கிடைக்காத அந்த விருதின் கதை.. (பகுதி –9) நிறைவுற்றது -

"என் நம்பிக்கை இன்று என்னை வென்று விட்டது, நான் அதனிடம் இச்சமுதயத்தால் தோற்றுப் போனேன் தோழர்களே!! விருதினைப் பெற்றேனே தவிர வாழ்க்கையை தொலைத்திருக்கிறேனே ஏனென்று தெரியவில்லையா?

அறுபத்தியாறு வயதில் விருதெனக்கு என்ன செய்யும்? நான் நினைத்த இடத்தில் மீண்டுமென்னை கொண்டுபோய் சேர்க்குமா இத விருது?

போகட்டும், ஆனாலும் என்கதை வேறு, நான் இந்த விருதை ஒரு ஆபரணமாக கேட்கவில்லை, ஆடம்பரத்திற்காகவோ புகழ் வரும் என்றெண்ணியோ இத்தனை வருடம் காத்திருக்கவில்லை. என்னை உங்கள் முன் கொண்டு வந்து நிறுத்தும் ஒரு அங்கீகாரமாகக் கேட்டேன். அதோ அவன் பிரபல்யமானவன் அவன் எழுத்தைப் போட்டால் புத்தகம் நன்றாக ஓடுமென்று நீங்கள் நம்பும் நம்பிக்கையாகக் கேட்டேன். அது கிடைக்க எனக்கு நாற்பத்தாறு வருடம் ஆனது.


என் முடிகள் நரைத்து விட்டன. நடை தளர்ந்து உடல் கெட்டு சிரிக்க கூட மனமின்றி இறுகி போய்விட்டேன். என் மனைவி கூட வயதாகி விட்டாள். என் குழந்தை வளர்ந்து தன் வாழ்தலுக்குள் கரைந்துபோய்விட்டாள். ஊருலுகம் என்னை கேளிக்கையாய் பேசுகிறது. கிறுக்கன் என்று முகத்திற்கு பின் பேசுகிறது. வக்கற்றவனான் நான், புத்தகம் புத்தகம் என்று அலைகிறேனாம், எதற்காக அலைந்தேன் என்று யாருமே சிந்திக்கவில்லையே? இனி எந்த விருதின் பெருமை மட்டும் வந்து எனக்கு என்ன செய்யும், இந்த கடைசி காலத்தில்? எந்த கட்டமைப்பு பொறுப்பு இந்த குற்றத்திற்கு???

ஆனால் இந்த கேள்விகளுக்காக மட்டுமல்ல நானிந்த விருதை கேட்டு நின்றது" என்று சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த அந்த விருதை தூக்கி மக்களிடம் காட்டினார். மீண்டும் சட்டைப் பையிலிருந்த அலைபேசி அடிக்கத் துவங்கியது. மனைவி பேசியது, நான் அழைத்தால் உடனே எடுத்து பேசுங்கள் என்று சொன்னதெல்லாம் இப்போது அவரின் கவனத்தில் இருக்க நியாயமில்லை. அவர் பேசுவதை நிறுத்தவேயில்லை.



“வேறு இதற்காக இப்படி ஒரு அங்கீகாரம் வேண்டுமென்று இத்தனை வருடம் காத்திருந்தேன்?

உங்களை உருவாக்க, என் கீழுள்ளவர்களையெல்லாம் ஒருபடி எனக்கு மேலே கொண்டுவர, என் நம்பிக்கையை என் உலக மக்களுக்குக் கொடுக்க, என் இளைஞர்களை எதையும் சாதிக்கும் வல்லவர்களாக திடமான திறமான இளைஞர்களாக உருவாக்க, அத்தகைய என் எண்ணங்களை உங்களிடம் கொண்டுசேர்க்க; எனக்கு இந்த விருதும் இந்த இடமும் இதன் அங்கீகாரமும் தேவைப் பட்டது.

இந்த இடத்தில் வந்து நிற்கத் தக்க அளவிற்கே, எதுவாக நினைக்கிறார்களோ என் இளைஞர்கள் அதுவாக அவர்களால் ஆகமுடியுமென்று நேரெதிர் உதாரணம் காட்டி அவர்களை நம்பவைக்கத் தகுமளவிற்கு இந்த விருது தேவை பட்டது தோழர்களே.

இதோ என் மனைவி எனக்காக காத்துக் கிடக்கிறாள்" சட்டைப் பையில் கைவைத்துக் காட்டினார். “எத்தனை மணிநேரமாய் என் சட்டைப் பையினுள் அவளின் அழைப்பு துடித்துக் கொண்டுள்ளது, பாவம், அவளுக்கு கடைசிகாலம், அவளும் இங்கு வந்திருந்தால் ஆனந்தப் பட்டிருக்கலாம், வர முடியாமல் படுத்திருக்கிறாள். அவளை விட்டு இவ்வேளை நான் வந்துகூட இருக்கக் கூடாது. ஆனால், வெறும் விருதிற்காக எழுதியவனாக இருந்தால் இவ்விருதை வாங்காமல் விட்டிருப்பேன்.

நான் உங்களுக்காக எழுதியவனாயிற்றே, பின் வராமல் இருந்திருந்தால் இத்தனையை உங்களிடம் சொல்லக் காத்திருந்த என் நம்பிக்கை வீன்போயிராதா? அதான், அதனால்தான் வந்தேன். என் எழுத்தை என் நம்பிக்கையை உங்களிடம் சேர்க்கவேண்டி இத்தனை தூரம் வந்தேன். சேர்த்துவிட்டேன். இனி நம்பிக்கையோடு புறப்படுகிறேன். எல்லோருக்கும் வணக்கம்” என்று சொல்லி அவர் நிறுத்த மக்கள் கண்ணீரும் நனைந்த மனதுமாய் எழுந்து நின்று சோவென கைதட்டியது.



அதிலும், இத்தனை பேச இதுவரை யாரையுமே அனுமதிக்காத அரங்கம் அவரை அனுமதித்தது. எதையோ இழந்தது போல், கொடுக்கத் தக்கதை காலம் தாழ்த்தி கொடுத்தது போல் தனக்குத்தானே வருந்தியது.

தன் வருத்தத்தை மீண்டும் மீண்டும் கைதட்டலாய் காண்பித்தது. எல்லோரும் எழுந்து நின்று கைதட்ட விருது வழங்க வந்த ஜனாதிபதியும் எழுந்து நின்று கைதட்டிப் பாராட்டினார்.

ஜானகிராமன் எல்லோருக்கும் வணக்கத்தையும் அதிகம் நேரமேடுத்தமைக்கு மன்னிப்பையும் கோரிவிட்டு அவசரமாக மேடையிலிருந்து கீழிறங்கி மேடையின் பின்புற அறைக்கு பதற்றத்தோடு ஓடிப் போனார்.

----

எல்லோரும் என்னவோ ஏதோ என்று பதறி எழுந்து வர “என் மனைவிக்கு முடியாமல் இருந்தது, என்னாயிற்றோத் தெரியவில்லை, ஒரே ஒரு நிமிடம் நேரம் கொடுங்கள், உயிர்போகும் தருணமாகக் கூட அது இருக்கலாம் பேசிவிட்டு வருகிறேன்” என்று கேட்டுக் கொண்டு மேடையிலிருந்து கீழிறங்கியவாறு ஒதுங்கிய பின்புற அறைநோக்கி நடந்தார்.

எழுந்து நின்றவர்கள் மேடைக் கடந்து வரத் துவங்க. எல்லோரையும் அமருமாறும், அடுத்து விருது பெற உள்ளவர்களுக்கு விருது கொடுக்கப் படுமென்றும், விழா இனியும் இனிதே தொடருமென்றும் அறிவிப்பு வர சிலர் நின்றும் சிலர் அமரவும் செய்தனர்.

ஜானகிராமன் சற்று நடுக்கத்தோடு ஒரு ஓரம் போய் நின்று சட்டைப்பையில் வைத்திருந்த அலைபேசியை எடுத்துப் பார்த்தார். முகமெல்லாம் வியர்க்கத் துவங்கியது. ஐயோ என்ன ஆயிற்றோ எனும் பயம் உடம்பெல்லாம் பரவியது. மனைவிக்கு ஏதேனும் ஆயிருக்குமோ என்று பயந்தார். 'ஐயோ கடவுளே நான் அழைத்தால் உடனே பேசுங்கள் என்றாளே' இப்போது தான் அது அவருக்கு கவனமே வந்தது. கைநடுங்க அலைபேசியின் பொத்தான்களை அழுத்திப் பார்கிறார்.



வாணி என்று அவரின் மகளுடைய பெயரில் நிறைய விடுபட்ட அழைப்புகள் பதிவாகியிருந்தன. அதை கண்டதும் கண்கள் கலங்கி கண்ணீர் வழிய ஆரம்பித்தது ஜானகிரமனுக்கு. அவள் தான் சொன்னாளே, ஒருமுறை யழைத்தாலே பேசுங்கள் என்றாளே, நான்தானே தவறிழைத்துவிட்டேன், பாவி நான்.. என்ன ஆனாளோ இறைவா.." என்று தலையில் கைவைத்து அப்படியே சுவற்றில் சாய்ந்துக் கொண்டார்.

பதைபதைப்பு கூடியது. உயிர் நின்றுவிடுவது போல மேலெல்லாம் மனதோடு சேர்ந்து வலித்தது. வேறு என்ன செய்வதென்றே புரியவில்லை. ஒருவேளை அழைத்து என்னானது என்றாவது கேட்டுவிடலாமா என்று தோன்றியது, அவள் இருக்கிறாள் என்ற ஒரு வார்த்தையை கேட்டால் போதும் மனம் ஓய்ந்து போகும்' என்று எண்ணினார்.

சிலநேரம் மரணம் போன்ற நிகழ்வுகளை தனதாயினும் நெருங்கிய பிறருடையதாயினும் உள்மனம் உள்வாங்கிக் கொள்கிறது. அங்கனம் தெரிந்துக் கொண்டாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தனக்குள் தானே வருத்தப் படவும், மனது அதுவாக கத்தியழவும் ஆரம்பித்து விடுகிறது.

ஜானகிராமனுக்கு அந்த உணர்வு அதிகரிக்க அதிகரிக்க அவளின் ஜானகியின் பிரிவை உணர ஆரம்பித்தார். இனியும் தாமதப் படுத்த வேண்டாமென்று மனதை திடப் படுத்திக் கொண்டு தன் மருமகனுக்கு அழைத்தார். எதிர்முனையில் எடுப்பாரே இல்லை.

மீண்டும் மீண்டும் அவசர அவசரமாக அழைத்தார். பதபதைத்தார். ஓரிருவர் விழாக் குழுவினர்வந்து என்னானது என்னானது பதராதீர்கள். ஒன்றும் ஆகாது என்று ஆறுதல் படுத்தினார்கள்.

இங்ஙனம் யாருமே எடுத்துப் பேசவில்லையே என் மனைவிக்கு என்னானதோ என்று சொல்லியவர் கத்தியழ அவர்கள் அவருடைய மருமகனின் அழைப்பு எண் வாங்கி கூப்பிட்டுப் பார்த்தார்கள்.

எதிர்முனையில் அலைபேசி அணைக்கப் பட்டிருந்தது. அவர்கள் வருத்தத்தோடு விவரம் தெரிவித்துவிட்டு, ஒன்றும் ஆயிருக்காது, வாருங்கள் அமருங்கள், எல்லோரும் கலவரமாகிறார்கள், விழா முடிந்ததும் பேசிக் கொள்வோம் என்றார்கள்.

ஜானகிராமன் அவர்களை ஒரு துச்சமாக பார்த்தார். என் உயிரே என்னைவிட்டு பிருந்துவிடுமோ என்று நான் துடிக்கிறேன், விழாவைப் பற்றி எப்படி நான் எண்ண? உங்களை சொல்லி வருந்தவும் நான் தயாரில்லை. என்னை விட்டுவிடுங்கள், நான் போய்விடுவேன், என்னைப் பற்றி வருத்தம் வேண்டாம் நீங்கள் விழா நடத்துங்கள். இது நூறு பேர் அமர்ந்திருக்கும் அவர்களின் மரியாதைக்குரிய மேடை. எத்தனையோ பேரின் வாழ்வாதாரம், பெரும் அங்கீகாரம் நீங்கள் நடத்துங்கள், நான் போகிறேனென்று கூறிவிட்டு அங்கிருந்து விடைகொள்வதாகக் கேட்டுக்கொண்டு மேடையின் ஓரமாக இறங்கி வளாகம் நோக்கி நடந்தார்.

சிலர் அவரை பார்த்ததும் எழுந்து ஓடிவந்தார்கள். கையை பிடித்து குலுக்கினார்கள். இதில் கையெழுத்துப் போட்டுக் கொடுங்களென்று புத்தகங்களை நீட்டி கேட்டார்கள். தொலைகாட்சிக் காரர்கள் ஓடிப் போய் நேர்காணலுக்கு நேரம் கேட்டனர், பத்திரிகையாளர்கள் விரைந்துவந்து புகைப்படம் எடுத்துக் கொண்டு ஒரு பேட்டி கொடுங்களேன் என்றனர்.

எல்லாம் கண்ணீரில நனைந்துப் போன காகிதம் போல் கிழிந்து' இரைந்த அவரின் கனவுகளென வந்து இடையில் விழுந்தது.

விளக்கில் முட்டிமுட்டி தரையில் விழும் விட்டில் பூச்சுகளைப் போல் அவருதடு சிரிக்க எத்தனித்து எத்தனித்து அழுகையை தழுவியது.

அதைப் புரியாத மக்கள் கூட்டத்திடமிருந்து அதைப் புரிந்த விழாக் குழுவினர் ஓடிவந்து தடுத்து, அவரின் ஒரு கையில் விருதைக் கொடுத்து, இன்னொரு கையில் காசோலையை உள்ளே வைத்துள்ளதாகச் சொல்லி ஒரு பையையும் கொடுத்து, போகுமிடம் சொன்னால் அங்கே கொண்டுவந்து விட்டுவிடுவதாகவும் கேட்டுக் கொண்டார்கள். எல்லோரையும் ஜானகிராமன் கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு "என்னை விட்டுவிடுங்கள் போதும்" என்று கேட்டவாறே வெளியே வந்தார்.

அந்த இடத்தை விட்டு கொஞ்ச தூரம் தன் கண்போன போக்கிற்கு நடந்தார். மனைவி கடைசியாக சொன்னதும், இத்தனை காலம் அவளோடு வாழ்ந்ததும் அவள் பேசியதும் என எல்லாம் ஒவ்வொன்றாய் நினைவில் வந்து உறுத்தியது. அவளின் தியாகங்கள் ஒவ்வொன்றாய் வந்து கன்னத்தில் அறைந்து அறைந்து என்னை தனியே விட்டுவிட்டாயே என்று கேள்வி கேட்டது.

கேள்விகளின் சிந்தனையில் உடைந்து போன மனதின் உயிர் அனிச்சையாய் அனிச்சையாய் வலுகுறைய ஆரம்பிக்க "ஐயோ என்னாயிற்றோ என்னாயிற்றோ என் ஜானகிக்கு" என்ற பதட்டத்தில் கையிலிருந்த விருதினை கக்கத்தில் வைத்துக் கொண்டு, சட்டைப்பையிலிருந்து கைப்பேசி எடுத்து மருமகனுக்கே மீண்டும் அழைத்துப் பார்க்க எண்ணி ஒரு ஓரம் நின்று அழைக்க, வெகு வேகமாய் பேருந்தொன்று அவரை இடித்துவிடுவதுபோல் வந்து அவரை உரசிப் போக, அதன் காற்றில் ஆடி அவர் ஒதுங்க, காற்றும் மணலும் முகத்தில் வாரியடித்து ஏதோ ஒரு தனைமீறிய பயத்தை வாரி அவரின் முகமெங்கும் பூசியது.

ஒதுங்கி நின்று அலைபேசியில் எண்கள் அழுத்தி மருமகனை அழைப்பதற்குள் காலன் கைகடிக்கும் இடமாக மின்சக்தி வேறு குறைந்துபோய்விட்ட எச்சரிக்கை ஒலியை ஒலித்துவிட்டு அணைந்தேப் போனது.

வானமே இருண்டு தலையில் விழுவது போலெண்ணினார் ஜானகிரமன். ஐயோ என்ன செய்வதோயென்று நோடிந்துபோய், வேறு வழியின்றி கொஞ்சம் தூரம் நடந்து ஒரு யாருமில்லா தெருவின் ஓரத்தில் ஏறி அங்கிருந்த ஒரு மின்விளக்குக் கம்பத்தின் கீழே அமர்ந்துக் கொண்டார்.

ஒரு கையில் விருதும், இன்னொரு கையில் அந்த காசோலைப் பையும் இருந்தது. கடவுளே எப்படியாவது என் ஜானகியை நான் போய்சேரும் வரை உயிரோடு வைத்திருபாயா என்று எண்ணுகையில் அழைப் பீறிட்டு வர, அதையும் அடக்கிக் கொண்டு "இப்போதான் இவ்வளவு பணம் இருக்கே போனதும் எப்படியாவது பெரிய மருத்துவமனையில சேர்த்து வைத்தியம் பார்த்துவிடுவேனே, அதுவரை அவளை உயிரோடு வைத்திறேன்" என்று வாய்விட்டு அழமுடியாமல் இதயம் வெடிக்க கனத்து நின்றார்.

சற்றுநேரத்தில் வெறுமனே அலைபேசியை மீண்டும் இயக்கிப் பார்க்க, அது எப்படியோ ஒட்டியுல்ல சொச்ச மின்சக்தியில் உயிர் பெற்று தன் கடைசிப் புள்ளி மின்சார அளவைக் காட்ட, இப்போ என்ன செய்யலாம்...., மருமகனைத் தவிர வேறு வழியில்லை, வேறு யார் எண்ணுமேத் தெரியாதே, இப்படி செய்தாலென்ன, ஏதேனும் ஒரு இருக்கும் எண்ணிற்கு அழைத்து கேட்கலாமே என்று எண்ணி எங்களை தேடிப் பார்ப்பதற்குள் சென்னையிலிருந்து ஒரு அழைப்பு வந்தது..

உயிரே வந்ததாக துடித்துபோய் -

யம்மா.........................” என்றார். வாய்விட்டு கதறினார் ஜானகிராமன். விருது கொடுத்துட்டாங்கம்மா” என்றார்.

“சரிங்கப்பா”

“நான் கிளம்பிட்டேன்மா”

“சரிங்கப்பா”

“நாளைவிட்டு நாளைமறுநாள் வந்து சேர்ந்திடுவேன்மா” என்றார் அவருக்கு மனைவி எப்படி இருக்கிறாள் என்று கேட்க பயமாக இருந்தது.

“சரிங்கப்பா”

“நிறைய பணம் கொடுத்து இருக்காங்கம்மா, இந்த பணத்துல நம்ம அம்மாவ..........................” அவரால் பேச முடியவில்லை. அழுதார். தேம்பினார்..



“அப்பா.........”

“.....”

“அப்பா.........”

“தாங்க முடியலைம்மா”

"இல்லைப்பா...”

"வந்து சேருவனான்னு பயமா இருக்கும்மா”

"ஐயோ அப்பா அப்பா அப்பா.......”

“மன்னிச்சிடும்மா, உனக்கு இவ்வளோ பெரிய பாரத்தை கொடுத்துட்டேனே.."

"என்னப்பா நீங்க ... என்ன தாங்கி என்னால என்னப்பா செய்யமுடிந்தது, பெண்ணா பிறந்த குற்றத்துக்கு உங்களின் வலிகண்டு அழத் தானே முடிந்தது, இப்போ அதையும் தாண்டி எல்லாத்தையும் இழந்துட்டேனேப்பா.."

"ஏம்மா.., என்னம்மா சொல்ற???”

“அம்மாப்பா”

“என்னம்மா... என்னம்மா ஆச்சு அம்மாவுக்கு”

“அம்மா பாவம்பா துடிதுடிச்சிட்டங்கப்பா”

“மருத்துவமனைக்குப் போனீங்களா”

“ம்ம்ம்ம்..........போனோம்பா”

“பணத்துக்கு என்ன பண்ணீங்கமா”

“தாலியை வெச்சேம்பா, வைக்கலை வித்தேன்”

“ஐயோ, மாப்பிளைக்கு தெரியாதா? அவரில்லையா கூட?”

“இல்லைப்பா அவர் வரதுக்குள்ள.."

"வரதுக்குள்ள???"

"தாலி விட எனக்கு அம்மாதாம்பா வேணும்" அவள் கத்தி கத்தி அழுதாள்.

“என்னாச்சு வாணி அம்மாவுக்கு”

“இல்லைப்பா..”

“என்னாச்சும்மா அவளுக்கு”

“கேட்காதிங்கப்பா”

“ஏம்மா சொல்லும்மா என்னமா ஆச்சு?????????”

“இல்லைப்பா.. “

“என்ன????!!!!!!!!!!!!”

“அம்மா இல்லைப்பா”

“................”

"அம்மா இல்லைப்பா இனி..."

"..............."



“அம்மா போயிட்டாங்கப்பா...”

".............."



விருது தரையில் உருண்டோடியது. கையிலிருந்த அலைபேசி கீழே விழுந்து அதிலிருந்து அப்பா அப்பா என்று அவள் கதறுவது மட்டும் கேட்டது. ஜானகிராமன் அந்த மின்கம்பத்திலிருந்து சரிந்து கீழே விழுந்தார்..

மேலே காகங்கள் சுற்றி சுற்றி வட்டமிட்டுப் பறந்தன. மழை ஜோவென்று கொட்டியது...

-—————–+++——————+++——————–

..முற்றும்..

வித்யாசாகர்

No comments: