தமிழ் சினிமா

பீட்சா

லிவிங் டூ கெதர் என்று சொல்லி திருமணத்திற்கு முன்பே சேர்ந்து வாழும் நவீன யுக தம்பதிகள் விஜய் சேதுபதி(மைக்கேல்) - ரம்யா நம்பீசன்(அனு).
பிட்சா விநியோகிக்கும் நபராக விஜய் சேதுபதி. காதலி வயிற்றில் தன் குழந்தை இருப்பது தெரியவர காதலியை மணக்கிறார்.
மனைவி ரம்யா நம்பீசன் ஒரு நாவல் எழுதுவதற்காக பேய்களை பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். எப்போதும் பேய் படங்களை பார்ப்பதும், பேய்களை பற்றி சிந்திப்பதுமாய், கூடவே பேய் சம்பந்தமான விஷயங்களை சொல்லி கணவர் விஜய் சேதுபதியை கிலி ஏற்றுவதுமாய் சுவாரஸ்யமாய் நகர்கிறது இவர்களின் வாழ்க்கை.
பேய் இருக்கு! அது உனக்கும் ஒரு நாள் தெரிய வரும். அந்த நாள் ரொம்ப தூரத்துல இல்ல! என்று தன் மனைவி சொன்ன வார்த்தைகள் அவ்வப்போது இதயத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது விஜய் சேதுபதிக்கு.
ஒருநாள் யதார்த்தமாக பீட்சா டெலிவரி பண்ண ஒரு பங்களா வீட்டிற்கு போகிறார். அங்கு தான் அவர் டைம் ஸ்டார்ட் ஆகுது. யப்பா... திரைக்கதையில் என்னமா திகில் கிளப்பி இருக்கிறார் இயக்குனர்.
காசு கொண்டு வர உள்ளே சென்ற பெண்மணி காணாமல் போக, உள்ளே சென்று பார்த்தால் அந்த பெண் பிணமாக சுவற்றில் தொங்க, கரண்ட் இல்லாமல் கதவையும் திறக்க முடியாமல், விஜய் சேதுபதியின் அவஸ்தகள் சொல்லி முடியாதவை. ஒரு நொடி கூட கவனத்தை சிதறவிடாமல், இருக்கையின் நுனிக்கு நம்மை கொண்டு வந்து, திக் திக் நிமிடங்களால் நம்மை அதிர வைக்கிறது இயக்குனரின் திரைக்கதை.
இதையெல்லாம் எப்படி நம்பவது, இதெல்லாம் ரீல்-ஆ இல்லை ரியல்-ஆ என்ற கேள்வி எழும் போதே அதற்கு அடுத்து வரும் காட்சிகளில் எதிர்பார்க்கவே முடியாத சில திருப்பங்கள் திரைக்கதையில் இருக்கிறது.
எல்லாமே டூப் சங்கதிகளாக இருந்தாலும் அதை டாப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர்.
விஜய் சேதுபதி நல்ல நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்திருகிறார். தமிழ் சினிமாவில் அவருக்கான தனி இடம் இருக்கப்போவது உறுதி. விரிந்த கண்களோடு, வியர்வையில் பயந்தபடியே பேய் வீட்டில் அல்லாடும் காட்சிகளாகட்டும், காதல் காட்சிகளாகட்டும், நச்சுன்னு ஒரு நடிப்பு!
அனுவாக வரும் ரம்யா நம்பீசன் முதலில் வரும் காதல் காட்சிகளில் இயல்பாக தோன்றி காட்சியில் ஒன்ற செய்கிறார். படத்தில் வரும் சின்னச்சின்ன கதாபாத்திரங்கள் எல்லாமே சுவாரஸ்யமாக இருக்கின்றன. குறிப்பாக வீர சந்தானம், நரேன், ஜெயக்குமார் அனைவருமே கதாபாத்திரத்தை பிரதிபலிக்கிறார்கள்.
படத்தின் மிகப் பெரிய பலம் அதன் தொழில்நுட்ப கலைஞர்கள் தான். ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத் படத்தில் இவரும் ஒரு கதாநாயகன் என்றே சொல்ல வேண்டும். ஒரு வீட்டுக்குள் டார்ச் லைட், மெழுகுவர்த்தியை வைத்தே ஒளிப்பதிவில் வித்தை காட்டியுள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இசை. எங்கு தேவையோ அங்கு மட்டும் அதை தந்து படத்திற்குள் ரசிகர்களைக் கொண்டு போகிறார். முதலில் அறிமுகமான அட்டகத்தியை அவரே மிஞ்சி இருக்கிறார். படம் கச்சிதமாக வந்ததற்கு இன்னொரு காரணம் எடிட்டர் லியோ ஜான்பால்.
படத்தின் முடிவில் வரும் மாண்டேஜ் ரசனையான ஐடியா. ஒளிப்பதிவு, இசை, எடிட்டிங், இயக்கம் அனைத்தும் ஒன்றோடு ஒன்று கலந்த ரசனையான அனுபவத்தை தருகிறது.
எழுதி, இயக்கியிருப்பவர் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கனவே குறும்படங்களில் பெயரெடுத்தவர். இப்போது முதல் படத்திலேயே எந்த தடுமாற்றமும் இல்லாமல் தெளிவான திரைக்கதை. கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் எடுத்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்.
முன் பகுதி சிறிது நேரம் மெதுவாக நகர்ந்தாலும் பின் பகுதியின் வேகம் அதை மறக்கச் செய்கிறது. இவ்வளவு நல்ல திரைக்கதையோடு ஒரு சினிமா வந்து எவ்வளவு நாளாகிறது?... என்று கேட்க வைக்கும் பீட்சாவுக்கு கிடைத்திருப்பது பாஸ் மார்க்.
நடிகர்: விஜய் சேதுபதி.
நடிகை: ரம்யா நம்பீசன், பூஜா.
இயக்குனர்: கார்த்திக் சுப்பாராஜ்.
இசை: சந்தோஷ் நாராயணன்.
ஒளிப்பதிவு: கோபி அமர்நாத்.

நன்றி விடுப்பு

No comments: