் முதல் ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பணிமனைக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான தாதிய உத்தியோகத்தர்கள் கலந்துக்கொண்டனர்.

விபத்துக்கொடுப்பனவு, மேலதிக வேலை நேரத்திற்கான கொடுப்பனவு, 5 நாட்கள் மட்டும் வேலை செய்தல் உட்பட 15 கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டம் இடம்பெறுவதாக அரச தாதிய உத்தியோகத்தர் சங்க இணை தேசிய அமைப்பாளர் க.ஜனதீபன் தெரிவித்தார். ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

 
நன்றி வீரகேசரி 







க்கள் ஆட்சித் தத்துவமும், பாராளுமன்ற ஜனநாயகமும், தலைமைத்துவப் பண்பும்
தேவன் (கனடா)
“செல்வந்தர்களின் பிள்ளைகளுக்கு சுகபோக வாழ்வு,
ஏழைகளின் பிள்ளைகளுக்கு சுடுகாடு”
-    சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) (முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர்)
மக்கள் ஆட்சித் தத்துவம் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கிரேக்க அறிஞரும், தத்துவ ஞானியுமான பிளேட்டோ அவர்கள் முக்காலத்துக்கும் எக்காலத்துக்கம் ஏற்றுக் கொள்ளக்கூடிய அர்த்தமுள்ள தீர்க்கதரிசனமான, ஆழமான பல அரசியல் தத்துவங்களை இவ்வுலகுக்கு விட்டுச் சென்றுள்ளார்.

அவையாவன ஜனநாயகம், வாக்குரிமை, ஆட்சி அரசியல் அதிகாரம், நிர்வாகம் போன்ற விடயங்களில் ஒவ்வொரு தேசமும், ஒவ்வொரு சமூகமும் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக்கூடாது என, காலத்தால் அழிக்க முடியாத அறிவுப் பொக்கிசத்தை உலக மானிடத்துக்காகத் தந்துள்ளார்.

அதாவது ஜனநாயகம், வாக்குரிமை தொடர்பில் இவ்வாறு கூறுகிறார்: “மக்களுக்கு அரசியல் அறிவூட்டல், விழிப்பூட்டல், தெளிவூட்டல் செய்யாமல், ஜனநாயகம், வாக்குரிமை, வழங்கப்படக்கூடாது.”

ஏனெனில் அப்படி வழங்கினால் தமது அடிப்படை உரிமையான ஜனநாயகம், வாக்குரிமை போன்ற பெறுமானங்களை , கனதியை உணர்ந்து யாருக்கு வாக்களிக்கிறோம் எனத் தெளிவான சிந்தனை இல்லாது அடிப்படை வாதிகளுக்கும், இனவாதிகளுக்கும், மொழி – மத வெறியர்களுக்கும், ஊழல்வாதிகளுக்கும், தகுதி நேர்மை அற்ற மனிதர்களுக்கும் வாக்களித்து தேசத்தையும் சமூகத்தையும் சீரழிவுப் பாதையிலும், அழிவுப் பாதையிலும் செல்வதற்கு வழிகோலி விடுவார்கள் எனக் கூறுகின்றார்.

மேலும் பிளேட்டோ அவர்கள் மக்கள் ஆட்சி கொண்ட ஜனநாயக அமைப்பில், ஆட்சி நிர்வாகத்தில் எத்தகைய மனிதர்கள் வர வேண்டும், உருவாக்கப்பட வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூறுகிறார்.

அதாவது தேசத்தையும,; மக்களையும், சமூகத்தையும் நல்வழியில் வழி நடாத்துவதற்கு அறிஞர்கள், சிந்தனாவாதிகள், உளவியலாளர்கள், தத்துவவாதிகள், எளிமையானவர்கள், நேர்மையானவர்கள் ஆகியோரை மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறார்.

பிளேட்டோ கூறிய அரசியல் தத்துவப் பிரகாரத்தின்படி, இன்றைய உலகில் முன்னுதாரணமாக எந்த ஒரு ஆட்சியையும், எந்த ஒரு தேசத்தையும் சுட்டிக்காட்ட முடியாத நிலைமையே யதார்த்தமாக இருக்கிறது.

அரசியல் தத்துவ அறிஞர் பிளேட்டோ கூறிய கருத்துக்கள் ஜனநாயகம், வாக்குரிமை சம்பந்தமாக சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள் ஒரு மாற்றுக் கருத்தை முன் வைக்கிறார். அதாவது ஜனநாயக ஆட்சி முறையில் ஒவ்வொரு ஐந்து வருடமும் ஏழை மக்களைத் தேடி வருவதற்கும், ஊழல்வாதிகளை, நேர்மையற்றவர்களை தூக்கி எறிவதற்கும் சந்தர்ப்பம் வழங்குகிறது என. ஆனால் இன்றைய உலக யதார்த்தத்தில் இது மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டிய ஒன்றாகவே உள்ளது.

ஏனெனில் இன்றைய உலகில் யுத்த வெறியர்கள், மத வெறியர்கள், அடிப்படைவாதிகள், கடும் போக்காளர்கள், ஊழல்வாதிகள், இனவாதிகள், நேர்மையற்ற தலைவர்கள், இனங்களுக்கும் சமூகங்களுக்கும் இடையில் பதட்டத்தை உருவாக்குபவர்கள், சுயநலவாதிகள் போன்றவர்களையே மக்கள் தொடர்ச்சியாக வாக்களித்து தேர்வு செய்வதுடன், அடிப்படை ஜனநாயக உரிமைகளை துஸ்பிரயோகம் செய்வதுடன்ன், தலைமைப் பண்பற்றவர்களை ஆட்சியில் அமர்த்தியும் விடுகிறார்கள்.

மேலும் இன்றைய உலகில் பயங்கரவாதம், தீவிரவாதம், இனவாதம், மத வெறி, தேச வெறுப்பு, சமூக வெறுப்பு, மனித வெறுப்பு என்றுமில்லாதவாறு புற்றுநோய் போல வளர்ந்து, மானிடம் பெரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இன்றைய உலகில் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் வரும்போது மக்கள் வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று வாக்களிப்பதுதான் ஜனநாயகமாகிவிட்டது. அந்த வாக்களிப்பில் Hyper – Nationalist களும், இனவாதிகளும், கிரிமினல்களும், மத வெறியர்களும், பிரிவினைவாதிகளும் தேர்வு செய்யப்பட்டு, சமூகங்களுக்கிடையில் பிளவு, தேச வளங்கள் கொள்ளையடிப்பு, ஊழல், வறுமை போன்ற தொடர்ச்சியான சேதங்கள் பாதிப்புகளுக்கு பிளேட்டோ கூறின முதிர்ச்சியற்ற, விழிப்பற்ற ஜனநாயக முறையின் செயற்பாட்டால் முழுத் தேசமும் துன்பத்தை அனுபவிப்பதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் பாராளுமன்ற இறையாண்மை, ஜனநாயகம், அதன் உயர் அந்தஸ்து போன்ற விடயங்கள் அரசில்வாதிகளால் பிரஸ்தாபிக்கப்பட்டு வருகின்றன.

இலங்கைப் பாராளுமன்றம் ஆனது இனவாதிகள், ஊழல்வாதிகள், அடிப்படைவாதிகள், கிரிமினல்கள், சுயநலவாதக் கிருமிகள், அதிகார வெறியர்கள், சட்ட ஆட்சிமுறை மற்றும் ஜனநாயக விழுமியங்களைத் துஸ்பிரயோகங்கள் செய்பவர்களின் கூடாரமாக இருந்து வருகின்றது.

இனவாதக் கூடாரமான பாராளுமன்றத்தில் அழுக்குள்ள இனவாதிகள் மத்தியில் சில நல்ல மனிதர்களும் இடதுசாரிகளும் இருக்கின்றாhகள். குறிப்பாக வாசுதேவ நாணயக்கார, திஸ விதாரண, டியூ குணசேகர, செனவிரத்தின போன்றோரைக் கூறலாம். ஆனால் இனவாத பெரும்பான்மையை மீறி இவர்களது சிந்தனை வழிகாட்டல்கள் அநேகமாக வெளிவராது.

நமது தேசத்தில் பாராளுமன்றத்துக்கு வெளியே அரசியல் அதிகாரத்தால், இனவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதிமன்றமே பக்கச்சார்பற்ற நீதி வழங்கும் புகலிடமாக இருக்கின்றது. இந்தச் சுயாதீனமான செயற்பாட்டு முறையிலும் அரசியல்வாதிகள் தலையீடு செய்வதுடன், பாராளுமன்றத்திற்கா நீதிமன்றத்துக்கா அதிக அதிகாரம் உள்ளது எனும் இழுபறியில் தேசத்தைத் தவறான திசையில் நகர்த்திச் செல்வது நல்ல சமிக்ஞை அல்ல.

கீழைத்தேயத் தேசங்களில் பாராளுமன்ற அரசியலுக்கு வெளியே மக்களுக்கு இறுதி நம்பிக்கையாகவும், புகலிடமாகவும் நீதிமன்றமே இருக்கிறது. இந்த நம்பிக்கையில் அரசியல்வாதிகள் மண்ணை அள்ளிப் போடுவது தேசத்துக்கு நல்லதல்ல. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அவர்களும் தற்போதைய ஆட்சி முறைமை பற்றியும், ஊழல் மற்றும் அதிகாரத் துஸ்பிரயோகம் சம்பந்தமாகவும் மனித உரிமைக் கருத்தரங்கு ஒன்றில் அண்மையில் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.

இக்கட்டுரை எழுதிக் கொண்டிருக்கும் போது, பாகிஸ்தானில் இருந்து ஒரு நல்ல செய்தி வெளிவருகிறது. அதாவது இராணுவம் அரசியலில் தலையிடக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. (ஆதாரம் CBC  செய்தி ஸ்தாபனம்)

இது போன்ற முன்னுதாரணங்கள் இலங்கைக்கும் தேவை. ஏனெனில் பாதுகாப்புச் செயலாளராக இருக்கும் கோத்தபாய ராஜபக்ச, சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் தீர்வு தொடர்பில் இறுதிச் சந்தர்ப்பமாக இருக்கும் அரசியல் சாசனத்தின் 13ஆவது சரத்தை நீக்கி விடும்படி சற்று அதிகாரத் தொனியில் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறார். இந்த அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது? அவர் தனது தேசப் பாதுகாப்பு அதிகாரத்தை வரம்பு மீறிப் பயன்படுத்துகிறார்.

தற்போதைய மகிந்த அரசால் தேசம் சாதித்தது என்ன? அவரது அரசு 30 வருட கால பயங்கரவாத உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. அத்துடன் இறுதிப் போரில் சரணடைந்த 12,000 புலிப் போராளிகளில் 11,000 பேர் வரையிலானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்து சடூகத்துடன் இணைத்தது. வவுனியா மெனிக் முகாமில் தஞ்சமடைந்த 3 இலட்சம் மக்களை 3 வருட காலத்தில் மீளக் குடியேற்றியது. இவைகள் அனைத்தும் சாதாரண விடயங்கள் அல்ல. மிக மிக அசாரணமான விடயங்கள் என்பதை மனச்சாட்சி உள்ள, நிதான புத்தியுள்ள மனிதர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.

மறுபக்கத்தில் தமிழ் தலைமைகள் சாதித்தது என்ன? இனப் பிரச்சினையில் தேடி வந்த பல வாய்ப்புகளைத் தவறவிட்டது. பாதுகாப்புப் படைகளின் தொகையை 3 இலட்சத்திற்கு உயர்த்துவதற்கு வழி கோலியது. பாதுகாப்புச் செலவை 2.2 பில்லியனாக அதிகரிக்க வைத்தது. சிங்கள பௌத்த தேசியவாதத்தை உசுப்பி விட்டது. தமிழ் மக்களின் இனப் பரம்பலைக் குறைத்தது. தமிழருக்குள்ளேயே பல பிளவுகளை ஏற்படுத்தியது. ‘சிங்ளவனின் தோலை உரித்து’ அதில் தைத்த செருப்பை சிங்களவனுக்கே போடப்போய், தமிழனுக்கு உணவும் வாழ்விடமும் இல்லாமல் செய்தது. இப்படியாக தமிழ்த் தலைமைகள் தமிழனுக்குச் செய்த சாதனைகளைப் பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்.

தவிரவும் இனப் பிரச்சினை தொடர்பாக சிங்கள மக்களுக்கும், தலைவர்களுக்கும் பிடிக்காத செயலையே நமது தமிழ் தலைமை முன்னெடுத்து வருகிறார்கள். அதாவது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தாம் ஒரு சிறுபான்மைக் கட்சி என்பதை மறந்து, அமெரிக்கா, ஐரோப்பா என்று சென்று இறுதியாக கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் வரை சென்று முறையிடுகிறார்கள்.

தமிழ்த் தலைமைகள் எப்போதுமே இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான முறையில் செயல்பட்டதில்லை. ஏனெனில் இனப்பிரச்சினையில் உண்மையான தீர்வு எட்டுவதில் அவர்களுக்கு ஆர்வம் இருந்ததில்லை.

தற்போதைய இலங்கையில், யுத்தத்துக்கு முன்பான பின்பான இலங்கை என்ற நிலையில் வைத்தப் பார்க்கும் போது, தேசம் இனவாதம் எனும் புற்று நோயால் எவ்வளவு வளத்தை இழந்துள்ளது என்பதைக் காண முடியும். இனவாதம், இனச் சச்சரவு என்பன இலலாத ஒரு நல்ல தலைமை தேசத்துக்குக் கிடைத்திருந்தால், நமது தேசம் எவ்வளவு அற்புதமானதாக, ஆசியாவின் அதிசயமாக இருந்திருக்கும். ஆனால் அவ்வாறு சிந்திக்கக்கூடிய ஒரு அரசியல்வாதியை நமது நாட்டில் பார்ப்பது அரிதாகவே இருக்கிறது.

மகிந்தவின் தலைமை இலட்சணம் போர் நடக்கும் போதும், யுத்த காலத்துக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்த ஒப்பீடு இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை வின்சன் சேர்ச்சில் எதிர்கொண்டு பெற்ற வெற்றி போன்றது. 25 வருடகால போரை வெற்றி பெற்றதின் மூலம், தேசத்தின் பரப்பளவு தான் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களின் மனங்கள் இணைக்கப்படவில்லை. இதன் அர்த்தம் மகிந்த ஆட்சிக்கு உடனடியாக ஒரு மாற்றீடு வேண்டுமென்பதல்ல. ஏனெனில் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், பிரதான இரு கட்சிகளின் ஆட்சிகளையும் மக்கள் பார்த்தாயிற்று.

உண்மையில் இலங்கை மக்களுக்கு ஒரு மாற்றம் தேவையென்றால், அது அறிஞர் பிளேட்டோ கூறியது போன்று நிகழ்த்தப்பட வேண்டும்.
அதை விடுத்து மனோ கணேசன் கூறுவது போன்று, பெரிய பிசாசை அகற்றுவதற்கு சின்னச் சின்ன பிசாசுகளுடன் கூட்டுச் சேர்ந்து வலுவான எதிரணியொன்றை உருவாக்கி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர முடியாது. ஒரு விவாதத்துக்கு அப்படி ஒரு மாற்றம் வந்தாலும், தேசத்தில் எந்தவொரு ஆச்சரியமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாறாக அடுத்த 5 வருடத்திற்குப் பிறகு இன்னொரு அரசியல்வாதி வந்து ஐக்கிய தேசியக் கட்சி எனும் பெரிய பூதத்தை எதிர்த்துப் போரிட மற்றைய சின்னச் சின்ன பிசாசுகள் ஒன்றுபட வேண்டும் எனக் கூறுவார். இதுவே இலங்கையின் யதார்த்தம்.

இனப் பிரச்சினை தீர்வு தொடர்பில், அண்மைக்காலமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணையும்படி பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வந்துள்ளன. சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்போ அந்த வேண்டுகோள்கள் எல்லாவற்றையும் நிராகரித்ததுடன், அதற்கு எதிராகவும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்து வருகின்றது. உதாரணமாக, அண்மைய இந்திய விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னர் பி.பி.சி தமிழோசைக்கு வழங்கிய செவ்வியில், கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் 13வது திருத்தச் சட்டத்தைத் தாமும் ஏற்றுக் கொள்ளவில்லை, தென்னிலங்கை அரசியல் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறியிருந்தார்.

பின்னர் இந்தியா சென்று பிரதமர் மன்மோகன் சிங்கையும் ஏனைய அதிகாரிகளையும் சந்தித்த பின்னர், பி.பி.சிக்கு கொடுத்த செவ்வியில், 13வது திருத்தச் சட்டத்தில் உள்ளவற்றின் அடிப்படையில் மேலும் பல அதிகாரங்களை வழங்கி இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கிறார்.

ஆனால் யதார்த்தம் என்னவெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றத் தெரிவுக்குழுவில் இணைந்தாலும், இணையாவிட்டாலும் இனப் பிரச்சினைக்கான தீர்வு மகிந்த காலத்தில் இல்லை என்பதே யதார்த்தம்.

இந்த நிலையானது ஒரு வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு விரும்பிய ஒன்றுதான். ஏனெனில் தமிழ் தரப்பு, ஏககோகத்துக்குப் பதில் இரு தரப்பு என்ற புதிய சொல்லைப் பயன்படுத்துகின்றது. இது சிங்களத் தலைவர்களுக்குப் பிடிக்காத ஒன்று. அத்துடன் இன்னொன்று நம்பகத்தன்மை சம்பந்தமானது. புலிகளின் முகவர்களாக, அடிமைகளாக நடந்து கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் சுலபமாகத் தீர்வு எதனையும் மகிந்த அரசு கொடுத்துவிடாது.
இறுதியாக, தேசிய இனச் சிக்கலுக்கும், அதனால் ஏற்பட்ட பெரும் மானிட அழிவுக்கும் கிடைத்த ஒரு வரப்பிரசாதம் தான் கிழக்கு மாகாணசபைத் தேர்தல். அதை மேலும் பலப்படுத்த வேண்டுமாக இருந்தால், தமிழ் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். வன்முறை வழியைப் போற்றியதுடன், பிரிவினைக் கோசத்தை முன்வைத்து, அதை ஊக்குவித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் தமிழருக்கான தீர்வை ஒப்படைக்கும்படி உலகம் கூறுமாக இருந்தால், அதை தர்க்கரீதியான, நியாயரீதியான, சட்டரீதியான யதார்த்தத்துக்கு எதிரான ஒன்றாகவே நோக்க வேண்டும்.

ஒரு தேசத்தின் தலைவர் என்பவர், ஒரு குறிப்பிட்ட இனத்துக்கு மட்டும் தலைவராக நடந்து கொள்ளக்கூடாது. அத்துடன் சகோதர இனங்கள் மீதும், சமூகங்கள் மீதும் சர்ச்சைக்குரிய இனவாதக் கருத்துக்களையும், பிற மத வணக்க ஸ்தலங்கள் மீது நடாத்தப்படுகின்ற தாக்குதல்களையும் அரசு பொறுப்புடன் கையாண்டு, அவற்றை இனப் பாரபட்சமின்றிக் கண்டிப்பதோடு, இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இதற்கு மாறாக, இனவாதிகளுக்குத் தீனி போடும் வகையில் அரசு சர்ச்சைக்குரிய விடயங்களில் பாரபட்சமாக நடந்து கொண்டால், அது பொறுப்பான அரசின் இலட்சணமல்ல.

நடந்து முடிந்த கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் போது, முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, போரும், மேலாண்மையும், ஆதிக்க மனோபாவமும் ஒரு சமூகத்தை எப்படி உருக்குலைக்கும் என்பதை, மிகவும் ஆழமான அனுபவத்துடன் எடுத்து விளக்கினார். அவர் உரையில் குறிப்பிட்டது, யாழ்ப்பாண மையவாத குறுந்தேசிய மேலாண்மையைத்தான். அந்தளவுக்கு ‘யாழ்ப்பாணத் தேசியவாதிகளால்’ கிழக்கு மக்களின் வாழ்வு பந்தாடப்பட்டது.

வரலாற்றை உற்று நோக்கினால், மேலாண்மைவாதம், இனவாதம், தீவிரவாதம் என்பன ஒன்றை ஒன்று போசித்து வளர்ந்துள்ளதைக் காண முடியும்.

ஆகவே யாழ்ப்பாண மேலாதிக்கத்தை விமர்ச்சிப்பது போல், சிங்கள இனவாதத்தையும் மேலாதிக்கத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். அப்பொழுது தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குறுந்தேசிய இனவாதத்திலிருந்தும், சிங்களப் பேரினவாத இனவாதத்திலிருந்தும் இரு இன மக்களையும் தேசத்தையும் மீட்க முடியும்.    நன்றி தேனீ 
 






  சுவர்க்க பூமியின் சோகக் கதை
By Nirshan Ramanujam
2012-10-30

அது ஆமர்வீதி பெரடைஸ் பிளேஸ்.
ஆங்கிலப் பெயராக இருந்தாலும் பெரடைஸ் தோட்டம் என்றே அழைக்கப்படுகிறது. கொழும்பில் மக்கள் வசிக்கும் குடியிருப்புகள் அல்லது பிரிவுகள் ‘தோட்டம்’ என்ற பெயரால் அழைக்கப்படுவது வழமை.

இங்குள்ள ஆண்கள் முற்றத்து வீதியில் தான் இரவில் நித்திரைகொள்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியம் தரக்கூடியதாகவும் நம்ப முடியாமலும் இருக்கலாம். ஆனால் அதுதான் உண்மை.

காற்றின் அசைவுக்கேற்ப உலர்ந்துகொண்டிருக்கும் ஆடைகளுக்கு மத்தியில் ஆங்காங்கே ஓடித்திரியும் சின்னஞ்சிறு குழந்தைகளின் பிஞ்சுக் குரல்கள், ஆலய மணியோசை, துணி துவைக்கும் சத்தம் ஆகியவற்றோடு சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது பெரடைஸ் பிளேஸ்.


இந்தக் குடியிருப்பில் சலவைத் தொழில் செய்வோரே பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சலவைத் தொழில் செய்வோருக்காக இந்த இடம் தரப்பட்டிருந்தது. அவர்களால் பெரடைஸ் பிளேஸ் என்ற இந்தப் பெயரும் சூட்டப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள்.
பெரடைஸ் பிளேஸ் என்ற ஆங்கிலப் பதத்துக்கு சுவர்க்க பூமி என்று அர்த்தம். ஆனால் அது எந்தளவுக்கு யதார்த்தமாக சாத்தியப்பட்டிருக்கிறது என்றால் பதிலும் கேள்விக்குறியே.

ஆம்! இங்குள்ள தொழிலாளர்களின் குடியிருப்புகளில் போதிய இட வசதி இல்லாமை காரணமாக முற்றத்து வீதியிலேயே நித்திரை கொள்கின்றனர். தினமும் நூற்றுக்கணக்கானோர் வெறும் நிலத்திலேயே நித்திரைகொள்வதாக கவலையுடன் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இந்தத் தோட்டத்தில் சுமார் 350 குடும்பங்களைச் சேர்ந்தோர் வசிக்கின்றனர். இந்த வீடுகளில் அதிகமானவை கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமானவை. இவற்றுக்கு மாதாந்த வரிப்பணம் அறவிடப்படுகிறது.

இந்த வீடுகளில் சுமார் 70 வீடுகள் 16 அடி நீளமும் 8 அடி அகலம் கொண்டவையாகவும் 8 அடி நீளமும் 8 அடி அகலம் கொண்டவையாகவும் கட்டுப்பட்டுள்ளன.
இவற்றை வீடு என்று சொல்வதை விட அறை எனச்சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனென்றால் ஒரு குடும்பம் வசிப்பதற்கு ஏற்றாற்போலில்லாமல் தனித்தனி அறைகளாகவே கட்டப்பட்டிருக்கின்றன.


எனினும் பரம்பரை பரம்பரையாக தொழில் செய்துவரும் இவர்கள் வறுமை காரணமாக அந்த அறைகளிலேயே வசிக்கிறார்கள். ஒரு சில அறைகளில் இரண்டு குடும்பங்கள் வசிக்கும் அவல நிலையும் உண்டு.

அந்த அறையில் இடவசதி போதாமையால்தான் முற்றத்து வீதியில் நித்திரைகொள்கிறார்கள்.

பெரடைஸ் தோட்டத்தில் வசிக்கும் கே.முத்துசாமி (வயது52) என்பவர் எம்மோடு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“நாம் பரம்பரை பரம்பரையாக சலவைத் தொழில்தான் செய்கிறோம். இந்த தோட்டம் 1931 ஆம் ஆண்டு ஆங்கிலேயரால் வழங்கப்பட்டது. ஆரம்பகாலங்களைப் போன்று இப்போது வருமானம் கிடைப்பதில்லை. ஓர் ஆடைக்கு 30 ரூபா சலவை செய்வதற்காக பெற்றுக்கொள்கிறோம்.

பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக எமக்கு ஆடை தருவோரும் ஆடைகளின் எண்ணிக்கையை குறைத்துக்கொண்டுள்ளனர்.
சொந்த வீடு வாங்குவதற்கு வசதியில்லாத காரணத்தினால் இங்குள்ளவர்கள் பரம்பரை பரம்பரையாக இங்கேயே வசிக்கிறார்கள். 1931 ஆம் ஆண்டு இந்த இடம் வழங்கப்பட்டதென்பதால் மூன்றாவது தலைமுறையினரும் இங்கேதான் வசிக்கிறார்கள். ஒரே வீட்டில் எத்தனை குடும்பம்தான் வசிப்பது? ஒவ்வொரு வீட்டிலும் உள்ள ஆண்கள் இரவில் முற்றத்து வீதியில் தான் நித்திரை கொள்கிறார்கள். உழைப்பின் களைப்பு தெரியாமல் இருப்பதற்காக சுவாரஸ்யமாக ஏதாவது பேசியவாறே நித்திரையாகிவிடுவோம்” என்றார் அவர்.


“நான் கூலித் தொழில் தான் செய்கிறேன். ஆடையொன்றுக்கு 30 ரூபா பெற்றுக்கொள்கிறோம். ஒருவர் 10 ஆடை தந்தால் 300 ரூபாவாகிறது. இப்போதுள்ள செலவுகளைப் பார்க்கும்போது 300 ரூபா உணவுத் தேவைக்கே போதுமாகிறது. இதனால் மக்கள் எமக்கு சலவை செய்வதற்கு ஆடை தருவது குறைவு.
வசதி படைத்த பலர் இலத்திரனியல் சலவை இயந்திரங்களை வாங்கியிருக்கிறார்கள். அதனால் எம்மை நாட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லை.


நான் அறிந்த வரையில் எனது பரம்பரைத் தொழில் இதுதான். காலப்போக்கில் நாம் அறிந்த இந்தத் தொழிலையும் செய்ய முடியாமல் போய்விடுமோ என்ற பயம் இருக்கத்தான் செய்கிறது. வருமானம் குறைவாக இருப்பதும் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரிப்பதும் இதற்குக் காரணமாக இருக்கிறது” என்கிறார் பி. மகேந்திரன்.

வறுமைக்கு மத்தியிலும் கடுமையாக உழைக்கும் இவர்கள் நாளாந்த வாழ்க்கைச் சுமையோடு போராட்டம் நடத்துகிறார்கள் என்றே கூறலாம்.
பெரடைஸ் தோட்டத்தில் துணி உலர்த்துவதற்கென பெரிய இடம் இருக்கிறது. அதன் நடுவே துணி துவைப்பதற்கான நீர்த்தாங்கிகளும் கற்களும் இருக்கின்றன.
ஒரு தொழிலாளி நாளொன்றுக்கு நூற்றுக்கும் அதிகமான துணிகளை துவைக்கிறார். துணிகளை உலரவைக்கும் கயிறுகளில் அவரவர்க்கென தனித்தனியான அலகுகளைப் பிரித்திருக்கிறார்கள். அதன் பிரகாரம் எழுதப்படாத நீதியைக் கடைபிடிப்பவர்களாக ஒற்றுமையுடன் நகர்கிறது இவர்களின் வாழ்க்கைப் பயணம்.

வானமே கூரையென திறந்த வெளியில் நித்திரைகொண்டு ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று ஆடை சேகரித்துப் பின் தோய்த்து உலர்த்தி மீண்டும் குறிப்பிட்ட வீடுளில் ஆடைகளைக் கொண்டு சேர்க்கின்றனர். கடுமையான உழைப்பை நம்பி மட்டுமே வாழும் இவர்கள் தாம் நிம்மதியாக வாழக்கூடிய அளவுக்கு வீடு வேண்டும் என்று யாரிடமும் கேட்டதில்லை என்கிறார்கள். எனினும் கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகள் நினைத்தால் தமது வாழ்க்கையை மாற்றியமைக்கலாம் என்ற கருத்தினையும் அவர்கள் முன்வைக்கிறார்கள்.

மழைக்காலம் என்றால் இவர்கள் படும்பாட்டை சொல்லில் அடக்குவது சிரமம். துணிகளை உலர்த்தவும் முடியாமல் நிம்மதியான உறக்கமும் இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள்.

பெரடைஸ் பிளேஸ் என்றால் சுவர்க்க பூமி என அர்த்தம் கொள்ளப்பட்டாலும் இந்த மக்களின் வாழ்க்கை என்னவோ அதற்கு எதிர்மாறாகத்தான் இருக்கிறது.

-ஆர்.நிர்ஷன்
படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்
 நன்றி வீரகேசரி 







பள்ளிவாசல் தீ வைக்கப்பட்டமை முஸ்லிம்களை வேதனைக்குள்ளாக்கியுள்ளது: மு.கா.
By General
2012-10-31
அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவமானது முஸ்லிம்களை பெரும் வேதனைக்கும் மனவருத்தத்திற்கும் உள்ளாக்கியுள்ளதாக கூறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி இப்படியான சம்பவங்களின் சூத்திரதாரிகளை அரசாங்கம் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் தக்கியா பள்ளிவாசல் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது அரசாங்கத்தின் ஒரு பங்காளியாக இருந்தாலும் கடந்த மாகாண சபைத்தேர்தல் காலத்தில் பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் பற்றி தேர்தல் மேடைகளில் பேசியதாகவும் மேடைகளில் அடிக்கடி பிரஸ்தாபித்ததாகவும் ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் ஆட்சியிலிருக்கும் காலத்தில் இனிமேல் எந்தவொரு பள்ளிவாசல்களும் உடைக்கப்படுவதற்கோ சேதமாக்கப்படுவதற்கோ இடமளிக்கப்போவதில்லையென தெளிவாக கூறியிருந்தார்.

நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் திடமான முடிவை அவர் கூறியது முஸ்லிம்களுக்கு சந்தோசத்தை கொடுத்தது. இவ்வாறு இருக்கையில் அநுராதபுரம் மல்வத்தஓயா லேன் தக்கியா பள்ளிவாசல் கடந்த வெள்ளிக்கிழமை தீ வைக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மீது நேரடியாக நாம் குறை கூற முடியாத காரணம் இது யாரோ ஒருவர் செய்த வேலையாகவிருக்கலாம்.

ஆனால் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் இதற்கு பிண்ணனி என்ன? இதற்க யார் பொறுப்பு? என்பதை தெளிவாக ஆராய்ந்த மக்கள் முன் தெரியப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்குரியது. அவ்வாறு செய்தால் தான் மக்கள் இதன் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளமுடியும். இல்லையேல் அரசாங்கத்திற்குத் தெரியாமல் இவ்வாறான சம்பவங்கள் தொடருமானால் இது உண்மையில் அரசாங்கத்திற்கே பாதிப்பாக அமையும்.

குறிப்பாக ஜனாதிபதி பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடைபெறாது என்ற வாக்குறுதிகள் வழங்கிய பின்னர் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுவதை ஆராய்ந்து மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.     நன்றி வீரகேசரி 







திருகோணமலையில் மூன்று குளங்கள் உடைப்பெடுப்பு

By General
2012-10-31
திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளம் காரணமாக மூன்று சிறு குளங்கள் உடைப்பெடுத்துள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

கடந்த நாட்களில் பெய்த கடும் மழை காரணமாக அதிகரித்த மழை வெள்ளம் ஏற்பட்டதனால் இக்குளங்கள் உடைப்பெடுத்துள்ளன.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கலக்கேணிகுளம் மற்றும் பாலக்கட்டு குளம் என்பனவும் திருகோணமலை வடக்கில் உள்ள வெகட்வெற்றிவேவ என்னும் குளமுமே உடைப்பெடுத்துள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குளங்கள் மிகவும் அண்மையில் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
நன்றி வீரகேசரி





  சீரற்ற காலநிலை: நாடு முழுவதும் இதுவரை 49,788 பேர் பாதிப்பு

By General
2012-10-31
நாட்டில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 13,074 குடும்பங்களைச் சேர்ந்த 49,788 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதில் முலட்டியான மற்றும் கோப்பாய் பகுதிகளில் இரு உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளதென அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவு, வெள்ள அனர்த்தத்தால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,583 குடும்பங்களைச் சேர்ந்த 19,785 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 503 குடும்பங்களைச் சேர்ந்த 1721 பேர் 9 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை வடக்கில் மாத்திரம் 35 ஆயிரத்து 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.    நன்றி வீரகேசரி





மண்சரிவு அபாயம்: நுவரெலியாவில் மக்கள் இடம்பெயர்வு

By Sridharan
2012-10-31
நுவரெலியா பகுதயில் கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடைமழையினால் யுனிக் விவ் கொலனியில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 250 பேர் அவ்விடத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்ந்த பெய்து வரும் மழைகாரணமாக நேற்று இரவு 8 மணியளவில் 14 குடும்பங்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர்.

வெளியேற்றப்பட்டவர்கள் நுவரெலியா தர்மபால சுற்றுவட்டாரத்திற்கு அருகில் உள்ள விகாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்கள் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக யுனிக் விவ் கொலனியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி





வட, கிழக்கை விட்டு நீங்கிய சூறாவளி அபாயம்
வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதியை சூறாவளி தாக்கக் கூடும் என்று திங்கட்கிழமை நள்ளிரவு விடுக்கப்பட்ட எச்சரிக்கையை அடுத்து அப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் உடனடியாக கையில் அகப்பட்ட பொருட்களுடன் இடம்பெயர்ந்து  சென்ற போதிலும் நேற்று அதிகாலை சூறாவளி அபாயம் நீங்கி விட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் மீண்டும் தத்தமது இடங்களுக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. கரையோரப் பகுதியில்  500 மீற்றர் தூரத்திற்குள் இருப்போரை வெளியேறுமாறு கேட்கப்பட்டிருந்தது. ஆனால் தமிழ் நாட்டின் கரையோரத்துக்கு சூறாவளி  நகர்ந்து செல்வதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்திருக்கிறது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டிருக்கும் தாழமுக்கத்தாலேயே சூறாவளி ஏற்பட்டிருப்பதாகவும் மணிக்கு 80 மைல் வேகத்தில் வீசுவதாகவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. அதிர்ஷ்ட வசமாக அந்த அபாயம் வட, கிழக்கு மக்களை விட்டு நீங்கிச் சென்று விட்டது. 2004 கடல்கோள் அனர்த்தத்தின் கோரவடுக்கள் இன்னமும் அழிந்து விடாத நிலையில் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள்  இருக்கின்றனர்.
வட, கிழக்குக் கரைக்கு 100 கி.மீற்றர் தூரத்திற்குள்ளேயே இந்த சூறாவளி மையம் கொண்டிருந்ததால் மோசமான பாதிப்பு ஏற்படும் என்று  எச்சரிக்கப்பட்டிருந்தது. ஆயினும் சூறாவளி தனது திசையை மாற்றியிருப்பதானது சிறிதளவு ஆறுதலை கொடுத்திருக்கிறது. அதே சமயம்  வடக்கில் முல்லைத்தீவு உட்பட வன்னி மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட்டவர்கள் பருவமழையினால் மோசமாகப் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுகிறது. மீளக்குடியேற்றப்பட்ட மக்களுக்கு போதியளவு குடியிருப்பு  வசதிகள் வழங்கப்பட்டிருக்காததால் அவர்கள் அவலத்தை எதிர்நோக்குகின்ற அதேசமயம் அண்மையில் கேப்பாபிலவு போன்ற இடங்களைச் சேர்ந்த மக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காமல் காட்டுப் பகுதிகளில் கொண்டு சென்று விடப்பட்டிருப்பதை தமிழ்க் கூட்டமைப்பு எம்.பி.க்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் விசனம் தெரிவித்திருந்தன. மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மக்கள் பல்வேறு நெருக்கடிகளை எதிர் கொண்டுள்ளனர்.
தங்கியிருக்க வீடுகள் இல்லாத நிலையிலும் அரைகுறையாக தற்காலிகமாக கட்டப்பட்ட வீடுகளிலேயே பெரும்பாலானவர்கள் தங்கியிருக்கின்றனர். காட்டு விலங்குகள், பாம்பு போன்ற விச ஜந்துகளின் ஆபத்துடன் அவர்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படைச் சுகாதார வசதிகளும் இல்லை. இது தொடர்பாக அதிகளவு கவனத்தை அரசாங்கம்   செலுத்த வேண்டிய கடப்பாடு ஒரு புறமிருக்க  அரச சார்பற்ற தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் நலிவான நிலையில் இருக்கும் இந்த மக்களின் உடனடித் தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவ  முன்வர வேண்டும். வட, கிழக்கில் சூறாவளி அபாயம் நீங்கியிருக்கின்ற போதும் இந்தச் சூறாவளிக்கு சமாந்தரமான மற்றொரு கரும்புயல் அரபிக் கடலின் தென்மேற்கில் இருந்து ஏற்படும் ஆபத்துக் குறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி நிலையம் அவதானித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் இலங்கைக்கு தாக்கம் அதிகளவிலானதாக இருக்காது.
வெப்ப வலயப் பிராந்தியங்களிலுள்ள சமுத்திரங்களே இந்தச் சூறாவளிக்கான சக்தியை கொடுக்கின்றன. கடலின் மேற்புற வெப்ப நிலையானது 26.5 சதம பாகைக்கு அதிகமாக இருக்கும் போதே சூறாவளி தோன்றுகிறது. கடும் குளிரான நீர்ப் பரப்பையும் சூறாவளி தாண்டிச் செல்வதுண்டு. கடும் காற்று வீசும் போது ஏற்படும் சூறாவளி பல நாட்களுக்கு நீடித்துச் செல்லும். ஆயினும், தரைப் பகுதியையும் குளிர்ந்த சமுத்திரங்களையும் கடக்கும் போது சூறாவளி சக்தியை இழந்து விடும்.  தமிழ் நாடு , ஆந்திராவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் தாழமுக்க மண்டலம் கடும் புயலாக மாறினால் அதற்கு நிலம் என்று பெயரிடப்படவுள்ளது. ஒவ்வொரு  பிராந்தியத்திற்கும் ஏற்ப பிராந்திய நாடுகள் இணைந்து புயலுக்கு பெயர் சூட்டி வருகின்றன. தற்போதைய சூறாவளிக்கு ‘நிலம்’ என்ற பெயரை பாகிஸ்தானே சூட்டியுள்ளது. அடுத்த புயலுக்கு மகாசேன என்ற பெயரை இலங்கை சூட்டும்.
மக்களின் இயல்பு வாழ்க்கையை சிதறடிக்கக் கூடிய இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான புயல் காற்றுக்கு பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து பெயர் வைப்பதைப் போன்று ஏற்படும் பாதிப்புகளிற்கு நிவாரண உதவிகளை உடனடியாக வழங்குவதற்கும் தற்போதிலும் பார்க்க அதிகளவிலான  ஒத்துழைப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது சிறப்பானதாகும்.    நன்றி தினக்குரல்




அனர்த்த்தை எதிர்நோக்கி முல்லைத்தீவு மக்கள் மழை தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும் எச்சரிக்கிறார் மாவட்ட அரச அதிபர்
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழை காரணமாக தாழ் நிலப்பகுதிகளில் வெள்ளம் உட்புகுந்ததால் ஆயிரக்கணக்கான பொது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு வெளியேறி வருகின்றனர். இங்கு மழை தொடருமாயின் மக்கள் பெரும் அனர்த்தத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகன் எச்சரித்துள்ளார்.
தாழ் நிலப்பகுதிகளிலிருந்து வெளியேறிய பொது மக்கள் பாடசாலைகளிலும், தேவாலயங்களிலும் தஞ்சடைந்துள்ளதோடு இயல்பு வாழ்க்கையும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக முல்லைத்தீவின் இரணைப்பாலை, முள்ளிவாய்க்கால், புதுமாத்தளன், அம்பலவன்பொக்கனை, ஆனந்தரபுரம், திருமுறிகண்டி, இந்துபுரம், கேப்பாபுலவு, கொக்கிளாய், கருணநாட்டுக்கேணி போன்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய இடங்களில் இருந்து பொது மக்கள் வெளியேறி வருகின்றனர்.
குறிப்பாக இப்பகுகளிலுள்ள தாழ்நிலங்கள் யாவும் தொடர்ச்சியான மழை காரணமாக மழை வெள்ளத்தால் நிறைந்துள்ளன. அத்தோடு சில இடங்களில் வீதிகளுக்கு மேலாக மழைநீரான பாய்ந்து செல்கின்றது.
இதேவேளை முல்லைத்தீவு கடலில் தொடர்ச்சியாக பாரிய அலைகள் எழுந்த வண்ணம் உள்ளதோடு தொடர்ச்சியாக காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது. மேலும் கடும் குளிரும் நிலவுகின்றது.
இதன்காரணமாக அண்மையில் மீளக்குடியமர்ந்த பொது மக்கள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக தற்காலிக வீடுகளில் தங்கவைக்கப்பட்டிருந்த பொது மக்கள் பலர் தமது வீடுகளை விட்டு இடம்பெயர்ந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.
தற்போது நிலவும் காலநிலையானது அடுத்துவரும் சில தினங்களுக்கு நீடித்தால் முல்லைத்தீவு மாவட்டமானது பாரிய அனர்த்தத்தை முகம் கொடுக்க நேரிடும் என மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார் 
 நன்றி தினக்குரல்








முல்லைத்தீவில் 1861 பேர் இடம்பெயர்ந்து 10 முகாம்களில் தஞ்சம்
ரொஷான் நாகலிங்கம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சீரற்ற காலநிலையினால் 1861 பேர் இடம்பெயர்ந்து 10 முகாம்களில் தங்கியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ஏ.வேதநாயகம் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டோருக்கு சமைத்த உணவு வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
முல்லைத்தீவில் 543 குடும்பங்களை சேர்ந்த 1861 பேர் இடம்பெயர்ந்து 10 முகாம்களில் தங்கியுள்ளனர். நேற்று புதன்கிழமை காலை முதல் மழை பெய்யவில்லை. காற்றும் வீசவில்லை. மழை பெய்யாவிடின் அவர்கள் தமது வீடுகளுக்கு திரும்புவர்.
இடம்பெயர்ந்துள்ளவர்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கி வருகின்றோம். அதேநேரம் வீடுகள் சேதமடைந்தோருக்கு உதவுமாறு முகாமைத்துவ நிலையத்திடம் கோரியுள்ளோம் என்றார்.         நன்றி தினக்குரல்






 செல்லும் வழி?

Wednesday, 31 October 2012

அதேசமயம் அரசாங்கம் 118 எம்.பி.க்களின் கையெழுத்துகளையும் இது தொடர்பாக சேகரித்திருப்பதாக அறியவருகிறது.  பாராளுமன்றத்திலுள்ள 225 எம்.பி.க்களில் மூன்றில் ஒரு பகுதியினரின் கையெழுத்துகள் பெறப்பட்டு பிரதம நீதியரசருக்கு எதிராக பிரேரணையை சபாநாயகரிடம் கையளித்தால் அரசியல் குற்றச்சாட்டு பிரேரணை சபையில் விவாதத்துக்கு எடுக்கப்பட சபாநாயகரால் அனுமதிக்க முடியும். சாதாரண பெரும்பான்மையுடன் இந்த உத்தேசப் பிரேரணையை சபையில் நிறைவேற்றவும் முடியும். அரசியலமைப்பின் சரத்து 107 இன் பிரகாரம் உயர்நீதிமன்ற அல்லது மேல் நீதிமன்ற நீதிபதியை பதவியிலிருந்து அகற்றுவதாயின் பாராளுமன்றத்திலுள்ள மொத்த எம்.பி.க்களில் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பின்பு ஜனாதிபதி இது தொடர்பாக உத்தரவை விடுக்க முடியும். தற்போதைய பாராளுமன்றத்தில் ஆளும் ஐ.ம.சு.மு.விற்கு 161 எம்.பி.க்களின் ஆதரவு உள்ள நிலையில், உத்தேச பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு  விவாதத்திற்கு எடுக்கப்பட்டால் மிக இலகுவாக அதனை நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
அதேவேளை அரசியலமைப்பின் சரத்து 111 சி யானது நீதித்துறை அதிகாரங்கள் அல்லது நீதிபதியின் செயற்பாடுகள் மீது எவராவது சட்ட ரீதியான அதிகாரமில்லாமல் தலையீடு செய்தால் அல்லது தலையீட்டிற்கு முயற்சித்தால் பாரதூரமான தண்டனைக்குரியது என்பதை விதந்துரைக்கின்றது. ஆனால், நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு இது பொருத்தாது. இந்த அரசியலமைப்பின் 111 சி ஏற்பாடானது 1972 அரசியல் யாப்பிலும் உள்ளடக்கப்பட்டிருந்ததொன்றாகும். இந்த ஏற்பாடு இருப்பதால் நீதிபதிகளின் “அதிகாரங்கள், செயற்பாடுகளில் நிறைவேற்று அதிகாரம் நேரடியாகத் தலையிட முடியாத நிலைமை காணப்படுவதால் அரசியலமைப்பின் பிரகாரம் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்நகர்வுகள் இடம்பெறுவதாக தோன்றுகின்றது. நாட்டின் அரசியலமைப்பானது அரசாங்கத்தின் மூன்று முக்கியமான தூண்களான நிறைவேற்று அதிகாரத்திற்கும் நீதித்துறைக்கும் சட்டவாக்கத்துக்கும் அதிகாரங்களைத் தெளிவான வரையறைகளுடன் வழங்கியுள்ளது.
ஆயினும் நீதித்துறைக்கே அரசியலமைப்பில் அதிகளவுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. பொதுமக்கள்  நீதிகோரி நியாயத்தைப் பெற்றுக் கொள்ளும்  இடம் என்பதால் சட்ட ரீதியாக மட்டுமன்றி தார்மீக ரீதியாகவும்  நீதித்துறை மீது பொதுமக்கள் மிக உயர்ந்த மதிப்பை வைத்திருக்கின்றனர். இலங்கையில் மட்டுமன்றி உலகின் சகல இடங்களிலும் இது பொதுவாகக் காணப்படும் விடயம். அரசாங்கத்தின் சகல  கிளைகளுக்கும் உரிய அதிகாரங்கள், செயற்பாடுகளை அரசியலமைப்பு வடிவமைத்திருக்கின்ற போதிலும் நாடொன்றின் சட்ட ஆட்சி அமுலாக்கத்துக்கு சுதந்திரமான நீதித்துறை அத்தியாவசியமானதாகும். நீதித்துறையின் சுயாதீனத்தில் தலையிடுவதானது சகல மட்டத்திலுமே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
நீதித்துறைக்கும் நிறைவேற்று அதிகாரத்திற்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் மோதலின் வெளிப்பாடாகவே தற்போதைய முன்னகர்வுகளை நோக்க முடிகிறது. இன்று  ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் ஆரம்பமாகும்  உலக காலக்கிரம மீளாய்வில் இலங்கையின் மனித உரிமை ப
நன்றி தினக்குரல்

No comments: