தமிழ் சினிமா

.
வேலாயுதம் - திரை விமர்சனம்


சிகர்களின் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் விஜய்யின் வேலாயுதம் வெளியாகியிருக்கிறது.

தலயா, தளபதியா என்ற போட்டி ஒருபுறமிருக்க சூர்யாவும் விஜய்யும் களத்தில் குதித்திருக்கிருக்கின்றனர்.

தொடர்ச்சியாக ஆக்ஷன் படங்களைத் தந்த விஜய், காவலன் வெற்றி மூலம் தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அதன்பிறகு தயாரிக்கப்பட்ட வேலாயுதம் பற்றிய பரபரப்பான செய்திகள்,கட்டுக்கதைகள் வெளியாகிய போதிலும் அவை அனைத்துக்கும் வேலாயுதம் பதில் கொடுத்துள்ளது எனலாம்.

அரசியல் ரீதியாக விஜய் எதிர்கொண்டிருந்த பிரச்சினைகளுக்கு மத்தியில் தென்னிந்திய ஆட்சி மாற்றத்தின் பின்னர் வெளியாகியுள்ள விஜய்யின் முதலாவது திரைப்படம் என்பதாலும் அஜீத்தின் மங்காத்தா மாபெரும் வசூல் மழையைக் கொட்டி சாதனை படைத்திருந்ததாலும் வேலாயுதம் மீதான எதிர்பார்ப்பு பலமடங்காகியிருந்தது.

ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜாவின் இயக்கத்தில், விஜய் என்டனியின் இசையமைப்பில் இளைய தளபதியுடன் ஜெனிலியா, ஹன்சிகா, சரண்யா, சந்தானம் உள்ளிட்ட ஒரு நட்சத்திரப் பட்டாளமே படத்தில் நடித்திருக்கிறது.

ஊடகத்துறையில் வெறும் செய்தி வெளியிடுவது மாத்திரமல்லாமல் சமுதாயத்துக்காக சாதிக்க வேண்டும் என்ற நோக்கோடு அந்தத் துறையில் தனது நண்பர்களுடன் துணிவோடு இறங்குகிறார் ஜெனிலியா.

சென்னையை நிர்மூலமாக்க வேண்டும் என்ற பாரிய திட்டத்தோடு செயற்படும் வில்லன்கள் ஜெனிலியாவின் நண்பர்களைக் கொன்றுவிட ஜெனிலியா மட்டும் தப்பிக்கொள்கிறார்.

இவர்களது திட்டத்தை முறியடிக்கவும் வில்லன்களைக் கொல்லவும் முடிவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டு ஒரு தாளில் எழுதி வைத்துவிட்டு என்ன பெயர் எழுதலாம் என்று யோசிக்கிறார். அந்த நேரத்தில் அருகேயுள்ள முருகன் கோயிலைப் பார்த்ததும் உதிக்கிறது வேலாயுதம் என்ற பெயர்.

முடிவில் வேலாயுதம் என எழுதுகிறார் ஜெனிலியா. மறுநாள் யார் இந்த வேலாயுதம் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்துகிறது.

இந்நிலையில் வேலாயுதம் என்ற பெயரோடு கிராமத்து மக்களின் மைந்தனாக தனது ஊரில் வலம் வருகிறார் விஜய். அவரது முறைப்பெண் ஹன்சிகா. அண்ணன் - தங்கை பாசத்தோடு அப்பாவியாக இருக்கும் விஜய், தங்கையின் கல்யாணத் தேவைக்காக சென்னைக்கு வருகிறார்.

அங்கு ஆலயத்தில் அர்ச்சகரிடம் இவருடைய பெயரைச்சொல்ல, கதை மறுபக்கம் பயணிக்கத் தொடங்குகிறது.

இதேவேளையில், தற்செயலாக விஜய் செய்யும் சில விடயங்கள், வில்லன்கள் வைத்திருந்த குண்டுகளை அடையாளம் காண உதவுகின்றன.

இந்நிலையில் தனது தங்கையின் கல்யாணத்துக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை முதலீட்டு நிறுவனத்தினர் மோசடி செய்துவிடுகிறார்கள். தன்போன்று மேலும் பலர் பாதிக்கப்பட்டதை நினைத்து வேதனைப்படுகிறார் விஜய்.

மறுபுறத்தில் யார் இந்த வேலாயுதம் என அறிந்துகொள்வதற்காக ஊடகங்களும் பொதுமக்களும் பாதுகாப்புத் தரப்பினரும் அதீத ஆர்வத்தில் கண்டுபிடிக்க முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள்.

இறுதியில் விஜய், ஜெனிலியா குறிப்பிட்ட வேலாயுதமாக மாறுகிறாரா? வில்லன்களை எப்படிக் கண்டுபிடிக்கிறார்? தங்கையின் திருமணம் நடைபெறுகிறதா? விஜய் மீது கண் வைத்திருக்கும் ஜெனிலியா, ஹன்சிகாவில் யாரைத் திருமணம் செய்கிறார்? என்பதே கதை.

படத்தின் முதல்பாதி முழுவதும் சுவாரஸ்யமான சிரிப்போடு நகர்கிறது. ஓடும் ரயிலில் பாய்ந்து வந்து ஏறும் விஜயின் முதல் காட்சியைப் பார்த்தவுடன் வழமையாக காற்றில் பறந்துவந்து வில்லன்களைத் துவம்சம் செய்யும் விஜய் தான் மீண்டும் வந்திருக்கிறார் என நினைக்கத் தோன்றும்.

எனினும் கொஞ்சம் காட்சி நகர்கையில் சுவாரஸ்யம் தொடர்கிறது.

விஜய், தன்னுடைய தங்கையின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக செய்யும் வேலைகள் அனைத்துமே திரையரங்கை அதிரவைக்கும் அளவுக்கு சிரிப்பொலியை ஏற்படுத்துகின்றன.

அடுத்ததாக சந்தானத்தின் பங்கு திரைப்படத்தின் தரத்தை தூக்கி நிறுத்துகிறது எனலாம். அலட்டல் இல்லத நடிப்போடு அரங்கத்தையே அதிர வைக்கிறார் சந்தானம்.

விஜய் அரசியலில் காலடி வைத்துள்ளதை அல்லது அவரது எதிர்கால இலட்சியங்களை அவரது வசனங்கள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. மக்களை சிந்திக்கத் தூண்டும் வசனங்களைக் கச்சிதமாகப் பேசுகிறார். ஜெனிலியாவின் முன்னைய திரைப்படங்களை விட நடிப்பில் குறையிருப்பதாகவே தெரிகிறது. சத்தமாகப் பேசும் வசனங்களில்கூட உதடுகளின் அசைவு குறைவாகவே இருக்கிறது. ஹன்சிகாவைக் கொஞ்சம் பாராட்டலாம்.

பாடல்கள் சில ரசிக்கும்படியாக உள்ளன.

மாயம் செய்தாயோ... என்ற பாடல், சொன்னா புரியாது... சொல்லுக்குள்ள அடங்காது... என்ற அறிமுகப்பாடல், ரத்தத்தின் ரத்தமே..என் இனிய உடன்பிறப்பே.. ஆகிய பாடல்கள் நெஞ்சில் நிறைந்து நிற்கின்றன.

சூரியனே தேவையில்ல வித்துவிடலாமா? ராத்திரிய மட்டும் இங்க வச்சிக்கலாமா? என்ற வரிகள் ஒலிக்கையில் கைதட்டல் கூடுகிறது.

விஜய் ரசிகர்களுக்காகவே எழுதப்பட்டவை எனச் சொல்லக்கூடிய வரிகளுக்கும் அவ்வாறே பாராட்டைப் பெறுகின்றன.

திரைப்படத்தின் இரண்டாவது பாதி விறுவிறுப்பாக நகர்கிறது. அடுத்தடுத்து என்ன நடக்கலாம் என்பதை ஊகிக்க முடிந்தாலும் கூட காட்சிகளில் எவ்வாறு வித்தியாசமாகக் காட்டப்படுகிறது என்பதில் எதிர்பார்ப்பு அதிகமாகிறது.

க்ளைமேக்ஸ் காட்சிகளில் விஜய் தன் பங்கைச் சரியாகச் செய்கிறார். ஆயினும் சண்டைக் காட்சிகளில் சில யதார்த்தத்துக்குப் பொருத்தமாக அமையவில்லை என்றே கூறலாம். விஜய் குதிரையில் பயணிக்கும் சில காட்சிகளும் அதனை வெளிப்படுத்துகின்றன.

மாபெரும் நட்சத்திரப்பட்டாளங்களை வேலாயுதம் கொண்டிருக்கிறது. இசை, ஒலிப்பதிவு உள்ளிட்ட ஏனைய அனைவருமே தமது பங்கினை திருப்தி தரக்கூடிய வகையில் செய்திருக்கிறார்கள்.

விஜய்யின் ஆக்ஷன், நகைச்சுவைகளை விரும்பும் ரசிகர் கூட்டத்துக்கு வேலாயுதம் நல்லதொரு தீபாவளிப் பரிசுதான். வித்தியாசமான கதையை விரும்புபவர்கள் கொஞ்சம் மனம் நோகத்தான் செய்வார்கள்.

எவ்வாறாயினும் திரைப்படத்தின் நகைச்சுவையும் உணர்வுகளைத் தூண்டும் கதைவசனமும் மனதில் நிலைக்கின்றன.

வேலாயுதம் - விருந்து

-ஆர்.நிர்ஷன்

நன்றி வீரகேசரி


தமிழ் சினிமாவின் உண்மை முகம்!

மனோஜ்கிருஷ்ணா
முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் வந்தாலே சினிமா ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் ஒரே கொண்டாட்டமாக இருக்கும். பண்டிகை நாள்களில் பெரிய பட்ஜெட், சிறிய பட்ஜெட் என குறைந்தது 10 படங்களாவது ரிலீஸ் ஆகும். ஆனால் இப்போதோ நிலைமை மாறிவிட்டது. அதிலும் இந்தத் தீபாவளிக்கு "ஏழாம் அறிவு', "வேலாயுதம்', "ரா ஒன்' என மூன்று படங்கள்தான் வெளியாகின்றன. பல படங்களுக்குத் தியேட்டர்களே கிடைக்கவில்லை. சில ஸ்டார் நடிகர்களின் படங்கள் கூட "ஏழாம் அறிவு' ஃபோபியா காரணமாக போட்டியிலிருந்து விலகிக்கொண்டன.

சினிமாத் தொழில் நசிந்து வருவதற்கும் தியேட்டர்களில் முன்பு போல் கூட்டம் கூடாததற்கும் அங்கு வசூலிக்கப்படும் அடாவடியான டிக்கெட் கட்டணமே காரணம் என்பதுதான் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பார்வையில் பிரதானமாக இருக்கிறது.

மல்டிபிளக்ஸ் காம்ப்ளக்ஸ்களில் வசதி படைத்தவர்கள்தான் செல்ல முடியும் என்ற நிலை. சரி... சாதாரண, நடுத்தர வசதியுள்ள திரையரங்குகளுக்கோ, புறநகர்ப் பகுதிகளில் உள்ள திரையரங்குகளுக்கோ செல்லலாம் என்றால் அங்கு நடக்கும் கூத்து இதை விட பயங்கரமாகவுள்ளது.

ரூ.10, ரூ.15-க்கு டிக்கெட் கொடுப்பார்கள்; ஆனால் நம்மிடம் ரூ.50 முதல் ரூ.80 வரை வசூலித்துவிடுகிறார்கள். அதிலும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம்; குறைந்த பட்சம் ரூ.100 முதல் ரூ.500 வரை கறந்துவிடுகிறார்கள். ஆனால் நமக்குத் தருவது ஒரு ரிசர்வேஷன் ஸ்லிப்பையோ அல்லது ரூ.15, ரூ.20 என அச்சிடப்பட்ட டிக்கெட்டையோதான்.

நமக்குத் தரும் அந்த ரூ.15, ரூ.20 டிக்கெட் கட்டணத்தின் அடிப்படையில்தான் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை அளிக்கிறார்கள். அதைத்தான் டி.சி.ஆர் எனப்படும் டெய்லி கலெக்ஷன் ரிப்போர்ட்டிலும் குறிப்பிடுகிறார்கள்.

அதிகமாக வசூலிக்கும் தொகையை தியேட்டர்காரர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? விநியோகஸ்தர்கள் எடுத்துக்கொள்கிறார்களா? அதில் தயாரிப்பாளர்களுக்குப் பங்கு இருக்கிறதா என்பதெல்லாம் சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம்.

இப்படி திரையரங்குகளில் கொள்ளை நடக்கும்போது நடுத்தர மக்கள் திருட்டு வி.சி.டி. பக்கம்தான் செல்வார்கள்!

ஊரறிந்த இந்த ரகசியம் அரசுக்குத் தெரியாதா? சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்குத் தெரியாதா? என்பதுதான் பலருடைய கருத்து.

அஜித் நடித்து வெளியான "மங்காத்தா' படம் வசூலில் வெற்றி பெற்றதாகத்தான் சினிமாத்துறையில் பேச்சு. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டத் திரைப்பட விநியோகப் பகுதிகளில் முதல் 14 நாள்களில் "மங்காத்தா' படத்தைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்து 52 ஆயிரத்து 763. மொத்த வசூல் ரூ.9 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரத்து 571.

வெளிப்படையாகப் பார்த்தால் "அட' என ஆச்சரியம் அடையலாம். ஆனால் இந்த வசூல் சாத்தியம்தானா? சத்தியமாக இல்லை! அதாவது அரசு நிர்ணயித்த டிக்கெட் கட்டணத்தின் படி வசூல் செய்திருந்தால் இந்தத் தொகை வசூலாகியிருக்க முடியாது. மேற்கூறப்பட்ட திரையரங்குகளில் 14 நாள்களில் இத்தனை லட்சம் பார்வையாளர்கள் படத்தைப் பார்த்திருக்கவே முடியாது. அப்படியானால்... திரையரங்குகளில் அரசு அனுமதித்த பார்வையாளர்களை விட கூடுதலாகப் பலர் படத்தைப் பார்த்துள்ளனர். வசூலான தொகையையும் பார்வையாளர்கள் செலுத்திய கட்டணத்தையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு டிக்கெட் சராசரியாக ரூ.87.80-க்கு விற்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பகுதிகளில் எந்த ஒரு திரையரங்கிலும் (அரசு நிர்ணயத்தபடி) ரூ.50-க்கு மேல் டிக்கெட் கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு இரண்டு விதி மீறல்கள் நடந்துள்ளன.

ஒன்று... அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிக கட்டணத்தில் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. "மங்காத்தா' படத்துக்காக அஜித் ரூ.10 கோடி சம்பளம் பெற்றார். அதற்கு முறையாக வரியும் செலுத்தப்பட்டுவிட்டது. சினிமாவில் சம்பளத்தை கறுப்புப் பணமாகப் பெறாத மிகச் சிலருள் அஜித்தும் ஒருவர். ஆனாலும் அவர் நடித்த படத்தின் வசூல் முறைகேடான வழியில் ஈட்டப்பட்டிருக்கிறதே, இதற்கு என்ன சொல்லுவது? யார் மீது நடவடிக்கை எடுப்பது?

இரண்டு... அனுமதித்த பார்வையாளர்களை விட அதிக நபர்களைத் திரையரங்கினுள் அனுமதித்தது. அவர்களிடமிருந்து வசூலான டிக்கெட் கட்டணம் கணக்கில் வந்திருக்குமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

ஏனென்றால் திரைப்படங்கள் மூலம் பெறப்படும் கேளிக்கை வரியை அந்தந்தப் பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த முடியும் என்பதுதான் உண்மை. ஆக, சினிமா மூலம் கிடைக்கும் கேளிக்கை வரி மக்களைச் சென்றடைய இது ஒரு வழி. அது அடைக்கப்பட்டு விடுகிறது.

அளவுக்கு அதிகமான பார்வையாளர்களை அரங்கத்தில் அடைத்து வைப்பதன் மூலம் விபத்துக்கும் வழிகோலுகின்றனர் திரையரங்க உரிமையாளர்கள். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பேற்பது?

இனி, இந்தத் தீபாவளிப் படங்கள் பற்றி ஒரு சிறு அலசல். மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "ஏழாம் அறிவு' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.65 கோடி. சுமார் 350-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகத்தில் மட்டும் ரூ.65 கோடிக்கு மேல் விற்பனையாகியுள்ளது. எஃப்.எம்.எஸ்., இதர உரிமைகளோடு சேர்த்து சுமார் ரூ.85 கோடி வரை விற்பனையாகியுள்ளது. அரசு நிர்ணயித்த தொகையின்படி டிக்கெட் கட்டணம் விற்கப்பட்டு போட்ட முதல் தொகையை எடுக்க வேண்டுமானால் (கேளிக்கை வரி, எக்ஸிபிட்டர்ஸ் ஷேர் ஆகியவற்றை உள்ளடக்கி) இந்தப் படம் தமிழகத்தில் சுமார் ரூ.78 கோடி வரை வசூலாக வேண்டும்.
"வேலாயுதம்'- ஹன்சிகா மோத்வானி, விஜய் ---- "ஏழாம் அறிவு'- ஸ்ருதி ஹாசன், சூர்யா

"வேலாயுதம்' படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.40 கோடி. சுமார் 300 திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், தமிழகத்தில் ரூ.45 கோடி வரை விற்பனையாகியுள்ளது. இந்தப் படத்தின் அசலை எடுக்க வேண்டுமானால் சுமார் ரூ.55 கோடிக்கு மேல் (கேளிக்கை வரி, எக்ஸிபிட்டர் ஷேர் உள்ளடக்கி) வசூலாக வேண்டும்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தின்படி டிக்கெட் கட்டணம் விற்கப்பட்டால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடினால்தான் இந்தப் படங்களால் மேலே குறிப்பிட்ட வசூலை எட்ட முடியும். இது சாத்தியமாகுமா? பிறகு எப்படி 20, 30 நாள்களில் பணத்தை எடுக்க முடிகிறது?

அதிக கட்டணத்தில் டிக்கெட்டுகளை விற்பதால்தான் என்கிறார் தமிழ்த் திரைப்படங்களின் வியாபார ஆய்வாளரும் தமிழ்நாடு எண்டர்டெயின்மெண்ட் இதழின் ஆசிரியருமான ஆர்.ராமானுஜம்.

இது குறித்து திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் கேட்டபோது..
""படத்தின் தயாரிப்பு செலவு அதாவது பட்ஜெட் அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம், அதில் பெரும் தொகை நடிகர்களின் சம்பளத்துக்கே சென்றுவிடுகிறது. இது தயாரிப்பாளர்களுக்கு நெருக்கடியை அளிக்க அவர் திரையரங்கு உரிமையாளர்களிடம் அதிக எம்.ஜி. (மினிமம் கியாரண்ட்டி) கேட்கிறார். திரையரங்கு உரிமையாளர் என்ன செய்வார்? அதிக விலை கொடுத்து வாங்கிய படத்துக்கு நிர்ணயித்ததை விட அதிக கட்டணத்தைத்தான் வாங்குவார். மல்டிபிளக்ஸ் தவிர்த்த தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு தயாரிப்பாளர்களும் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களும்தான் காரணமே தவிர, விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும் கிடையாது'' என்கிறார்கள்.

இதற்கு என்ன தீர்வு? கடந்த சில ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கும் தியேட்டர் டிக்கெட் கட்டணத்தை நியாயமான அளவுக்கு உயர்த்த வேண்டும். அரசு நிர்ணயித்த கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என கடுமையான உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதை மீறும் திரையரங்குகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மின்சார வாரியம், மாநகராட்சி உள்ளிட்ட பல அரசு அலுவலகங்களில் பொதுமக்களுக்கு ஏதேனும் குறை இருந்தால் உடனே முறையிடலாம் என அதிகாரிகளின் பெயர், தொலைபேசி எண், அலுவலக முகவரி போன்றவற்றை வைத்திருப்பது போல ஒவ்வொரு திரையரங்கிலும் அரசு நிர்ணயித்த கட்டணத் தொகை, அனுமதிக்கப்பட்ட பார்வையாளர்கள் எண்ணிக்கை ஆகியவற்றைக் குறிப்பிட்டு அதைப் பின்பற்றாமல் மீறுவோர் மீது புகார் அளிக்க தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள், அவர்களது தொலைபேசி எண்கள் உள்ளிட்டவற்றைக் குறிப்பிட்டு ஒரு வினைல் போர்டு வைக்கலாம்.

இப்படிச் செய்தால் முறையான டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும். அப்போது திரையரங்கு உரிமையாளர்கள் அதிக எம்.ஜி. கொடுத்து படத்தை வாங்க மாட்டார்கள். இதன் விளைவாக தயாரிப்பாளர்கள், நடிகர்களுக்கு அதிக சம்பளம் தர மாட்டார்கள். அதனால் படங்களின் தயாரிப்புச் செலவு குறையும். அனைத்தும் ஒருங்கே அமையும்போது ரசிகர்கள் தாமாகவே தியேட்டர்களுக்கு வருவர். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என அனைத்துத் தரப்பு படங்களும் நன்றாக ஓடும். சாதனை பாதி; வேதனை பாதி என இரட்டைக் குதிரைகளில் கடிவாளமில்லாமல் பயணித்துக்கொண்டிருக்கும் தமிழ்த் திரையுலகம் தழைத்தோங்குவதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கும்.

நன்றி தினமணி

No comments: