தமிழ் சினிமா

வேங்கை

ஹரியின் வழக்கமான அரிவாள் கலாச்சாரம் நிறைந்த அதிரடி படம் தான் 'வேங்கை'.

ஊரில் மிகப்பெரிய கையாக இருக்கும் ராஜ்கிரண் அவரது மகன் தனுஷ். அந்த ஊரில் இருக்கும் எம்.எல்.ஏ. பிரகாஷ்ராஜ் இந்த மூவருக்கும் இடையில் கதை பின்னப்பட்டிருக்கிறது.

துவக்க காட்சியில் ஹரியின் அதிரடியான துவக்க பாடலுடன் துவங்குகிறது. தன் மகன் தன்னைப்போல் ரவுடியாக ஆகவேண்டாம் என திருச்சிக்கு அனுப்ப திட்டமிட்டு அங்கு ரியல் எஸ்டேட் செய்யும் லிவிங்ஸ்டன் அலுவலகத்தில் பணியாற்ற அனுப்பப்படுகிறார் தனுஷ். திருச்சியில் பஸ்ஸில் தமன்னாவை பார்த்த மாத்திரத்தில் சின்ன வயதில் தன்னுடன் பள்ளியில் படித்த ராதிகா என கண்டுப்பிடித்து இருவருக்குமான நட்பு ஆரம்பித்து விடுகிறது. தமன்னா விலக இவர் விரட்ட என பல்வேறு குழப்பங்களுக்கிடையே இருவருக்கும் காதல் மலர்கிறது. ராஜ்கிரண் தயவில் எம்.எல்.ஏ.வாக இருக்கும் பிரகாஷ்ராஜ் மணல் கொள்ளையில் அதிகம் சம்பாதித்து அதிக சொத்து வாங்குகிறார். இதை தட்டிக்கேட்ட ராஜ்கிரணுடன் மோதல் துவங்குகிறது. ராஜ்கிரணுக்கு வலிக்கவேண்டும் என்பதற்காக திருச்சியில் இருக்கும் தனுஷை கொலை செய்ய ஆட்களை ஏவிவிடுகிறார் பிரகாஷ்ராஜ். ஆனால் அது தோல்வியில் முடிகிறது. இப்போது தனுஷும், பிரகாஷ்ராஜும் நேர் எதிரிகளாக ஒருவரையொருவர் கொல்ல சபதமெடுக்கிறார்கள். இதில் யார் ஜெயித்தார்கள் என்பது மீதிக்கதை.

னுஷுக்கு பெரியதாய் வேலையில்லை. மொத்தமாய் அருவாள் சைஸில் இருந்து கொண்டு, சடசடவென மரத்தில் ஏறி அருவாளை மரத்தின் மீது பாய்ச்சி நிற்பது நன்றாக இருந்தாலும், ஒரு அருவாளே அருவாளை தாங்குகிறதே என்று கவிதை படிக்க தோன்றுகிறது. காதல் காட்சிகளில் தனுஷ் தனியே தெரிகிறார். படத்தின் பலம் படம் வேகமாக விறுவிறுப்பாக செல்வதுதான். அதே அருவாள், டாடா சுமோ, வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை என்று நாம் ஏற்கனவே பார்த்த விசயங்களாக இருந்தாலும் அலுப்புத்தட்டவில்லை. ஹரியின் ஹீரோக்களின் வழக்கமான அந்த புத்திசாலித்தனமான அணுகுமுறை தனுஷுக்கும் தரப்பட்டுள்ளது. அதை தனுஷ் நன்றாக செய்திருக்கிறார். தமன்னாவுக்கு ஒன்றும் பெரிய ரோல் இல்லை. நன்றாக நடித்திருக்கிறார். அழகாய் இருக்கிறார். ஆனால் பாடல் காட்சிகளை தவிர மற்ற காட்சிகளில் முகத்தில் ஏதோ ஒரு மென் சோகத்தை அப்பிக் கொண்டவாறு இருப்பது ஏன் என்று தெரியவில்லை. தமன்னாவை விட, அவருடன் வரும் தோழிகள் க்யூட்டாக இருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக வரும் அம்முகூட.

படத்தில் ஊர்வசி, சார்லி, பொன்னம்பலம், ஒய்.ஜி.மகேந்திரன், 'பரவை' முனியம்மா, ஜஸ்வர்யா என நிறைய நடிகர் பட்டாளம் தன் பங்குக்கு அவர்களின் வேலையை செய்திருக்கிறது. 'சிங்கம்' படத்தில் கொடுத்த கால்ஷீட்டின் நீட்சியோ என்று யோசிக்கும் அளவு அதே டயலாக், அதே பாடி லாங்குவேஜ், அதே வீராப்பு முதல் முறையா இந்தப் படத்துல போரடிக்கிறீங்க பிரகாஷ்ராஜ். ராஜ்கிரணும் நன்றாக நடித்திருக்கிறார் ஆனால் ஒரு அருமையான நடிகரை எவ்வளவு நாளுக்கு ஒரே கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பார்கள் என்று தெரியவில்லை. கொமெடியனாக கஞ்சா கருப்பு. யாராவது நல்ல கொமெடி ரைட்டர் இவருக்கு உடனடித் தேவை. சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், ஹாண்ட்பார் காமெடி எரிச்சல் மூட்டுகிறது. தெரு மாறி வந்து சைக்கிளை விடும் காட்சியில் மட்டும் தியேட்டரே சிரிப்பில் அதிர்ந்தது.

சில படங்களின் கதைக்களம் நடிக்கும் நடிகர்களை வைத்து தெரிந்த, அரைத்த மாவுக் கதையாகவேயிருந்தாலும் எடுபட்டுவிடும். ஆனால் சில நடிகர்களுக்கு பெரிதாய் எடுபடாது. அந்த வகைதான் தனுஷுக்கு இந்தப் படம். விக்ரம், சூர்யாவை வைத்து திரைக்கதையெழுதும் போது இருக்கும் விறுவிறுப்பு மற்ற நடிகர்களுக்கு எழுதும் போது ஹரிக்கு குறைந்து போவது என்ன காரணமோ?. வில்லனுக்கும், ஹீரோவுக்குமான காட்சிகள் எல்லாமே ஏற்கனவே பார்த்த ஃபீலீங் வருவதால் போரடிக்கிறது.இடைவேளைக்கு முன்னால் வரும் சேஸிங் காட்சியும், சண்டைக் காட்சியை கோரியோகிராப் செய்த விதமும் தீயாய் வேலை செய்திருக்கிறார்கள். 'சிங்க'த்தில் ஆகட்டும், 'சாமி'யில் ஆகட்டும் என்ன தான் லாஜிக் இல்லாவிட்டாலும் யோசிக்க விடாதபடி அடுத்தடுத்து வில்லனுக்கு ஹீரோவுக்குமான கன்பர்ண்டேஷன் அடிதூள் பரத்தும். இதில் பத்து நிமிஷத்துக்கு ஒரு முறை வில்லன் செல்போனை தரையிலடித்து உடைப்பதை தவிர வேறேதும் பெரிதாய் இல்லை. படத்தில் ஆரம்பத்தில் வரும் காதல் காட்சிகள் கொஞ்சம் இண்ட்ரஸ்டிங்.

ஆனால் அதேநேரத்தில் படத்தில் அடியாட்கள் என்ற பெயரில் பல பேருக்கு வேலை, சம்பளம், பேட்டா கொடுத்து மெயிண்ட்டெயின் செய்தது அரிவாள் செய்யும் கலைஞர்கள், அரிவாள் தீட்டும் கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளித்தது என ஹரியை பாராட்டும் விஷயங்களும் உண்டு. மசாலாப் படத்துக்கு இசையமைக்க தேவிஸ்ரீ பிரசாத்-ஐ விட்டால் பொருத்தமான ஆள் வேறு யார் படத்திற்கு பெரிய பலம் சூப்பர் ஹிட் பாடல்கள். 'என்ன சொல்லப் போறே', 'புடிக்கலை', 'ஒரே ஒரு வார்த்தைக்காக' என்று ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகத்தில் மனதைக் கவர்கின்றன. குறிப்பாக கார்த்திக்கின் குரலில் 'காலங்காத்தால' பாடல் பலரின் விருப்பப் பாடலாக அமைந்ததில் சந்தேகமில்லை. வெற்றியின் கேமராவும், வி.டி.விஜயனின் எடிட்டிங்கும் படத்தின் வேகத்திற்கு பக்கபலம். தன்னை ஒரு கமர்சியல் டைரக்டர் என்று அறிவித்துக்கொண்ட ஹரியிடம் உலகச் சினிமா எதிர்பார்ப்பது நம் தவறு. சொன்னபடி கமர்சியல் படம் கொடுத்திருக்கிறாரா என்று பார்த்தால், சொல்லி அடித்திருக்கிறார்.

நன்றி விடுப்பு



தேநீர் விடுதி
பந்தல் கான்ட்ராக்டராக வரும் ஹீரோ, பெட்டிக்கடை வைத்திருக்கும் பெண் மீது கொள்ளும் காதல் எப்படி கை கூடுகிறது என்பது தான் கதை.

'பூ' படத்தின் பாடல்களுக்காகப் பேசப்பட்டவர் அதன் இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன். அதன் பின்னர் 'களவாணி', 'விருந்தாளி', 'நெல்லு' ஆகிய படங்களுக்கும் இசையமைத்துவிட்டார். இவரே தயாரித்து, இயக்கியுள்ள படம்தான் இது.

கொடுமுடி சுரேஷ், ஆதித் சகோதரர்கள், கிராமத்து விசேஷங்களுக்கு பந்தல் போடும் தொழில் செய்பவர்கள். அண்ணன் சுரேஷுக்கு அத்தை மகளை திருமணம் செய்ய ஏற்பாடு நடக்கிறது. தம்பிக்குப் பிறகுதான் அண்ணனுக்கு திருமணம் நடக்க வேண்டும் என்று ஜோதிடர் கொளுத்திப்போட, தம்பிக்கு பெண் தேட ஆரம்பிக்கிறார் அண்ணன். அதே ஊரில் இருக்கும் சார்பதிவாளர் பிரபாகர், கடமை தவறாத அதிகாரி. அவரால் பாதிக்கப்படும் ஒருவர், அவரை அவமானப்படுத்துவதற்காக, அவரது மகள் பருவத்துக்கு வந்து விட்டதாகப் பொய் சொல்லி, பந்தல் போடச் சொல்கிறார். இரவோடு இரவாக பந்தல் போட்டு திரும்புகிறார்கள் சகோதரர்கள். இதனால் கொதித்தெழும் சார்பதிவாளரின் மகள் ரேஷ்மி, ஆதித்திடம் மல்லுக்கட்டுகிறார். கடைசியில் அதுவே காதலாகிறது.

குடிப்பவர்களைக் கண்டாலே பிடிக்காத சார்பதிவாளருக்கு குடிகார மருமகனை எப்படி பிடிக்கும் அமெரிக்க மாப்பிள்ளைக்கு மகளை கட்டி வைக்க முயற்சிக்கிறார். அப்பாவின் திட்டம் ஜெயித்ததா மகளின் காதல் ஜெயித்ததா என்பது மீதி கதை. ஆதித் தாடி வைத்த ஜெய்யின் காப்பியாக இருக்கிறார். முகபாவம், மேனரிஸத்திலும் அவரையே ஞாபகப்படுத்துகிறார். சமீபகாலமாக இதே மாதிரியான கிராமத்து தெனாவட்டு ஹீரோக்களை நிறையவே பார்த்து விட்டதால், ஆதித் கேரக்டர் இம்ப்ரஸ் செய்யவில்லை. ஹீரோயின் ரேஷ்மி அம்சமான அழகு என சொல்ல முடியாவிட்டாலும் அடக்கமான குத்து விளக்கு மாதிரி அழகாக வந்து போகிறார். ரேஷ்மியிடம், என்ன ஒரே மைனஸ் என்றால் அவரிடம் காதல் உணர்வுகள், சிரிப்பு இவை எல்லாம் ஸ்விட்ச் போட்ட மாதிரி வந்து போகின்றன. அதாவது டைரக்டர் ஓக்கே சொன்னதும் டக் என்று சிரிப்பதும், ஸ்டார் கேமரா ஆக்ஷன் என்றதும் உடனே காதல்கொள்வதும் லேசான செயற்கை இழை தட்டும் நடிப்பு.

சார்பதிவாளர் நாச்சியப்ப செட்டியாரின் குடும்பத்து உறவுகள் அனைவருமே நிஜமான செட்டி முகங்களாக பார்த்து நடிக்க வைத்திருப்பதற்கு முதல் பாராட்டு. அதிலும் நாச்சியப்ப செட்டியாரின் பண்பட்ட நடிப்பை மறக்க முடியவில்லை. இத்தனைக்கும் அவர் மிக இளம் வயதானவர். டிரம்ஸ் வாசிக்க வாய்ப்பு கேட்டு வந்த பிரபாகரனை அப்படியே பிடித்து நடிக்க வைத்துவிட்டாராம் குமரன். அவசரத்தில் கட்டிங்கை அடித்துவிட்டு முதல் முறையாக போதையில் புலம்புவது. நிலத்தை முறைகேடாக பதிவு செய்யச் சொல்லிப் பணத்துடன் வரும் நபரிடம் முறைத்து பேசுவது. தலையைக் குனிந்தபடியே தனது மகளால் ஏற்பட்ட அவமானத்தை ஏற்றுக்கொள்வது. மகளுக்காக ஹீரோ அம்மாவின் காலில் விழுவது என்று இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்திலுமே ஸ்கோர் செய்திருக்கிறார்.

ஹீரோவுக்கு அண்ணனாக வரும் கொடுமுடி சுரேஷ், ரசிகர்களை சிரிக்க வைக்க ரொம்பவே முயற்சி செய்திருக்கிறார். சில இடங்களில் இவருடைய உடல்மொழியை பார்த்து சிரிப்பு வந்தாலும், போகப் போக அதுகூட அலுப்பு தட்டுகிறது. ஹீரோயினின் அண்ணன்களாக நடித்திருக்கும் இருவரில் குணாவின் சீரியஸ் பார்வைகூட நம்மை சிரிக்க வைக்கிறது. இவர்களைத் தவிர படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் மனதில் நிற்க மறுக்கிறது. ஹீரோயினை படம் முழுக்க கண்ணியமாக காண்பித்ததற்காகவே இயக்குநரை பாராட்டலாம். ஹீரோவுக்கு பஞ்ச் டயலாக், ஓப்பனிங் ஃபைட், ஃபினிஷிங் ஃபைட் எதுவும் கொடுக்காமல் இயல்பாய் வந்து போக வைத்திருப்பது திருப்தி அளிக்கின்றது.மகள் காதலிக்கிறாள் என்பது தெரிந்ததும், தந்தை மண்ணெண்ணெய் கேனை தூக்கிக்கொண்டு ஓட, அவர் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக எல்லோரும் பின்தொடர, அவரோ காதலன் போட்ட பந்தலை எரிக்கிறார்.

சார்பதிவாளர் அலுவலகத்தில் தன்னை அறியாமலேயே தன் மகளுக்கு காதலனுடன் திருமணம் செய்து வைத்துவிட்ட சோகத்தில், கதவைப்பூட்டி தாழ்ப்பாள் போட்டுக்கொள்ள, எல்லோரும் பதட்டத்துடன் கதவைத் தட்ட, அதுவரை குடிக்காதவர், இப்போது குடிக்கத் தொடங்கியிருப்பார். இப்படி சில திடீர் திருப்ப காமெடிகள் படத்தை அவ்வப்போது சுவாரஸ்யப்படுத்துகிறது. ஆனால் பெண் வயதுக்கு வரும் விஷயத்தை வைத்து காமெடி செய்வது ரொம்ப ஓவர். குடும்பத்தின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளாமல் காதலனுடன் ஓடிப்போவதிலும், பின்பு காரணம் அறிந்துகொள்ளாமலேயே வீட்டுக்கு திரும்புவதும், பிறகு அப்பாவின் திட்டம் அறிந்து மனம் மாறி காதலுடன் செல்வதிலுமாக, ஹீரோயின் ஆடும் கபடி ஆட்டத்தில் அழுத்தம் மிஸ்ஸிங். வில்லன் செயலிலும் சுவாரஸ்யம் இல்லை. படத்தோட ஓப்பனிங் சீன்ல ஹீரோவோட அம்மா உப்பு பெறாத விஷயத்துக்காக தான் செத்துப்போனது போல நடிப்பதும், ஊரே திரண்டு வந்து நின்ற பிறகு சர்வசாதாரனமாக எழுந்து "பார்த்தியா? நான் செத்தா யாரும் வர மாட்டாங்கன்னு சொன்னியே" இத்தனை பேர் வந்திருக்காங்களே என கேட்பது படு மொக்கை. சார்பதிவாளர் மகள் ஏன் பெட்டிக்கடை நடத்தணும் பெட்டிக்கடை நடத்தும் பெண்ணுக்கு அமெரிக்கா மாப்பிள்ளையா அமெரிக்க மாப்பிள்ளையாக நடிக்க ஒரு நல்ல துணை நடிகர் கிடைக்கலையா பொண்ணு வேணாம்னு போன மாப்பிள்ளை திரும்ப ஏன் வர்றாரு இப்படியே கேட்டுட்டே போனா நிறைய கேட்கலாம்.

படத்துல அழகான ரெண்டு விஷயம்: ஒன்னு படத்தோட டைட்டில் டிசைன். டீ நுரை சூப்பர். அப்புறம் ரேஷ்மியோட கலர்ஃபுல் காஸ்ட்யூம்ஸ். ஒளிப்பதிவாளர் மணவாளன் இதுல கொஞ்சம் மின்னுகிறார். தான் ஒரு இசையமைப்பாளர் என்பதால் படத்தில் பாடல்களை திணிக்காமல் தேவைப்பட்ட இடங்களில் மட்டும் அளவான பாடல்களை கொடுத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. பாடல் ஆசிரியர் முருகன் மந்திரம் அவர்கள் எழுதிய மூன்று பாடல்களில் இரண்டு பாடல்கள் சூப்பர் ஹிட். 'ஜில்லென சிரிப்பாளோ, நெஞ்சுக்குள் இனிப்பாளோ' செம மெலோடி. பாடல் வரிகளுக்கும், மென்மையான இசைக்கும் ஒரு சபாஷ் அதே போல் 'அட என்னமோ ஏதோ பண்ணுது புள்ளே...' பாடல் வரிகளும் மனசுக்குள் வந்து என்னமோ ஏதோ பண்ணுது.

காதல் கதைதான் என்றாலும் ஒரு அடிதடி இல்லை வெட்டுக்குத்து இல்லை ரத்தம் சிந்தவில்லை அரிவாள் இல்லை என்பதெல்லாம் இந்தப் படத்தை ஒருமுறை சிரித்து ரசிக்கலாம். ஒரு இசையமைப்பாளராக குறுகிய காலத்தில் வெற்றி பெற்ற எஸ்.எஸ்.குமரன், ஒரு இயக்குநராக வெற்றி பெற இன்னும் சில விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கிறது.

நன்றி விடுப்பு

No comments: