மெல்பேர்ண் ஸ்ரீ முருகப் பெருமானின் தேர்த்திருவிழா


.
மெல்பேர்ண் சண்சயின் ஸ்ரீ முருகப் பெருமானின் மகோற்சவத் தேர்த்திருவிழா 
நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ண்






Melbourne மாநிலத்தில் உள்ள Sunshine  னில் வீற்றிருந்து அடியார்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கும் அழகன் கந்தனவன் தமிழ்க் கடவுள் என்று கூறப்படும் ஸ்ரீ முருகப் பெருமானின் வருடாந்த மகோற்சவத் திருவிழா கடந்த மாதம் 29.01.2012 ஞாயிற்றுக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. இறைவனின் ஜந்தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைதல் ஆகியவற்றை விளக்குவதையே திருவிழாக்கள் குறிக்கின்றது எனலாம்.





நித்திய பூசைகளில் நிகழும் குறைகளை நீக்கி ஒரு நிவர்த்தி கிடைக்கின்றது இந்த மகோற்சவத் திருவிழாவில் என்று கூறலாம். தொடர்ந்து பதினொருநாட்கள் விஷேச அபிஷேக ஆராதனைகளுடன் பகல், இரவுத் திருவிழாக்கள் நடந்தேறியது. விஷேச தினமான தைப்பூசத்திலன்று தீர்த்தத் திருவிழா, கொடியிறக்கம், மறுநாள் பூங்காவனம் ஸ்ரீ முருகப் பெருமானின் திருக்கல்யாணத்துடன் மகோற்சவத் திருவிழா நிறைடைந்தது.
கடந்த 06.02.2012 திங்கட்கிழமை மாலை கொடித்தம்ப, வசந்த மண்டபப் பூசையைத் தெபடர்ந்து ஸ்ரீ ஆறுமுகப்பெருமான், ஸ்ரீ வள்ளி தேவி, தெய்வயானை சகிதம் உள்வீதி வலம் வந்த பின் தேரிலேறி பலஙாற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ பவனி வந்திருநதார். சகல சைவ சமயக் கிரியைகளையும் பிரபல சிவாச்சாரியார்கள் நடாத்திக் கொண்டிருந்தனர்.


 இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்கள் ஓதப்பட்டன. பிரபல தவில், நாதஸ்வர வித்துவான்களின் தாள வாத்திய நாதஸ்வர கச்சேரிகள் பக்தகோடிகளைக் கவர்ந்திருந்தமையைக் காணக்கூடியதாகவிருந்தது.; அத்துடன் அவர்கள் எம்மையெல்லாம் ஈழத்திற்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். தேரிலேறி பவனி வந்த ஆறுமுருகப்பெருமானின் பஜனை நாமாவளிப் பாடல்களை முருகன் அடியார்கள் பக்தி சிரத்தையுடன் இசைத்துக் கொண்டிருந்தனர்.



தேரடியில் நடைபெற்ற பூசையைத் தொடந்து சிதறு தேங்காய் உடைத்து தேரின் இரண்டு வடங்களையும் ஆண்கள் ஒருபுறமும், பெண்கள் ஒருபுறமுமாக வடம் பிடித்து தேர் இழுத்து வந்திருந்தமை மிகவும் நன்றாக இருந்தது. தேர்ப்பவனி ஆலயத்தின் வெளிவீதியைச் சுற்றி வந்தது. மீண்டும் தேரடியை அடைந்ததும் ஸ்ரீ ஆறுமுகப்பெருமான், ஸ்ரீ வள்ளிநாயகி, தெய்வயானை உற்சவமூர்த்திகளுக்கு பச்சை சார்த்தி, சிவாச்சாரியர்களும் பச்சை உடை உடுத்தி அனைத்து அடியார்களின் பக்தி கோஷங்களுடனும், நாதஸ்வர, தாளவாத்திய இசையுடனும், ஆடலுடன் பவனி வந்தார்.
வசந்த மண்டபத்தை அடைந்த உற்சவமூர்த்திகளுக்கு விஷேச பிராயச்சித்த அபிஷேகம் நடைபெற்று, ஆறுமுகப்பெருமானின் ஆறுமுகங்களுக்கும் ஆறு சிவாச்சாரியார்கள் மலர் கொண்டு சண்முகார்ச்சனை செய்து, அறுவரும் பஞ்சாலாத்தி கொண்டு கற்பூர தீப ஆராதனை நிகழ்த்தியமை யாவரையும் பக்தியில் மனங்குளிர வைத்தது.
புலம் பெயர் நாடுகளில் பக்தி சிரத்தையுடன், இளைஞர்கள், யுவதிகள் இணைந்து, அவர்களின் பங்களிப்புடன் மகோற்சவ, பிரம்மோற்சவ, அலங்கார உற்சவத் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற வேண்டும். சைவ சமயத்தின் வளர்ச்சிக்கு நாமனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டியது எமது தலையான கடமையுமாகும். அனைத்து அடியார்களுக்கும் பிரசாதங்கள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டது.
மெல்பேர்ண் ஸ்ரீ முருகனுக்கு அரோகரா!!!
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெலாம்!!!

நவரத்தினம் அல்லமதேவன். மெல்பேர்ண்



No comments: